Wednesday, June 30, 2021

நீங்கா நினைவலைகள் - 6

 நீங்கா நினைவலைகள் - 6

- பாலசாண்டில்யன் 

இந்த புதிய தொடர் தொடங்கி 5 நாட்கள் அதாவது 5 அத்தியாயங்கள் ஓடி விட்டன.

அருமையான ஊர் குளித்தலையில்  (அது நகரமும் அல்ல கிராமமும் அல்ல - அழகிய டவுன்). காவிரி நதி ஓடினாலும் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் காவிரியில் குளிக்க என்னை அனுப்ப மாட்டார்கள் வீட்டில். என்றாவது மாசி மகம், முடவனுக்கு முழுக்கு, ஆடிப் பெருக்கு என்று சில தினங்களில் பாட்டியுடன் போய் வருவது உண்டு. ஆனால் வாரம் ஒரு முறை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு போவேன். மிகவும் அழகான கோவில். சிறப்பான பிரகாரம். பக்தி மணம் கமழும். அதே போல டியூஷன் போகும் போது ராஜேந்திரன் சார் வீட்டிற்கு அருகே இருந்த குளித்தலை மாரியம்மன் கோவிலுக்கு கட்டாயம் போவேன். ஆடி மாசம் அமர்க்களப்படும். வருடத்தில் ஒரு நாள் தேரும் உண்டு.

அதே போல குளித்தலையில் இருந்த பொழுது மறக்க முடியாதது பஸ் ஸ்டாண்டில் இருந்த சங்கர் கபே ஹோட்டல். (இன்னும் இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்) அண்ணாச்சி மளிகை கடைக்குப் போய் வீட்டுக்கு சாமான் வாங்கிக் கொடுக்கும் போது அஞ்சு பைசா பத்து பைசா சில்லறை கிடைத்தால் எனது பாட்டி அதனை எனக்கு உண்டியல் ஒன்று  கொடுத்து அதில் சேமிக்க சொல்லுவார். ஓரிரு முறை  நான் அப்படி செய்யாமல், அந்தக் காசை எடுத்துக் கொண்டு ஒரு நப்பாசையில் சங்கர் கபேக்குள் நுழைந்து தோசை அல்லது பூரி சாப்பிட்டு இருக்கிறேன்.  சட்டை பாக்கெட்டை தொட்டு தொட்டுப் பார்த்துக் கொள்ளுவேன் அந்தக் காசு இருக்கிறதா என்று. பெரியவர் என்னை ஏற இறங்கிப் பார்த்து என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டால் விலைப்பட்டியல் பார்த்து விட்டு 'ஒரு தோசை'  என்பேன். வேற என்றால் பில் என்பேன். அது மட்டுமா? யாராவது தெரிந்தவர் கண்ணில் மாட்டக்கூடாதே என்று தலை குனிந்து உட்காருவேன். வாழை இலையில் அந்த தோசையை கொணர்ந்து பெரியவர் வைப்பார். அப்போது இலையே தோசை சூட்டில் பச்சை நிறம் மாறி வெந்து இருக்கும். அதன் மணம் ருசியைக் கூட்டும். தோசை மீது சாம்பார் மற்றும் சட்னி சில பல கரண்டிகள் அபிஷேகம் செய்த பிறகு அதன் ருசி வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படித் தான் அந்த பூரி மசாலாவும். அந்த ருசி மணம் நான் இதுவரை வேறு எங்கும் பார்க்கவில்லை என்பதை நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும்.

நான் எட்டாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் குளித்தலை அரசினர் ஆண்கள் பள்ளியில் முடித்து விட்டேன். எனது கல்வியில் முன்னேற்றம் குறைந்து வருவதை அம்மா உணர்ந்து கொண்டார். அது பற்றி அப்பாவிடமும் விவாதம் நடந்தது. அப்போது என் அறிவுக்கு அது எட்டவில்லை என்றாலும், நிச்சயம் அப்போது எனது விளையாட்டுத்தனம், கல்வியில் கவனிமின்மை, இலக்கு பற்றி அறியாமை, எடுத்துச் சொல்ல யாரும் அருகில் இல்லை
எனும் நிலை, செல்லம் கொடுக்கும் பாட்டிகள், பள்ளிக்கு அருகே இருந்த செல்ல மிராசுதார் மாமா, வளர் சூழல், பள்ளியிலும் உடன் படிப்பவர்களின் ஆர்வமின்மை என்று பல காரணங்கள் பட்டியல் இட்டாலும், எனது கவனமின்மை என்பதே உண்மை. அது எங்கே எனக்குப் புரிந்தது ?

பண்ணை வீட்டு பசங்கள், வக்கீல் வீட்டு பையன் சுரேஷ் எல்லோரும் காலை ட்ரெயின் பிடித்து திருச்சி ஈ ஆர் ஹை ஸ்கூலில் படித்தனர். என்னையும் அங்கே சேர்க்க எனது அப்பா பெரிய மனது பண்ணி எப்படியோ ஏற்பாடு செய்தார். வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து போய் குளித்தலை டு திருச்சி ட்ரெயினில் போக வேண்டும். அப்பா ரயில்வே ஆஃபீசர் என்பதால் எனக்கு இலவச முதல் வகுப்பு பாஸ் வாங்கிக் கொடுத்தார். அதிலே கூட்டம் குறைவாக இருக்கும், நான் படித்துக் கொண்டே போகலாம் என்று அவர் நினைத்தார். கோட்டை ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் சிந்தாமணி வரை நடந்தே சென்றால் தான் நேரத்திற்கு பள்ளி சென்று அடைய முடியும். "வானோர் வணங்கும் அன்னையே" பாட்டு சில நேரம் கேட் நெருங்கும் போதே கேட்கும். அதாவது நான் லேட். "சார் சாரி சார் என்று தலை குனிந்து வகுப்பில் நுழைவேன்" சில நேரம் முட்டி போட்டு விட்டு நுழைவேன். 

அம்மா எனக்கு இரண்டு டிபன் பாக்ஸ் கட்டித் தருவார். திரும்பி வரும் போது இரவு 7.45 ஆகி விடும் என்பதால். மிக நல்ல பள்ளிக்கூடம். ரொம்ப உயர் தரமான கல்வி. அருமையான ஆசிரியர்கள். (தற்போதும் மிகச் சிறந்த உரைகள், உபன்யாசங்கள் நிகழ்த்தி வருகிற புலவர் திரு ராமமூர்த்தி சார் தான் தமிழ்த் துறை தலைவர் - அப்போது அவருக்கு என்னை, எனக்கு அவரை அவ்வளவு பழக்கம் இல்லை - இப்போது தினம் வாட்ஸாப்பில் அவரது உரைகளை எனக்கு அனுப்புகிறார்). இருந்தாலும் நான் அதற்கு ஈடு கொடுக்க வேண்டுமே. 

