Wednesday, December 22, 2021

தீராப்பிணி

 தீராப்பிணி 

- குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

சரவணன் இளங்கலை படிப்பு படித்து நேரடியாக ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு சேர்ந்த இளைஞன். பார்க்க அஜித் போல இல்லாவிடினும், விஷால் போல கருப்பு இல்லை. அவன் சேர்ந்த அதே நாளில் வேலைக்கு சேர்ந்தவள் தான் சாந்தி.

சாந்தி முதுகலை படித்து இருந்தாள். பார்க்க நல்ல லட்சணம். மாநிறம். நல்ல புத்திசாலி. பார்த்த மாத்திரத்தில் சரவணனுக்கு சாந்தி மீது ஓர் ஈர்ப்பு. சகஜமாக பழகினான். 143 என்றெல்லாம் சொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அமையும் என்று காத்திருந்தான். 

சாந்தியும் இவனை சாப்பாடு வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாள்.  சில நேரம் பைக்கில் போகிற வழியில் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடச் சொன்னால்  அது போகிற வழி இல்லை என்றாலும் சரவணன் சரி என்று அதைச் செய்தான். அவள் பிறந்த நாளில் அவளுக்கு பிடித்த பாட்டை ஸ்டேட்டஸ் ஆக வாட்ஸாப்பில் வைத்தான்.  அவளுக்கு நல்ல பரிசு வாங்கித் தந்தான்.  அவளும் மறுக்காமல் அதனை ஏற்றாள் 

சரவணன் சில நாட்களாக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தான். லேட்டாக வருவது, அடிக்கடி பெர்மிஷன் போடுவது என்று இருந்தான். அவன் சில சோகப்பாட்டை  ஸ்டேட்டஸ் ஆக வாட்ஸாப்பில் வைத்தான். அதனைக் கண்டும் காணாதது போல இருந்தாள் சாந்தி. 

காரணம், சாந்தியின் தங்கை திடீரென காதல் திருமணம் செய்து கொண்டாள். அதில் சாந்தியுடன் கூட இருந்து சரவணன் எல்லா உதவிகளும் செய்தான். அப்போது தான் தனது எண்ணத்தை தெரிவித்தான். சாந்தி சற்றும் யோசிக்காமல் நான் உங்களோடு அப்படி பழகவில்லை என்று மறுத்து விட்டாள். உடைந்து போனான் சரவணன். 

தாடி வளர்த்தான். தூக்கம் தொலைத்தான். முக வாட்டத்துடன் காணப்பட்டான். நண்பர்கள் பலர் வந்து சரிசெய்ய முயற்சி செய்தும் பலனில்லை. இதற்கிடையே சரவணனின் மேலதிகாரி இவனை பற்றி எழுத்து மூலம் புகார் அளித்தான். சரவணன் ஹெட் ஆபீஸ் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 

சரவணன் அந்த மேலதிகாரியிடம் தனது காதல் தோல்வி விவகாரம் பற்றி சொல்லி தனக்கு பணியிட மாற்றம் கேட்டான். இனி வேலையில் சரியாக கவனம் செலுத்துவேன் என்று உறுதி அளித்தான். அதன் படி வேறு மாவட்டம் மாற்றல் ஆனது.

ஒரு மாதம் கூட ஆகி இருக்காது. சாந்தியின் நிச்சயம் என்று காதில் விழுந்தது. அந்த நிமிடமே சரவணனின் காதல் விழுந்தது. 

அவனுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. 

சாந்தியின் சித்தி மகன் இவனுக்கு மிகவும் நெருக்கமானவன். அவன் மூலம் இவனுக்கு நிச்சயதார்த்த பத்திரிகை கிடைத்தது. அதைப் பார்த்ததும் இவனுக்கு ஒரே ஷாக். காரணம், அதில் மாப்பிள்ளை பெயர் சரவணன் என்று இருந்தது. என்ன இது என்னை நேரடியாக நிராகரித்து விட்டு என் பெயர் போட்டு நிச்சயம் நடக்கப்போகிறது? 

சாந்தி வீட்டில் இருந்து முறைப்படி அழைப்பு வரும். தனது கனவு நிறைவேறும் என்று தோன்றியது. வெகுநாட்களாக கோவிலுக்கு போகாத சரவணன் திடீர் என்று அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து நெற்றியில் விபூதி குங்குமம் பூசிக் கொண்டு நல்ல சாப்பாடு சாப்பிட்டான். 

