Monday, November 20, 2017

பாடம் நடத்தாத ஆசான்கள்

பாடம் நடத்தாத ஆசான்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 

அழகிப் பட்டங்களை 
சட்டை செய்யாமல் 
அடுத்த மலருக்கு தாவுகின்றன 
பட்டாம்பூச்சிகள்.....

அழுக்கு மூட்டை 
ஏற்றினாலும் முகம் சுளிக்காமல் 
பொதி சுமக்கின்றன 
கழுதைகள் ...

யார் திட்டினாலும் 
புத்தி மாறாது மழைக்கு 
கானம் பாடுகின்றன 
தவளைகள் ....

மழையோ வெயிலோ 
உழைத்த படி இருக்கின்றன 
WiFi கோபுரங்கள் ...

யார் சோறு வைத்தாலும் 
அவர்கள் திருப்திக்காக 
சற்று உண்டு செல்கின்றன 
காக்கைகள்....

குடிசை மாற்று வாரியங்கள் 
தடுத்துச் சொன்னாலும் 
தமது கோவில்களை விடுவதில்லை 
புறாக்கள் ...

காந்தித் தாத்தா சற்று 
பொக்கை வாய் காட்டிச் சிரித்தால் 
போக்கை மாற்றுவது என்னவோ 


மனிதன் மட்டுமே...!!