From Bala's Desk
Friday, August 28, 2026
உள்ளம் கேட்க மறுக்குத
Dil hai ke mantha nahi
என்ற அற்புதமான ஹிந்தி திரையிசை மெலடி பாடலை தமிழில் தருகிற முயற்சி: பாலசாண்டில்யன்
பல்லவி
உள்ளம் கேட்க மறுக்குதே – இந்த
உன்னதக் காதல் மாறாதோ?
தவிக்கும் நிலையும் ஏனானதோ – அதைத்
தானும் அறியத் தெரியாமலே...
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
சரணம் 1
எந்தன் உயிராய் மாறிப் போனதம்மா!
தந்தாய் இதயப் பரிசதனை – என்
தேடல் நீயென் றானதம்மா!
உண்மை அதனை உலகறியும் – அதை
உந்தன் மனது ஏற்காதோ சொல்...
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
சரணம் 2
உனைத் தானே நேசித்தேன் – வேறு
உலகம் அறியாதென்னஞ்சம்!
வாழ்வில் நீயும் வாராவிட்டால் – இனி
வாழ்வதேதென்ற சொல்லெஞ்சும்!
தவிக்கும் மூச்சும் இமைமூடா விழியும் – உனக்குத் தூது சொல்லி வாய் மொழியும்!
(உள்ளம் கேட்க மறுக்குதே...)
என் நெஞ்சில் என்ன
என் நெஞ்சில் என்ன உண்டு!
படைப்பு: பாலசாண்டில்யன்
(மூலம்: Mere dil mein aaj kya hai)
பல்லவி
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி மகிழ்வேன்!
கூந்தல் அழகு செய்வேன் - கோல
நெற்றித் திலகமிடுவேன்!
கூந்தல் அழகு செய்வேன் - உன்
நல்நெற்றித் திலகமிடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 1
தெய்வமாய் எனை மாற்றி - உந்தன்
தேடலால் பூஜை செய்தாய்!
தெய்வமாய் எனை மாற்றி - உந்தன்
பாடலால் பூஜை செய்தாய்!
காதல் என்னை ஏவுதடி - உனையும்
கடவுளாய் மாற்றத் தோன்றுதடி!
காதல் ஏதோ செய்யுதடி - உனையும்
கடவுளாய் மாற்றத் தோன்றுதடி!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 2
தேடி யாரேனும் வந்தால் - நமைத்
தேட முடியாமல் போகும் ஆஹா!
தேடி யாரேனும் வந்தால் - நமைத்
தேட முடியாமல் போகும் ஓஹோ!
எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை
எங்கேனும் ஒளித்து வைப்பேன்!
எனை நீ ஒளித்து வைப்பாய் - உனை
எங்கேனும் ஒளித்து வைப்பேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
சரணம் 3
என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன்
இன்னல்கள் மறைந்தொழியும்!
என் தோள்களில் நீ சாய்ந்தால் - உன்
துயரங்கள் அமைதி கொள்ளும்!
உன் கூந்தலில் நான் மறைந்து - இந்த
உலகின் துயரம் மறப்பேன்!
உன் கூந்தலில் நான் ஒளிந்து - இந்த
உலகின் கவலை மறப்பேன்!
கூந்தல் அழகு செய்வேன் - கோல
நெற்றித் திலகமிடுவேன்!
என் நெஞ்சில் என்ன உண்டு - நீ
கேட்டால் சொல்லி விடுவேன்!
காதல் கவிதை / பாடல்
பாலசாண்டில்யன்
பல்லவி
மனதின் சுவாசம் திங்கள் அறியுமோ?
மதியின் வாசம் செவ்வாய் அறியுமோ?
மங்கல நாதம் கிழமை வழங்குமோ?
மாவிலைத் தோரணம் நாளை ஆடுமோ?
சரணம் 1
மௌனத்தின் மொழியை விழிகள் பேசுமோ?
மறந்தநன் னாளும் நினைவில் பூக்குமோ?
தேனினும் இனிய குரல் கேட்குமோ?
தேடிடும் இரு விழிகளில் வெட்கமோ?
உயிரினில் கலந்த உறவின் ரகசியம்
உலகத்தின் காற்றில் ஓசையாய் மாறுமோ?
