Thursday, May 14, 2020

அர்த்தமுள்ள உறவுகள்

அர்த்தமுள்ள உறவுகள்
- முனைவர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்/மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
திரும்பிப் பார்க்கையில் நாம் விரும்பிப் பார்த்த சந்திப்புகள் மூலம் பல ஆயிரம் நபர்களை நாம் சந்தித்திருக்கக் கூடும், ஆனால் அவர்கள் இன்னும் நம்மோடு தொடர்பில் நட்பில் உறவில் இருக்கிறார்களா என்றால் விடை 'இல்லை' என்று தான் இருக்கும்.
பல தொடர்புகள் கடந்து போகும் அல்லது கடந்து போய் விட்ட உறவுகளாகவே இருக்கின்றன. ஒருவேளை நாம் ஓரிரு முறை மட்டும் அவர்களோடு தொடர்பில் இருந்து விட்டு பிறகு நமது வாழ்வில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லாத பொழுது அவர்களை மறந்திருக்கக் கூடும். மனதில் சிற்சில சிற்றலைகள் மட்டும் ஏற்படுத்தி விட்டு அவர்கள் நமது வாழ்வில் வந்தார் சென்றார் என்று ஆகிவிட்டார் எனலாம்.
அதே சமயம் வெகு சிலர் பல்லாண்டுகளாக நமது வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து இன்னும் கூட இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்ந்த தொடர்பில் இல்லாவிடினும், மீண்டும் தொடர்பு கொள்ளும் பொழுதெல்லாம் அந்த நட்பு உறவு உயிர்பெற்று விடுகிறது. தழைத்து ஓங்குகிறது என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
சிலர் தொழில்முறை நட்பு அல்லது உறவு தொடராது மற்றும் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்லக்கூடும். எனது அனுபவம் வேறு. இன்றும் பல்லாண்டுகளாக தொழில் ரீதியாக தொடங்கிய சிறு தொடர்பு பின்னாளில் நல்ல நட்பாக நெஞ்சில் நிலைத்த உறவாக மாறிவிட்ட ஆனந்தம் என் மனதை இன்னும் நிரப்புகிறது.
கடந்து போகிற உறவு மற்றும் கடவுள் போல கூடவே துணை நிற்கும் உறவு என்று இருவிதமான உறவுகள் எல்லோருக்கும் உண்டு. நமது மனதை முழுமையாக திறந்து நட்பு பாராட்டி அன்பு நீர் வார்க்கும் முன்னரே மேம்போக்காக இருக்கும் போதே சில உறவுகள் முறிந்து போவதுண்டு. அவை தான் கடந்து போகும் உறவு என்பது. அப்படிப்பட்ட நண்பர்களோடு நாம் நமது உண்மை முகத்தை, சிரமங்களை, வெற்றிகளை, ரகசியங்களை பகிர்ந்து இருக்க மாட்டோம். அது ஒரு மேலோட்டமான உறவு மட்டுமே.
உண்மையான நட்பு அல்லது உறவு என்பது காலத்தை வெல்லும் ஒன்று. தினம் தினம் நேரில் சந்திக்காவிடினும், முகநூல், ஈமெயில், வாட்ஸ் அப் என்று ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த உறவு என்பது நிபந்தனைகளற்ற எதிர்பார்ப்பற்ற அர்த்தமுள்ள உறவாக இருக்கும்.
நிறைய நண்பர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் நினைத்ததுண்டு. ஏதோ ஓர் அற்ப காரணங்களுக்காக அவை முற்றிலுமே முறிந்து போன அனுபவமும் உண்டு. சிறு உரசல், சிறு புரிதலின்மை, இவைகளால் உறவு முற்றிலும் முறிந்து போன போது நான் வியந்து போய் இருக்கிறேன். இதற்கு நேர் மாறாக எவ்வளவோ தவறுகள் கோளாறுகள் புரிதலின்மைகள் இருந்த பொழுதும் சில நண்பர்கள் நமக்கான ஒரு இடத்தை அவர்கள் மனதில் அளித்து நம்மை உள்ளவாறே ஏற்றுக் கொண்டதால் தான் அந்த உறவு தப்பித்தது என்று என்னால் உறுதிப்பட சொல்ல முடியும்.
