Tuesday, December 6, 2016

Tribute to Amma Jayalalitha

இரும்பு மனுஷிக்கு இதய ஒலியாய் அஞ்சலி
- டாக்டர் பாலசாண்டில்யன் 

புறக்கணிக்கப்பட்டவர்க்குக் கூட 
பரிவு காட்டிய இரும்புத் தாய் நீ 
வீரர்கள் முன் நீ  அன்புப் பசு 
வீணர்கள் முன் நீ  சிங்கம் 
வீண்வம்புக்காரர் முன் நீ  புலி 

ஒப்பார்க்கு ஒப்பார் 
மிக்கார்க்கு மிக்கார் 
தங்கத்தாரகை நீ அம்மா 
முட்களைத் தாண்டிய பாதை தாண்டி 
மக்கள் பாதை நுழைந்தவர் நீ அம்மா 
நெருப்பாற்றில் நீந்தித் தான் 
பொறுப்பாற்றலைக் கற்றார் நீ அம்மா 

தேசத்தைப் பாதுகாக்கத் 
துணிந்த அம்மா நின் 
தேகத்தைப் பாதுகாக்க 
இயலாது போனது நேற்று ..!
பாபங்கள் செய்தவரைக் கூட 
விட்டு விட்ட எமதர்மன் - மக்கள் 
அனுதாபம் பெற்ற உன்னை 
எடுத்துச் சென்ற பிறகு 
மூதறிஞர் மண்டபத்தில் 
பேரறிஞர் உன் உறக்கம் இன்று...!.

எங்கு காணினும் சென்னையில் 
எல்லையில்லா அன்பர் கூட்டம் 
எல்லை கடந்த அன்பு கொண்ட உனக்கு  
கண்ணீர் அஞ்சலி செலுத்திட நாட்டம் 

தண்ணீர் தராதவரும் கண்ணீர் சிந்தினர் 
வாய் திறக்காதவரும் வாய்மொழி சிந்தினர் 
தேசம் முழுவதும் இருந்து தலைவர் வருகை 
நேசம் பாராட்டும் நண்பர்களின் அழுகை 
வர முடியாத நபர்கள் விட்டனர் அறிக்கை 
சென்னை வீதிகளில் தண்ணீர் 
வெள்ளம் சென்ற ஆண்டு 
சென்னை வீதிகளில் மக்கள்தலை 
வெள்ளம் இந்த ஆண்டு 

நீ  தேச ராணியா நேச ராணியா 
என்ற விவாதம் தேவை இல்லை 
பாசமும் பரிவும் காட்டியதால் 
நீ  அகிலத்தின் அன்பு ராணி 

பூதவுடல் புதையுமெனினும் 
புகழுடன் நீ உறைவாய் 
பூவுலகில் என்றென்றும் 
எங்கள் உள்ளங்களில் ...!

அம்மா என்றான தாய் 
இறைவனடி சேர்ந்தாய் 
சமரசமில்லா போராளியே 
சந்தோசம் காணா அறிவாளியே 
இனியில்லை போராட்டம் உனக்கு 
இனிதே உறங்குவாய் அம்மா 

கடலை விட பெரிது உனைக் காண வந்த கூட்டம் 
கடற்கரையில் களைப்பாறுவாய் 
அதுவே இனி உன் தோட்டம் 
ஆசிகள் தந்து வழிகாட்டு எனக் கேட்டோம் 

பாரத ரத்னா விருது அறிவிப்பு 
இன்றோ நாளையோ வரும் என்பதே 
எனது மனம் சொல்லும் கணிப்பு ..!
இது சத்தியம்...பெரும் சாத்தியம்...!!

உலகம் இனி காணுமோ உன் போல் அம்மா 
உலவும் என்றும் உனது புகழ் அம்மா !!
கணினி சிந்திய கண்ணீரில் 
கவிதையாய் வடித்தேன் அஞ்சலி ..ஏற்பாய் அம்மா.!!

