Wednesday, September 7, 2016

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence)

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence)
- டாக்டர் பாலசான்டில்யன் (9840027810)
Thought Leader/Transformation coach and CEO of Vision Unlimited
உணர்வுசார் நுண்ணறிவு என்பது ஒரு தனிமனிதனின் சிறப்புதிறமை - குறிப்பாக அடுத்தவரை நிர்வகிப்பதில், கையாள்வதில், உத்வேகபடுவதில், புரிந்து கொள்வதில், பிறர் செய்கை அல்லது வார்த்தைக்கு எப்படி பதிலளிப்பது என்பது தினம் தினம் நாம் வாழும் சூழலில் ஒரு சவாலாக உள்ளது. இது மனிதர்க்கு மனிதர் வேறுபடும்.
உணர்வுசார் நுண்ணறிவு என்பது மிகவும் மென்மையாக நடந்து கொள்ளல் என்பதை விட மேன்மையாக நடந்து கொள்ளுதல் எனலாம். உணர்ச்சிகள் தமைக் கையாள்வதில் தனித்திறன் அல்லது சாதுரியமாக இருத்தல் எனலாம்.
நமது உணர்ச்சிகளில் இருந்தும் பிறரது உணர்ச்சிகளில் இருந்தும் நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்கள் கொண்டு பிறரை மற்றும் நம்மை வெவ்வேறு சூழலில் எப்படி சமாளிக்கலாம் என்பதே இங்கு முக்கியமாகிறது.
பொதுவாக பிறரது உடல் மொழியை கவனித்தல், உன்னிப்பாக கவனமாக கேட்டல், குறைவாக பேசி நிறைய புரிந்து கொள்ளுதல், பிறர் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தல், ஆர்வமாக இருத்தல், கோபம் தவிர்த்தல், ஆக்ரோஷம் தவிர்த்தல், நெகடிவ் உணர்ச்சிகளை நுட்பமாக கையாளுதல், பிறர் சொல்ல நினைப்பதை அவர் முக ஜாடை, கண் அசைவு கொண்டு கூட அறிந்து கொள்ளல், எல்லாமே ஆகும்.
பிறரோடு இணைந்து செயல்படுதல், பிறரைப் பாராட்டுதல், குறிப்பாக குறைகளை ஏற்றுக் கொள்ளுதல், குறைகளை காது கொடுத்துக் கேட்டல் இவையும் ஆகும்.
உணர்ச்சிகள் என்பது தொற்றிக் கொள்வது ஆகும். நாம் சிரித்தால் எதிராளி சிரிப்பார். முறைத்தால் முறைப்பார்.
நாம் ஒரு சூழலில் ஆதிக்கம் செலுத்தினால் அடுத்தவர் எதிர்க்க ஞாயம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிறரை நமது வாக்கு அல்லது செயல் செல்வாக்கால் மாற்றும் வல்லமை மிகவும் தேவை.
உணர்ச்சிகள் இல்லையென்றால் நாம் ஒரு ரோபோ போலத் தான். நமது உணர்வுகளும் உணர்ச்சிகளும் தான் நமது விருப்பு வெறுப்பு இவற்றை வெளிப்படுத்துகிறது. நமது மகிழ்வையும் சோகத்தையும் கூடத்தான். திருப்தி, அதிருப்தி என்பதைக் கூட பிறர் மனம் நோகாமல் வெளிப்படுத்த முடிந்தால் நாம் திறமைசாலி தான்.
நமது உடல்நலம் மற்றும் மனநலம் நமது உணர்வுசார் நுண்ணறிவு தான் தீர்மானிக்கிறது என்பதால் இந்த சூட்சமத்தை எப்படியாவது கற்றிட வேண்டும்.
அதுவே நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும்.