வண்ணப் பெருங்கடலின் சாயமே - உன்
வண்ணமாய் என்னுடலும் ஆகுமே - காதல்
எண்ணமாய் உன்னுள் நுழையுமே - என்
வண்ணமும் உன் வண்ணமாகுமே
உதடுகளில் ஒலிக்கின்ற கீதம் ஆனேன் -நீ
உருமாறினால் நான் எங்கே போவேன் - வா
எனைக் கரைத்து உன் வண்ணமாக்கு - அட
உனைச் சுற்றியே ஆனது எந்தன் போக்கு
லேசாக எனை உன் வண்ணமாக்கு
மூச்சாக எனை உன் எண்ணமாக்கு
கணம் கூட உனை விலக மாட்டேன் - உன்
கதகதப்பின் வாசத்தை பிரிய மாட்டேன் - என்
சுவாசம் உனதுயிரில் கலந்ததாலே - நான்
சுயம் இழந்து நீயாக மாறிப் போனேன்
உன் வண்ணம் எனை உருமாற்றியதாலே -நான்
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன்
காலின் கொலுசொலியில் கேட்பது நானே - உன்
உயிரின் மூச்சொலியில் மாறி விட்டேனே - என்
விழிகளிலே உனதழகு வழிகிறது மானே - உன்
மொழிகளிலே எனதுறவு தெரிகிறது தானே
உன் வண்ணம் எனை
உருமாற்றியதாலே -நான்
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன்
காதல் மழையில் நாம் நனைந்தாலும் - இனி
கரையாது என்றும் நமது வண்ணம் - ஒரு
காற்றடித்தாலும் மாறாது அது திண்ணம்
கண்ணே நாம் கலந்திட்ட கிண்ணம்
உன் வண்ணம் எனை
உருமாற்றியதாலே -நான்
என் வண்ணம் இழந்து உன் வண்ணமானேன்
- பாலசாண்டில்யன்