Thursday, November 17, 2016

Aaj jaane ki zid na karo ((தமிழில் )

Aaj jaane ki zid na karo ((தமிழில் எனது பிரதிபலிப்பு)
இன்றே செல்வேன் என்று ஆடம் பிடிக்காதே அன்பே
இதயத்தில் நான் சற்று இடம் பிடிக்கும் முன்பே (இன்றே)
என்னருகே அன்பே கொஞ்சம் அமர்ந்து கொள்
என்னை விரும்புவதாகச் சொல்லிக் கொல்
நீ கிளம்பிவிட்டால் நீ மட்டுமா செல்வாய் ?
என் உயிரும் தானே எனைவிட்டு செல்லும் (இன்று)
நான் ஏன் உனை நிறுத்துகிறேன் தெரியுமா?
நீ தான் என் வாழ்வும் சாவும் புரியுமா?
வாழ்நாள் முழுதும் துடிக்க வைப்பதா உன் வேலை ?
வாழ்ந்து காட்டுவோம் உலகிற்கு அன்பின் லீலை ..(இன்று)
காலத்தின் கைப்பிடியில் நமது வாழ்க்கை
காதல் காலமே விரிக்கும் சுதந்திரச் சிறகை
பனிக் காலத்தில் நீயே எனது மேற்கூரை
பணித்து நிறுத்து இரவே போகாதே எனக் கூறி (இன்றே)
- டாக்டர் பாலசாண்டில்யன்

Planning

எதைப் பற்றியெல்லாம் திட்டமிட வேண்டும் ?
- உடல் ஆரோக்கியம் 
- பண வரவு - செலவு - சேமிப்பு 
- மன அழுத்தம் - பாதுகாப்பின்மை 
- தனிமையைச் சமாளித்தல் 
- தள்ளாமை பற்றியும் தள்ளிபோடுவது பற்றியும்
- பணியின்மையால் ஏற்படும் மனக் கலவரங்கள்
- எந்த வருமானத்திலும் மகிழ்ச்சி
- கனவுகளை நனவாக்குதல்
- குடும்பம்/வீடு/நண்பர்கள்/அந்தஸ்து/சமூகம்/ஆன்மிகம்/ஆகியவற்றை சமாளிப்பது
- தியானம்
- எதிர்பாராத விஷயங்கள்
- மகன் அல்லது மகள் படிப்பு மற்றும் திருமணம்
- பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து செயல்படுதல்
- சமூகப் பணி
- புத்தகம் எழுதுதல்
- வெளியூர் செல்ல
- பிரார்த்தனை நிறைவேற்ற
- வீடு மற்றும் இதர சொத்து வாங்க விற்க
- வேலையில் அல்லது தொழிலில் மேம்பட
- பிடித்ததை செய்ய
- நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு செல்ல
- விடுமுறை கொண்டாட
இப்படி பட்டியல் நீளுகிறது.


பணி ஓய்வுக்குப் பிறகு செய்வது அவசியம் :
- நேரத்தில் குளிப்பது 
- காலை உணவு மற்றும் மருந்து உட்கொள்ளல் 
- நடப்பது, புத்தகம் படிப்பது, நண்பர்களை தொடர்பு கொள்ளல் 
- முடி, நகம் வெட்டுதல்
- மீசை தாடி சரி செய்து கொள்ளுதல்
- சரியான 'பளிச்' உடைகள் அணிவது
- வாய் துர்நாற்றம் இன்றிப் பார்த்துக் கொள்வது
- அநாவிசியமாக சாப்பிட்டு வியாதி வராது காத்தல்
- சேமிப்பு மற்றும் பண விஷயங்களில் கவனமாக இருத்தல்
- யாரையும் சார்ந்து இல்லாது இருத்தல்



ஓய்வு பெற்ற பெண்கள் :
- தனக்கு தெரிந்த பாடல்கள், ஸ்லோகங்கள் அக்கம் பக்கத்தவருக்கு சொல்லித் தரலாம்
- கைத்திறன் காட்டும் படி பொம்மை, தையல், எம்ப்ரோடயரி செய்யலாம்
- பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொல்லலாம்.
- கோவில்களுக்கு செல்லலாம்
- பத்திரிகைகளில் சிறு குறிப்புகள் எழுதலாம்.
- சமூகப் பணிகளில் ஈடுபடலாம்.

