Tuesday, March 6, 2018

About Kanchi Seer Poojya Sri Jayendra Saraswathi Swamigal



ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சஹஸ்ர சந்திர தரிசன விழா - அமரபாரதி சிறப்பு மலருக்கு சமர்ப்பணம்
- டாக்டர் பாலசாண்டில்யன், சென்னை மேற்கு மாம்பலம்
(கவிஞர், எழுத்தாளர், மன நல ஆலோசகர், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர்) 
www. visionunlimited. in. Mobile - 9840027810
1954 ஆம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி மடத்தில் இணைந்த சுவாமிகள் இன்று ஹிந்து மதத் தலைவர்களில் தலையாய ஒரு தலைவராகத் திகழ்கிறார். ஹிந்து மதம் குறித்த இவரது அளப்பரிய ஞானம், இதர மதத் தலைவர்களோடு இவரது நல்லிணக்கம் இவற்றால் இவர் பெரிதும் போற்றப் படுகிறார். இவரது பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியாவில் மற்றும் இன்றி வெளிநாடு வாழும் அமேரிக்கா உள்ளிட்ட நாட்டைச் சார்ந்தவர்களும் உண்டு.
வெறும் கடவுள் பக்தி, பூஜை, மத வழிபாடு என்று நிறுத்திக் கொள்ளாமல் காஞ்சி மடத்தின் சேவைகளை கல்வி, மருத்துவம், பொதுச் சேவை என்று பல்வேறு திசைகளில் முடுக்கி விட்ட பெருமை சுவாமிகளையே சேரும்.
9, ஜனவரி 1995 க்குப் பிறகு மடத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்ற பிறகு சுவாமிகளின் பங்களிப்பு பெரிதும் அதிகமானது.
எது செய்தாலும் அதில் அன்பு மட்டும் மேலோங்கி இருக்கட்டும், 
நடத்தை அன்பைச் சார்ந்தே இருக்கட்டும்,
அதீத தேவை, கோபம், வெறுப்பு போன்ற குணங்களை முற்றிலுமாக மக்கள் கைவிட வேண்டும்.
எந்த ஒரு செயலுக்கும் அன்பே பிராதானமாக விளங்கும் போது இந்த உலகின் பெரும்பாலான துன்பங்கள் விலகும்,
கவலை நீங்கி மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்திட இறைவனுக்கு நமது ஒவ்வொரு காரியத்தையும் அர்ப்பணித்தல் வேண்டும், 
அவரது அருள் இருக்கையில் நமக்கு சந்தோஷம் மட்டும் தான் கிடைக்கும், துன்பத்திற்கு இடமே இல்லை,
இறைவன் நமது போற்றுதல் அல்லது தூற்றுதல் இவற்றிற்கு ஒரு போதும் மயங்குபவன் இல்லை, நமது மனங்களின் தூய்மை தான் அவன் அருள் பெறச் செய்யும் - இது போன்ற அரிய கருத்துக்களை சுவாமிகள் தமது ஒவ்வொரு அனுக்ரஹ பாஷனைகளிலும் வலியுறுத்திச் சொல்லி வந்தார் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
இது போன்றே, 
நட்பிலும் அன்பிலும் மனிதனின் மனது நிறைந்திருக்கட்டும்.
பிறர் நம்மை எப்படிக் காண விழைகிறோமோ அப்படியே நாம் அவரைக் காண வேண்டும்.
பொறாமை, போரிடும் குணம் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். 
பூமித்தாய் காமதேனு போன்றவள், நமது எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்ய வல்லவள். அதே போல இறைவன் கருணை பொழியும் ஒரு தந்தை.
ஒழுக்கத்துடன் வாழ்தல், தயாள குணத்துடன் வாழ்தல், கருணையோடு எல்லோரிடமும் பழகுதல், எல்லோரும் இன்பமாக இருக்க நம்மால் இயன்றதை செய்தல் போன்ற பல்வேறு நல்ல சத்விஷயங்களை மக்களிடம் எப்போதும் சொல்லி வந்தார்.
ஸ்ரீ காஞ்சி மடம் கிட்டத்தட்ட 44 மருத்துவமனைகளையும், 15 மருத்துவ சேவை மையங்களையும் சீராக நடத்த உதவி செய்து வருகிறது. பல லட்சம் நோயாளிகள் இதனால் பயன் பெற்றுள்ளனர். மேலும் லட்சம் பேர் கண் அறுவை சிகிச்சை இலவசமாகப் பெற்று பயன் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட லட்சம் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஸ்ரீ மாதா டிரஸ்ட் மூலம் பயன் அடைந்துள்ளார்கள். கோயம்புத்தூர் , சென்னை , தமிழ்நாடு தவிர உத்தராஞ்சல், ஓடிஸா, பீகார்,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் கடைக்கோடி ஏழை மக்கள் இலவசமாக அல்லது குறைந்த செலவில் மருத்துவ சேவை பெறும் நிலையங்களை ஸ்ரீ காஞ்சி மேடம் நிர்வாகித்து வருகிறது. ரோட்டரி மூலமும் ஸ்ரீ காஞ்சி மடம் பல்லாயிரம் மக்கள் கண் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெற்றிட உதவி வருகிறது.
1987 ஆம் ஆண்டில் 'வந்தேமாதரம்' எனும் திட்டம் மூலம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச கண் மருத்துவம் வழங்கப்பட்டது.
'வானவில்' எனும் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறு சம்பந்தமான மருத்துவம் கோயம்புத்தூர், திண்டுக்கல், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்த திட்டங்கள், மேலும் நைஜீரியா நாட்டு மக்களுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டது என்பது பாராட்டுக்கு உரியது.
'இருள் நீக்கி' திட்டம் மூலம் மலைவாழ் மக்களுக்கு இலவச கண் மருத்துவம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டது. 'கண்ணொளி' திட்டம் மூலமும் சேரி வாழ் ஏழை மக்களுக்கு அதே மாவட்டத்தில் இலவச கண் மருத்துவம் வழங்கப்பட்டது. கம்போடியா நாட்டின் கண் மருத்துவர்களுக்கு நமது நாட்டின் சிறந்த மருத்துவர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டது.
நேபாலில் காத்மாண்டு எனும் இடத்திலும் இலவச கண் மருத்துவப் பயிற்சி அங்கே உள்ள மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
'வந்தேமாதரம் பாரத்' எனும் திட்டத்தின் மூலம் நமது நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி உத்திரப்பிரதேசம், ஓடிஸா, ஆந்திராவில் கம்மம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் கண் மருத்துவம் சென்று அடைய சங்கரா ஐ சொசைட்டி மூலம் வழி வகை செய்யப்பட்டது.
'கிராம தத்து திட்டம்' மூலம் கிட்டத்தட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் அருகே 10 கிராமங்களை தத்து எடுத்து 30 ஆயிரம் பேருக்கு மருத்துவம், கல்வி, குடிநீர், பெண்கள் சுயதொழில் போன்ற பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கண் பார்வைக் கோளாறு இவற்றில் இருந்து விடுபட பல்வேறு நிறுவனப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டன.
'சங்கரம்' திட்டம் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒத்த சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களை இணைத்து அடைய முடியாத நபர்களையும் சென்றடைந்து உதவி செய்தல் எனும் திட்டம் உருவாகி அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஊரக வளர்ச்சி டிரஸ்ட் மூலம் ஒடுக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு பலன் கிடைக்கும் வண்ணம் வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி, வாழ்வாதாரப் பயிற்சி, சுய வேலை வாய்ப்புத் திட்டம், நலத் திட்டம் என்று பலவேறு உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதரவற்ற பெண் குழந்தைகள் பாதுக்காப்பாக தங்கிட ஹாஸ்டல் ஒன்றும் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 150 சுய உதவிக் குழு பெண்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் படியான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டன. கிட்டத்தட்ட 3000 ஏக்கர் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கலவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இல்லம் கட்டப்பட்டு, அங்கே மூன்று சக்கர வண்டி மற்றும் ஊன்று கால்கள் வழங்கப்பட்டது.