பயிரினில் துளிர்க்கும் பசுமை போலவும்
பயணத்தின் முடிவில் பந்தம் நீளுமோ?
சரணம் 2
இரவினில் எரியும் சுடரின் தாகமும்
இமைக்குள் தெரியும் உருவின் மோகமும்
வரவெனக் கேட்கும் இளமை ஆசையும்
வார்த்தையில் அடங்கா அன்பின் பாசமும்...
காலத்தின் வண்டியில் கதையாய் ஓடுமோ?
காற்றினில் தென்றலாய் நம்மைச் சேருமோ?
கோலத்தின் புள்ளிகள் இணையும் வேளையில்
கோயில் மணிபோல நாதம் கேட்குமோ? S
Thursday, February 26, 2026
பூங்காத்து
பூங்காத்து - நாட்டுப்புற மெட்டு
பாடல் வரிகள்: டாக்டர் பாலசாண்டில்யன் Balasubramanian Kalyanaraman
பல்லவி:
கூழாங்கல்லு சேராதோ - இந்தக்
கருங்கல்லு கூட்டத்துல?
பொட்டை நிலத்துல - நான்
பட்டுனு வீசும் பூங்காத்து!
உன்னால வெறுங்கையும் - இப்போ
உசிரே ஒட்டும் பூங்கொத்து!
ஒத்தப் பார்வையில - என்ன
ஓரம் கட்டும் பூங்காத்து!
அனுபல்லவி:
கள்ளிக்காட்டு முள்ளுக்குள்ள - ஒரு
கள்ளிப்பூ இப்போ மலந்தாச்சு!
அள்ளி அத நான் சூடிக்க - என்
அறிவும் இப்போ தொலைஞ்சாச்சு!
கல்லு மேல கல்லு வெச்சு
கட்டுன வீடு இது - உன்
சொல்லு மேல சொல்லு வெச்சா
சொர்க்கமா இப்போத் தோணுது!
சரணம்:
ஆள மயக்கும் ஒன் சிரிப்பு
அடிநெஞ்சில் குடி இருக்கு!
நாளப் பாக்கும் காத்துக்கிப்போ
நம்ம வாசம் தெரிஞ்சுருக்கு!
முரட்டுப் பய நானும் - இப்போ
முழுசாத்தான் மாறிப்புட்டேன்!
வரப்பு மேல ஒன் நிழல
வரமாத்தான் ஏத்துக்கிட்டேன்!
வசந்தமே பூக்களைத் தூவ
Baharon mein phool barsao
தமிழில்... ஒரு முயற்சி
- பாலசாண்டில்யன்
வசந்தமே பூக்களைத் தூவு
(பல்லவி)
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இசை பாடி வா இளந்தென்றல் காற்றே
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 1)
ரோஜாவின் இதழ் போன்ற செந்நிற மருதாணி
அவள் மென்மைக் கரங்களில் அழகு சேர்க்கட்டும்!
கார்மேகம் இறங்கி வந்து அவள்
கூர்விழி ஓரம் மை தீட்டட்டும்!
நெற்றியின் உச்சியில் நிலவைச் சூட்டி மெல்ல
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 2)
எங்கும் பரவும் எழில்மிகு ஒளியில்
ஏனோ அஞ்சும் அவள் குணமன்றோ!
தடுமாறும் இதயத்தை வருடிட இந்த
தலைவன் தேடும் தேவதை வந்தாளோ?
துடிக்கும் மனதைத் திருடிச் செல்ல
வந்தாள் என் மனதை வென்று!
(சரணம் - 3)
காதல் மஞ்சத்தைக் கனிவாய் வெல்ல
காலமே கனிந்து கோலம் இட்டதோ?
வாசம் பரப்பிடும் காற்றே நீ வீசு
வந்தாள் என் காதலி இன்று!
வசந்தமே பூக்களை வாரித் தூவு
வந்தாள் என் காதலி இன்று!
வந்தாள் என் மனதை வென்று!
இரு இதயம் இணைகிறத
இரு இதயம் இணைகிறதே...
பல்லவி:
இரு இதயம் இணைகிறதே - அது
இரகசியமாய் இசைக்கிறதே!