சாந்தியின் சித்தி மகன் சுரேஷுக்கு போன் செய்து நிச்சய பத்திரிகையில் தனது பெயர் இருப்பது குறித்து விசாரித்தான். சுரேஷ் சரியாக பேசாமல் மென்று விழுங்கினான். குழம்பிப் போன சரவணன் "டேய் மச்சான் சுரேஷ் உண்மையை சொல்லுடா, யார்டா இந்த சரவணன் நான் தானே?" என்றான். 

சுரேஷ் உண்மையை போட்டு உடைதான். "சாரிடா சரவணா, மாப்பிள்ளை  பெயர் அது தான், அது நீயில்லை, மாப்பிள்ளை பூனாவில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான்". மார்கழி பனி அவன் தலையில் ஆழமாக இறங்கியது. அது தீரா பிணி என்று புரிந்தது அவனுக்கு.

Tuesday, December 21, 2021

சமாதானம்

 சமாதானம்

- குறுங்கதை
- பாலசாண்டில்யன்
நகரம் முழுவதும் டிராபிக் இருக்கிறது என்று அறிந்து குறித்த நேரத்திற்கு ரொம்ப முன்னரே வந்து பிளாட்பார்ம் நம்பர் ஏழில் அங்கே இருந்த டீ ஷாப்பில் சி 11 எங்கே வரும் என்று உறுதி செய்து கொண்டு பொறுமையாக அமர்ந்து இருந்தேன் எனது மனைவியுடன்.
சரியான குளிர். மிகவும் ஸ்டைலாக விசில் ஊதியபடி சுமார் 4.07 க்கு சென்னை செல்லும் சதாப்தி வண்டி வந்து சரியாக நாங்கள் காத்திருந்த இடத்தில் நின்றது.
எங்கள் சீட் தேடி அமர்ந்து கொண்டோம். யாரும் பயன்படுத்தும் முன்னர் பாத்ரூம் பயன்படுத்தி விட்டு ரிலாக்ஸ்ட் ஆக உட்கார்ந்தோம். மிகச் சரியாக 4.15 க்கு வண்டி புறப்பட்டது.
இப்போதெல்லாம் கொரோனா காரணமாக வண்டியில் சூப், பேப்பர், தண்ணீர், உணவு என்று எதுவுமே தருவதில்லை என்பது அறிந்து கையில் ஒரு பிளாஸ்க் டீ, மிளகாய் பொடி தடவிய இட்லி, தண்ணீர் எல்லாம் கொண்டு போய் இருந்தோம். இட்லியை ஒரு ஐந்தரை மணிக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று குட்டித்தூக்கம் போட வசதியாக சீட்டை இழுத்து விட்டுக்கொண்டோம். கொண்டு போன பத்திரிகை, போன் எதையும் கையில் எடுக்கவில்லை.
தூக்கம் வரவில்லை என்றாலும் கண் மூடியும் திறந்தும் தவநிலையில் இருந்தேன். என் மனைவி தூங்கியே போனாள். சுற்றும் குஜராத்தி, ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என்று கலந்து கட்டியாக எல்லா மொழியிலும் பேச்சு கேட்டது.
முன் சீட்டில் ஒரு பெண்மணி. அந்தக்கால நடிகை ஸ்ரீப்ரியா போல இருந்தார். அந்த வரிசையில் யாரும் இல்லை என்பதால் அவர் ஒருவரே கால்களை நீட்டிக்கொண்டு கிண்டில் எடுத்து டேப்பில் ஏதோ வாசிக்க ஆரம்பித்தார்.
பின் சீட்டில் செல்வந்தர் ஜோடியாக தான் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என்று எல்லா மொழியிலும் வீட்டு விஷயம், அலுவலக விஷயம், சில வம்பு தும்புகள் என்று எல்லாமே பேசினர். சென்னையில் கார் பிக் அப்புக்கு போன் செய்து விட்டு பேசினர், தூங்கினர்...
எதிர் பக்கம் இளம்பெண் மொபைல் போனில் படம் பார்த்துக் கொண்டு கையில் கொண்டு வந்த பொட்டலங்களை கொரிக்க ஆரம்பித்தார். ஒரு வரிசை முன்பு மூன்று நான்கு பெண்மணிகள் பெரிது பெரிதாக சிரித்து பேசி கொட்டம் அடித்துக் கொண்டிருந்தனர்.
டீ, தண்ணீர் மற்றும் சிப்ஸ் மட்டும் வந்து வந்து விற்க முயற்சி செய்தனர். ஓரிருவர் மட்டும் டீ வாங்கிக் குடித்தனர்.
ஒரு இஸ்லாமிய கணவர் வருவது எல்லாமே வாங்கி தந்து தனது மனைவியை குஷிப் படுத்தினார். அவர்களுக்கு ஒரு வால் முளைக்காத சுறுசுறுப்பு வாண்டு படுத்தி எடுப்பது என்ற முடிவுடன் அம்மா மடியில் உட்கார்ந்து இருந்தான்.
எனக்கு முன்னால் இருந்த ஸ்ரீப்ரியா மூன்று சீட்டுகளை அனுபவித்தது கண்டு அந்த இஸ்லாமிய நண்பர் தனது புர்கா போட்ட இளம் மனைவியை அங்கே போய் அமரச் சொல்லி, தனது இளவரசனுக்கு தனி சீட்டு கொடுத்தார்.
நடுநடுவே ஒரு மொட்டை போட்ட சிறுமி அங்கும் இங்கும் ஓடுவதும் அவள் பின்னால் அவள் தந்தை ஓடுவதும் தொடர்ந்தது. போகும் போதும் வரும் போதும் அந்த சிறுமி இஸ்லாமிய இளவரசரை தொட்டு வம்பு இழுத்து விட்டு ஓடினார்.