Some Tamil Quotes

சிலர் சொல்லில் வைப்பார் முள்ளை.
சிலர் சொல்லில் வைப்பார் கள்ளை.
சிலர் சொல்லில் இன்பம் கொள்ளை
சிலர் சொல்லில் இன்றும் பிள்ளை

கண்களில் தெரியும் வெறி 
மனதில் தெரியும் குறி 
அதுவே வெற்றிக்கு அறிகுறி

புழுவாக பற்றிக் கொள்வதும், பூச்சியாக பறந்து செல்வதும் இயற்கையின் ஏற்பாடு தான். மனிதனாக நமது இயல்பு அறிவோம்.

ஒரு தொந்தரவு தரும் எண்ணம்
பத்தாயிரம் கவனச் சிதறல்களை உருவாக்கும்...!
எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !

கடினமான வாழ்க்கையில் பிரார்த்தனை என்பது இயலாத காரியம். ஆனால், பிரார்த்தனை செய்து விட்டு தொடங்கினால் இயலாத கடினமான காரியமும் எளிதான ஒன்றாகிறது.

மற்றவர்களை பற்றிய நமது
ஒவ்வொரு எரிச்சலும்
நம்மைப் பற்றிய புதிய புரிதலாகவே இருக்கிறது...!

எனக்கு மழை பிடிக்கும் என்றவர்கள் குடை பிடித்து நிற்கிறார்கள்
எனக்கு வெயில் பிடிக்கும் என்றவர்கள் நிழல் தேடி அலைகிறார்கள்
எனக்கு காற்று பிடிக்கும் என்றவர்கள் ஜன்னலைச் சாற்றுகிறார்கள்

கோட்டை போட்டுக் கொண்டு அரசைப் பிடிக்கலாம். அரசைப் பிடித்த பிறகு கோட்டை விடக் கூடாது.

குழந்தைகளுக்கு இல்லை கவலை 
கட்டுக்களை மாற்றிட.. 
கட்டுக்குள் அவர்களை 
வைக்க வேண்டாம் இன்று மட்டும் 
இறைவன் அவர்களுள் இருப்பதால்.. 
கொண்டாடும் தினமின்று


எல்லா(ர்) கூரையிலும் கீறல் இருக்கிறது. அதனால் தான் ஒளிக் கீற்றுகள் உள்ளே நுழைகின்றன.

உங்கள் சந்தோஷத்தின் சாவியை 
மறந்தும் அடுத்தவர் சட்டைப்பையில் 
போட்டு விடாதீர் !


வாழ்க்கையெனும் வீணையில் அனுபவம் எனும் நரம்பை மீட்டினால் கிடைப்பது சொத்து. குறைவு என்றால் கெத்து. அதிகம் என்றால் வெத்து..ஆபத்தும் தான்.

தொலைநோக்கு பார்வையை 
கொலைநோக்கு பார்வையாக 
பார்க்கின் தொல்லை தான்..


வீட்டில் உப்பு பருப்பு சொம்பு எல்லாம் இருந்தாலும் பேச்சில் அன்பு இல்லை என்றால் எந்தப் பலனும் இல்லை.

விடிந்ததும் மடிந்தன 
காகிதங்கள் 
காரணங்கள் நேற்று 
காரியங்கள் நாளை



நேற்று செல்லுபடி ஆனது இன்று செல்லா நிலை ஆனதே அதுபோல வாழ்வின் ஆயுள் உட்பட எல்லாமே தற்காலிக நிரந்தரம். நிரந்தரமாக தற்காலிகம். தத்துவம் உரைத்தது அன்றும் இன்றும் நரேந்திரரே.

