Sunday, September 27, 2020

Tribute to the great legend SPB ( My maanaseeka Guru)

 


இளைய நிலா ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்

மறைவுக்கு எனது அஞ்சலி கட்டுரை

(இக்கட்டுரை வரிக்குதிரையின் தேகம். வரிகள் எல்லாம் பல கவிஞர்கள் எழுதியது. மாலையாகக் கோர்த்தது மட்டும் நான் )

 

மௌனமே வேதமா ?

- பாலசாண்டில்யன்

 

எத்தனை மொழிகளில் பாடினாய்? பாட்டில் எத்தனை இன்பங்கள் தேடினாய் ? யாரும் தொட முடியாத உயரங்கள் தொட்டு நிற்கும் சிகரமே,   நாடகம் முடிந்த உச்ச காட்சி வந்த பொழுது தான் நாங்கள் கண்ணாடிப் பேழை போல உடைந்து போனோம்உன்னைப் பிரிந்து நிற்கும் எங்களுக்கு இனி மனதில் உறுதி வேண்டும் மீண்டு எழுவதற்கு...! 

 

பாலுவே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்;, பாலுவே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும். ஆனால் உன் மறைவு என்பது மாற்றமா, தடுமாற்றமா, எங்கள் நெஞ்சிலே பனிமூட்டமா? இனி மீள்வதா ? இல்லை வாழ்வதா என்பது இசைப் பிரியர்களுக்கு மனப்போராட்டம். காலனே  காலனே என்ன செய்து போயினாய்இங்கு எங்களுக்கு

பாலு தான் விருந்து பாலு தான் மருந்து என்று தெரிந்திருந்தும் என்ன செய்து போயினாய்

 

இது சந்தர்ப்பத்தின் சதியா? கவிஞர்களின் சதியா ? இல்லை, எதேச்சையாக அமைந்த ஒரு விஷயமா?

 

'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்று பாடினாய்பின்னொரு நாள், 'உதய கீதம் பாடுவேன், உயிர்களை

நான் தொடுவேன்' என்றிசைத்தாய். '

 

'மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மனிதனுக்கு 

ஆசை, கடைசியில் மண் தான் ஜெயிக்கிறது' என்கிற அனைவரும் அறிந்த தத்துவம் பாடினாய், ஆனால் மண் ஜெயித்திட உன்னையும் தோற்கடித்தது. என் செய்ய ?

 

'இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா? என் கதை எழுதிட மறுக்குது என் பேனா' என்று ஒற்றைக் கால் 

தவமிருந்து பாடிய பொழுது இப்படி நினைத்திருப்பாயா ஐம்பது நாட்கள் நீ இறந்து மீண்டு இறந்து மீண்டு இடர்படப் போவதை!

 

'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது, இரவு

தூங்கினாலும் உறவு தூங்கிடாது' இந்த பந்தம் உன் பாடல்கள் கேட்கும் ஒவ்வொருவரும் இரண்டு நாட்களாய் சரியாக தூங்கவில்லை. ஒவ்வொரு நாளும் எங்களை தூங்க

வைத்து மனதை லேசாக்கியது உன் சரணம்  என்றால்,

இன்று தூங்க விடாது  மனம் கனமாக்கியது உன் மரணம். கொடுத்து வைத்தவன் சொக்கன், சொக்கி நிற்பான் இனி. .. உந்தன்

இசை கேட்டு. சிலர் மீது பாசக்கயிறு வீசக் கூட மறக்கக் கூடும் உன் தேனிசை மயக்கத்தில்.

 

பாலு எனும் தாமரைப்பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி, பொன்னே 

உன் பெயருக்கு பொன்னாஞ்சலி, கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி, இனி  காணா எம் கண்ணிற்கு கவிதாஞ்சலி, உன் கீதம் வந்து சேரும் வரை நாங்களும் நீயும் தனித்தனிஉன் சங்கீத காற்று எம்மை இணைத்திட்ட பொன் சங்கிலி. நம் இணைப்பை பிணைப்பை அறுத்திட்ட அரக்கனை என் செய்வதுகாலன் கடலினில் வீழ்ந்த பின் எந்த உயிர் உன் உயிர் ? காற்றுடன் கலந்திட்ட நீ இசை ஊற்றாக இனி எங்குமிருப்பாய் ..! திருமகள்  திருப்பாதம் பிடித்து விட்டாய். தினமொரு  புதுப்பாடல் அங்கிசைப்பாய்.. 

 

எம் வாழ்வில் இனி  ஜன்னல் காற்றாகி வா, ஜரிகை பூவாகி வா, மின்னல் மழையாகி வா, உயிரின் மூச்சாகி வா. இயற்கையின் கோளாறில் இயங்கிய எம்மை, செயற்கை கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய், உன் பாடல் மயக்கம் தந்தாய்.

