Wednesday, November 7, 2012

set of more poems



*      தேவையெனும் போது மட்டும்
உங்களை நாடுகிறார்களா
வருத்தம் வேண்டாம்
திடீரென இருள் சூழும் போது
மெழுகுவர்த்தியை தானே
தேடுகிறோம்....
வருத்தம் தவிர்
பெருமிதம் கொள் ...!

*      உன் பெயர் உச்சரிப்பதை
நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன்
முடியவில்லை என
தொடர்ந்து சொல்கிறது என் உதடுகள்

* தேங்காய் மனம் இரண்டும் ஒன்று
இளசாய் இருந்தால் நீர் அதிகம்
முற்றினால் சுவை அதிகம் ...இது தேங்காய்
இளகி இருந்தால் கண்ணீர் அதிகம்
முதிர்ச்சி இருந்தால் வாழ்வில் சுவை அதிகம் ..இது மனம்

* ஏரி குளம் குட்டை நதி
என பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது நீர் தானே....?
மதங்களும் அப்படியே ...
பெயர்கள் பலவாக இருப்பினும்
அங்கே இருப்பது 'அவர்' தானே ?!
மனிதம் மதம் ...இடையில் இருந்து
பிரிப்பது 'நீ' தானே ...?

* வேதனையில் ஒருவன் இருக்கும் போது
அவனுக்கு தேவை ஆறுதலான ஒரு பார்வை, டச் அல்லது சொல்
ஆனால் அடுத்தவர் கொடுப்பதென்னவோ போதனை மட்டுமே
நமது பிரச்சனை என்றால் நாம் வக்கீல்
அடுத்தவர் பிரச்சனை என்றால் நாம் ஜட்ஜ் !

* உன் பயணத்தை மற்றவர் பயணத்தோடு
ஒப்பிட வேண்டாம்
உன் பயணம் என்பது உன் வாழ்க்கை !
இதில் போட்டி கிடையாது ...அதனால் பொறாமை கிடையாது

* உன் சவால்களை கட்டுபடுத்தாதே
கட்டுபாடுகளுக்கு நீ சவால் விடு...!
பின் தட்டுபடுவது எல்லாமே வெற்றி தான்

* தொடர் முன்னேற்றம் என்பது
பொருட்களுக்கு மட்டும் அல்ல
நமக்கும் தான் ...
நாளுக்கு நாள் ஒவ்வொரு நாள்
நாம் முன்னேற வேண்டும்
நேற்றை விட இன்று
இன்றை விட நாளை ...!
இது தான் கைசன் (kaizen)

*கற்றுக்கொள்ள விரும்ப வில்லை என்றால்
யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது
கற்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தால்
யாராலும் உங்களை தடுக்க முடியாது !

* பயங்களுக்கு தரும் அதே
முக்கியத்துவத்தை கனவுகளுக்கும்
அளிக்கத் தொடங்கி விட்டால்
அற்புதங்கள் ஆரம்பிக்கும் வாழ்வில்...!

* வருத்தங்களை மணலில் எழுது ...ஏன் நீரில் கூட எழுது ...!
பெற்ற அருளாசிகளை பாறையில் செதுக்கு ...!!
மகிழ்ச்சி தானாய் மனதில் தங்கும் !

some more poems of mine



*      கடவுள் நிச்சயம் கனவான் தான்
நவராத்திரி கொலு முடிந்ததும்
தூக்கி தூக்கி மேலே வைத்த  போது புரிந்தது
கடவுள் ரொம்ப கனமனாவர் என்று...!
கனமான கடவுளின் காலடியில்
கஷ்டங்களை போட்டு விட
மனமானது லேசாகிறது...!
மூட்டை கட்டி வைத்து விட்ட கடவுள்
மீண்டு வருவார் ஒரு வருடம் கழித்து ...
கொலுவில் முளைத்து ...!
அது வரை எதிராளியிடம்
காண்போம் கடவுளை...!
- டாக்டர் பாலசாண்டில்யன் 


ரணப்படுத்தும் வலிமை உள்ள வார்த்தைகளுக்கு
குணப்படுத்தும் வலிமை உள்ளதா ?
நெருக்கமானவர் தவறிப் போனால்
நாம் சொல்லும் கரிசன வார்த்தைகள்
களிம்பாக செயல் படுவதில்லை
இறுக்கமானவர் இடறிப் போனால்
நாம் இயம்பும் ஆறுதல் வார்த்தைகள்
மனம் வருடும் மயிலிறகாக இருப்பதில்லை
ஆனால்
இயல்பாக நாம் இடித்துரைக்கும்
அல்லது எடுத்துரைக்கும் வார்த்தைகள்
இறுதி மூச்சு வரை மனதோடு பதிந்து விடுகின்றதே...!
மனிதர்களை நாம் இறக்கி விட்டு விட்டு இப்போதெல்லாம்
வார்த்தைகளை பல்லக்கில் ஏற்றி விட்டு விட்டோமோ ?!
எனவே
காயம் தரும் வார்த்தைகளை அகற்றுவோம் நம் அகராதியிலிருந்து
நேயம் தரும் வார்த்தைகளை போற்றுவோம் நாம் மனதிலிருந்து ...!
டாக்டர். பாலசாண்டில்யன்


வாழ்வில் சிறக்க ஆடு மாடு
கொடுத்தால் மக்கள்
வாய்க்கு ருசியாக்கி மகிழ்கிறார்கள்
கல்வி சிறக்க கணினி
கொடுத்தால் மக்கள்
கடையில் விற்று காசாக்குகிறார்கள்
தூக்கி விட நினைப்பவர் ஒரு புறம்
தூக்கிலிட்டு கொள்ள நினைப்பவர் மறு புறம்
ஏற்றம் தர முடியுமா எளியவர்களுக்கு ....!
மாற்றம் தர முடியுமா மக்களுக்கு ....!
- டாக்டர். பாலசாண்டில்யன்



மற்றவரை பாராட்ட ஒரு முகம்
அடுத்தவரை கவர்ந்திழுக்க ஒரு முகம்
முக்கியமில்லாதவரை தவிர்க்கும் மற்றொரு முகம்
எப்படி பின் இருக்கும் வாழ்க்கையில் சுமுகம்
எப்படி உன்னை ஏற்கும் சமூகம்
புன்னகை வீசி நிற்க தேவை இல்லை அறிமுகம் ...!
எவரிடமும் காட்ட வேண்டாம் பாராமுகம் ....!
- டாக்டர் பாலசாண்டில்யன் 

கசங்கிய ரூபாய் தாளையும்
பொருள் தந்து ஏற்பார் உண்டு
சோகங்களால் கசங்கிய முகத்தை
பொருட்படுத்தி ஏற்பார் இல்லை.....!
நம்மை பற்றி ஏதேனும் சிலர்   'விட்டுசொல்லலாம்
நம் வாழ்வு நமதென்று அதனை விட்டுத்   தள்ளலாம் ....!
துட்டு கொடுத்து எதுவும் வாங்கும்
பொருள் வாழ்வில்  ஒரு மாறுதலுக்கு
விட்டு கொடுத்து இறைஅருள் வாங்கலாமே ...!
- டாக்டர் பாலசாண்டில்யன்