செய்த பாவங்களுக்காக அடித்த ஆணிகளை ஒவ்வொரு நல்ல காரியம் செய்த போதும் பிடுங்கி எறிந்தாலும் ஆணித்தரமாக பதிந்து போன ஆணியின் தழும்புகள் ஆத்மா தனை ரணமாக்குகிறது என்றுணர்வோம்

தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

இருக்க வேண்டும் ( உயிரோடு உயர்வோடு) என்றால் என்னென்ன இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்திடல் வேண்டும். இருப்பது சரியாக இருந்தால் இருக்கலாம்.




Monday, November 14, 2016

பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை

பாலசுப்பிரமணியன் - பாலசாண்டில்யன் ஆன கதை
(தவம் அல்ல இந்தப் பெயர் வரம்)

(ஒரு சுய விளக்கம்)

1976 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் என்று நினைக்கிறேன். என் தந்தை (மறைந்த திரு E S கல்யாணராமன்) என்னை அவர்கள் எழும்பூரில் பணி புரிந்த ரயில்வே அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார்கள். என்னை ஒரு அலுவலக அதிகாரியின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு எனக்காக கேன்டீனில் பக்கோடா வாங்கி வருவதாகச் சென்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை

சுற்றிலும் பார்த்தேன், ஒரு எறும்பு கொசு கூட அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் அறிகுறி எனக்குத் தென்படவில்லை. எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். சத்த சத்தமாக ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முதல் நாள் தான் எனது பெரியப்பாவின் மகள் அனுராதா என்னை விட ஆறு ஏழு மாதம் வயதில் பெரியவள், ஆனால் வகுப்பில் ஓர் ஆண்டு குறைந்தவள். வித்யோதயா பள்ளியில் ஆங்கிலப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் இருந்தாள். அவளது பள்ளி ஆண்டு மலரில் இரண்டு தமிழ் கவிதைகள் எழுதியதாக எல்லோருக்கும் காட்டி பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தாள். எனக்கு லைட்டாக பொறாமை என்று சொல்லவும் வேண்டுமோ? அந்த நிகழ்வினை நான் அந்த ரயில்வே அலுவலகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயம் எனது பெரியப்பாவும் (ரயில்வே தான் - ஆனால் பக்கத்து அலுவலகம்) அங்கே வந்தார். "என்னடா இங்கே என்ன செய்கிறாய்? எங்கே உன் அப்பா?" என்றார். அவர் கான்டீன் போன விஷயம் சொன்னேன். அவரும் அங்கே கிளம்ப ஆயத்தமானார். அவரிடம் ஓரிரு காகிதங்களும் ஒரு பேனாவும் வாங்கிக் கொண்டேன்

அந்த மதிய நேரத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் எனது வாழ்வில் நடந்தன. ஒன்று நான் நிச்சயம் பின்னாளில் அரசுப் பணியில் சேர மாட்டேன் என்ற முடிவு. மற்றொன்று அனுராதாவை நினைத்துக் கொண்டு அந்தக் காகிதங்களில், 'மலை', 'மயில்', 'கடல்' இது போன்ற மொக்கை தலைப்புகளில் கவிதைகள் நான்கோ ஐந்தோ எழுதினேன். அவை கவிதைகள் என்று சொல்லி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு வந்து எல்லோரிடமும் காட்டினேன். யாரும் பெரிதாக அவற்றைப் படித்து விட்டு சிலாகிக்கவில்லை. எனது அம்மா மட்டும் சொன்னார், பரவாயில்லை நல்ல முயற்சி என்று. அப்பாவிடம் நான் காட்டவே இல்லை