இவர் சிணுங்க தொடங்குவதை பொறுக்காத தந்தை அவருக்கு பிஸ்கட் கொடுத்தார். இளவரசர் கிரீம் மட்டும் தின்று விட்டு, பிஸ்கட்டை தந்தைக்கு பரிசளித்தார்.
அந்த சிறுமி அதை தட்டி விட்டு சிரித்தார். இளவரசர் மறுபடியும் அழுகை ஆரம்பித்தார். சீட்டு மாறிய இளவரசர் தாயார் மிகவும் அமைதியாக மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார், இளவரசரை கவனிப்பது கணவர் வேலை என்று.
ஒரு சாக்லேட் உரித்து கொடுத்து ஊட்டி விட்டார் தந்தையார். இளவரசர் கீழே போட்டு இறங்கி அதை எடுத்து வாயில் போட முயற்சி செய்தார். தந்தை அதை பிடுங்கி ஒரு டஸ்ட் பையில் போட்டு விட்டு மீண்டும் இன்னொரு சாக்லேட் கொடுத்தார். மறுபடியும் அதுவே தொடர்ந்தது.
இடையிடையே அவர் வீடியோ பார்த்தார். மகனுக்கும் காண்பித்தார். ஒரு தொப்பி அணிவித்து அவரை போட்டோ எடுத்து அவருக்கு காண்பித்தார். அதற்குள் சிறுமி வந்து ஒரு சாக்லேட் துண்டு ஒன்றை கொடுப்பது போல கொடுத்து பாவ்லா காட்டி விட்டு அவளே வாயில் போட்டுக் கொண்டு ஓடினாள்.
இளவரசர் சீண்டல் தாங்காமல் மீண்டும் அழுகையை தொடங்கினார். விளையாட மொபைல் கேட்டார். தந்தையோ அதைத் தவிர எல்லாமே கொடுத்தார்.
தந்தை அவரை தூக்கி தோள் மீது வைத்து ஜன்னல் வழியே காட்சிகள் காட்டினார். இரண்டு நிமிடம் கூட தாண்டி இருக்காது, இளவரசர் மீண்டும் சிணுங்கினார். அப்பாவின் மொபைலை வாங்கி கீழே போட்டார். அவர் பொறுமையாக குனிந்து எடுத்து அதை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
இப்போது சிறுமியின் அட்டகாசம் தொடர, அவள் தந்தை அவளை தூக்கி பெட்டிகள் அடுக்கும் இடத்தில் உட்கார்த்தி வைக்க, இளவரசர் அதை மிகவும் ரசித்தார்.
இளவரசருக்கு சரியாக பேச்சு வரவில்லை. எல்லாமே ஊங்கொட்டி பாஷை தான். இப்போது அவர் என்ன கேட்கிறார் என்று தந்தைக்கு புரிந்தது, இருந்தாலும் தர மறுத்தார். எவ்வளவு நடந்தாலும் அவற்றை சற்றும் சட்டை செய்யாமல் அவர் அம்மா மொபைல் விளையாட்டில் மும்முரம் காட்டியது ஆச்சரியமாக இருந்தது.
இளவரசர் தந்தையின் தோளுக்கு சென்றார், பாக்கெட்டில் இருந்து மொபைல் எடுக்க முயற்சி தோற்கவே கீழே இறங்கினார், மீண்டும் மேலே அமர்ந்தார், மறுபடியும் சாக்லேட் துண்டுகளை உடைத்து உடைத்து அப்பா ஊட்டி விட ஒரு சில சமயம் சாப்பிட்டார், சில சமயம் துப்பினார். பொறுமையாக வாய் துடைத்து விட்டார் தந்தையார். வேறு ஒரு தொப்பி எடுத்து மாட்டி அழகு பார்த்தார். இவரோ தொப்பியை கழட்டி கீழே போட்டார்.
இப்போது இளவரசர் தாயார் தனது கணவரைப் பார்த்து ''மொபைலை கொடுங்கள் அவன் ஒன்றும் செய்ய மாட்டான்' என்றார். குழந்தையைப் பார்த்து ஜாடையில் மொபைலை கீழே போடாமல் வைத்து விளையாடுமாறு சொன்னார். இப்போது மட்டிலா அமைதி. இளவரசர் இருக்கும் இடம் தெரியவில்லை.
இந்த
அருமையான
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு குட்டித்தூக்கம் குறட்டையுடன் போட்டார் இளவரசரின் தந்தை.
அந்த தந்தையின் சமாதான செயல்பாடுகள், பொறுமை மற்றும் அந்த சைக்கிள் காப்பில் ஒரு தூக்கம் இவற்றை கவனித்த என்னால் மனதுக்குள் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அந்த மொபைல் கிடைக்க அந்த இளவரசர் என்ன பாடு பட்டார். என்ன பாடு படுத்தினார், அவற்றை எப்படி தந்தையார் கையாண்டார் என்பது எந்த எம் பி ஏ படிப்பிலும் சொல்லித்தராத பாடம்.
அதற்குள் காட்பாடி வந்தது. இளவரசரும் ஒரு தொப்பி அணிந்து கொண்டார். மூன்று பைகளை தந்தையார் தூக்கிக் கொண்டு, மகனையும் பிடித்துக் கொண்டு நடந்தார். இளவரசரின் தாயார் மிக அழகான சின்ன லெதர் பாக் ஒன்றை பிடித்துக் கொண்டு லாவகமாக நடந்தார்.
என் மனம் சமாதானமாக நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. இளவரசர் போலவே சற்று அடம் பிடித்தது.