ஸ்ரீ மடத்தை நாடி வரும் ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ள உதவிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பல்வேறு உதவிகள், ஈமச் சடங்குகளுக்கு உதவிகள் என்று பல்வேறு அறப்பணிகளும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சுவாமிகள் இந்தியாவில் பயணம் செய்யாத ஊரே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய சேரி என்று சொல்லப்படும் மும்பை தாராவியில் கோவில் மற்றும் பள்ளி கட்டப்பட்டதை அடுத்து பல்லாயிரம் வீடுகளில் பெரியவாளின் திருவுருவப்படம் இடம் பெற்று இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரியது. இங்கே அரசியல்வாதிகளும், காவல் துறையுமே செல்லத் தயங்குவர் என்பது தான் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம்.
பீகார் மாநிலத்தில் (நேபால் எல்லைக்கு அருகே) மதுபானி எனும் வெகுதூர பிற்படுத்தப்பட்ட இடத்தில் இளைஞர்கள் இலவசப் பயிற்சி பெற்று தமது வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் திட்டம் நிறைவேற்றப் பட்டது.
பசுவை தெய்வமாகப் போற்றும் நமது நாட்டில் பல்வேறு இடங்களில் கோஷாலா நிறுவி பசுக்களுக்கு உரிய பாதுக்காப்பும், கவனிப்பும் வழங்க ஆவன செய்யப் பட்டுள்ளது.
ஏழை இசை விற்பன்னர்கள் நலம் பெற தனியான ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஜனைப் பாடல்கள் மூலம் பக்தி வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பஜனைப் பாடல்கள் கொண்ட ஒலிபேழை வெளியிடப்பட்டு அதில் கிடைக்கப் பெற்ற வருமானத்தை ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
நித்ய அன்னதானம் வழங்கும் திட்டப் படி காஞ்சி மடத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் வருகிற எல்லோருக்கும் இலவச உணவு தினந்தோறும் அளிக்கப் படுகிறது.
'பிடி அரிசி திட்டம்' மூலம் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு பிடி அரிசி பெறப்பட்டு (வாரம் ஒரு முறை) கோவில்களில் நைவேத்யம் மற்றும் அன்னதானத்திற்கு, பிரசாதத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. பெரியவாளின் ஆசியுடன் இந்த பிரசாதம் சிறையில் உள்ளவர்களுக்கு, ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, அநாதை இல்லங்களுக்கு வழங்கப் படுகின்றன.
குஜராத் பூகம்பத்திற்கு பிறகு இரண்டு கிராமங்கள் தத்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசத் தங்குமிடம் கட்டிக் கொடுக்கப் பட்டது.
பற்பல வேத பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அவற்றில் மூன்று வேதங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது தவிர 51 ஓரியண்டல் பள்ளிகளில் (தேசம் எங்கும்) மடத்தின் மூலம் இலவசமாக வேதம் சொல்லித் தரப்படுகிறது.
சென்னையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் நிறுவப்பட்டு இலவச மருத்துவம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அருகில் உள்ள கிராம மக்களுக்கு மூலிகை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம், மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்கள் மூலம் கிடைக்கும் மூலிகைகளுக்கு உரிய பணமும் வழங்கப்படுகிறது.
காஞ்சி அருகே ஏனாத்தூர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக் கழகத்தின் ஒரு அம்சமாக மிகப் பெரிய ஒரு நூலகம் ஒன்று நிறுவப்பட்டு பல்வேறு ஓலைச் சுவடிகள், அரிய பல சுவுடுகள், நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை அழிந்து போகாது இருக்க இவை டிஜிடைஜ் செய்யப்பட்டு பாதுகாக்கப் படுகிறது.
பாழடைந்த பல்வேறு பழைய கோவில்களை மீட்டெடுக்கும் விதமாக பராமரிப்பு, புனரமைப்பு, பைன்டிங், இவையெல்லாம் காஞ்சி ஸ்ரீ மடத்தின் கீழ் ஒரு பிரத்யேகமான திட்டமாக எடுத்து செயல்படுத்தப் படுகிறது.
இப்படி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அரிய பல சமூக, மருத்துவ, கல்வி மற்றும் ஆன்மீக சேவைகளை ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது என்பது மிகைப் படுத்தாத உண்மை.
மேற்சொன்னவை எல்லாம் சில விஷயங்களே. இன்னும் விடுபட்ட பல விஷயங்கள் உண்டு என்பது தான் உண்மை.
நான் இணைச் செயலாளராக மற்றும் பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் என்ற முறையில் எங்கள் ' உரத்த சிந்தனை' அமைப்பின் சார்பாகவும், எனது தந்தை பாகவத சிரோன்மணி (மற்றும் பெரியவாளின் இளமைக் காலத்தில் அவர் வீட்டிற்குப் பின்னால் வசித்தவர்) மறைந்த திரு Erode Subramaniam கல்யாணராமன் அவர்களின் புதல்வன் என்ற முறையிலும் ஸ்ரீ பெரியவாள் அவர்களை பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன்.
மேலும் அவர் முன்னிலையில் எனது பாடல் மற்றும் கவிதைகளை வாசித்து ஆசி பெற்றுள்ளேன். இதற்கு முன்பும் அமரபாரதியின் சிறப்பு மலரில் ஸ்வாமிகள் பற்றி கவிதை மலர் ஒன்று எழுதி சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்கு உண்டு. இது தவிர சங்கரா பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சிகளும் வழங்கி உள்ளேன். பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்று ஸ்வாமிகள் முன்னிலையில் பேசிடும் பாக்கியமும் பெற்றேன் என்ற மன நிறைவு எனக்கு என்றும் உண்டு.
வெறும் மதம், கடவுள், பக்தி என்கிற விஷயங்களைத் தாண்டி தேச பக்தி, மனித நேயம், மதங்கள் கடந்த ஒருமைப்பாடு என்று பல்வேறு விஷயங்களை வெகு புரட்சிகரமாக எடுத்துச் சொன்ன மகானுக்கு இப்போது சஹஸ்ர சந்திர தரிசன விழா நடைபெற உள்ளது என்றும் அது குறித்த விழாவின் போது முப்பெரும் விழாவாக அது கொண்டாடப் பட உள்ளது என்பதும் அறிந்து கொள்ள மிகவும் பேருவகை கொள்கிறேன். இந்த அற்புதமான தருணத்தை ஒட்டி வெளிவரும் அமரபாரதியின் ஆண்டு மலரில் இந்த எனது கட்டுரை வெளிவருவது நான் செய்த பூர்வ புண்ணியம் மற்றும் இறைவன் அருள் என்று தான் தாழ்மையுடன் கருதுகிறேன்.
பெரியவாளின் பாதாரவிந்தங்களை வணங்கி எனது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். காஞ்சி ஸ்ரீ மடத்தின் சிறந்த சேவையும் மேன்மேலும் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை, ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயை இறைஞ்சி பிரார்த்திக்கிறேன்.