 

இசைத்தட்டு போலே இருந்த எம் நெஞ்சை, பறக்கும் தட்டாக, பறந்திட செய்தாய்.  நல்லிசை எனும் நதிகள் இல்லாத அரபு தேசமாக இருந்தோம். ஒரு நைல் நதி போலே எமக்குள் நீ நுழைந்தாய். உன் குரலில் குழைந்தாய். பாடும் நிலவாக எங்கள் வானத்தில் வந்தாய். இன்று வாடும் நிலமாக எங்களை தவிக்க விட்டு நீ வானத்தில் சென்றாய்.

ஏற்கனவே நெற்றியில் நிலவு அணிந்த சிவன் இன்னொரு நிலா கேட்டு உன்னை அழைத்தது ஏனோ? முழு நிலவாக எம்முடன் இருந்த 

எங்கள் வானம் இருட்டானது. எங்கள் நிலவு எங்கோ திருட்டானது.

 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ,

நாங்கள் உனைக் காண விண்ணிலே பாதை இல்லை, உன்னைத் 

தொட ஏணி இல்லைபக்கத்தில் நீயும் இல்லை. பார்வையில் அழுதழுது ஈரம் இல்லை. உனைக் கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை. நம் தூரத்தின் நீளத்தை குறைத்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை.

உன் கானத்தை பிரித்து விட்டால் எமக்கு சொல்லிக் கொள்ள 

வாழ்க்கை இல்லை

 

பாலு உன்னைப் பிரிந்த பின்னே கால் கடுத்தும் பயனில்லை. உன்

ஜீவன் விட்டுப் போனதினால், நாங்கள் தேகம் போல் தான் கிடக்கிறோம். தேசம் விட்டு தேசம் போனாலும் நீ வந்து விடுவாய். இன்று உலகம் விட்டுப் போனதினால், நாங்கள் என் செய்குவோம்அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா என மனதைத் தேத்திக்குவோம்

 

இயக்குனர் நீ, நடிகன் நீ, குரல் கொடுப்பவன் நீ, பாடகன் நீ, தயாரிப்பாளன் நீ, இசை கோர்ப்பவன் நீ, எல்லாம் தாண்டி எளிமையின் மறுபெயராய் மாமனிதன் நீ. உன் இடம் இனி வெற்றிடம். உன் இசை மட்டுமே நிரப்பும் அந்த ஓரிடம். நாங்கள் போவோம் வேறு யாரிடம்?

இனி அன்பு செய்ய, எல்லோரையும் பாராட்ட, எல்லாமே இசையால் தீர்த்து வைக்க, உன்னைப் போல் இனி எவருமில்லை. என்ன சந்தேகம் இதிலே ? யார் சொல்லக் கூடும் இதற்கு நல்ல பதிலே ?! 

 

ராஜதீபமே நீ இசை விளக்காக ஒளி வீசும் இடம் சொர்க்கம். உனது கானங்கள் கேட்கும் கணங்கள் மட்டுமே இனி எங்களுக்கு சொர்க்கம். இங்கே பலர் பயணிக்கும் போதும், உறங்கும் முன்பும், விழிக்கும் போதும், உன் பாட்டை அருமருந்தாக எடுத்துக் கொள்கிறோம். அங்கே தேவர்கள் அதனை அமுதமாக எடுத்துக் கொள்ளுவரோ? சொக்கனே வந்து சொர்க்க வாசல் திறந்து உன்னை அழைத்துப் போனான்

 

 

இரண்டொரு நாட்களாய் இங்கு மௌனமான நேரம், எங்கள் மனங்கள் எல்லாம் பாரம். கண்களிலே ஈரம். உன்னை காணாது நிற்கிறோம் இருட்டோரம். உன் திசை பார்த்து

பாதை தேடியே பாதம் போகுமோ? இல்லை தனிமையோடு பேசுமோ?

பித்தான எங்களை முத்தான உன் குரல் இனி வானொலி வசம் சேர்க்குமோ ?

 

யாருடனும் பகை பாராட்டாது வாழ்ந்த தேவ குணம் கொண்ட உனது எளிமை தான் இங்கே இனி ரசிகர்களின் வேதம். பசிக்கு விருந்து, நோய்க்கு மருந்து இரண்டும் இனி உனது கீதம். ஏற்கனவே உனக்கு முன்பு சென்று விட்ட கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள் புதிய மெட்டுக்கள் தயார் செய்து வைத்து விட்டனர். தினம் பாடு அங்கே. இறைவன் மகிழ்ந்து எங்களுக்கு அருள் பாலிக்கட்டும்.

 

வேதமாய் நாதமாய் கீதமாய் இருந்த நீ மௌனமானாய்… 

மூச்சு விடாது உனைப் பற்றி எங்களைப் பேச வைத்து…!

 

No comments:

Post a Comment