Wednesday, December 8, 2021

தொடரும் வைபவம்

 தொடரும் வைபவம் 

குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

விபவ் நான்கு வயதுச் சிறுவன். அவனின் அப்பா அம்மா இருவருமே கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து (ஒர்க் பிரம் ஹோம்) செய்து வருகிறார்கள்.

விபவுக்கும் ஒரு லேட்டஸ்ட் டாப் வழங்கப்பட்டு அவனும் அதன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தான். சில நேரம் உற்சாகமாக பாடுவான், ஆடுவான், யோகா செய்வான். ஹோம் ஒர்க் கொடுத்தால் மட்டும் ரொம்ப டென்க்ஷன் ஆகி விடுவான். 

இவற்றை எல்லாம் கவனிக்க அவன் அப்பா அம்மாவுக்கு நேரமில்லை. அவனுடைய தாத்தா பாதி நேரம் நியூஸ் பார்த்துக் கொண்டு இருப்பார். பாட்டி பல நேரம் சமையல், பூஜை மற்றும் டிவி சீரியல்களில் பிஸி. இவனோடு பேச யாருக்கும் அவகாசம் இல்லை. 

கடந்த ஒரு மாதமாக விபவ் சரியாக தூங்குவதில்லை, எது கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை. ஆன்லைன் கிளாஸிலும் அவன் உற்சாகமாக இல்லை. எப்போதும் அடம் பிடிப்பது, அழுவது, கோபமாக கத்துவது என்று எல்லாமே அண்மையில் வெட்ட வெளிச்சமானது. 