அதன் தொடர்ச்சியாக அப்போது நான் DB ஜெயின் கல்லூரியில் பி யூ சி படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழ் ஆசிரியர் 'சுட்டி' தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் சுந்தர் அவர்கள். இப்போது மிகப் பிரபலமாக விளங்கும் திருநின்றவூர் பாண்டுரங்கன் எனது வகுப்புத் தோழன். நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அது மரபா அல்லது கவிதை தானா என்று கூட எனக்குத் தெரியாது. பிறகு பட்டப் படிப்பிற்கு A M ஜெயின் கல்லூரியில் சேர்ந்தேன். நான் வசித்து வந்த சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு டைப் ரைட்டிங் பயிற்சி நிறுவனத்தில் (இன்றைய அழகிய சிங்கர் - நவீன விருட்சம்) சந்திரமௌலி என்ற என்னை விட வயதிலும் உயரத்திலும் மூத்தவர், எனது கல்லூரித் தோழன் எஸ் வி வேணுகோபாலன், மறைந்த சொர்ணவேலு ஆகியவர்கள் இணைந்து இளங்கவிஞர் இயற்றமிழ் மன்றம் ஒன்று தொடங்கி இரு வாரத்திற்கு ஒரு முறை கவிதை வாசிப்பு செய்யும் கவியரங்கம் நடத்தினர். நான் அங்கு என்ன தலைப்பிலும் வாசிக்கலாம் என்பதால் எனது கெக்க பிக்க கவிதைகளை வாசித்து விட்டு வருவேன். அப்போது ஒரு தமிழ் ஆசிரியர் புலவர் ஒருவர் எங்களுக்கு யாப்பு கொஞ்சம் கற்றுத் தந்தார். பிறகு நாங்கள் சந்திரமௌலி அவர்களின் தலைமையில் ஒரு கையெழுத்து பிரதி ஒன்றை ஆரம்பித்து அதில் எழுதி எல்லோரையும் தொல்லை செய்தோம். நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு வரும் போது அந்தக் கல்லூரியின் தமிழ் மன்ற செயலாளர் என்ற பதவி கிடைத்தது. அப்போது அனைத்துக் கல்லூரி பட்டிமன்றம் ஒன்றை நானும் நண்பர் ராஜசிம்மனும் (எங்கு இருக்கிறார் என்று தெரியாது) ஏற்பாடு செய்தோம், அதற்குத் தலைமை நமது அன்பிற்குரிய மதிப்பிற்குரிய டாக்டர் அவ்வை நடராசன் அவர்கள். அப்போது எனக்கு தமிழ் ஆசிரியர் மறைந்த நாகநந்தி (வேணுகோபாலன்) அவர்கள். அவர் தான் ஆர் எஸ் மனோகர் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்

அவ்வமயம் நானும் நண்பர் ராஜசிம்மனும் எல்லா அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டு டீம் பரிசாக கிட்டத்தட்ட 60 பரிசுகள் வாங்கினோம். அப்போது போட்டிக்கு வந்தவர்கள் என்னை விட சீனியர்கள் டாக்டர் சுதா சேஷன், வக்கீல் ராமலிங்கம், மணிமொழி என்று பெரிய பெரிய ஜாம்பவான்கள்

எப்போது பார்த்தாலும் கவிதை, இலக்கியம் என்று அலைந்த என்னை ஒரு முடிவோடு எனது தந்தை எனது கடைசி பரீட்சை ஏப்ரல் 30, 1979 அன்று இரவே மும்பைக்கு மூட்டை கட்டித் துரத்தி விட்டார். அங்கே வேலை உடனே நான்கைந்து நாட்களில் கிடைத்தது. கூடவே நிறைய தமிழ் மீது பற்று கொண்ட நண்பர்கள். மும்பை மாதுங்கா தமிழ் சங்கக் கூட்டங்களுக்கு சில சமயங்கள் செல்வது உண்டு. ஒரு முறை மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அம்மா வந்தார்கள். அவரைப் பற்றிக் கவிதை எழுதி வாசித்து அவரிடம், "உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு" என்று கையொப்பம் பெற்றேன். பிறகு பத்திரிகை பலவற்றிற்கு அங்கிருந்து கவிதைகள், துணுக்குகள் என்று கபாசு மணியன் என்ற பெயரில் அனுப்புவேன். சில பத்திரிகை மும்பை வாசகர் என்பதாலோ என்னவோ அவற்றைப் பிரசுரித்தது. பிறகு அங்கிருந்து மஸ்கட் சென்றேன். தொடர்ந்து கவிதைகள், இசையுடன் கூடிய பாடல்கள் எல்லாமே எழுதி வந்தேன்.