அவர்கள் நமது ஒவ்வொரு முயற்சியிலும் உடனிருந்து அழைக்காமல் வலிய வந்து உதவி நம்மை உயர்த்தியவர்கள் என்று சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது.
சில நண்பர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மோடு ஒட்டிக் கொண்டு விட்டு அவர்களின் 'அந்த' ஒரு நோக்கம் நிறைவேறிய பின்னர் தானாகவே மெதுவாக பின்வாங்கி நம்மிடம் இருந்து விலகி விடுவார்கள். இவர்களையும் நமது நண்பர்கள் என்று பட்டியலில் சேர்ப்பது நிச்சயம் தவறு.
நமது வாழ்வியல் மதிப்பீடுகள், ஒத்த கருத்துக்கள், விருப்ப வெறுப்புகள், வாழ்க்கை முறையில் ஒற்றுமை, கண்ணோட்டங்களில் சமன்பாடு என்று ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு ஒத்துப் போவதால் தான் சிலர் கடைசி வரை நமது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
மேம்போக்கான சில உறவுகளை நெருக்கமான ஒன்று என்று தவறாக நான் புரிந்து கொண்டு பின்னர் உணர்ந்ததும் உண்டு. சில உறவுகள் அர்த்தமற்றவை, தேவையற்றவை என்று கருதியது தவறு என்று உணர்த்துவது போல நீங்கா இடம் பிடித்து இன்னும் தொடர்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சிலர் வெளியேறும் நோக்கோடு தான் நமது உள்ளத்தில் வந்தார்கள் என்பதை நமது உள்ளுணர்வே சில சமயம் உணர்த்தி விடும். உங்களுக்கும் அது நேர்ந்து இருக்கிறதா? நகமும் சதையும் ஆக நம்மோடு இரண்டற கலந்து நிற்கும் சில உறவுகளின் நட்புகளின் வலிமை மற்றும் உண்மைத்தன்மை புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நாம் ஒரு நாளும் அந்த நட்பை இழக்கத் துணிய மாட்டோம்.
சில உறவுகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட தளிர் போல வளர்ந்து மேம்படாத ஒன்றாக இருக்கும். அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். சில உறவுகள் நாம் எதிர்பார்த்ததை விட ஆன்மீக வலிமை கொண்ட ஒன்றாக இருக்கும்.
எல்லா உறவுகளையும் நட்புகளையும் நம்மால் தக்க வைத்துக் கொண்டு கடைசி வரை பராமரிக்க முடிவதில்லை. கடந்து போகிற ரயில் சிநேகம் போன்ற நட்புகளை எண்ணி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கண்களைப் போல காக்க வேண்டிய சில உறவுகளை நட்புகளை வளர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் காணாமல் போய் விட்ட உறவுகளை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்கும் உறவை உன்னதமாக போற்றிடுவோம். அர்த்தமுள்ள உறவுகளே வாழ்க்கையின் ஆதாரம். மீதமெல்லாம் சேதாரமே. மனதுக்கு தெரியும் உறவின் மகத்துவம். மனம் சொல்வதை சில நேரம் மௌனமாக இருந்து தான் கேட்க வேண்டும்.