அதுவும் அவன் ஸ்கூல் டீச்சர் போன் செய்து குற்றப்பத்திரிகை வாசித்தார். 'விபவ் குட் மார்னிங் சொல்வதில்லை, கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை, ஹோம் ஒர்க் செய்வதில்லை, யூனிபார்ம் போடுவதில்லை' என்று ஓயாத பட்டியல் அது. 

விபவின் பாட்டி மிகவும் தயக்கத்துடன் தனது மருமகளிடம் இந்த விஷயத்தை சொல்லி டீச்சரிடம் ஒரு முறை பேசும் படி வற்புறுத்தினார். இரண்டு நாள் கழித்து  டீச்சருக்கு போன் போட்டு பேசினார் ஜெயஸ்ரீ, விபவின் அம்மா. 

மிகுந்த கவலையுடன் இந்த விஷயத்தை தனது கணவருடன் விவாதித்தார் ஜெயஸ்ரீ. இருவரும் சேர்ந்து விபவை அழைத்து அன்புடன் பேசி, பிறகு அதட்டி, பின்னர் முதுகில் ஒன்று கொடுத்து விசாரித்தனர். தொடர்ந்து அழுத விபவ் பதில் ஏதும் சொல்லவில்லை.  அவன் விசும்பல் நிற்கவில்லை. அன்று முழுவதும் அவன் சாப்பிடவில்லை. தூங்கவில்லை. தொட்டால் அவனுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. 

அடுத்த நாள்  எதேச்சையாக வீட்டுக்கு வந்த ஜெயஸ்ரீயின் தங்கை தனஸ்ரீ அங்கே நடந்தவற்றை கேளிவிப்பட்டு  விபவை வெளியே கூட்டிச் சென்று அவனுக்குப் பிடித்த குட்டிக்கார், எலிகாப்டர் மற்றும் சாக்கோ கேக்  வாங்கிக் கொடுத்து மெதுவாக பேச்சு கொடுத்தார். தனஸ்ரீ ஒரு மனநல ஆலோசகர். தான் கற்ற மொத்த பாடங்களையும் இறக்கி வைத்தாள். நிதானம், பொறுமை, கனிவு என்று எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தினாள்.

விபவ் சொன்ன விஷயங்கள் அவளை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'நான் எனது டீச்சரை நேரில் பார்க்க முடியவில்லை, எனது பிரெண்ட்ஸ் அகில், ஆதி, சுனில் மிகவும் மிஸ் செய்கிறேன், எனக்கு ஸ்கூல் போனால் கொடுக்கும் வழக்கமான  லஞ்ச் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை, கார்ட்டூன் பார்க்க டிவி கிடைப்பதில்லை, ஆன்லைன் கிளாஸ் சுத்தமாக பிடிக்கவில்லை, அப்பா அம்மா என்னோடு பேசுவதில்லை, எக்கச்சக்க ஹோம் ஒர்க் எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு ஸ்கூல் போக வேண்டும்' என்று விபவ் சொன்ன எல்லாமே அவளால் தீர்க்க முடியாதவை தான். 

வீட்டுக்கு திரும்பிய அவள் ஜெயஸ்ரீயிடம் ஒரு வரியில் சொன்னாள், 'விபவ் நீட்ஸ் எ பிரேக், அவனை என்னோடு ஒரு வாரம் கூட்டிப் போகிறேன்'. அனைவரின் சம்மதத்தோடு விபவ் தனஸ்ரீயோடு கிளம்பினான். அவள் முழுமையாக விபவ் மீது கவனம் செலுத்தினாள். ஓரளவு நல்ல மாற்றங்களை விபவிடம் காண முடிந்தது.

ஜெயஸ்ரீக்கு போன் செய்து நடந்த எல்லாமே விவரமாக எடுத்துச் சொன்னாள். விபவ் மீண்டும் பழையபடி மாற வேண்டும் என்றால் நிச்சயம் அவனுக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவை என்று தெளிவாக புரிய வைத்தாள்.

வீடு திரும்பிய விபவ் தினமும் ஒரு அரை மணி நேரம் அகில், ஆதி, சுனில் மூவரோடும் வீடியோ கால் பேசினான். இருந்தாலும், சாப்பாடு, தூக்கம் இவற்றில் பழைய சுணக்கம் தொடர்ந்தது. தனஸ்ரீயே அவனுக்கு பள்ளிக்கூடத்தில் பத்து நாளைக்கு விடுமுறை பேசி வாங்கினாள். 