My wife has written an excellent article about me

கண் அவன் கணவன்
என் மனைவி மகளிருக்கான போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. இருப்பினும் எனது மனதை வென்ற ஒரு படைப்பு - அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. (Thanks to Sukeerthy Balasubramanian)
நான் பிறந்து படித்து வளர்ந்ததெல்லாம் கிராமம் தான். பெரிய குடும்பம். அம்மா, அப்பா, என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நடுத்தர நிலைமை. நாங்கள் எல்லோருமே படித்தது எல்லாம் கவர்ன்மெண்ட் ஸ்கூல் தான். அப்பாவிற்கு பெரிய வேலை என்று சொல்ல முடியாது. அவருக்கு எங்கு வேலை கிடைத்ததோ அங்கெல்லாம் நாங்கள் படித்திருக்கிறோம்.
நான் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன் என்னை காலேஜ் அனுப்பவில்லை. நீ தபால் மூலமே படி என்று என்று என் அப்பா சொல்லிவிட்டார். அதன் படி அண்ணாமலை யூனிவெர்சிட்டியில் B.Sc - Maths சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது என் அண்ணன்களுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. அப்போது குடும்பத்தை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு சென்னையை பற்றி ஒன்றும் தெரியாது.
தபால் மூலம் படித்துக் கொண்டே டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட், ஹிந்தி வகுப்புகள் சேர்ந்தேன்.
அப்போது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் மூலம் எனது ஜாதகத்தை பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு கொடுத்து அனுப்பினர் எனது பெற்றோர். திடீர்னு ஒரு நாள் பக்கத்து தெருவுக்கு கொடுத்து அனுப்பிய ஜாதகம் சேருகிறது. இன்று உன்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று அம்மா சொன்னார்கள். இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இரவு 8.30 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வந்தார்கள். அவர் என்னைப் பார்த்தாரா என்று தெரியாது. நான் அவரை சரியாகக் கூட பார்க்கவில்லை. பயமாக இருந்தது. பெண் பிடித்த விட்டது என்று தகவல் வந்ததால் மார்ச் 29 அன்று நிச்சயதார்த்தமும் முடிந்தது.
நிச்சயம் நடந்த சில நாட்களிலேயே அம்பத்தூரில் சொந்த வீடு வாங்கிக்கொண்டு சென்று விட்டோம். பக்கத்து தெருவிலேயே புகுந்த வீடு என்று நினைப்பதற்குள் வீடு மாற்றிக் கொண்டு சென்று விட்டோம். கல்யாணம் மே 15 ஆம் தேதி என்று குறித்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி மீட் செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
எனக்கு கல்யாணம் ஆகும் போது வயது 21. எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். ஆனால் எங்களைப் பார்த்தால் அந்த வித்தியாசம் தெரியாது. காரணம் அவரின் சிறிய உருவம் தான். கல்யாணமும் சிறப்பாக நடந்தது.
எனது கணவர் ஒரு தோலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பேக்டரி மேனேஜர். காலையில் சீக்கிரம் கிளம்பினால் வீடு திரும்ப இரவு ரொம்ப லேட் ஆகும். என் புகுந்த வீட்டில் மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார்கள், மாமனாரின் அம்மா, அடிக்கடி வந்து போகும் உறவினர்கள் என்று பெரிய கூட்டுக் குடும்பம் அது. வேலை சரியாக இருக்கும். நான் வீட்டின் மூத்த மருமகள் வேறு. கேட்க வேண்டுமா? (திருமணத்திற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த வேலைக்கு போகலாமா என்று எனது கணவரிடமோ மாமனாரிடமோ கேட்கவே இல்லை.) பொறுப்புகள் நிறைய இருந்தன. குருவி தலையில் பனங்காய் போல திணறினேன். இதற்கு நடுவில் மூத்த மகள் சுபாஷிணி பிறந்தாள். கைக்குழந்தை, மைத்துனர் மற்றும் நாத்தனார் கல்யாணம் என்று பிஸியான வாழ்க்கை தான். இப்படியே மூன்று ஆண்டுகள் உருண்டு ஓடின. அப்போது தான் நான் படிப்பை முடிக்கவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.
எனது கணவர் நான் தபாலில் படித்து வந்த படிப்பை அப்படியே விட்டு விட்டு புதிதாக B A - Sociology சேரச் சொன்னார். அது முடிந்த உடனேயே M.A. Sociology என 5 வருடங்கள் தபால் வழிக் கல்வி முடித்து முதுகலை பட்டதாரியும் ஆகி விட்டேன். இதற்கு நடுவில் எங்களுக்கு இரண்டாவது மகளும் (சுபிக்ஷா) பிறந்து விட்டாள்.
இவர் கவிதை கட்டுரை கதை எல்லாம் எழுதுபவர் என்று தெரியும். ஆனால் ஓயாமல் மீட்டிங், இலக்கிய கூட்டம், டிவி நிகழ்ச்சி என்று பாதி நேரம் வீடு தங்க மாட்டார். ஆபிஸ் பொறுப்பு, வீட்டுப் பொறுப்பு தாண்டி பாலசாண்டில்யன் என்று பலரும் அறிந்த இவர் எப்போதுமே பிசி தான்.
வீட்டின் மூத்த மருமகள் என்ற அடிப்படையில் அவருடைய சகோதர சகோதரி மட்டுமல்லாமல் சித்தப்பா பெரியப்பா பசங்க திருமணங்கள், வீட்டின் இதர நல்லது கெட்டது எல்லாவற்றிலும் எனது பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. இவர் என்னுடைய எந்த விஷயத்திற்கும் நோ சொல்லவே மாட்டார். வீட்டின் வரவு செலவு வங்கிக்கணக்கு, சேமிப்பு எல்லாவற்றிற்கும் இவர் என்னையே பொறுப்பாக்கினார். ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவம் தான்.
வீட்டுப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, அவர்கள் படிப்பு அனைத்திலும் என்னையே முன்னிறுத்துவார். யாரும் என்னை ஒரு வார்த்தை சொன்னாலும் அவரால் தாங்க முடியாது. அப்படிப்பட்ட சூழல்களில் தான் அவர் என் மீது எவ்வளவு அன்பு பாசம் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். பல நேரம் நான் வியந்து போவேன். எனது முகத்தை பார்த்தவுடனே எனது மனதில் இருப்பதை சொல்லி விடுவார். தவிர எங்கள் வீட்டில் இருக்கும் போது ஹோட்டல் என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது இவருடன் சேர்ந்து நான் போகாத ஹோட்டல்கள் கிடையாது. ஒரு கிராமத்து பெண்ணாக இருந்த என்னை நம்பிக்கையுள்ள நவீனப் பெண்ணாக மாறிடச் செய்தது எப்போதுமே அவருடைய ஊக்கமும் உற்சாகமும் பாராட்டுகளும் தான்.
என்னைப் பற்றிப் பெருமையாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் இவரைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அவர்களிடம் என்னை தவறாமல் அறிமுகம் செய்து வைப்பார். என்னுடைய சமையல் மற்றும் காபி அவருக்கு ரொம்ப பிடிக்கும். நார்த் இண்டியன், சவுத் இண்டியன் மற்றும் சைனீஸ் என்று எல்லாம் சமைப்பேன். அவற்றை போட்டோ எடுத்து Facebookல் போட்டு என்னை எப்போதும் என்கரேஜ் செய்வார். தனது பணிச்சுமை காரணமாக தனது 47 வயதில் தனது பெரிய வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக ஒரு சிறு நிறுவனம் தொடங்கினார் அதுவும் என்னை அதன் Proprietor ஆக அறிவித்து. எனது மனதின் உள்ளூர இருக்கும் பயம் தாண்டி அவர் நினைத்தது போல அந்த நிறுவனம் ஓரளவுக்கு சிறப்பாக நடக்கிறது.
என் பிறந்த வீட்டிலும் இவரது நண்பர்கள் மத்தியிலும் மற்ற வெளியிடங்களிலும் எனக்கு முக்கியத்துவம் இன்று கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் என் கணவரும் எங்கள் குழந்தைகளும் தான்.
குழந்தை வளர்ப்பு, சுய தொழில், பெண்கள் முன்னேற்றம் இவற்றில் எல்லாம் பயிற்சி தருகிற எனது கணவர் சற்றும் குறைவில்லாத மதிப்பும் மரியாதையும் எனக்கு தருவார். பிரபலமான ஒருவரின் மனைவியாக இருப்பது எவ்வளவு சிரமம் என்று நான் நிச்சயம் புரிந்து கொண்டுள்ளேன். எல்லோருக்கும் எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்யும் குணம் அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து நானும் அதனை பழகிக் கொண்டு வருகிறேன். இன்று எனக்கான ஒரு தனி அடையாளம் கிடைக்க காரணம் எனது கணவர் தான். அதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது.
நட்சத்திரப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் இவை எல்லாம் தாண்டிய மனப் பொருத்தம் தான் மகிழ்ச்சியான வாழ்வை நிர்ணயிக்கும். அப்படிப்பட்ட மனப் பொருத்தம் எனக்கும் எனது கணவருக்கும் இருப்பது பல்வேறு தளங்களில் வெளிப்படும் போது என் மகள்கள் இருவரும் 'உண்மையை சொல்லுங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் தானே...இருவரும் பக்கத்துக்கு தெரு வேறு' என்று கிண்டல் செய்வர். எங்கள் பரஸ்பர புரிதல் அப்படி.
எங்கேயோ பிறந்து வளர்ந்த எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. சந்தோஷமான எனது திருமண வாழ்விற்கு முக்கியமான காரணம் எனது கணவர் தான். எத்தனையோ கஷ்டங்கள், பிரச்சனைகள், சந்தோஷங்கள் இவற்றையெல்லாம் சமாளித்து 25 ஆண்டுகள் கடந்திருக்கிறேன் என்றால் அது என் கணவர் அளித்த சப்போர்ட் தான்.
இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் இவரே எனது கணவனாக வர வேண்டும் என்று வேண்டி நிற்பேன். எனது கணவர் எனக்கு ஒரு கண். எனது மகள்கள் எனக்கு மறு கண்.
- சுகீர்த்தி பாலசாண்டில்யன், M.A.