1987 ஆம் ஆண்டு, சென்னை திரும்பி விட்டேன். மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் எனது வீடு (வாடகை வீடு). எதிர் வீட்டு ஸ்வயம்வராலயா ஜானகிராமன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனது அடுத்த வீட்டில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஐயா குடியிருப்பதாக சொல்லி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று நான் எழுதிய கவிதைகளை தொகுத்து 'தலையுதிர்காலம்' என்று சிறு புத்தகம் வெளியிட ஆசையோடு அவரை சந்தித்தேன். எனது இயற்பெயரை சொல்லி விட்டு, எனது புனைபெயர் 'பாலசாண்டில்யன்' என்று சொன்னேன். உடனே ஐயா அவர்கள் அதன் காரணம் கேட்டார். நான் சாண்டில்ய கோத்திரம் என்று சொன்னேன். எல்லா புகழும் ஒரிஜினல் சாண்டில்யனுக்கு போய் விடும், பெயரை மாற்றிக் கொள்ளேன் என்றார் அன்பொழுக. நான் பிடிவாதமாக, துணிச்சலாக அவரிடம் மறுத்து விட்டேன். பின்னர் எனக்கு நல்லதொரு அணிந்துரை கொடுத்தார். பிறகு இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா. மறுநாளே என்னை திரு ஜானகிராமன் ரொம்ப சஸ்பென்ஸ் கொண்டு ஒரு விழாவிற்கு கூட்டிச் சென்று என்னை ஒரு சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தான் உரத்த சிந்தனை திரு உதயம் ராம் மற்றும் திரு ராஜசேகர். அன்று அவர்களின் ஆண்டு விழா, அதிலே திருமதி பத்மாமணி அம்மையார் ஜீவீ விருது பெற்றார்கள். நானும் ஒரு நாள் இந்த விருதினை பெறுவேன் என்று மனதில் பேராசை கொண்டேன். (அப்படியே எனக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு GV அவர்கள் கையாலேயே கிடைத்தது)

நான் அஸ்வினி நட்சத்திரம் என்பதால், அசுவதி, சாருரூபன் (எனது பெரியம்மா பெண்ணின் பெயர் சாரு), கபாசு என்றெல்லாம் எழுதிய போது யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. கொட்டும் மழையில் எழிலகம் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில் எழுத்தாளர்கள் சுபா, ஐயா ஏர்வாடி ஆகியோர் உட்பட 13 பேர் முன்னிலையில் எனது கவிதை புத்தகம் வெளியானது. உரத்த சிந்தனை மூலம் அது நூற்றுக் கணக்கானவர்களுக்கு பின்னாளில் போய் சேர்ந்தது. கவிதை உறவு நடத்திய கவிதை இரவில் பங்கு பெற்று பல கவிதைகள் வாசித்தேன். பல பிரமுகர்களை சந்தித்தேன்

இருப்பினும் முகமும் முகவரியும் எனக்குத் தந்து என்னையும் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, பாடலாசிரியராக, டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கி பன்முகத் தன்மை தந்தது உரத்த சிந்தனை தான். அப்படி பாலசாண்டில்யன் ஆன பிறகு எல்லாமே ஏறுமுகம் தான். எனது தந்தை கவிதை நான் அன்று எழுதியதை விரும்பாதவர் பின்னாளில் நான் கவிஞர் எழுத்தாளர் பாலசாண்டில்யனின் தந்தை என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார் (அவர் பப்ளிக் ஹெல்த் சென்டரின் துணைத் தலைவர் என்றாலும்)