அனைவருக்கும் இது தெரியுமே - மெல்ல
அனைத்துலகும் தெளியுமே!
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
(இரு இதயம்...)
சரணம் - 1:
சுவாசக் காற்றில் ஒரு தவிப்பு - இந்தப்
பாசப் பார்வையில் ஒரு விழிப்பு!
எங்கோ ஓரிடத்தில் மனம் சிக்கினால்
அங்கே அன்றி அது நிற்காது!
உள்ளத்தை மெல்லக் கட்டிப் போடவா?
உள்ளத்தில் செல்லக் கட்டில் போடவா?
வித்தை செய்கிறதே - மனதைத்
தத்தை கொய்கிறதே!
சரணம் - 2:
ஒன்றும் அறியாப் பாவையைப் போலே
ஒட்டி அமர்ந்தாய் அருகினிலே!
இன்று யாவையும் வெளிச்சமாக
இதயம் உணரும் உண்மையிது!
உதடுகள் மௌனம் சாதிக்கலாம் - ஆனால்
விழிகள் கதைகள் பேசிடுமே!
உள்ளம் உள்ளே நெகிழ்கிறதே - ஒரு
ஊஞ்சல் ஆடி மகிழ்கிறதே!
சரணம் - 3:
நெருப்பு மூளும் முன்னரே - ஒரு
கருப்புப் புகையே மிதக்கிறதே!
எங்கும் இருக்கும் எழில் கோலம்
பொங்கி வழிந்திடும் புது ஜாலம்!
தீயொன்று நெஞ்சில் மூட்டவே - இரு
தேகமும் சமமாய் ஒளி கூட்டவே!
இங்கிருந்து அங்கும் - அந்த
எல்லை தாண்டி இங்கும்...
(இரு இதயம்...)
Do dhil mil rahe hain chupke chupke என்ற அருமையான ஹிந்தி திரையிசைப் பாடலை ஒட்டி எழுதியது
பாடல் : பாலசாண்டில்யன்
Monday, December 29, 2025
அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல் (மொத்தம் 35 கதைகள்)
அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025- பரிசுக்கதைகள் தொகுப்பு நூல் (மொத்தம் 35 கதைகள்)
முதல் பத்து கதைகள் பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அடுத்த பத்து கதைகள் (இரண்டாம் பரிசு பெற்றவை) பற்றி இங்கே காணலாம்.
11. நதிமூலம் - அனந்த் ரவி
மிகவும் நெருடலான ஒரு கதைப்பொருளை கதாசிரியர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. அதிலும் கதைநாயகியை கோவிலில் அம்மனுக்கு சார்த்தியிருந்த புடவைகள் ஏலத்தோடு பொருத்தி எழுதியது அவரது சாமர்த்தியம். நுட்பமாக வாசித்தால் கதை நன்கு புரியும்.
12. வலியும் வழியும் - அனுராதா ஜெய்ஷங்கர்
இன்றைய பதின்பருவப் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள ஒரு கதை. உளவியல் சார்ந்து சொல்லப்படும் விஷயங்கள் இன்று பெரும்பாலான குடும்பத்தில் பல பெற்றோர்கள் சந்தித்து வருகிற விஷயமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இளந்தலைமுறைக்கு செல்ப் எஸ்டீம் குறைவாகவும், செல்ப் அதிகமாகவும் இருக்கிற விஷயம் இந்த கதை வாசித்தால் புரியும். நீண்ட ஓர் ஆய்வுக்கட்டுரை விஷயத்தை நல்லதொரு கதையாக அளித்துள்ளது எழுத்தாளரின் சாமர்த்தியம்.
13. நதியின் ஓட்டம் - பாலசாண்டில்யன்
(இது எனது கதை என்பதால் வேறு சிலரின் கருத்துக்களை இங்கே முன்வைக்க நினைக்கிறேன்)
1. "சார் பரிசளிப்பு விழா நடந்து வீடு போனதும் முதலில் படித்தது உங்கள் கதை தான். அத்தனை மனநிறைவு. வேறு கதை இன்று வாசிக்க வேண்டாம் என்று புத்தகத்தை மூடி வைத்தேன்" - திருமதி மஞ்சுளா சுவாமிநாதன்.