எனக்கு முதல் வகுப்பு பாஸ் இருந்தாலும், எனது அஹ்ரகார நண்பர்கள் கணேஷ், பட்டாபி, சுரேஷ் இவர்கள் எல்லோரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்த காரணத்தால் அதிக நாள் நான் அவர்களுடன் ஏறிக்கொண்டு அரட்டை, பாட்டு என்று கும்மாளமாக செல்லுவேன். இருந்தாலும் எனது பூஞ்சை உடலுக்கு இந்த இரு நேர நீண்ட பயணம்,காலை மாலை இரு நேர நீண்ட நடை, பிறகு படிப்பில் போட்டி எல்லாவற்றையும் தாக்கு பிடிக்க முடியவில்லை. குளித்தலை பள்ளியில் பீஸ் கிடையாது. ஆனால் திருச்சி பள்ளிக்கு உண்டு. அங்கே படித்தால் 11 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேரலாம். ஆனால் முடியவில்லேயே. மீண்டும் வீட்டில் பேச்சு, போராட்டம், விவாதம். என் மீது பாவ புண்ணியம் பார்த்து எனது மிராசுதார் மாமா தயவுடன் மீண்டும் குளித்தலை பள்ளிக்கே டிசியுடன் வந்து பத்தாம் வகுப்பை நான்கு மாதங்கள் மட்டும் திருச்சியில் படித்து விட்டு தொடர்ந்தேன். பிறகென்ன? பழைய குருடி கதவை திறடி தான். 

எனது உறவினர் மறைந்த திரு பாலசுப்ரமணியன் சார் அங்கே ஆங்கிலம், வரலாறு, மற்றும் பூகோளம் எடுத்துக் கொண்டு இருந்தார். பள்ளிக்கு சரியாக அடுத்த வீடு. எனக்கு பிரத்யேக டியூஷன் ஆங்கில க்ராமர்க்கு எடுத்தார். தப்பு செய்தால் சிரித்துக் கொண்டே தலையில் செல்லமாக கொட்டுவார். அதனால் நான் ஆங்கிலத்தில் எப்போதும் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுப்பேன். கணக்கு படிக்க ராஜேந்திரன் சார் வீட்டுக்கு டியூஷன் போனேன். பள்ளி ஏ எச் ஹெம் திரு ரகோத்தமன் சார் என்னை அழைத்து ஆங்கிலம் பேப்பரை (எட்டு ஒன்பது வகுப்பு பரிட்சைத் தாள்களை திருத்தச் சொல்லி அழைப்பார்.) இப்போதும் படிப்பில் எனக்கு அதிக ஆர்வம் வந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. 

கடைத்தெருவில் வசித்து வந்த எனது பள்ளி நண்பன் வெங்கடேசன் (பின்னாளில் எனது சென்னை கல்லூரியில் கூட சேர்ந்து படித்தான், இன்றும் பல டிவி சேனல்களில் பாடி வருகிறான் - நண்பர் நரசிம்மன் தயவால் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டு தொலைபேசினேன்) அவர்களோடு சேர்ந்து பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி இவற்றில் சேர்ந்து ஏதாவது ஒரு பரிசு வாங்குவேன். இந்த சின்ன சின்ன வெற்றிகளில் மகிழ்ந்து போன நான் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளவில்லை. 

அதற்கான விளைவுகளை பின்னாளில் அனுபவித்து அறிந்தேன். மேலும் சொல்லுவேன் யதார்த்தமான பல விஷயங்களை.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

Tuesday, June 29, 2021

நீங்கா நினைவலைகள் - 5

நீங்கா நினைவலைகள் - 5
- பாலசாண்டில்யன் 

குளித்தலை என்றாலே அகண்ட காவிரி ஓடும் அருமையான ஊர். முசிறிக்கு அந்தக் கரை. நான் அங்கே படிக்கப் போன சமயம் 1970 களில் முசிறி செல்ல காவிரியில் நீர் இல்லாத பொழுது மணலில் இறங்கி நடப்பர். ஆடி மாசம் மற்றும் நிறைய தண்ணீர் வரும் போது பரிசலில் ஏறி அக்கரைக்கு செல்லுவார்கள். சுமார் 2 கி மி தூரத்தைக் கடக்க பின்னாளில் தந்தை பெரியார் பாலம் கட்டப்பட்டது. அதில் பயணம் செய்யும் போது காவிரியின் அழகு அப்படியே கண்ணில் தாண்டவம் ஆடும். இது தமிழகத்தின் மிக நீளமான பாலங்களில் ஒன்று. 

தவிர, மாரியம்மன் கோவில், திருச்சி ஒன்றரை மணி நேரம். இந்தப் பக்கம் கரூர் ஒன்றரை மணி நேரம். மூன்று தியேட்டர்கள். ஸ்டேஷன் அருகே ஒரே ஒரு கடைவீதி. காவிரிக்கரையில் கடம்பவனேஸ்வரர் கோவில். 

நிறைய பேர் (ஆண் பெண் இருபாலரும்) காலையில் சென்று நதியில் நீராடி, கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்து, நெற்றி நிறைய விபூதியுடன், ஒரு குடத்தில் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வருவர். துணியும் அங்கேயே தோய்த்து தோளில் போட்டுக் கொண்டு வருவர். தெருவில் காலை நேரத்தில் வாழைக்காய், வாழைப்பூ, வாழை இலை, வாழைப்பழம், இதர தோட்டத்து காய்கறிகள் விற்பனைக்கு நினைத்தே பார்க்க முடியாத விலைக்கு வரும். மாலையில் மணி அய்யர் வண்டியில் போண்டா, மிக்ஸர், பக்கோடா என்று மணக்கும். 

திருமணத்திற்கு முன்பு என் அம்மாவும் இதே ஊரில் அரசினர் பெண்கள் மகளிர் பள்ளியில் எஸ் எஸ் எல் சி வரை சிறப்புத் தமிழ் எடுத்துப் படித்தார். அவரும் மிகச் சிறந்த கவிஞர். பாடலாசிரியர்.

வீட்டிலோ முற்றம், தாவாரம், திண்ணை, கொல்லைப்புறம், தோட்டம் என்று நாலு முறை நடந்தாலே நேரமும் சக்தியும் போய் விடும். மொட்டை மாடியும் உண்டு. வாசல் திண்ணை தாண்டினால் என் பாட்டியின் அலறல் சத்தம் காதைப் பிளக்கும். வாசலில் பம்பரம், கிட்டிப்புள், கோலி, கிரிக்கெட் என்று நிறைய பேர் ஆடுவார்கள். அவர்களோடு சேரக்கூடாது என்று கட்டளை இருக்கும். சில சமயம் மட்டும் எதிர் வீட்டு பண்ணை வீட்டுக்கு சென்று சற்று விளையாட அனுமதி உண்டு. சுப்பாளு பாட்டி பேரன் என்று சொன்னாலே சில பிள்ளைகள் நாலு அடி தள்ளி நிற்பர். பாட்டி அவ்வளவு டெரர். என் அப்பாவை ஊரே மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டாடும். 