பாலசாண்டில்யன் ஆன பிறகு, வளர்தொழில், ஏற்றுமதி உலகம், தொழில் முன்னேற்றம், பொருளாதாரம், ஆனந்த விகடன், அமுதசுரபி, கலைமகள், மங்கையர் மலர், வானொலி, பொதிகைத் தொலைக்காட்சி எல்ல்லாவற்றிலும் எனது கவிதை, கட்டுரைகள், தொடர்கள், சிறுகதைகள், எல்லாமே வெளிவந்தன. மணிமேகலை பிரசுரத்தின் பிரபலமானவர் புத்தகத்தில் எனது பெயர், முகவரி அச்சில் வந்தது. அது மட்டுமா? உலகநாயகன் கமல்ஹாசன், விசு சார், டெல்லி கணேஷ் சார், எஸ்பிஎம் சார், எஸ்வி சேகர், கிரேசி சார், மற்றும் பல பிரபலங்கள் பத்திரிகைத்துறை, சினிமாத்துறை, எல்லோரிடமும் பாலசாண்டில்யன் என்ற பெயர் பரிச்சயம் ஆனது. தீபாவளி மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்தன. உரத்த சிந்தனை அமைப்பில் பொறுப்பு, பத்திரிகையில் பொறுப்பு என்று என்னை சிறு சிறு உளி கொண்டு செதுக்கிய பெருமை உடன் பிறவா சகோதரர் உதயம் ராம் அவர்களுக்கும், அவருடன் மெளனமாக என்னை எல்லாப் பணிகளிலும் சேர்த்துக் கொண்ட தலைவர் எஸ்விஆர் அவர்களை நான் எனது உயிர் உள்ளவரை மறக்க முடியாது.

உதயம் ராம் அவர்கள் எனக்கு கொடுத்தது புதிய பொறுப்புகள் மற்றும் பரிமாணங்கள், சன் டிவியில் திரு சோ சாருடுடைய 'சோவின் பஞ்சாயத்து' மற்றும் ராஜ் டிவியில் 'துக்ளக் தர்பார்' மற்றும் டிஎன் சேஷன் அவர்கள் கலந்து கொண்ட 'சென்சேஷன்', சிவசங்கரி அம்மாவின் நேற்று இன்று நாளை, விசு சாரின் 'அரட்டை அரங்கம்', மற்றும் மறைந்த திரு ஜெயகாந்தனின் 'ஒரு பிரஜையின் குரல்', மற்றும் எஸ்வி சேகர் அவர்களின் 'இனிமே நாங்க தான்', பிறகு அபஸ்வரம் ராம்ஜி அவர்களின் 'பேச்சுக் கச்சேரி' போன்ற அனைத்து டிவி நிகழ்வுகளிலும் என்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இணைத்துக் கொண்டு எனது பெயர் டைட்டில் கார்டில் வரவழைத்து பார்த்து பெருமைப்பட்டார், பெருமைப் படவைத்தார். இது வரை 400 முறைக்கு மேலாக நான் எல்லா டிவி சானல்களிலும் வந்துள்ளேன் என்றால் அதற்கு 'பாலசாண்டில்யன்' என்ற பெயரும் அதற்கு அங்கீகாரம் கொடுத்த உரத்த சிந்தனையும் தான் காரணம்

கூடவே எனக்கு எப்போதும் உற்சாகம் மற்றும் ஆதரவு கொடுத்தது இலக்கிய ஆசான் திரு விக்கிரமன் ஐயா, ஏர்வாடி ஐயா, கிரிஜா ராகவன் அவர்கள், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், கீழாம்பூர் அவர்கள், லோகநாயகி அவர்கள், என்றால் மிகையல்ல. அவர்கள் அனைவர்க்கும் எனது கோடான கோடி நன்றி மலர்களையும் வணக்கங்களையும் இந்த கட்டுரை வாயிலாக சமர்ப்பிக்கிறேன்.

இந்த கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் சொல்ல வேண்டிய தகவல் என்னவென்றால் 'பாலசாண்டில்யன்' என்ற இந்தப் பெயர் வைத்துக் கொள்ள நான் எனது வீட்டில் கூட யாருடைய அனுமதியும் யோசனையும் கேட்கவில்லை. ஆனால் அவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள சில குழந்தைகளுக்கு இந்த 'சாண்டில்யன்' என்ற பெயரை இணைக்கிறார்கள்.