2. "கதை நதி போல் நடந்தாலும் அது தூண்டும் உணர்வுகள் நெஞ்சில் அன்பு வெள்ளமாய் மனதில் பாய்ந்து ஓடுகிறது. புறாவால் பிரிந்த உறவை புறாவால் சேர்த்த விதம் அருமை. உறவைக் காத்த கிளியல்ல...புறா. உறவுகளின் அருமை இழந்த பின்பு தான் புரிகிறது சிலருக்கு என்பதை கதை அழகாய் புரிய வைக்கும் விதம் அழகு" திரு பத்ரம் ரமேஷ் எனும் ரெமோ
14. சேற்று மலர்கள் - பானுமதி கண்ணன்
உண்மையில் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்று பாமர மக்கள் புரிந்து கொள்ளும் விதம் எழுதப்பட்டுள்ள கதை. அண்மையில் கூட 'நீயா நானா' நிகழ்ச்சியில் ஒரு சின்னத்திரை மாற்றும் சினிமா நடிகை இதே போல புலம்புகிறாள் "எத்தனையோ நடித்து விட்டேன்...அந்த ஷாட் எடிட் செய்வார்கள். அல்லது நீக்கி விடுவார்கள். இருந்தாலும் நான் நம்பிக்கை தளர மாட்டேன்" என்று பேசினார் அந்த நடிகை. அதே போல இந்த கதைநாயகியின் முடிவை கிளைமாக்ஸில் "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்கிற பழமொழி மூலம் சொல்லி இருப்பது மிகவும் சிறப்பு.
15. கேப்டன் குக் - துரை தனபாலன்
கடல் மற்றும் கப்பல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இதைவிட ஒரு பாடம் போல யாராலும் சொல்லி விட முடியாது. கடல் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத சூழல்கள் பற்றிய விஷயங்கள் மிகவும் நேர்த்தி. "கேப்டன் குக் எனும் அந்த மாபெரும் கடலோடியை வானியல் அறிஞனை ஆய்வாளனை கடற்கரையில் வைத்தே அந்தப் பழங்குடிகள் அடித்தும், குத்தியும் கொன்றார்கள்" என்ற வரிகளை வாசிக்கும் பொழுது நம்மை மீறி கண்களின் ஓரம் நீர் பனிக்கிறது.
16. அருள்வாக்கு - கணேஷ்ராம்
"நீ ஏழையாக பிறந்து இருக்கலாம். ஆனால் ஏழையாக இறக்கக் கூடாது" என்று ஒரு அறிஞர் கூறினார். அதுபோல ஏழை மக்கள் மிகச் சொற்ப வாடகை கொடுக்க கூட எப்படி சிரமப்படுகிறார்கள். அவமானத்தை சந்திக்கிறார்கள் என்று விவரமாக சொல்கிறது இந்த கதை. அது மட்டுமா? முயற்சி பலிக்காத போது ஜோசியம், சாமியார் என்று மனம் தேடுகிறது. அங்கே சொல்லப்படுகிற பரிகாரங்கள் சில நேரம் ஏர்க்கமுடியாமல் இருக்கிறது. வேறு வழியின்றி மக்கள் அதனை மூட நம்பிக்கையோடு ஏற்கின்றனர் என்பதை தனக்கே உரிய நையாண்டி கலந்து கதையை நகர்த்துகிறார் ஆசிரியர். அந்த குகை முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும் என்கிற நம்பிக்கை விதையை கடைசியில் லேசாக தூவுகிறார்.
17. அக்னிக்குஞ்சு - லதா சுப்பிரமணியம்
மன அழுத்தம், தாமதமான திருமணங்கள், உடற்கோளாறுகள், தவறான வாழும் முறை இவற்றால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் எங்கு பார்த்தாலும் செயற்கை கருத்தரித்தல் சம்பந்தமான மருத்துவமனைகள் காண்கிறோம். அது தான் இந்தக் கதையின் முதல் முடிச்சு. ஆனால் பயன்பாட்டாளருக்கு உதவும் பெண்கள் எந்த பின்புலத்தை சார்ந்தவர்கள் என்பதை இங்கே தோலுரித்து காட்டுகிறார் கதாசிரியர். அதிலும் பெற்றோரே எப்படி இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது மனம் மிகவும் கனமாகிறது. நூலாசிரியர் இப்படி ஒரு கதைப்பொருளை நூலின் மீது நடப்பது போல கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.