பல பேர்  வாசலில் அமர்ந்து வெற்றிலை போட்டு நாள் முழுதுமே அரட்டைக் கச்சேரி நடத்துவர். எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் நடப்பதும் எப்படியோ தெரிந்திருக்கும். சில நேரம் மாட்டு வண்டி, குதிரை வண்டி சத்தம் கேட்கும். சினிமா தியேட்டர்கள் தனி மாட்டு வண்டியில் மேளதாளத்தோடு படம் பற்றிய நோட்டிஸை விசிறி அடித்த படி செல்லுவர். புன்னகை, நவாப் நாற்காலி, கந்தன் கருணை, எதிர்நீச்சல், என்று மிகவும் தேர்வு செய்த படங்களுக்கு எங்கள் தெரு முக்கில் இருந்த தியேட்டரில் சென்று அனைவரும் பார்ப்பதுண்டு. அம்மா நிச்சயம் வர மாட்டார். 10, 30, 60 பைசாவில் டிக்கெட் என்று தான் நினைவு. 

என்னுடைய அத்தை பையன் சேகர் இனி அரைக்கால் நிஜார் அணிவதில்லை என்று முடிவெடுத்து அவனுடைய சட்டை நிஜார் பலவற்றை (பர்மா பெட்டி நிறைய சுமார் 40 செட் என்று சொல்லலாம்) கொண்டு வந்து கொடுத்து விட்டான். (என் தாத்தா நாராயண அய்யர் பர்மாவில் வேலை பார்த்து சண்டையின் பொழுது ஊர் திரும்பி அங்கே வீடு வாங்கி செட்டில் ஆகி சீக்கிரமே இறந்தும் போனவர். நான் அவரைப் பார்த்தது இல்லை. ஆனாலும் பர்மா நாராயண அய்யர் பேரன் என்று பேர் உண்டு) பள்ளியில் யூனிபார்ம் கிடையாது. கலர் ட்ரெஸ் தான். ஆகவே, நான் நேற்று போட்டதை இன்று போட மாட்டேன். தினம் ஒன்றாக மிடுக்குடன் வண்ணமயமாக படு ஸ்டைலாக போவேன். எல்லோரும் நிச்சயம் எனது ட்ரெஸ் பற்றி ஒரு முறையாவது பேசுவார்கள். ட்ரெஸ் மட்டும் தான் பண்ணை வீட்டைப் போல. உள்ளே என்ன என்று எனக்குத் தெரியுமே. தெருவிலும் நாங்கள் மெட்ராசில் இருந்து வந்ததால், என் அப்பா ரயில்வேயில் என்ஜினீயர் என்பதாலும் ஏக மரியாதை. அப்பாவுக்கு பர்ஸ்ட் கிளாஸ் பாஸ் என்பதால் அவர் ட்ரெயின் முதல் வகுப்பில் பயணம் செய்வார். அவர் எப்போதுமே மிடுக்காக ஆடை உடுத்துவார்.

மெட்ராஸ் வாழக்கையை விட குளித்தலை வாழ்க்கை நிச்சயம் மாறி இருந்தது. 
நான் பள்ளிக்கூடம் போகிற வழியில் தான் போலீஸ் ஸ்டேஷன், தபால் ஆபீஸ், கோர்ட் எல்லாமே. அந்த கோர்ட் குவாட்டர்ஸில் தான் என் தோழன் நரசிம்மன் வீடு. தினமும் நான் அவன் வீட்டுக்கு போய் காத்திருப்பேன். அவன் சந்தனப் பொட்டு அணிந்து, பருப்பு சாதம் மிளகாய் பொடி தொட்டு சாப்பிட்டு விட்டு என்னுடன் சேர்ந்து நடையைக் கட்டுவான். அவன் தான் சாரி அவர் தான் எங்கள் வகுப்பின் அறிவாளி. தொடர்ந்து அதிக மார்க் எடுத்து முதல் ரேங்க் வாங்குகிறவன். (இப்போது அவர்  பெங்களூரில் இருக்கிறார் - அண்மையில் அவரது 60 ஆம் கல்யாணத்திற்கு - கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த ஒன்று - நானும் எனது மனைவியும் சென்று வந்தோம். 

நான் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு மந்தமாகி வருவதை எனது மார்க் லிஸ்ட் எடுத்துச் சொன்னது. காரணம், இந்த பம்பரம், கோலி, கிரிக்கெட், பாட்டிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எதிர் வீட்டுக்கு ஓடி விடுவது என்று ரொம்ப மாறி இருந்தேன். அப்பாவுக்கு முழுமையாக இவை எல்லாம் தெரியா விட்டாலும் மார்க் லிஸ்ட் காட்டிக் கொடுத்து விடுமே. அவருக்கு வாரக் கடைசியில் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் என்னை மந்திரிச்சு விபூதி இட்டு வேப்பிலை சொருகுவார். நடுவே என் பாட்டி "குழந்தையை அடிக்காதிங்கோ..நல்லா படிப்பான், மாறி வந்திருக்கான் இல்லியா, நான் பாத்துக்குறேன்" என்று காப்பாற்றுவார். அதையும் மீறி முதுகு பழுப்பது உண்டு.  நான் மெட்ராஸ் பையன் என்ற திமிர் எனக்குள் எனக்கு தெரியாமல் இருந்தது. அதற்கு மெத்தனம் என்றும் சொல்லலாம். அந்த மெத்தனம் என்னை கணக்கு, அறிவியல் மற்றும் ஆங்கிலம் கிராமர் வகுப்புகளுக்கு டியூஷன் போக வைத்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக எனது விளையாட்டு நேரம் குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் மார்க் என்னவோ ஆங்கிலம், கணக்கு இவற்றில் நிறைய இருக்கும். மீதி பாடங்களில் படு சுமார். பத்தாம் வகுப்பில் இவன் என்ன செய்யப் போகிறான் என்ற கவலை அம்மா அப்பாவிற்கு தொற்றிக் கொண்டது. அது எனக்கு கொஞ்சமும் இருந்ததா என்று நினைவு இல்லை. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Monday, June 28, 2021