ஜெயஸ்ரீ மற்றும் அவள் கணவன் ராகவ் இருவரும் கூட பத்து நாட்கள் லீவ் போட்டனர். எல்லோர் கவனமும் இப்போது விபவ் மீது தான். நிலைக்குமா விபவின் உற்சாகம்..?

Monday, December 6, 2021

பொருளிலார்க்கு

 பொருளிலார்க்கு 

குறுங்கதை 
- பாலசாண்டில்யன் 

டாக்டரை சந்தித்து விட்டு பிசியோ எடுத்துக்கொள்ள பணம் கட்டி விட்டு, ஜுரம் செக் செய்து விட்டு அந்த பார்மை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார் அந்தப் பெரியவர். வயது 75 இருக்கும். கையில் வாக்கிங் ஸ்டிக், கண்ணாடி, இன்னும் மிடுக்கு குறையாத உடை என்று இருந்தார் அவர்.

'நியூரோ டாக்டரை பாத்தீங்களா ? மாடி எப்படி ஏறிப் போக முடிஞ்சுது இந்தக் காலோடு?' என்றார் அந்த பிசியோ செய்யும் இளம்பெண். மேலும், 'இன்னைக்கும் நாளைக்கும் உள்ள தூரத்தை விட ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் இடையே தூரம் இருக்குமே ' என்றார். பெரியவர்  'ஹூம்' என்று புன்னகைத்தார். 

'பயப்பட ஒன்றும் இல்லை. எல்லாம் வயது தான் காரணம். எதுக்கும் ஒரு தடவை 'ஆர்த்தோ'வை வேணும்னாலும் பார்த்திருங்க' என்றார் விடாப்பிடியாக.

'தனியா எங்கயும் போகாதீங்க, ஊருக்கு போனா  எஸ்கலேட்டர் ஏறும்போது கையில் எதையும் வைத்துக். கொள்ள வேண்டாம்' என்றார். அவற்றை கேட்ட பெரியவர் கண்ணின் ஓரத்தில் சற்று ஈரம். துடைத்துக் கொண்டார். 

'இவ்வளவு அக்கறை காட்ட இன்னும் உங்களை போல இருக்கிறார்கள், அதனால் தான் மழை பொழிகிறது' என்றார் பெரியவர். 

'மெதுவா ஏறி படுங்க, இதுல  கொஞ்சம் ஹீட் வரும். ஜாஸ்தியா இருந்தா சொல்லுங்க, நாளைக்கு வரும் போது வீட்டில் இருந்து ஒரு டவல் கொண்டு வாங்க' என்று கூறி அவர் அருகில் சிறிது நேரம் நின்றார். "சூடு சரியா இருக்கா?, ஜாஸ்தினா சொல்லுங்க, ரொம்ப சூடு என்றால் கொப்புளம் ஆயிடும்' என்றார். அந்த பெரியவர் 'சரியா இருக்கு' என்று பதில் சொன்னார். 

பக்கத்து பெட்டில் படுத்தவாறு நான் இவற்றை கவனித்துக் கொண்டு இருந்தேன். என்னிடமும் இப்படியான அக்கறை தான் காட்டினார் மற்றுமொரு இளைஞர். இவர்கள் எல்லோருமே ஆசிரியர் - மாணவர் மனநலம் தெரிந்து வைத்திருப்பது போல, நோயாளிகளின் மனநலம் பற்றியும் படித்து இருக்க வேண்டும் என்று தோன்றியது.

பதினைந்து நிமிடம் ஆனது எனக்கு. பெரியவர் படுத்து இருந்த பெட்டுக்கு மாற வேண்டும் நான். காத்திருந்தேன். அவருடைய பதினைந்து நிமிடமும் ஆனது. 

'ஒருக்களித்து மெதுவாக எழுந்திருங்கள், நான் சில எக்ஸைஸ் சொல்லித் தருகிறேன், முடிந்தால் வீட்டில் செய்யுங்கள்' என்று அந்த பெண்மணி சொல்லிக் கொண்டு இருந்தார். 

