Friday, April 21, 2017

Old is gold - Poem in Tamil

அஸ்தமனம் ஆகாது நினைவுகள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

இளமையும் நம்பிக்கைத் துள்ளலும் 
கைகோர்த்து நடந்த தருணங்கள் அவை 
தூரத்து நினைவுகளாய் மனது தானே 
அசை போடுவது வாலிப வயதைத் தானே 

கடந்த காலம் எப்போதுமே தெரியமெனக்கு 
நடந்த காலம் தான் மீளாது இனி திரும்பி 
நினைவுகள் தான் இனிமை தருகின்றன 
நின்று நின்று பார்க்கிறேன் அவற்றை விரும்பி 

மரியாதை எனக்கல்ல என்றாலும் வயோதிகம் கருதி 
மனிதர்கள் எழுந்து இடம் தருவர் அதுவே தகுதி 
நல்லது கெட்டது எல்லாம் அனுபவம் கற்றுத்தர 
ஞானி போலாகி விட்டேன் அனைத்தையும் விட்டுத்தர 

இளமை ஏற்கனவே களவு போனதால் இன்று 
எதுவுமே தொலைவதில்லை பகட்டாய் திருட்டாய் 
நினைத்த போது உறக்கம் நினைத்த போது உணவு 
நினைவிலில்லை கவலைகள் எல்லோரும் உறவு 

ரவாதோசை வாங்கித் தருகிறார்கள் அன்பொழுக 
ரசித்துக் கடிக்கவியலாது பல்செட்டால் முழுக்க 
ஜீன்சும் டீஷர்ட்டும் பேரன் போடச்சொல்ல போட்டோ 
எடுத்துச் சொன்னான் அவனைப்போல் நானென்று 

பழைய பாடல் பாடச்சொல்லி படம் பிடித்தான் 
பதிவிட்டு இணையத்தில் எனக்கும் இடம் கொடுத்தான் 
முதுமை வரமொன்றும் கேட்டுப் பெறவில்லை நான் 
முழுவதும் ரசிக்கிறேன் வாழ்வின் நொடிகளைத் தான் 

எமன் வந்து அழைத்தாலும் இல்லை கவலை எனக்கு 
எல்லாமொன்றும் விழுவதில்லை காதில் எனக்கு 
நாக்குழற நவில்கிறேன் நாராயணன் நாமம் 
நானிலமே இருக்கட்டும் நல்லபடி  நாளும் 

No comments:

Post a Comment