My short story in Ilakkiyapeedam





Thursday, March 1, 2018

பிராண்டிங் என்றால் என்ன?

பிராண்டிங் என்றால் என்ன?

பிராண்ட் என்பது ஒரு பொருளோ, நிறுவனமோ அல்லது அமைப்போ அல்ல. பிராண்ட் என்பது காண்கின்ற ரூபத்தில் இருப்பதில்லை. ஒரு பொருள் அல்லது நிறுவனம் பற்றிய மக்களின் அனுபவம், எண்ணங்களின் பிரதிபலிப்பு, நல்லுணர்வுகள் எல்லாம் கலந்தவை தான் பிராண்ட் என்பது. பிராண்ட் என்பது மக்களின் நினைவுகளில் எண்ணங்களில் உறைந்து இருக்கிற ஒன்று எனலாம். 

பிராண்ட் என்பது ஒரு ஐகான் எனப்படும் குறியீடு, ஒரு வாசகம், இலக்கு நிர்ணயிக்கும் வழிமுறை விளக்கம், நிறுவனத்தின் உறுதி மற்றும் வாக்கு, சந்தை நடவடிக்கை, நிறுவனத்தின் முடிவு, வாடிக்கையாளரின் மனதின் குரல் என்று பலவாக இருக்கிறது. 

எதையெல்லாம் பிராண்ட் செய்ய முடியும்? 
பொருட்கள் (சோப்பு, மொபைல் )  சேவை (டி எச் எல்)  வெப்சைட், பொருளின் /சேவையின் பயன்பாடு, விற்பனை (அம்மா உணவகம்),  பொருள் கொள்ளளவு, மனிதர்கள் (மைக்கேல் ஜாக்சன்)  தொழில் நுட்பம் (எஸ் எ பி) , இடம் (சென்னை), சில்லறை வணிகம் (அமேசான்), பொழுதுபோக்கு (சென்னையில் திருவையாறு), நிறுவனம் (டாடா), கல்வி நிறுவனங்கள் (எஸ் ஆர் எம்), 

ஒரு உடைந்த கோக் பாட்டிலின் மூடியை பார்த்தாலும் அந்த பொருளின் நினைவு வரும், ஒரு பொருளுக்காக விளம்பரம் செய்யும் கதாபாத்திரம் - பிரபு (கல்யாண் ஜெவெல்லர்ஸ்) - இதனை ப்ராண்ட் அம்பாஸடர் என்கிறோம். பிராண்ட் விசுவாசம் எனும் லாயல்டி என்பது ஹிந்து நாளிதழை தொடர்ந்து தலைமுறை தலைமுறை மாறாது வாங்குவது. பிராண்ட் பொசிஷனிங் என்பது ஒரு பொருளை அல்லது சேவையை எப்படி முன் நிறுத்துவது என்பது குறித்தது (தேர்தல் சமயத்தில் ஒரு வாசகம் அல்லது லோகோவை எப்படி பிரபலப்படுத்துவது), 5 ஆப்பிள் என்பதற்கும் ஆப்பிள் 5 என்பதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா ? 

