மௌனத்தின் ஓசை
பாலசாண்டில்யன்
இமைகளின் நளின நடனத்தில்
சில வார்த்தைகள் மெல்லப் பிறக்கும்
இதழ்களின் மெல்லிய அசைவுகளில்
மௌனமே அதை மொழி பெயர்க்கும்
இமைகளும் இதழ்களும் செய்திடும்
லீலைகளால் நாவும் சற்று வரளும்
என்னென்னவோ சொல்லிட நினைத்து
மாலை மாலையாய் நீர் வடிக்கும்
கீதமும் நாதமும் செய்திட்ட காவியம்
படிக்க முடியாமல் ஏனோ துடிக்கும்.
சொல்ல முயலும் ஒரு சொல்லின் ஓசை
பலர் சொல்லி முடித்த பொருள் பயக்கும்
சொல்லைக் கடந்த மௌனப்பேழை
பல கோடி கோடி பொருள் சுமக்கும்
இமைகளின் அசைவு முடியும் போது
எல்லா மொழியும் அங்கு சங்கமிக்கும்