இந்தப் பெயர் வைத்துக் கொண்டதால் அன்று முதல் முதல் விக்கிரமன் அவர்கள் சொன்னது போல பல பேர் என்னைக் கேட்காமலே நான் திரு சாண்டில்யன் அவர்களின் மகன் என்றே நினைத்து யூகித்தார்கள். நானே வலியச் சென்று நான் அவர் மகன் இல்லை என்று விளக்கம் சொல்லுவேன். பிறகு தேடி அறிந்து சாண்டில்யன் அவர்களின் மகள் (இசைக்கலைஞர்) மற்றும் மகன் (பேராசிரியர்) என்று தெரிந்து கொண்டேன்

நிறைவாக ஒரு கொசுறு செய்தி.அண்மையில்  கிரி ட்ரேடிங் திரு சுரங் டிஎஸ் ரங்கநாதன் அவர்களின் குரலில், கண்ணன் (தமிழ்ப்படம் எனும் படத்தின் இசை அமைப்பாளர்) இசையில், எனது பாடல் வரிகளில், சிவசங்கரி அம்மா அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டு திரை இயக்குனர் திரு வசந்த் சாய் அவர்கள் பெற்றுக் கொண்டார். அந்த சிடியில் எனது இயற்பெயராகிய 'பாலசுப்பிரமணியன் கல்யாணராமன்' என்று வெளியானது - பாலசாண்டில்யன் என்று அதில் இல்லை. விழாவின் போது சிவசங்கரி அம்மா, உரிமையாக கூப்பிட்டு, "என்ன இது 'பாலசாண்டில்யன்' என்று போடாமல் நீட்டி முழக்கி வேறு பெயர் போடப்பட்டுள்ளது.  யாருக்கு தெரியும் இந்தப் பெயர், எல்லோருக்கும் உங்களை பாலசாண்டில்யன் என்றால் தானே தெரியும், அடுத்த பதிப்பு சிடியில் சரி செய்யுங்கள்  என்று சொன்னார். அந்த விஷயத்தை திரு ரங்கநாதன் அவர்களின் காதில் போட்டு வைத்தேன் ஒரு விண்ணப்பமாகஅந்த விழாவில் சிவசங்கரி அம்மாவின் எனது மும்பை 1980 களில் ஏற்பட்ட சந்திப்பை, அவரது ஆசியை நினைவு கூர்ந்து பேசினேன். அவர் உடனே எழுந்து 'இப்போது சொல்கிறேன், பாலசாண்டில்யன், நீங்கள் நிச்சயம் மிகப் பெரிய அளவில் இனி அறியப் படுவீர்கள்' என்று ஆசி கூறினார். கண்கள் குளமாகின எனக்கு

பெயரியல் நிபுணர் திரு ராஜராஜன் ஒரு முறை சொன்னார், நீங்கள் யாரைக் கேட்டீர்கள் என்று தெரியாது, ஆனால் இந்தப் பெயர் உங்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய பலம் என்று வாழ்த்தினார். இந்தப் பெயர் எனக்கு மனதில்  தோன்ற வைத்த இறைவன், அதனை நிலைக்க வைத்த உரத்த சிந்தனை, இன்னும் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் எனது பெற்றோர்கள்,  எனது அக்கா அனுராதா (கவிஞர் ஆக்கியவர்), அனைவர்க்கும் இன்று நான் நன்றி சொல்கிறேன். கடைசி ரகசியம் என்னவென்றால் - எங்களுக்கே அண்மையில் தான் தெரியும் எனது தாயார் லட்சுமி அவர்கள் 100 க்கும் மேலாக பாடல்கள் எழுதி இசை அமைத்து வைத்து டைரியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த எழுதும் திறமை நிச்சயம் ஜீனில் உள்ளது. தாங்க்யூ அம்மா. திருமணத்திற்கு பிறகு எனது முதல் வாசகி திருமதி சுகீர்த்தி பாலசாண்டில்யன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல
என்னை முன்னேற்றியவர்கள் பெயர் ஏதாவது விடுபட்டுப் போய் இருந்தால் எனது வயது தான் அதன் காரணம் - அதனால் மறதி.