பிராண்டிங் செய்வதன் பயன்கள் என்று பார்க்கும் பொழுது - வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு, பொருளின் மதிப்பு மற்றும் சேவையை முன்னிறுத்துவது, நாம் தேடுகின்ற பொருள் அல்லது சேவையை கிடைக்க செய்வது (மொபைல் போனில் ஏர்டெல் மூலம் இசை பெறுவது), சந்தையில் நமது பொருள் மற்றும் சேவையின் பங்கு எவ்வளவு என்று பிராண்ட் தீர்மானிக்கிறது. மேலும் மக்களின் நல்ல அபிப்ராயத்தை மேம்படுத்தல், வருமானம் பெருகிட பிராண்ட் பெரிதும் உதவுகிறது. 

ஒரு பிராண்டை எப்படி முன்னேற்றுவது ? 
- பிற பொருட்களில் இருந்து வித்தியாசப்பட்டு அதன் தனித்தன்மையை மக்களுக்கு தெரிவிப்பது 
- நமது வாடிக்கையாளர்கள் இருக்கும் சந்தையில் ஒரு அர்த்தத்தை உருவாக்குவது 
- நமது வாடிக்கையாளர்களுக்கு நன்மதிப்பை தருவது 
- நமது பிரான்ட் வாடிக்கையாளர்களுக்கு என்ன அனுபவம் மற்றும் திருப்தி தந்தது என்று கண்டறிவதன் மூலம் 

பொதுவாக பிராண்ட் என்பது நாம் சொல்வது, செய்வது, நினைப்பது, ட்வீட் செய்வது, முகநூலில் பதிவு செய்வது, மெயிலில் எழுதுவது, பகிர்ந்து கொள்வது, வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம் எல்லாமே தான். 

மக்களின் ஒவ்வொரு பேச்சும், எண்ணங்களும், கதையும், அனுபவமும் பிராண்ட் என்பதை பிரதிபலிக்கும். மக்கள் ஒரு பிராண்ட் என்ன சொன்னது என்பதை நினைவில் கொள்வதில்லை, விரைவில் எளிதில் மறந்து விடுவார். ஆனால் அவர்களை எப்படி உணரச் செய்தது என்பதை ஒரு போதும் மறப்பதில்லை. 


விலை நிர்ணயித்தல் 

ஒரே விலை, வாடிக்கையாளருக்கு ஏற்ப விலை, மொத்த வணிகத்திற்கு ஒரு விலை, சில்லறை வணிகத்திற்கு ஒரு விலை, ஏற்றுமதிக்கு ஒரு விலை, உள்ளூர் சந்தைக்கு ஒரு விலை, விழாக்காலங்களில் ஒரு விலை, அரசு நிர்ணயித்த விலை (தங்கம், பெட்ரோல்), மான்ய விலை (ரேஷனில் சர்க்கரை விலை), புதிய பொருளுக்கு விலை, சொந்த பிராண்ட் கடைகளில் ஒரு விலை, ஹோல் சேல் சந்தையில் ஒரு விலை (கோயம்பேடு காய்கறி சந்தை), மால் போன்ற இடங்களில் சற்று அதிக விலை, பிளாட்போர்ம் கடைகளில் ஒரு விலை, சந்தா கட்டியவர்களுக்கு ஒரு விலை (ஆவின் அட்டை மூலம் ஒரு விலை, கடையில் வேறு விலை), சீசன் முடிந்து போனால் ஒரு விலை, வீடு வீடாக விற்கும் பொழுது ஒரு விலை, கண்காட்சி மற்றும் பொருட்காட்சி சாலைகளில் ஒரு விலை, என்று வித்தியாசமான விலை எல்லா நிறுவனங்களிலும் உண்டு. 

புதிய பொருள் சந்தைக்கு முதல் முறை வரும் பொழுது அதிக விலை, மாற்று பொருள் சந்தையில் வரும் பொழுது இறங்கும் விலை, கள்ளச் சந்தையில் ஒரு விலை, பொருள் இனி சந்தையில் வராது எனும் பொழுது இறங்கும் விலை, ஏழை பணக்காரர்களுக்கு ஒரு விலை (உடனே பணம்/கடனுக்கு பொருள்), அநியாய விலை, நியாய விலை, விடுமுறை சந்தைகளில் ஒரு விலை, வெள்ளம் மழை போன்ற சிக்கல்களில் ஒரு விலை (பால் அரை லிட்டர் 200 ரூபாய்), ஆஸ்பத்திரி வாசலில் இளநீர் குறைவு விலை, ஐ டி நிறுவனம் அருகில் காபி அதிக விலை, முன்கூட்டிய பதிவிற்கு குறைந்த விலை (விமான டிக்கெட்), என்று பல விதமாக நிறுவனங்கள் பொருள் அல்லது சேவைக்கு விலை நிர்ணயம் செய்கின்றன. 

தவிர காஸ்ட் அடிப்படையில் விலை, காஸ்ட் மற்றும் லாபம் சேர்ந்த விலை, டிமாண்ட் அடிப்படையில் விலை, போட்டி அடிப்படையில் விலை, மதிப்பு கூட்டிய சேவைக்கு ஒரு விலை, உறுதியான அதிக கொள்முதலுக்கு குறைந்த விலை, நடப்பு விலை, ஸ்டாக் முடிக்க குறைந்த விலை என்று நிறுவனங்களின் யுக்தி மாறுகிறது. 

பேக்கிங் சிறப்புகள் என்ன?

ஒரு பொருளின் மதிப்பு அது எப்படி பேக் செய்யப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. அழகான பாட்டில், பெட்டி, இவற்றில் போட்டு விற்கும் பொருளின் விலை யாரும் கேள்வி கேட்பதில்லை (சென்ட், கைக்கடிகாரம், கூலிங் கிளாஸ்).

பேக்கிங் செய்த பெரும்பாலான பொருட்களில் நிறுவனத்தின் பெயர், லோகோ, கலர் தீம், பொருளின் தன்மை, அதன் கால நிர்ணயம், எங்கு தயாரிக்கப் பட்டது, பொருளின் காலாவதி நாள் என்று பல விஷயங்கள் உள்ளன. சாக்லேட் வாங்குபவர்கள் நிச்சயம் காட்பரி நிறுவனங்களின் பொருட்கள் மீது ஈர்க்கப்படுகிறார்கள். அதே போல ஷாம்பூ போன்ற பொருட்களின் பாட்டில்கள் மக்களை ஈர்க்கின்றது. தவிர சில பரிசுப் பொருட்களை எப்படி பேக்கிங் செய்கிறோம் என்பதை பொருத்து அதன் மதிப்பு மாறுகிறது. 