நீங்கா நினைவலைகள் - 4

 நீங்கா நினைவலைகள் - 4

- பாலசாண்டில்யன்
இன்று மதிப்பெண் பெற்று நிற்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை போல இல்லை நான் படித்த ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி. முதல் எட்டு வகுப்பு வரை அந்த அடித்தளம் என்கிற பேஸ்மென்ட் மிக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் அது என்றால் மிகையல்ல.
அந்த வகையில் அங்கே படித்த ஒவ்வொரு மாணவ மாணவியரும் படிப்பைத் தாண்டி பாட்டு, ஸ்லோகம், கைத்தொழில், ஒழுக்கம், வாழ்வியல் மதிப்பீடுகள் சொல்லும் நல்லொழுக்க விஷயங்கள், பெற்றோரை மதித்தல் என்று பல விஷயங்கள் கற்றுக் கொண்டனர். அங்கே பணி புரிந்த ஆசிரியர்கள் எல்லோருமே தமது பணியை ஒரு தவமாக நினைத்துப் பணியாற்றினர்.
பிள்ளைகள் மீது கனிவு, பரிவு, கருணை மற்றும் கண்டிப்பு என்று இருந்தனர் என்பது இன்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.
எனது பயிற்சி வகுப்புகளில் (ஜிஎம், வங்கி மேலாளர், நிறுவன அதிகாரி, அரசு அதிகாரி என்று பலருக்கு) நான் வழக்கமாக ஒரு கேள்வி கேட்பது உண்டு. மிக எளிதான கேள்வி. "வெண்டைக்காய் கால் கிலோ நான்கு ரூபாய், 450 கிராம் என்ன விலை ?" நூற்றுக்கு 98 பேர் தவறான விடை தந்தனர். வெகு சிலரே 7 ரூபாய் 20 பைசா என்ற சரியான விடை தந்தனர். நான் பெற்ற பயிற்சி அப்படி.
காரணம், எங்கள் ஆசிரியர் அந்த மனக்கணக்கை மிகச் சிறப்பாக சொல்லித் தந்தனர். வாய்ப்பாடு எல்லோருக்குமே தலை கீழ்ப் பாடம். எல்லோரின் கையெழுத்தும் முத்து முத்தாக இருக்கும். அதற்கான தனிப் பயிற்சி, மற்றும் போட்டிகள் வைத்து அதனை மேம்படுத்துவர்.
இங்கே மிக முக்கியமான ஒரு ஆசிரியர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் (பாட்டு வாத்தியார் என்றே எல்லோரும் சொல்லுவர் - அவரின் உண்மையான பெயர் வரதாச்சாரியார் என்று எனக்கும் பல நாள் தெரியாது.) கட்டுக்குடுமி, மிடுக்கான நடை, ஜிப்பா, அங்கவஸ்திரம், பஞ்சகச்சம், நெற்றியில் திருநாமம் என்று அவர் வந்து நின்றாலே பக்தி பயம் மரியாதை எல்லாமே தோன்றும்.
அது மட்டுமா? அவர் வியாழன் அன்று சவரம் செய்து பளபள என்று வருவார். அன்று சற்று அதிக கோபத்துடன் இருப்பார். கையில் ஒரு குச்சி அதனை சீவி வைத்திருப்பார். கேள்விகள் கேட்பார். பதில் சொல்லாதவர்கள் கையைத் திருப்பச் செய்து மணிக்கட்டில் தக்க சன்மானம் தருவார். சில நேரம் காதைப் பிடித்து திருகுவார். பெண் குழந்தைகளை அவர் அடிக்க மாட்டார். (அதற்கேற்றவாறு அவர்களும் எந்த கேள்விக்கும் முழிக்க மாட்டார்கள், அது வேறு விஷயம்).
அவரைப் போலவே மறக்க முடியாத சில ஆசிரியர்கள் திரு பாபு, திரு கண்ணன், திருமதி கமலா, திருமதி வசந்தி, திரு ராமமூர்த்தி ஆகியோர்.
பகட்டாக இல்லை என்றாலும் பலரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றிய ஓர் அலாதிப் பள்ளிக்கூடம். எப்படியும் 9 வது படிக்க எல்லோரும் வேறு பள்ளிக்கு போய்த்தான் ஆக வேண்டும். ஏனெனில் அங்கு 8 ஆம் வகுப்பு வரை தான். நான் அங்கே படித்தது 7 ஆம் வகுப்பு வரை தான்.
எனது வாழ்வில் அது முக்கியமானதொரு கட்டம். மிகப்பெரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன் (மாற்ற முடியாத திருப்பம் ஏற்பட்ட தருணம்) அது. எனது அப்பா ரயில்வேயில் பணி புரிந்த காரணத்தால் பணி மாற்றம் ஏற்படும் வேலை. அவருக்கு திருச்சிக்கு மாற்றல் ஆனது. எனது இரண்டாவது தங்கைக்கு ஒரு வயது இருக்கும். அப்பா, அம்மா, நான், தவிர இரண்டு தங்கை, ஒரு தம்பி என்று இத்தனை பேர் திருச்சி சென்று குடி இருப்பது என்பது பொருளாதார ரீதியாக முடியாது என்று அந்த மனப்போராட்ட நிலை. எனது அம்மா வழிப் பாட்டிக்கு (தாத்தா வீடு) குளித்தலை வைகைநல்லூர் அஹ்ரகாரத்தில் மிகப்பெரிய வீடு சும்மா தான் கிடந்தது. அங்கே எனது பெரிய பாட்டிகள் இருவர் மட்டுமே தனியாக இருந்தனர்.
அங்கே குடி போவது என்று முடிவானது. நாங்கள் அனைவரும் குளித்தலைக்கு மாறினோம்.அந்த வீட்டில் 13 அறைகள். சில திருமணங்கள் அங்கு நடந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திருவீதி முதல் பின்னால் தோப்பு தாண்டி வாய்க்கால் வரை தாத்தா வீடு. சின்ன குச்சு வீட்டில் இருந்து பழகிய எங்களுக்கு அது புதுசாக இருந்தது.
அப்பா தினமும் காலை 7.30 மணிக்கு ரயில் பிடித்து திருச்சி சென்று இரவு வீடு திரும்புவார். என்னை அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் சேர்த்தார். வீட்டில் இருந்து சுமார் 40 நிமிடம் நடந்தால் தான் பள்ளிக்கு போய்ச் சேர முடியும். தம்பி தங்கைகள் வீட்டின் அருகில் இருந்த சிறிய நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்.
நகரத்திற்கும் கிராமத்திற்கும் உள்ள அந்த மாறுதல் எனக்கு பெரிய அதிர்ச்சியாக புதிதாக இருந்தது. அந்தப் பள்ளியில் ஆண்கள் மட்டுமே இருந்தனர். பல ஆசிரியர்கள் - அப்படிச் சொல்ல கஷ்டமாக இருந்தாலும் - கூலிக்கு மாரடிக்கும் வேலையே பார்த்தனர். லைப்ரரி, லாபரட்டரி லாவடரி (நூலகம், நல்ல கழிவறை, குடிநீர், மற்றும் ஆய்வகம்) ஏதும் இல்லாத பள்ளி. பிள்ளைகள் பெரும்பாலும் ஏழை மாணவர்கள். நிறைய நேரம் தமது தந்தைக்கு உதவிட விவசாயம் பார்க்க விடுமுறை எடுத்துக் கொள்ளுவர்.
சிலர் வாலிபால், கபடி, பாஸ்கெட் பால் விளையாட்டில் சிறந்து விளங்கி அவற்றில் கவனம் செலுத்தினர். சிலர் NCC யில் சேர்ந்து உடல் ரீதியான பயிற்சி பெற்று பின்னாளில் போலீஸ் மற்றும் மிலிட்டரியில் சேர ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தற்போது குளித்தலை தொகுதியில் திமுக MLA வாக தேர்வாகி இருக்கும் திரு மாணிக்கம் அவர்கள் எனது வகுப்புத் தோழன். இன்றும் பலரோடு தொடர்பில் இருக்கும் நண்பர் திரு நரசிம்மன் (குளித்தலையில் அப்போது சப் மாஜிஸ்ட்ரெட் ஆக இருந்த திரு ராமச்சந்திரன் அவர்களின் மகன்) சொல்லித் தான் எனக்குத் தெரியும்.
எனக்கு பிடித்த ஒரு விஷயம் ஒன்று அங்கே இருந்தது. பள்ளிக்கு இரண்டு வீடு தாண்டி எனது மாமா வீடு இருந்தது. மதிய சாப்பாடு அவர்கள் வீட்டில். அங்கே சாவித்திரி மாமியின்
அருமையான
சுவையான சாப்பாடு. கையில் டிபன் டப்பா தூக்க வேண்டாம்.
மற்றபடி அந்த நான்கு வருடங்கள் (8, 9,10, 11 வகுப்பு - அதாவது எஸ் எஸ் எல் சி வரை) எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது என்று மேலும் சொல்லுவேன்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