Wednesday, May 13, 2020

கரோனா விநோதங்கள்


கரோனா விநோதங்கள்
- டாக்டர் பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர்

காற்று புகாத இடத்தில் கூட கரோனா புகும். ஏனெனில் அது நுண்ணிய உயிர்க்கொல்லிக் கிருமி. இந்த கிருமியின் அட்டகாசம் உலகெங்கும் நடக்கும் போது இதனை ஒரு பொருளாதார யுத்தம் என்று உலகம் அறிவித்தது . மக்கள் அனைவரின் மனதிலுமே ஆரோக்கியம் முக்கியமா ? ஐஸ்வரியம் முக்கியமா ? என்ற அகவிவாதம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

சுமார்12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பார்மா நிறுவனங்களுக்கு ஆங்கில மருந்துகள் விற்பனை இல்லை என்பதால் நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. நாளொன்றுக்கு குறைந்தது பத்து அறுவை சிகிச்சையாவது செய்து வந்த பல மருத்துவமனைகளில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 100 முதல் 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள், ஹோட்டல்கள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன சுமார் இரண்டு மாதங்களாக.

இடுகாடு, சுடுகாடு இவற்றிலும் எண்ணிக்கை குறைந்து போனது. 100 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இப்படி சாலைவழி, வான்வழி, ரயில்வழிப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது

எப்போதுமே மிகவும் மக்கள்தொகை நிறைந்து இருக்கும் மால்கள், உணவகங்கள், பார்ட்டி ஹால்கள், விமான நிலையங்கள், அழகு நிலையங்கள், திரையரங்கங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் எல்லாமே முடங்கிப் போய் பல கோடி ரூபாய் வர்த்தகம் நின்று போனது.

பங்குச்சந்தை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வணிகம், மொபைல், கோடைகாலங்களில் விற்பனை ஆகும் குளிர் சாதனங்கள், ஆளின்றி கிடைக்கும் கடற்கரை, கோடை வாசஸ்தலங்கள், மூடியே கிடக்கும் வழிபாட்டுத் தலங்கள் (எல்லா மதத்தினருக்கும்), இப்படி இந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் ஏமாற்றங்கள் இழப்புகள் இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை.

மகிழ்வான நிகழ்வு திருமணம், சோகமான நிகழ்வு மரணம் இரண்டிலுமே அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். குறிப்பாக திருமணங்களில் எல்லோரின் வாயிலுமே  (மாப்பிள்ளை மணப்பெண் உட்பட) முகக்கவசம் இருந்தது. பன்னீர் தெளிப்பதற்கு பதில் கை சுத்தம் செய்ய கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. கிளம்பும் போது அனைவர்க்கும் பல வீடுகளில் அரிசி, பருப்பு பாக்கெட்டுகள் தாம்பூலமாக வழங்கப்பட்டன.

இந்தக்  கரோனா காலத்தில் பிறந்த ஓர் இரட்டைக் குழந்தைகளுக்கு 'கோவிட்' என்றும் 'கொரோனா' என்றும் பெயர் வைத்துருக்கிறாரக்ள் ஒரு குடும்பத்தினர். இன்னொரு குடும்பத்தில் 'ஊரடங்கு' என்று ஒரு குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.

கேரளாவில் சிலர் கைபேசி மூலம் திருமணம் (மணமகனும் மணமகளும் சந்திக்காமலே) செய்து கொண்டனர். லட்சக்கணக்கான மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே தமது சொந்த ஊருக்கு பயணித்தனர்

பக்கத்து வீட்டினரோடு கூட பேச மக்கள் பயந்து போயினர். விருந்தினர்கள் யாருமே வரவில்லை. பெரும்பாலான வீட்டில் ஆண்கள் சமையல் அறையில் இருந்தார்கள். மொட்டை மாடி நடைபயிலும் பூங்கா ஆகியது

யாரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கவில்லை, கட்டி அணைக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர் கணவரே ஆனாலும் அவர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டார். பணம் இருப்பவர்கள் செலவு செய்ய முடியாது தவித்தனர். பணம் இல்லாதவர் ஈட்ட முடியாது தவித்தனர். நண்பர்களிடம் நேரம் இருந்தது. சந்திக்க முடியவில்லை. குழந்தைகளை யாரும் படி என்று சொல்லவில்லை. சிலருக்கு பகல் இரவு தெரியவில்லை. சாதாரண மனிதர் கூட சாமியார் அளவிற்கு தாடி வைத்துக்கொண்டவர் ஆயினர்.

நேரம் போகவில்லை என்றே மக்கள் அதிகம் சொன்னார்கள். தொலைக்காட்சியில் அழுகை, கொலை, கொள்ளை சீரியல்கள் ஓடவில்லை.

