சிவனே என்றிருக்க சித்தம் அமைதி பெற
தவமே பூண்டுநிதம் தருணம் கடந்துவிட
உனது தயை எப்போதும் போதும்
உறவென்று யாரெனக்கு வேண்டும் (சிவனே)
அறிவிலாச் சிறுபிள்ளை நானே
இறைவனே உனதருள் ஏற்றம்தானே
குறைவிலா வாழ்வெனக் கருள்வாய் - என்
பிறைநிலா அணிந்த பெருமானே (சிவனே)
ஆசைக் கயிற்றை அவிழ்த்து விடு
பூசை தினம்செய்ய புத்திகொடு
ஓசை உன்நாமம் ஒலிக்க விடு - நான்
நாச முறுவதை நீ தடுத்து விடு (சிவனே)
அன்பே நீ என்பர் அன்பர்
அன்பே அருளாகும் உலகில்
அன்புருவாய் என்றும் வருவாய் - என்
அகமகிழ ஆனந்தம் தருவாய் (சிவனே)
சுற்றங்கள் பயனில்லை நேசா
உற்றதுணை நீயன்றோ ஈஸா
குற்றங்கள் பொறுத்தருள் நேசா
முற்றுமெனை மாற்றிவிடு ஈஸா (சிவனே)
- டாக்டர் பாலசாண்டில்யன்
அரவு பூண்டவனை அனுதினம் பூசித்தால்
அயர்வு நீங்கும் உயர்வு ஓங்கும் (அரவு)
துறவு மன்னனைத் தூயவன் என்றிட்டால்
குலம் பிழைக்கும் நலம் தழைக்கும்
பிறவிப் பயனவன் பிணிகள் தீர்ப்பவன்
பிறை சூடிய பெருமான் சிற்றம்பலனை ( அரவு)
சபைக்கு வருபவர் சங்கடம் தீரும்
கிருபை பெற்றவர் பாவங்கள் போகும்
திருநீர் அணிந்தவர் நோய்கள் அகலும்
திருநாமம் சொல்பவர் பயங்கள் விலகிட (அரவு )
விருந்து மாவான் மருந்து மாவான்
வினை தீர்க்கும் விஸ்வநாதப் பெருமான்
வில்வ மாலையில் வீற்றிடும் லிங்கன்
விடமுண்ட கண்டன் வீரியம் தருமந்த ( அரவு)
- டாக்டர் பாலசாண்டில்யன்
நந்தியும் நாதமும் ஈசனின் சிறப்பு
நானிலமே மகேசனின் பொறுப்பு (நந்தியும்)
மந்திர கோஷங்கள் மகிமை விசேஷங்கள்
சிவனின் ரூபங்கள் உடுக்கை தாளங்கள்
வானின் மேகங்கள் சாம கானங்கள்
ஏழு உலகிலும் ராஜ்ஜியம் நடத்தும் (நந்தி)
சந்திர பிம்பம் நெற்றியில் உண்டு
கங்கை பிரவாகம் முடியினில் உண்டு
நாக தேவனும் கழுத்தினில் உண்டு
மானின் ஆடையும் இடையினில் கொண்ட (நந்தி)
பசுவும் பின்னால் நிற்பது புரியும்
எமனுக்கு இவனே எமனெனத் தெரியும்
நெற்றியில் மூன்றாம் கண்ணொன்று எரியும்
மண்டை ஓட்டினை மார்பினில் கொண்ட (நந்தி)
வில்வ இலைகள் சகலமும் தருமே
விபூதி வாசனை தேகத்தில் வருமே
சூலமும் நீலமும் ஈசனின் பலமே
சதாசிவம் என்பது பொன்னம்பலமே (நந்தி)
- டாக்டர் பாலசாண்டில்யன்