நீங்கா நினைவலைகள் - 3

 நீங்கா நினைவலைகள் - 3

- பாலசாண்டில்யன்
ஒரே பில்டிங்கில் அந்தக்கால ஸ்டோர் போல உறவினர் எல்லோரும் நாங்கள் ஒரு ஒரு போர்ஷனில் குடி இருந்தோம். எப்போதும் செம்ம ஜாலி தான். காமன் ஏரியாவில் கொட்டம் அடிப்போம். பள்ளிக்கூடம் போகும் போது கழுதை பொதி சுமக்கிற மாதிரி தூக்க முடியாமல் புஸ்தகம், நோட்டு, ஸ்கேல், தக்கிளி, சோத்து மூட்டை, தண்ணி பாட்டில் என்று ஒன்றாக கிளம்புவோம் ஒரு நான்கைந்து பேர்.
பிறகு ஆடி அசைந்து பக்கத்தில் இருக்கும் இன்னொரு காலனி போய் அங்கிருந்து இன்னும் இரண்டு உறவினர்களை சேர்த்துக் கொண்டு ஆமை வேகத்தில் அரட்டை கச்சேரியோடு ஒரு பதினைஞ்சு இருபது நிமிஷத்தில் பள்ளிக்கூடம் போய் சேருவோம். போறது தான் சேர்ந்து. திரும்பி வரும் போது பெரும்பாலும் சங்கம் பிரிஞ்சிடும்.
இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் மனக்குலை நடுங்கிப் போகும். 2015 ல் வந்த மழை வெள்ளம் போல அடிக்கடி வராது என்றாலும், அந்த சமயம் அப்படி ஒரு பேய் மழை, புயல் எல்லாமே. இந்த பாழும் பள்ளிக்கூடம் முதலிலேயே லீவு விடாது. அங்கே போன பிறகு திடீர்னு லாங் பெல் அடிச்சு எல்லாரும் போயிட்டு நாளைக்கு வாங்க என்று அனுப்பி விட்டார்கள். என்னிடம் ரெயின் கோட், குடை இதெல்லாம் கிடையாது. புஸ்தக மூட்டையை தலை மீது வைத்துக் கொண்டு வரும் வழியெல்லாம் தண்ணீர், அந்த முழங்கால் தண்ணீரில் நீந்தி மிதந்து கண்ணுக்குள் தண்ணீர் புக, டிரெஸ் முழுக்க நனைந்து, உதடு நடுங்க வந்து கொண்டிருந்தேன்.
எங்கள் தெருவின் இரண்டு பக்கமும் கோட்டை அகழி போல சாக்கடை நீர் போக வாய்க்கால் வெட்டி விட்டிருப்பார்கள். இன்னும் சுமார் இருபது வீடு தாண்டி ஆக வேண்டும் எங்கள் வீடு சேர. அப்போது திடீர் காற்று. என்னால் சமாளிக்க முடியவில்லை. என்னை அப்படியே கொண்டு அந்த வாய்க்காலில் தள்ளியது காற்று. தெருவில் பெரிய நடமாட்டம் இல்லை. நான் மிகவும் உயரக் குறைவு. ஒல்லிக் குச்சி. நடுங்கும் குளிரில் பேய் மழையில் அந்தக் குழியில் எனக்கு பேச்சு நின்று போனது. ஹெல்ப் என்றெல்லாம் கத்த தோன்றவில்லை. அவ்வளவு தான் முடிந்தது என்று பயம் தொற்றிக் கொண்டது. தெய்வம் போல அந்த நேரம் போஸ்ட்மேன் ஒருவர் மெதுவாக நடந்து வந்தார். அவரே என்னை பார்த்து விட்டார். என்னை அப்படியே லாவகமாக தூக்கி எடுத்து ரோட்டில் விட்டார். பிறகு அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். புத்தகம் எல்லாம் நனைந்து விட்டன. வாசலிலேயே காத்திருந்தார் என் அம்மா.
இது இப்படி இருக்கட்டும். நான் பள்ளி படிக்கும் போது "ஹிந்தி ஒழிக" போராட்டம் நடந்தது. குறிப்பாக ஒரு கூட்டம் எங்கள் பள்ளிக்கூடம் வாசலில், அதாவது மாம்பலம் லெவல் கிராஸ் கேட் அருகே நின்று கொண்டு பெரிய கோஷம். பயந்து போன எங்கள் ஆசிரியர்கள் எங்களை எல்லாம் உடனே கிளம்புங்கள் என்று அனுப்பி விட்டனர். வெளியே வந்தால் ரயில் மீது கல்லெறி சம்பவங்கள். போலீஸ் அடிதடி என்று ஒரே அமர்க்களம். யார் எங்கே என்று தெரியாமல் தலை தெறிக்க ஓடி காசி விஸ்வநாதர் கோவில் சந்தில் நுழைந்து எங்கள் வீடு நோக்கி நகர்ந்து பத்திரமாக வந்து சேர்ந்தேன். இன்றும் அது மறக்க முடியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ஹிந்தி பிரசார் சபா வகுப்பில் (கோதண்டராமர் தெருவில்) கற்றுக் கொண்டது வேறு கதை. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்று மூன்று பரீட்சை தேர்வு பெற்றேன். கிரிதர் போன்ற எனது நண்பர்கள் பிரவீன் வரைக்கும் படித்தார்கள்.
சில மாதங்கள் கழித்து லெவல் கிராஸ் கேட்டுக்கு அந்தப் பக்கம் (இப்போது இருக்கும் ஜெயின் மகளிர் கல்லூரி அருகே) திடீர் பிள்ளையார் முந்தைய நாள் நள்ளிரவில் தோன்றி அவர் பால் குடிக்கிறார் என்று ஒரே அமர்க்களம். அது வரை அந்த கேட் கிராஸ் செய்து போனதே இல்லை. நான் எனது கசின் மற்றும் சில நண்பர்கள் ஒரு சில ஆசிரியர்கள் எல்லோரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அங்கே போய் அந்த பிள்ளையாரை ஒரு வழியாகப் பார்த்தோம். அப்போது டிவி கிடையாது. இந்த முகநூல் வாட்சாப் கிடையாது. வாய் வழித் தகவல் மற்றும் செய்தித் தாள், தவிர ரேடியோ செய்தி தான். எப்படித் தான் அப்படி ஒரு கூட்டம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குவிந்தனரோ ..!
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் அந்த அதிசயத்தை சொன்னேன். அவருக்கு அது பற்றி தெரியவில்லை. அவருக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. "என்ன லெவல் கிராஸ் கேட் தாண்டி போனாயா ? அப்பாவுக்கு தெரிந்தால் கொலையே பண்ணிடுவா! ஏண்டா இப்படி பண்றே ?!" கத்தித் தீர்த்து விட்டார். மாலை அப்பா வந்ததும் தானும் அந்தப் பிள்ளையாரை பார்த்த செய்தியை சொன்னார். அப்பாடா நாமும் சொன்னால் ஒன்றும் நடக்காது என்று நினைத்து சொன்னேன். அவ்வளவு தான். அங்கே பல பூஜைகள் அர்ச்சனைகள் நடந்தது மட்டுமல்ல.
எங்கள் மற்ற கூட்டாளிகளையும் கூப்பிட்டு அப்பா விசாரித்தார் "நீயும் போனாயா டா" என்று. அவர்கள் இல்லை என்றும் ஆமாம் என்றும் இரண்டும் கெட்டானாக மண்டையை ஆட்டினார்கள். பிறகு "இனிமே இந்த கேட் கிராஸ் பண்ணுற வேலை வெச்சுண்டே அவ்வளவு தான் எனக்கு கெட்ட கோபம் வரும் ஹும்" என்று உறுமினார் அப்பா. இன்னும் கெட்ட கோபம் வருமா ? இதை விடவா ? எப்படி கேட்பது ? அப்போதெல்லாம் அவர் புலி. நான் நடுங்கும் சுண்டெலி. விடுங்க ...இன்னும் எவ்வளவோ இருக்கு..
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Sunday, June 27, 2021