வண்ணங்கள், பேக்கிங் செய்ய பயன்படுத்தும் பொருள் மரம், காகிதம், பிளாஸ்டிக், அலுமினியம், செம்மண் அல்லது களிமண் பொருள், மெட்டல், கண்ணாடி, பிளாஸ்டிக், டின், அட்டை என்று மாறுபடுகிறது. அதிலும் வண்ணங்கள், வடிவங்கள், அதில் பொருளின் பெயர் மற்றும் சித்திரம் எப்படி இருக்கிறது என்று கூட நாம் காணலாம். ஆகவே ஒரு பொருளுக்கு சமமாக அதன் மதிப்பு பேக்கிங் மூலம் கூடுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

மௌனமாக இரு

மௌனமாக இரு 

கோபமாக இருக்கும் பொழுது 
மெளனமாக இரு 

எல்லா உண்மைகளும் தெரியாத பொழுது 
மெளனமாக இரு 

உண்மைக்கதை என்ன என்று விசாரிக்காவிடின் 
மெளனமாக இரு 

எளியவரை உன் வார்த்தை கொல்லுமென்றால் 
மெளனமாக இரு 

கேட்கும் நேரம் இது என்றறிந்தால் 
மெளனமாக இரு 

தூய்மையான விஷயத்தை 'தூ'வென்றாக்கும் மனநிலையில் 
மெளனமாக இரு 

பிறர் பாவங்களை தூற்றும் எண்ணம் வருகையில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தைகளை எண்ணி பின்னால் வருந்துவாய் எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை தவறான அபிப்ராயம் உருவாக்குமென்றால் 
மெளனமாக இரு 

அது உனக்கு சம்பந்தமான விஷயம் இல்லையெனில் 
மெளனமாக இரு 

நீ சொல்லப்போவது பொய் என்று தெரிந்தால் 
மெளனமாக இரு 

உனது வார்த்தை பிறரின் மதிப்பைக் குறைக்குமெனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நட்பை பாதிக்கும் என்றால் 
மெளனமாக இரு 

சத்தமின்றி சொல்ல முடியாது என்றால் தெளிந்து நீ 
மெளனமாக இரு 

உனது பேச்சு விளைவுகளை உண்டாக்கும் எனில் 
மெளனமாக இரு 

உனது பேச்சு நல்ல விளைவை உண்டாக்காது எனில் 
மெளனமாக இரு 

உனது வார்த்தையை பின்னாளில் நீயே முழங்க வேண்டுமெனில் 
மெளனமாக இரு 

ஏற்கனவே இப்படிப் பேசியம் பயனில்லை என்றால் 
மெளனமாக இரு 

கெட்டவரை புகழ வேண்டும் என்று தெரிந்து விட்டால் 
மெளனமாக இரு 

பேசுவதை விட நல்ல பணி இருக்கும் பொழுது சற்று 
மெளனமாக இரு 

உனது பேச்சு உனக்கோ பிறருக்கோ நன்மை பயக்காது எனில் 
மெளனமாக இரு 

- தமிழில் டாக்டர் பாலசாண்டில்யன் 
(In English - Murali Srinivasan)

Smart Story

விபரீதம் 

புதிய டிரைவர். புதிய கார். முதலாளி ஏறி அமர்ந்தார் ஒயிலாக. வண்டி சற்று வேகமாக போய்க் கொண்டிருந்தது. மெதுவாக டிரைவர் தோளைத் தொட்டார் முதலாளி. நடந்தது அமர்க்களம்.. வண்டி தாறுமாறாக ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக  நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு வினாடியில் களேபரம். நல்ல வேளை சரியான நேரத்தில் போட்ட பிரேக் காரணமாக விபரீதம் ஒன்றும் நடக்கவில்லை. முதலாளி முதல் முறை மன்னிப்பு கேட்டார். உன்னை மெதுவாகத் தான் தொட்டேன். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்றார். 
இல்லை ஐயா இது உங்கள் தவறு இல்லை. 25 ஆண்டுகளாக நான் அமரர் ஊர்தி ஓட்டிக் கொண்டு இருந்தேன். முதல் முறையாக கார் ஓட்டுகிறேன். நீங்கள் தொட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது என்றார் டிரைவர் ஆத்மநாதன்.

இணைய தலைமுறை

இணைய தலைமுறை 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
மனநல ஆலோசகர்/கல்வியாளர் 


எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் கூகுள் சொல்வதறிவு என்ற நிலை உருவாகி உள்ள நிலை தான் இன்று. 

எங்கே சாப்பிடலாம், எங்கே தங்கலாம், எப்படி ஓர் ஊருக்கு போகலாம் எந்த தகவல் என்றாலும் இக்கால இணைய தலைமுறை உடனே மடிக்கணினி அல்லது கைபேசியை திறந்து பார்த்து விடுகிறார்கள்.

தவிர பொருள் விலை, கிடைக்குமிடம் எல்லாமும் அறிந்திடும் அதே வேளை ஆடை, காலணி இவை எல்லாம் கூட இணையத்தின் மூலம் ஆர்டர் செய்கிறார்கள். சில பொருட்கள் தொட்டுப்பார்த்து, சில பொருட்கள் போட்டுப் பார்த்து, வாங்கிட வேண்டும். கண்ணால் காண்பதும், பிறர் சொல்வதும், தீர விசாரிப்பதும் கூட தவறு தான். நாமே கண்டு, உணர்ந்து, திருப்தி மனப்பாங்கோடு வாங்க வேண்டும். இந்த நிலை இன்று இளைஞர்களிடம் இல்லை. கேட்டால் ரிட்டர்ன் பாலிசி இருக்கிறது. கவலைப்பட ஒன்றும் இல்லை என்பார்கள். நேர விரயம் பற்றி யாரும் யோசிப்பதில்லை. 

கல்விப் பாடங்களில் சந்தேகம் என்றால் இணையத்தில் நிச்சயம் விடை இருக்கும். ஒன்றுக்கு நூறு கூட கிடைக்கும். அவற்றுள் எது சரி, எது நமக்குப் பொருந்தும், எது நாம் தேடுகிற ஒன்று என்ற புரிதல் இங்கே தேடுவோரிடம் சற்று குறைவு தான். இதை ஆங்கிலத்தில் ரெலெவன்ட் அண்ட் ஆதென்டிக் என்பார்கள். அதே போல புள்ளி விவரங்கள் பெரும்பாலும் அண்மையில் சொல்லப்படும் ஒன்றாக இருக்காது. அதுவும் யார் சொன்னது, எப்போது எங்கே சொன்னது என்பதுவும் முக்கியம் தானே? 

இணையத்தில் நாம் காணுகின்ற ஒவ்வொரு விஷயமும் யாரோ எங்கோ எப்போதோ தேடிப் பிடித்து பதிவு செய்தது தான். அதன் உண்மைத்தன்மை அங்கே எவரும் உறுதி செய்வது இல்லை. போட்டது தான் கிடைக்கும். ஆனால் கிடைப்பது எல்லாம் சரியாய் இருக்குமா என்று சொல்வது கடினம். 