அப்படியே எழுந்த அந்த பெரியவர், அந்தப் பெண்மணி சற்றும் எதிர்பார்க்காத போது அவர் கையைப் பிடித்து, 'உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தான் நினைக்கிறேன், என்னுடைய மருமகளாக வருவாயா? எனது மகனுக்கு 32 வயது ஆகிறது. கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறான். சொந்த வீடு, கார் வைத்திருக்கிறான்'.

'நீ உடனே சொல்ல வேண்டாம், யோசித்து ஒரு நல்ல முடிவாக நாளை சொல்லு, நீ சரி என்றால் உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் பேசுகிறேன்' என்றார் பெரியவர். 

சற்றும் ஷாக் ஆகாமல் நிதானமாக சொன்னார் அந்த பெண்மணி, "நான் இந்த நிலைக்கு வர எனது அம்மா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார், அவரை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் உங்களைப் போன்ற வயது வலி உள்ளவர்களுக்கு சேவை புரிய வேண்டும், இதுவே எனது லட்சியம், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, சாரி சார்"

அந்தப் பெரியவர் மெதுவாக கிளம்பிப் போனார். 

மறுநாள் அவர் வந்த போது அவருக்கு அதே கரிசனத்தோடு சேவை புரிந்தது எனக்கு சேவை செய்த அந்த இளைஞர். அந்த பெண் அடுத்த ஷிப்ட்டுக்கு வருவார் என்று அறிந்தேன்.

கன்னத்தில் வழியும் பிசுபிசுப்பைத் துடைத்துக் கொண்ட அந்த பெரியவரை நான் பாவமாகப் பார்த்தேன். 

Wednesday, December 1, 2021

உரிமை

 உரிமை  

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
 
வெங்கி  ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர். நிறுவனத்தில் சில சமயம் இரவு கூட தங்க வேண்டி இருக்கும். அவ்வளவு வேலை பிரஷர்.

சரியாக போய்க்கொண்டிருந்த நிறுவனத்தில் திடீர் பிரச்சனை. சம்பளம் வருவதற்கு கூட தாமதம் ஆனது. வீட்டில் பண சிக்கல். வெங்கிக்கு  சொல்ல முடியாத மனச்சிக்கல். குடிக்க ஆரம்பித்தான். இதற்கு நடுவே ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் அவனுக்கு தனக்கு கீழே வேலை பார்க்கும் ரூபாவின் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளத் திருமணத்தில் போய் முடிந்தது.

நிறுவனத்தில் சம்பளம் சில சமயம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் வந்தது. இரண்டு குடும்பம். குடிப் பழக்கம். இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கினான் வெங்கி.

ஒரு நாள் நிறுவனத்தில் வந்து கையெழுத்து போட்டு சிறிது நேரம் இருந்து விட்டு எல்லோரும் வீட்டுக்கு போகலாம். பாதி சம்பளம் என்றனர். வெங்கி சுமார் 11.30 மணிக்கு கிளம்பினான். கொஞ்சம் குடித்துவிட்டு பிறகு பஸ் ஸ்டாண்ட் போனான்.

பஸ் கூட்டமாக இருந்தது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.  வேறு வழியின்றி ஏறினான். பஸ் கொஞ்ச தூரம் கூட போய் இருக்காது. நடக்கக் கூடாத அந்த சம்பவம் நடந்தது.

தொங்கிக்கொண்டு போன வெங்கி  ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதி மண்டையில் அடிபட்டு அங்கேயே கீழே விழுந்தான். தலையில் பலத்த காயம்.
பஸ் நின்றது.

வெங்கியை  அதே பஸ்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவன் நிறுவன நண்பர்கள் மற்றும் சில பயணிகள் பெரிய ஆஸ்பத்திரி சென்றனர். போகும் போதே வெங்கியின் உயிர் பிரிந்தது.

காரியம் முடிந்து போய் ஒரு மாதம் கழித்து வெங்கியின்  மனைவி ரமா, அவன் தாய், அவனின் இரண்டாவது மனைவி ரூபா மூவரும் வந்து எச் ஆர்  மானேஜரிடம் கத்திக்கொண்டு இருந்தனர்.

வெங்கியின்  பிஎப் தனக்குத் தான் வர வேண்டும் என்று. வெங்கி  அவனது ஆரம்பத்தில் கொடுத்த அவன் அம்மா பெயரை மனைவி பெயரில் மாற்றவில்லை. இப்போது சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது மனைவி வேறு.