நீங்கா நினைவலைகள் - 2

 நீங்கா நினைவலைகள் - 2

- பாலசாண்டில்யன்
சில நினைவுகள் அவ்வளவு முக்கியமானதாக இருக்காது. இருந்தாலும் அது நமது நெஞ்சை விட்டு அகலாது.
நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியில் உணவு நேரத்தில் எப்போதும் சாப்பிட்டு முடிந்த பிறகு எனது வகுப்பு இருந்த முதல் மாடியில் என் வகுப்புக்கு அடுத்த அறை. அங்கு சில ஆசிரியர்கள் அமர்ந்து சின்ன அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதற்கு அடுத்த அறையில் எனது மிகவும் பிடித்த ஆசிரியர் விட்டல் ராவ் சார் படுத்து சற்று ஓய்வு எடுப்பார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். "வா பாலு" என்று என்னை அழைத்து அவர் வயிறு மீது உட்காரச் சொல்லி ஏதாவது சின்ன பாட்டு பாடச்சொல்லி கேட்பார். மதிய நேர மணி அடித்ததும் நான் எனது வகுப்புக்கு விரைவேன். விட்டல் ராவ் சாரின் அந்த அன்புக்கு அடுத்த நாள் நான் காத்திருப்பேன். என்னுடைய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வைத் தந்தவர் அவர்.
இன்னொரு விஷயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். இப்போதெல்லாம் பெரிய பள்ளிகளின் முன்பு பேக்கரி, ஜூஸ் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள் உள்ளன. சில சமயம் பள்ளிகளிலேயே கான்டீன் வைத்திருக்கிறார்கள். அன்று அப்படி இல்லை. அங்கே படிக்கும் பிள்ளைகள் எல்லோருமே நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான். அதற்கேற்ற சில விஷயங்கள் எப்படியோ மதிய சாப்பாட்டு இடைவெளி நேரத்தில் சில திடீர் தெருவோர கடைகள் முளைத்திருக்கும். அங்கே வேர்க்கடலை, கொடுக்காப்புளி, இலந்தைப்பழம், பால் ஐஸ், மிளகாய் பொடி உப்பு தடவிய கிளி மூக்கு மாங்கா பத்தைகள், மிட்டாய்கள், கடலை மிட்டாய், தவிர கையில் கடிகாரம் போல கட்டி விடும் (மூங்கில் கம்பு ஒன்றில் இருந்து ஜவ்வு போல பிடித்து இழுத்து அறுத்து ) ஒரு விதமான மிட்டாய் எல்லாம் விற்பர். என்னிடம் கையில் காசு இருக்காது. ரொம்ப அரிதாக என் வகுப்புத் தோழர்கள் பால் ஐஸ் வாங்கித் தருவார்கள்.
எனக்கு மிகவும் பிடித்தது பால் ஐஸ் மற்றும் அந்த கடிகார ஜவ்வு மிட்டாய். ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பும் போது கீழே ஒரு பத்து பைசா காசு கிடைத்தது. கீழே கிடக்கும் காசை எடுக்கக் கூடாது என்று எனது பாட்டி சொல்லுவது உண்டு. இருந்தாலும், ஏதோ தவிர்க்க முடியாத அந்த ஆசையில் எடுத்து விட்டேன். காலை வகுப்பு எப்போது முடியும். தெருவைத் தாண்டி இந்த பத்து காசை வைத்து பால் ஐஸ் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆவலில் அந்த நாள் முழுதும் படிப்பில் கவனமே செல்லவில்லை. அந்த நேரமும் வந்தது, நானும் வேகமாக வட்ட நிலா சோற்றை முடித்துக் கொண்டு விட்டல்ராவ் சாரைக் கூட பார்க்கப் போகாமல் தெருவை கிராஸ் செய்து ஓடிப் போய் பால் ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். உடல் நடுங்குகிறது எனக்கு. எனது உறவினர்கள் யாரேனும் (அதே பள்ளியில் படிப்பவர்கள் தான் நேற்றே சொன்னது போல) பார்த்து விடப் போகிறார்கள் என்று. அந்த ஐஸ் நிச்சயம் ருசியாகவே இல்லை என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ ?
எனது வகுப்பு ஜி செக்ஷன். ராமமூர்த்தி சார் பையன் பாஸ்கர், ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, சாந்தி, எஸ் பி உஷா இப்படி எல்லோருமே அதி புத்திசாலிகள். நானும் எப்படியும் முதல் ஐந்து ரேங்க் வாங்கி விடுவேன். போட்டி எல்லாமே இவர்களோடு தான். இவர்கள் பேரெல்லாம் எனது அப்பாவுக்கு அத்துப்படி. எனக்கு ஒவ்வொரு முறை பரீட்சை நடக்கும் போதெல்லாம் மூன்று முறை அர்ச்சனை அல்லது அடி விழும். எப்படி என்கிறீர்களா? முதலில் பரீட்சை முடிந்த அன்று "இன்று எப்படி எழுதி இருக்கிறாய்?" என்ற கேள்வி எழும். நானும் நல்லா தான் எழுதி இருக்கேன். உன் கண்ணே சரியில்லையே, மார்க் வரட்டும் இருக்கு உனக்கு என்பார். அதற்கு அடுத்தபடி மார்க் பேப்பர் ஒவ்வொன்றாக வெளியாகும். அதிலும் அப்பா கையெழுத்து போட வேண்டும்.
அப்போது மேலே சொன்ன ஒவ்வொருவர் பேரையும் சொல்லி அவன் எவ்வளவு, அவள் எவ்வளவு என்று கேட்டு உரிய தண்டனை கிடைக்கும். எனது மார்க் என்னவோ 97 அல்லது 98 என்று தான் இருக்கும். மீதி இரண்டு மார்க் எங்கே என்று கேட்பார் அப்பா. மூன்றாவது கட்டம் ப்ரோக்ரஸ் கார்டு வாங்கி வரும் ஒன்று. அதில் அந்த ரேங்க் என்ற ஒரு எழவு இருக்கும். மூன்று அல்லது நான்கு என்று இருந்தால், "போன முறை இரண்டாவது எடுத்தாய், பாருடி உன் பிள்ளையின் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையை. இதோ பாரு இந்த நான்காவது ரேங்க்குக்கு நான் கையெழுத்து போட மாட்டேன். உன் அம்மா கிட்ட வாங்கிக்கோ." அம்மாவும் போடலாம். இருந்தாலும் அப்பா போடணுமே.
நானும் அம்மாவைப் பார்த்து கண்ணால் கெஞ்சுவேன். வெச்சுட்டு போ நிச்சயாமாக உங்கப்பா கையெழுத்து போட்டுடுவார் என்பார். அதே போல மாலையில் வந்து பார்த்தால் அதில் அவரின் அழகான கையெழுத்து இருக்கும் (அவரின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்). ஆக எப்போதுமே ஒரு அழுத்தம் முதல் இரண்டு அல்லது குறைந்த பட்சம் மூன்றாவது ரேங்க் எடுத்தே ஆக வேண்டும் என்று. அதனால் படிப்பைத் தவிர வேறு எதிலும் மனம் லயிக்காது. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. நாளை தவறாமல் படியுங்கள்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Saturday, June 26, 2021