இன்று இணைய தலைமுறையிடம் பெரும்பாலும் காணுகின்ற ஒரு முக்கிய விஷயம், அவர்கள் உடல் ரீதியான நோய் குறித்து தேடிப் பிடித்து தெரிந்து கொள்கிறார்கள். நிச்சயம் அந்த விஷயம் நமக்கு முற்றிலும் பொருந்துமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஒரு மருத்துவரிடம் சென்று நமது உடலில் ஏற்படும் உபாதை குறித்து முழுமையாக எடுத்துச் சொல்லி, அதனை அவர்கள் அனுபவத்தில் என்ன நோய் அல்லது அது நோய் தானா என்று கண்டறிந்து உரிய வைத்தியம் சொல்லுவார்கள். ஆனால் இணையத்தில் நாமே கண்டறிந்து, புரிந்து கொண்டு அதற்கு சொந்த வைத்தியமும் செய்து கொண்டால் அது மிகவும் ஆபத்தானது.

தெளிவு ஏற்படுவதை விட குழப்பங்கள் ஏற்படும் சாத்தியம் இன்று அதிகம். அதே போல ஒரு கேள்விக்கு விடை தேடும் போது விடைக்கு பதில் மேலும் பல கேள்விகளே எழுகிற வாய்ப்பும் அதிகம். அப்போது சார்ந்த வேறு பல இணைய கருத்துக்களை தேடித் தேடி நேர விரயம், மேலும் குழப்பம் இவை தான் மிஞ்சும். 

ஒரு நிபுணரை நேரில் சந்தித்து பெறுகிற தகவல் உறுதியான, நம்பகமான ஒன்றாக இருக்கும். ஆனால் இணையம் தருகிற எல்லா தகவலும் அப்படி அல்ல. ஏற்கனவே ஒரு சில தகவல்கள் நம்மிடம் உள்ளன, மேலும் சில அது குறித்த விபரங்கள் தேவை எனும் பொழுது இணையம் நிச்சயம் உதவும். ஆகவே இளைய இணைய தலைமுறையினர் ஸ்மார்ட் ஆக இருந்தாலும், எல்லா விஷயங்களையும் அப்படியே நம்புகிற சற்று சாதுரியம் மற்றும் சாமர்த்தியம் குறைந்தவர்களாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. பி கேர்புல் - நான் என்னைச் சொன்னேன். ஹும் ...!!

இணைந்து செயல்பட்டால் இல்லை தொல்லை

இணைந்து செயல்பட்டால் இல்லை தொல்லை 

இன்று காலை வழக்கமான முடிதிருத்தும் செய்யும் கடைக்கு சென்றேன். ரொம்ப ஆண்டுகளாக செல்லுவதால் அங்கே இருக்கும் ஊழியர்களுக்கு என்னை நன்றாகவே தெரியும். "சார் கொஞ்சம் இருங்க, பப்பு டிபன் சாப்பிடப் போய் இருக்கிறார், வந்து விடுவார்" என்றார் கருணா. சற்று நேரத்தில் வந்தார் அப்பு. வழக்கம் போல பப்புவிடம் அவர் ஊர் பற்றி, குடும்பம் பற்றி எல்லாம் ஹிந்தியில் விசாரித்தேன். பப்பு பீகாரில் இருந்து இங்கு வந்து வேலை செய்தாலும் அவருக்கு தமிழும் தெரியும். 

என் தலை மீது பப்பு விளையாடிக் கொண்டு இருந்தார். நான் வழக்கமாக அவருக்கு எந்த ஒரு விபரமும் சொல்ல மாட்டேன். அவருக்கு தெரியும் எனக்கு என்ன வேண்டும் என்று. 

எல்லோருக்கும் டீ வந்தது. பப்பு என்னைக் கேட்டார் சார் உங்களுக்கு என்று. நான் லெமன் டீ கிடைக்குமா? என்றேன். சில நிமிடங்களில் சுவையான லெமன் டீ வந்தது. 

அங்கே இருந்த வினோத் என்பவர், "பப்பு இங்கே வா"  என்று அழைக்க பப்பு சார் ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு போய் ஒரு சீட்டு வாங்கி வந்து படித்தார் கப் போர்ட் மற்றும் சேர். நான் கேட்டேன் எதாவது சீட்டு போட்டு பணம் சேர்க்கிறீர்களா? இல்லை என்று சொன்ன பப்பு தொடர்ந்து சொன்ன விஷயம் தான் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. 

ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் நாங்கள் மைண்டெனன்ஸ் என்று மதியத்துக்கு மேல் கடையை சுத்தம் செய்வோம். நீ இத செய், நான் இத செய்யறேன் என்று எங்களுக்குள் சிறு சிறு குழப்பம் வருகிறது. நான் சொன்ன ஐடியா படி தான் இப்போது ஓரிரு மாதமாக நடக்கிறது. அதாவது என்ன வேலைகள் உள்ளதோ அவற்றை பிரித்து வேறு வேறு சீட்டில் எழுதி விட்டு அந்த சீட்டை ஒரு டப்பாவில் போட்டு குலுக்கி அவரவருக்கு ஒரு சீட்டு எடுத்துக் கொள்ளுவோம். அதன் படி இன்று எனக்கு வந்தது தான் கப் போர்ட் மற்றும் சேர்.

நான் விடவில்லை. இங்கே உங்களில் சிலர் வயதானவர்களும் இருக்கிறீர்களே, சில வேலைகள் கடினமாக இருக்குமே, அப்போது என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். பப்பு சொன்னார், அதை நாங்கள் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளுவோம் எந்தவித மனத்தாங்கல் இல்லாமல். இப்படி வேலையை பிரித்துக் கொள்ளும் பொழுது அவரவர் வேலையை முணுமுணுக்காமல் செய்கிறோம். அது மட்டும் அல்ல. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யும் பொழுது ஒரு அலுப்பு இருக்கும் அல்லவா அதுவும் வராது.

பப்புவின் கையைக் குலுக்கி எனது பாராட்டை தெரிவித்தேன். ஒரு சிறிய டீம் இருக்கும் எந்த அலுவலகத்திலும் இந்த சிஸ்டெம் கடைபிடிக்கலாம். ஏன் நமது வீட்டில் கூட மாதம் ஒரு முறை ஞாயிறு அன்று இந்த முறையை கடைபிடித்து அனைவரும் இணைந்து ஒரு டீமாக வேலை செய்யலாம். 

இணைந்து செய்யும் பொழுது கம்பிளைன்ட் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. இஷ்டத்துடன் நமது என்ற உணர்வுடன் செயலில் ஈடுபடலாம். நிச்சயம் இந்த ஐடியா உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்.