எச் ஆர் மேனேஜர் அதற்கு தீர்வு சொல்லிக்கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டு இருந்தார்.

போய் சேர்ந்த வெங்கிக்கு  என்ன கவலை...? 

பெயரில் மட்டும் ரூபா இருந்தாலும் உரிமைப் போராட்டத்தில் வெல்லப்போவது யார் ரமாவா அவள் மாமியாரா ?

Monday, November 29, 2021

காதல் கடல்

 

காதல் கடல் 

குறுங்கதை 

- பாலசாண்டில்யன் 

 

ரேணு அந்த தாடிக் கிறுக்கனுடன் மால், தியேட்டர், ஹோட்டல் என்று ஓயாமல் சுற்றுவதைப் பார்த்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை காளையனுக்கு.  

 

ரேணுவை இவன் ஒன்றும் காதலிக்கவில்லை. இருந்தாலும் 'என் முறைப்பெண்ணை வேறு ஒருத்தன் எப்படி காதலிக்கலாம்' என்ற பொறாமை மனதை ஏதோதோ சிந்திக்க வைத்தது.

 

"ஏண்டா காளை, என்ன எப்போ பாத்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுகிட்டு இருக்கே? பகல்ல குடிக்கிறே ! என்னாச்சு உனக்கு?" இவனுக்கு தனது அம்மாவிடம் உண்மைய சொல்லவும் முடியல, மெல்லவும் முடியல.

 

"மாமா, எனக்கு எப்போ ரேணுவ கட்டித்தர போறே?" நேரடியா கேட்டான். மாமா, "அவ இப்போ தான் படிக்கிறா, கொஞ்சம் நாள் போவட்டும், எவ்வளவு நாள் ஆனாலும் அவ ஒனக்கு தாண்டா மருமவனே!" என்றார்.

 

அவன் பாத்த உண்மைய போட்டுடைத்தான் காளை. இவன விட அதிகம் கோபம் கொண்ட மாமா "டேய் அவன் யாரா வேணா இருக்கட்டும் நீ அவன கண்டம் துண்டமா வெட்டிட்டு வந்து விஷயத்த சொல்லு, உனக்கு ஒன்னும் ஆவாம பாக்கறதுக்கு நான் இருக்கேன்." அதுக்குத் தான் காத்திருந்தது போல புறப்பட்டான் காளை.

 

கையும் களவுமா சிக்குனான் அந்த தாடிக்காரன் ரஞ்சித். கையில் இருந்த கழியால மண்டைல ஒரே போடு போட்டு அவன தூக்கி அந்த இன்னோவா வண்டில போட்டு கெளம்பினான் காளை

 

அத பாத்த ரேணு கதறினா. கூச்சல் போட்டா. ஒத்தாசைக்கு யாரும் வரல. பயங்கர மழை வேற. ரேணு கண்ணு அடுத்த வாரம் நம்ம கல்யாணம்னு கத்திப்புட்டு  வண்டிய விரட்டுனான்.

 

வண்டி அந்த பலத்த மழையிலும் பாய்ந்து ஓடியது. கிட்டத்தட்ட கடலூரை நெருங்கினான். சிதம்பரம் வந்து அந்த ரைஸ் மில்லுல ரஞ்சித்தை முடிக்கறதா இவன் பிளான்

 

மேல இருக்கறவன் பிளானே வேறயா இருந்துச்சு. அந்த கடலூர் சிதம்பரம் பாதை வெள்ளம் சீறிப் பாயுற வண்டிய அப்படியே பொறட்டி பொறட்டி உருள வெச்சுது

 

காளை ரஞ்சித் ரெண்டு பேருமே ஓடுற தண்ணியில விழுந்து உயிருக்கு போராடி தோத்து போனாங்க. ரெண்டு பேருமே சீட் பெல்ட் போடல. அது தான் எமனோட கயிறுல சிக்க வசதியா போச்சு.

 

ரஞ்சித் என்ன ஆனான்னு ரேனுக்கு தெரியாது. காளை என்ன ஆனான்னு ஊருல மாமாவுக்கும் மத்தவங்களுக்கும் தெரியாது

 

ஓடுற வெள்ளக்காட்டுல புதைஞ்சு போனது ரெண்டு உசுரு மட்டுமல்ல. ரெண்டு பேரோட கல்யாண ஆசயும் தான்.