நீங்கா நினைவலைகள் - பகுதி 1

 நீங்கா நினைவலைகள் - பாலசாண்டில்யன்

இது ஒரு புதிய பகுதி. வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட பகிரக்கூடியவற்றை இந்த பகுதியில் தினம் ஒன்றாக பகிரலாம் என்று நினைக்கிறேன். கூடிய வரை படித்தால் சுவையாக இருக்கும் படி எழுதிட முயற்சிக்கிறேன்.
நெடுநாள் தேங்கிய நீரில் படிந்த பாசியை போல மனதின் ஆழத்தில் நின்றுவிட்ட நினைவலைகள் எப்போதும் ஈரமிக்கதாக அப்படியே தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கின்றன.
நான் படித்த பள்ளி சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெரு அருகே (தற்போது இருக்கும் மாட்லி சப்வே நடுவே) திரு வெங்கட்ராமன் மற்றும் திரு பூவராகவன் அவர்களால் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் தரமான ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி. இதன் தாளாளர் திரு வெங்கட்ராமன் அவர்கள், இதன் தலைமை ஆசிரியர் திரு பூவராகவன் அவர்கள், உதவி தலைமை ஆசிரியர் திரு ஸ்ரீனிவாசன் (எனது நண்பன் திரு எதிராஜன் அவர்களின் தந்தை). சென்ற ஆண்டு இந்தப் பள்ளி தமது 83வது ஆண்டு விழாவை கொண்டாடினார்கள் என்று நியூஸ் டுடே பார்த்து தெரிந்து கொண்டேன்.
இந்தப் பள்ளியில் நான் 1964 முதல் 1971 வரை பயின்றேன். அங்கே படித்து வளர்ந்து மிகப் பெரிய பதவிகளில் அமர்ந்தவர்களில் எனது நண்பர்கள் திரு எதிராஜன் மற்றும் கிரிதரன் இன்றும் என்னோடு தொடர்பில் இருக்கின்றனர். அது மட்டுமா ? அங்கே படித்த எனது உறவினர்களும் இன்று பெரிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த பள்ளியில் ஆசிரியர் ஆண்கள் என்றால் அவர்கள் ஜிப்பா பஞ்சகச்சம் மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து இருப்பர். திருமணம் ஆன ஆசிரியர்கள் என்றால் பெரும்பாலும் மடிசார் அணிந்து இருப்பர்.
நெற்றியில் பொட்டு இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது. தினமும் பள்ளி மைதானத்தில் நின்று சாரதா ஸ்லோகம் சொல்ல வேண்டும். வகுப்பறைகள் எல்லாமே கூரை நெய்த ஒன்று. கட்டிடம் இல்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் கோ எட் பள்ளி தான் அது. தமிழ் மீடியம் தான். பிள்ளைகள் அமர பெஞ்ச் தான் இருக்கும்.
ஆசிரியர்கள் எல்லோருமே நமது உறவினர் போல அக்கறையுடன் இருப்பர். நாங்கள் சுமார் ஏழெட்டு உறவினர் ஒன்றாக (கிட்டத்தட்ட சம வயதினர்) படித்தோம். அவரவர் வீட்டில் இருந்து கட்டிக்கொண்டு போன சாப்பாட்டை மைதானத்தில் வட்டமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் சாப்பாட்டை பகிர்ந்து நிலாச்சோறு போல தினம் தினம் சாப்பிடுவோம்.
என் அம்மா சில நேரம் எனக்குப் பிடித்த சேமியா உப்புமா செய்து மதிய உணவாக அனுப்புவார். தொட்டுக்கொள்ள சர்க்கரை. ஒரு நாள் காலை வகுப்பு முடிந்ததும் மதிய உணவுக்கான மணி அடித்தது. நான் வழக்கம் போல ஆசையாக ஓடிப்போய் எனது டிபன் டப்பாவை (அது ஒரு தூக்கு) எடுத்தேன். அது கனம் இல்லாமல் காலியாக இருந்தது. கவலையுடன் திறந்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம். அதில் நான் ஆசையாக எதிர்பார்த்த சேமியா உப்புமா இல்லை. எல்லாம் காலி.
நான் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பாக்கெட் மணி கிடையாது. எனது உறவினர்கள் எனக்காக காத்திருந்து விட்டு அவரவர் வகுப்புக்கு சென்று விட்டனர். அப்போது அங்கே நுழைந்த எனது ஆசிரியை சரோஜா நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து விவரம் கேட்டார். நான் எனது டப்பா காலியான விஷயம் சொன்னேன்.
உடனே சற்றும் தயங்காமல் ஆபீஸ் பியூனை அழைத்து தனது பர்சில் இருந்து பணம் கொடுத்து எனக்கு அருகில் இருந்த உடுப்பி ஹோட்டலில் இருந்து இரண்டு இட்லி வாங்கி வரச்சொல்லி எனது கண்ணீரை துடைத்து விட்டார். ஒரு அம்மாவைப் போல எனது கண்ணீர் துடைத்த சரோஜா டீச்சர் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவரை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன் மிகுந்த நன்றியுடன்.
நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

Wednesday, June 9, 2021

தனிக்குடித்தனம்


 தனிக்குடித்தனம் - பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம் !


டாக்டர். பாலசாண்டில்யன் - Psychologist/Counselor/Behavioral Expert

சிறு வட்டத்தில் வசதி வட்டத்தில் வாழ விரும்பும் இன்றைய கால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவு தான் . தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப் பட்டு இருக்க விரும்புகிறோமா ?

தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை.

வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .

பிடித்ததை பிரிந்து இருக்கலாம் . அது தியாகம். பிடித்தவரை பிரிந்து இருந்தால் அது சுய நலம். பிரிந்து வாழ்ந்தால் வருவது இன்பமா, சந்தோஷமா , திருப்தியா, அமைதியா, சேமிப்பா, சுதந்திரமா ?

சேர்ந்து வாழ்ந்தால் பெறுவது அன்பா, வெறுப்பா, பாசமா, பாதகமா ?
பிரித்து பார்த்து புரிந்து கொள்ளலாம். பிரிந்து வாழ்ந்து புரிந்து கொள்ளலாம்.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.
எது அதிகம் ? அன்பா, வெறுப்பா, பொறுப்பா, வசதியா?
எது குறைவு ? மகிழ்ச்சியா? சுதந்திரமா ?

ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும் என்பார்கள்.
வார்த்தைக்கு வலிமை உண்டு. வலியும் உண்டு.
வார்த்தை புரிந்து போனதால் வாழ்க்கை பிரிந்த கதைகள் நிறைய உண்டு.

வாழ்க்கை புரிந்து போகும் போது வார்த்தை வெறும் வெற்றுச் சொல்லாவதும் உண்டு. வாழ்க்கை என்றால் நிறையும் உண்டு. குறையும் உண்டு.

சேர்ந்து இருக்கும் குடும்பங்களில்
- என்ன சமைக்கலாம் என்கிற சர்ச்சை தினம் வரும்
- தாத்தாவுக்கு ரசம் சாதம்
- பையனுக்கு காரக்குழம்பு
- பேரனுக்கு பிஸ்சா அல்லது நூடுல்ஸ்
என்ன தான் செய்வாள் மருமகளும் மாமியாரும் ஒருவரைப் பார்த்தால் மற்றவர்க்கு ஆகாது.
அடுத்து டிவி சர்ச்சை
- IPL பார்க்க விரும்பும் கணவன்
-கார்ட்டூன் பார்க்க விரும்பும் பேரன்
- நியூஸ் அல்லது பஜனை பார்க்க விரும்பும் பெரியவர்
- சீரியல் பார்க்க விரும்பும் மாமியார்

அதனால் இன்று பல வீடுகளில் அஞ்சறைப் பெட்டி போல வெவ்வேறு சரக்கு தான் ...சமாசாரம் தான்.

அதையும் மீறி பேரனுக்கு தன பென்ஷனிலிருந்து சைக்கிள் வாங்கித் தரும் தாத்தா . கணவனுக்கு முன்னால் மாமனாருக்கு காபி தரும் மருமகள். எது செய்தாலும் நொட்டு சொல்லும் மாமியார். போக வர ஜாடையாய் பேசும் நாத்தனார் ...!

அது சரி...தனிக்குடித்தனம் போனால் அடிக்கடி ஜொள்ளு விடும் பக்கத்து பிளாட்டு பைத்தியக்காரன். வந்து வந்து வம்பு பேசும் எதிர் வீட்டு மாமி. எப்போதும் சண்டை பிடித்துக் கொள்ளும் இளஞ்ஜோடிகளின் சத்தம். எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்கும் பிளாட் செக்ரெடரி. பார்கிங்குக்கு பிரச்சனை தரும் செக்யூரிட்டி. அப்போது நினைத்துப் பார்ப்பது நம் வீட்டு ஹீரோ மாமனாரை...!

குழந்தைக்கு ஜுரம். தூக்கி தூக்கிப் போடும் போது மருமகளுக்கு தூக்கி வாரிப் போடுகிறது. மாமியார் இருந்தால் ஒரு கஷாயம் வைத்து தந்து இருப்பார்.

தினம் தினம் லேட்டாக வரும் கணவன். அப்போது யோசிப்பாள் ...அந்த வீட்டில் எப்போதும் மனிதர்கள் கலகல. உணர்ந்ததில்லை தனிமையும் பயமும்.

மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் இலையின் பசுமை. உதிர்ந்தாலோ பிரிந்தாலோ இல்லை சருகாகும். நிறம் மாறும். தினம் வாடும்.
இணைந்து இருக்கும் போது இயல்பு இருக்கும். இயற்கையான உறவு இருக்கும். உறவுகளின் அர்த்தம் இருக்கும்.

இருட்டும் போது எருமை தெரிவதில்லை. இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அருமை தெரியும் போது ஆனந்தம் உண்டு. அருமை தெரியவில்லை என்றால் அங்கே கண்ணீரே உண்டு.

தென்னங்கீற்றுகளில் ஓலைகள் பல உண்டு. ஓலைகளும் கீற்றுகளும் தனித்தனியே...ஆனால் மரத்தில் ஒட்டிக் கொண்டு...! மட்டை விழுந்தால் 'மாறு' ஆகி மாறிப் போகும்.

வாழை மரத்தில் இலைகள் பல உண்டு. விரியாத ஒன்று. விரிந்த இளசு ஒன்று. விரிந்து முதிர்ந்த ஒன்று. விதையிடாமலேயே அடுத்தடுத்த வாழை கன்றுகள் ஒட்டியபடி வளர்வது கண்டிருப்போம்.

வாழ்க்கையும் அப்படித்தான். சேர்ந்து இருந்தால் இனிமை உண்டு.

நிறைவாக நிதானமாக யதார்த்தமாக காலத்திற்கேற்ற ஒரு விஷயம் ஒன்று. ஒரே பில்டிங்கில் தனித்தனி பிளாட்டில் இருக்கலாம். தவறில்லை. சேர்ந்து ..ஆனால் பிரிந்து ...உண்மை புரிந்து...! ஒரே தெருவில் கூட வேறு வீட்டில் இருக்கலாம். அடிக்கடி வந்து பார்த்துச் செல்ல வசதியாக இருக்கும். நாள் கிழமைக்கு சேர்ந்து கொள்ள வளமையாக இருக்கும். ஒரே ஊரில் கண் காணாத இடத்தில காத தூரத்தில் வெவ்வேறு வீடா? இதுவே என் கேள்வி.

ஒத்துப் போக வைப்பது உடல், உடை, உணவு அல்லது உறைவிடம் அல்ல. ஒத்துப் போவது உணர்வு மட்டுமே...! ஒத்துப் போகவில்லை என்றால் ஒத்திப் போகலாம் ...தவறில்லை... ஆனால் ஒத்திப் போகும் முன் அந்த முடிவை சற்று ஒத்திப் போடலாமே ...! புது உத்தி தேடலாமே ...! இறை சக்தி நாடலாமே ...!

வாழ்க்கை ஒரு வேள்வி. வேள்வியில் பலி பழி இரண்டும் வேண்டாம். எல்லோரும் இன்பமாய் வாழ்வோம் என்ற பிரார்த்தனை இருக்கலாமே ..!
பிரிவோம்...புரிவோம் ...ஆனால் இனிமையில் இணைவோம் சந்திப்போம். இது பற்றி தனிமையில் அல்ல இணைந்தே சிந்திப்போம் ...!