Bala's quotes

ஒருஒருவரைப் பார்த்தே பொய் அறிஒருவரைப் பார்த்தே பொய் அறியலாம்...தொட்டு நோய் அறிவதைப் போல..!
செயல்கள் முடியும். மனிதர்கள் கிளம்பி விடுவார்கள். வாழ்க்கை மட்டும் உலகோடு தொடரும்.
ஊடகங்களிடம் கேள்வி இருக்கிறது. பதில் இருக்கிறதா... பதில் கிடைக்கிறதா... சத்தங்கள் இருந்தாலும் கருத்து யுத்தங்கள் முடிவதில்லை ..!?
செயல் எதுவாகினும் களமிறக்கும் முன்பு உடலளவில் மனதளவில் தயார் செய்து கொள்வது மிக அவசியம்.
நேற்று என்பது ஊசின சோறு..  இன்று என்பது நகரும் ஆறு..  .நாளை என்பது நிலையில் தேரு...!
ஒழுக்கம்: எல்லாவற்றுக்கும் ஓர் இடம் அனைத்தும் அதனதன் இடத்தில் எல்லாவற்றுக்கும்  ஒரு நேரம்  அனைத்தும்  அதனதன் நேரத்தில்
வெறியோடு வேட்கையோடு செய்யும் எந்த வேலையும் மகிழ்ச்சி தரலாம் மகிழ்ச்சி வேண்டும் என்று செய்யும் எந்த வேலையும் மனச்சோர்வே தரும் ...!
முதியோர் உரமானார் இளையோர் மரமானார் இடையோர் ஜடமானார் இருப்போர் சந்தை மடமானார்
தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மனமும் அற்ப விஷயங்களில் நாட்டம் கொண்டு நகர்கிறது. தடுத்து நிறுத்த முடிந்தால் நன்மை பயக்கும்.
சுருக்கமாக பேசுவது வலிமை. 'சுருக்' கென்று பேசினால் வலி மெய்.
தனியாக இருப்பதால் காதலிக்க வேண்டாம். மனம் தயாராக இருந்தால் மட்டுமே காதலியுங்கள்...
நம்மில் அதிகம் பேர் இன்று சில காசுகளை சேமிப்பதாக எண்ணி பல ரூபாய்களை எளிதில் இழந்து விடுகிறோம்
சொல்வதில் செய்வதில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பதை விட நன்மை இருக்கிறதா என்று பார்த்தால் நல்லது.
யார் யாரோ வருவதற்கு நம்மவரில் ஒருவர் நம்மை வழிநடத்த வரட்டுமே...!!
செய்வன திருந்தச் செய் இல்லையேல் திரும்பச் செய்வாய்..!
வலி வேண்டும் என்று வலியுறுத்தி கேட்ட பாறை ஒரு சிலையாக மாறியது. வலி வேண்டாம் என்று சொன்ன பாறை படியாக மாறியது.
விதைத்த நெல்லை விட விதைக்காத புல் வேகமாக வளர்கிறது. அப்படித்தான் நெகடிவ் எண்ணங்கள்.
மூச்சு திணறினால் வாய் திற. பேச்சு திணறினால் வாய் மூடு. மெய் சிலிர்க்க மெய் சிறக்க வாய் தான் பிரதானம்.
வாழ்க்கை என்பது பெறுவதும் காப்பதும் அல்ல... அளிப்பதும் அன்பு காட்டுவதும் தான்..!
பிரபலமான நபர்கள் அனைவரும் அபிப்பிராயம் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. சொல்லும் கருத்துக்கள் பிரபலமாகும் என்று சொல்ல முடியாது.
பிழைகள் எல்லாம் இழைகள் பிரிந்த மனதின் குழப்பமே. மனம் தெளிந்து இருந்தால் மடை திறந்து விடும். விடை பிறந்து விடும்
கந்தை அழுக்கானால் கசக்கி வெளுக்கலாம். சிந்தை அழுக்கானால் சிவனே என்றிருத்தல் நலம்...
சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டியவர்கள் சொல்லும் இடத்தில் செல்லும் இடத்தில் சொன்னால் எல்லாமே செல்லுபடி ஆகும், சொல்லும்படி ஆகும்.
தர்க்கம் எனும் மென்முறை உறவுமுறை தகர்க்கும். குதர்க்கம் எனும் வன்முறை உள்ளத்தை தகர்க்கும்
சிறப்பா செய்யணும் என்பதை விட சீக்கிரம் செய்யணும் என நினைப்பவர்கள் இன்று அதிகம்...?!
நல்ல தூக்கம்  வாயார சிரிப்பு வயிறாற உணவு மெய்யான அன்பு உண்மை அக்கறை  சாய்ந்திடத் தோள் கனிவு ஸ்பரிசம்  இருந்து விட்டால் சுவர்க்கம் வேண்டாம்....
ஆத்திரத்தின் நிறம் அறிவின் நிறம் அல்ல. பாத்திரத்தின் நிறம் பாலின் நிறம் அல்ல.
உன் காலடியை பின்பற்ற சிலர் உண்டு.. அறிந்து கொள்..! உன் காலணியில் நுழைந்து கொள்ள எவருமில்லை புரிந்து கொள்..!! உனது பார்வை உனது பாதை...!!
அக மாற்றம் இல்லாமல் புற மாற்றம் மற்றும் பிற மாற்றங்களை செய்து என்ன பயன்?!
வாழ்நாள் குறைவு தான் எல்லோருக்கும். அதில் கனிவு கரிசனத்திற்கும் நேரமுண்டு..
ஏதிரி போல மாறாத மனநிலையில் ஒருவர் இருக்கும் போது எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட நாம் ஏன் மாற வேண்டும்...
ஓய்வு அறியா கூலி கேட்கா வேலைக்காரன் தான் நமது இதயம். அவனை மகிழ்வாக வைத்துக் கொண்டால் உண்டு நன்மை.
ஒப்பனைகள் எத்தனை செய்தாலும், ஒப்பாகுமா நகல் ஓர் அசலுக்கு. பார்க்க அழகிருந்தாலும், ஞானம் வருமா ஓர் அசடுக்கு..!
நதியின் நீர்ச்சத்தம் கடலைச் சேரும் வரை... மனதின் பரிசுத்தம் உன்னைக் காணும் வரை...
நச்சு மரங்களா, யாரும் மெச்சும் மரங்களா நமது வாழ்க்கை என்பது நமது எண்ணங்கள் எனும் விதைகளைப் பொருத்தது.
நேர்மையாக இருந்து என்ன சாதித்தீர்கள் என்று கேட்கலாம். நேர்மையாக இருப்பதே சாதனை தான்.
கடந்த காலம் கசப்பும் கஷ்டங்களும் நிறைந்தது. நிகழ்காலம் நிறைவினைத் தருவது. எதிர்காலம் எல்லைகளற்றது.
அதிகாரத்தை பெற அபிமானத்தை முதலில் பெற வேண்டும். அபிமானத்தை பெற அகங்காரத்தை விட வேண்டும்.
பிறரால் கொடுக்கப்படுவது அதிகாரம். நாமே எடுத்துக் கொள்வது பொறுப்பு. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தலாம். பொறுப்பை வேரொருவர் ஏற்க முடியாது.
வலியுறுத்தல் செய்தால்  வலி உறுத்தல்  இரண்டுமே அகல வேண்டும்
நாம்  காதுகளை குறைவாகவும் வாயை அதிகமாகவும் திறக்கிறோம். அது தான் நமது பிரச்சனைக்கு காரணம்

சரியெல்லாம் தவறாகும் போது தவறெல்லாம் சரியாகும்எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு.யலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!வரைப் பார்த்தே பொய் அறியலாம்...
தொட்டு நோய் அறிவதைப் போல..!