நீதிமன்றங்கள் இயங்கவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. மக்கள் ஆன்லைன் வணிகம் மூலமே பொருள் வாங்குவது, பணப்பரிவர்த்தனை செய்தனர்.செயின் பறி, மொபைல் பறி, கொலை, என்ற செய்தி செய்தித்தாள்களில் வராத அளவிற்கு குற்றங்கள் குறைந்து போயின.

பிளம்பர், எலெக்ட்ரிசியன், பெயிண்டர் எல்லோருமே காய் கறி பழம் விற்பவர்களாக மாறினர். மக்கள் அதிகபட்சம் சைவமே சாப்பிட்டார்கள்

சில ஆட்டோ நிறுவனங்கள் வெண்டிலேட்டர் தயாரிப்பில் ஈடுபட்டனர். சில ஷாம்பூ நிறுவனங்கள் கிருமிநாசினி தயாரிப்பில் ஈடுபட்டன. சில ஜவுளி நிறுவனங்கள் முகக்கவசம் தயார் செய்தன.தீயணைப்பு வாகனங்கள் கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டன. தினம் தினம் வந்து நீங்கள் நலமா என்று அரசு ஊழியர்கள் விசாரித்தனர்.

கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் விளையாட்டுக்கள் (ஐபிஎல் மற்றும் ஒலிம்பிக்ஸ்) ரத்து செய்யப்பட்டன. அதனால் வரும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வராமல் போனதுபிள்ளைகள் ஒன்பது வகுப்பு வரை தேர்வு எழுதாமலே பாஸ் ஆயினர். கோடை வகுப்புக்கு செல்ல எந்த பெற்றோரும் பிள்ளைகளை நிர்பந்திக்கவில்லை.

ரயில் வண்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. பேருந்து நிலையங்கள் காய்கறி மண்டிகளாக மாறின. நகரத்துப் பிள்ளைகள் விமானம் பறக்காததால், வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

மருத்துவர் பெயரை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் கனிவாக கவனித்துக் கொண்ட செவிலியர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டனர். பெரும்பாலும் மருத்துவர்கள் கடவுளாக பார்க்கப்பட்டனர்.

பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் எப்போதும் இல்லாது அடிக்கடி பேசிக் கொண்டனர். பிரதமர் அடிக்கடி திரையில் தோன்றி மக்களிடம் பேசினார். கடந்த எல்லா நாட்களுமே வேறெந்த பரபரப்பும் இல்லாததால் அனைத்து ஊடக விவாதங்களும் கொரோனா பற்றியே இருந்தன

தமிழ் பேசும் மக்கள் கூட தெலுங்கு, மலையாளம் என்று மொழி பேதம் இன்றி திரைப்படங்கள் டிவியில் பார்த்தனர். புதிய கவிஞர்கள் உருவாகி முகநூல் நிரப்பினர்.

மக்கள் மலைக்கு மாலை போட்டது போல வெற்றிலை பாக்கு, சிகரெட், மது எதுவுமே கொள்ளாமல் 40 க்கும் மேற்பட்ட நாட்கள் கழித்தனர்.

காவல்துறையினர் பாட்டு இயற்றி வீதியில் பாடிக் காட்டினார்கள். சிலர் பொதுமக்களுக்கு பரீட்சை நடத்தினர். சிலர் உடற்பயிற்சி நடத்தினர்

நிறைய பயிற்சி வகுப்புகள் இணையதளம் மூலமே நடந்தன. வீட்டில் இருந்து வேலை என்பது பல நிறுவனங்கள் கடைபிடித்தன. செக்யூரிட்டி ஊழியர்கள் இல்லாமல் பல செல்வந்தர் வீடுகள், மாபெரும் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன

இடையே திறந்த மதுக்கடைகளில் அடையாள அட்டை பார்த்து, வயது அடிப்படையில் மதுபானம் விற்கப்பட்டன.

இன்னும் என்னென்ன விநோதங்கள் பாக்கி இருக்கிறதோ என்று பொறுத்திருந்து பார்ப்போம். விலகியிருந்து, வீட்டிலிருந்து இனி மக்கள் புதிய பழக்கங்களோடு வெளியே உலா வரப்போகின்றனர்.