18. அன்னபூரணி - நத்தம் சுரேஷ்பாபு
"அது அவ குணம். மாத்த முடியாதுடா . நம்ம குணம் கொடுக்குற குணம். அவ ஈரக் கேழ்வரவாகவே இருக்கட்டும். ஆனா நான் சுரக்கிற பாத்திரம்...அதை என்னால மாத்திக்க முடியாது"
இப்படி யார் யாரிடம் கூறுகிறார்கள் என்று அறிய நீங்கள் இந்தக் கதையை படிக்க வேண்டும். சிலர் பணமிருக்கும் குணமிருக்காது....சிலர் எதுவும் இல்லை என்றாலும் கூட அந்த ஈகை குணம் எப்போதும் இருக்கும். இப்படியான விஷயங்கள் இந்தக் கதையில் உண்டு. பிறர் சந்தோஷத்தில் இன்பம் காணும் அன்னபூரணிகள் இன்று அரிது என்றாலும் நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று கதை வாசிக்கும் பொழுது தோன்றியது. இதில் வரும் கதைமாந்தர்களை நாம் நிச்சயம் நேரில் சந்தித்து இருக்கிறோம்.
19. கோபுர வாசல் - எம் எஸ். பெருமாள்
இன்று ஆத்திக நாத்திக அரசியல் கோவில்களில் மக்கள் மனதில் நுழைந்து இருப்பதை இந்தக் கதையில் வருகிற காட்சிகள், நடவடிக்கைகள் எல்லாமே மிகவும் நாசுக்காக அதே சமயம் நேர்த்தியாக அழுத்தம் திருத்தமாக பதிவாகி இருக்கிறது. கதாசிரியர் தமது அனுபவத்தில் இப்படியான எத்தனை விஷயங்களை கேட்டிருப்பார், பார்த்திருப்பார் என்பது அவர் எழுத்து நிதர்சனமாக எடுத்து முன்வைக்கிறது. அந்த கிராமத்து பேச்சு நடை, மக்களின் போக்கு எல்லாமே காட்சிகளாக கண்முன் விரிவது கதாசிரியரின் எழுத்தாற்றலை சான்றாக பறைசாற்றுகிறது. இதோ இன்று இந்த பதிவை எழுதும் நாள் அதே டிசம்பர் 31. கோவில்கள் திறக்குமா ...? புத்தாண்டு வாழ்த்துக்கள்
20. பெயர் தெரியாத பெண்மை - ரத்னமாலா புரூஸ்
சிலர் மட்டும் தான் கதை சொல்லும் பொழுது வர்ணனை மூலம் பல விஷயங்களை காட்சிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறார்கள். கதைநாயகி மட்டுமல்ல கதையில் வருகிற ஒவ்வொருவரையும் நாம் நேரில் பார்க்கிற அனுபவம் இந்தக் கதையில் கிடைக்கிறது. நமது மனத்தீர்ப்பு அல்லது பிறர் பற்றிய மதிப்பீடு எப்போதும் சரியாக இருப்பதில்லை. கதையின் ஆரம்பத்தில் ஒரு நெகட்டிவ் பாத்திரமாக குறிப்பிடப்பட்ட ஒருவர் கடைசியில் நமது மனதில் விஸ்வரூபம் எடுத்து காக்கும் கடவுளாக காட்சி தருவது போல அமைந்து உள்ள கதை. கதை நீளம் என்றாலும், காட்சிகளின் மாட்சிமை நம்மை வியக்க வைக்கிறது. கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய் என்கிற நீதி இந்த கதையில் உள்ளது.
அடுத்த பகுதி வரும்.
இது எனது முகநூல் பகுதியிலும் எனது பிளாக்கிலும் கூட வாசிக்கலாம்.
Blog: shortcut : Bala's Desk
Blog: visionunlimitedchennai.blogspot.com
Subscribe to:
Posts (Atom)