Wednesday, August 10, 2016

Today's Film Music Industry in Tamil and Hindi

தமிழ் திரை இசையில் என்ன நடக்கிறது ?
- டாக்டர் பாலசாண்டில்யன் 
(கவிஞர், எழுத்தாளர், இசை ஆர்வலர், பாடலாசிரியர், பாடகர், மனநல ஆலோசகர்)

இசை ஞானியை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் அவர்கள் நேற்று மறைந்த செய்தி கேட்ட போது, தமிழ் திரை இசையில் என்னென்னெ மாற்றம் நடக்கிறது என்று அசை போட்டது மனது. 

ஒரு இசைப் பிரியனாக, சிறிது இசை கற்றவனாக, பாடல் எழுதும் கவிஞனாக, ஒரு நோக்கராக இருந்து பார்க்கும் போது சில விஷயங்களை கவனிக்க முடிந்தது. அதிக இசை அறிவு இல்லாத ஒருவனாக இசை பற்றியோ பாடல்கள் பற்றியோ பேசுவது தவறு. கடினம் கூட.

இசை உருவாக்கம் எனும் போது அதில் நான் நூற்றுக்கு ஜீரோ தான். ஆகவே அது பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேச எனக்கு அருகதை இல்லை என்றாலும் ஆவலை அடக்க முடியவில்லை. எனவே தான் இந்தக் கட்டுரை. 

இசை என்ன மொழியில் இருந்தாலும், யார் குரலில் இருந்தாலும் கேட்டு ரசிக்க என்னைத் தூண்டுவது எனது ஆர்வம் தாண்டி எனது மகள்கள் இருவரும் தான். ஆகவே அணமைக் கால தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உற்றுக் கேட்கிறேன். 

சினிமா மூலம் இசை பலர் காதில் நுழைந்திருக்கிறது என்றால் அதற்கு நேற்று தொடங்கி இன்று வரை பல இசை அமைப்பாளர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். சாஸ்திரிய சங்கீதம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புற சங்கீதம், சுபி, பாப், ராப், கஜல், நாட்டிய சங்கீதம், என்று பலவகை இசை திரையில் வந்து கொண்டிருக்கிறது. மக்களை கவர்கிறது. பாமரனை சுண்டி இழுக்கிறது. அதில் குத்துப் பாடல், கானா பாடல் இவையும் அடக்கம். 

இசை அமைப்பாளர்கள் என்று பார்க்கும் போது எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், வசந்த் தேசாய், ஓ பி நய்யர், லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே வி மஹாதேவன், எம் எஸ் வி, இசைஞானி இளையராஜா என்று தொடங்கும் ஒரு பட்டியல் மெதுவாக நீண்டு ஏர் ஆர் ரஹமான், தேவா, பரத்வாஜ், வித்யாசாகர், தேவா, ரமேஷ் விநாயகம், சங்கர் கணேஷ், இமான், என்று தொடங்கும் பட்டியல் இன்று சங்கர் எஹசான் லாய், ஹிமேஷ் ரேஷமையா, அங்கித் திவாரி, அமல் மாலிக், அட்னன் சாமி, அனு மாலிக், சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிரோ மஸ்தானி புகழ்), விஷால், ஜஸ்டின் பிரபாகரன், ஜி வி பிரகாஷ், அனிருத், தீனா, சத்யா, சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயண் என்று வந்து நிற்கிறது.

அதே போல கவிஞர்கள் என்று பார்க்கும் போது பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், பிறைசூடன் என்று தொடங்கும் பட்டியல் இன்று விவேக், யுகபாரதி, நா முத்துக்குமார், தாமரை, விவேக் வேலுமுகன், கானா பாலா, பாலன் காஷ்மீர், முத்தமிழ், கார்த்திக் நேதா, அருண்ராஜ் காமராஜ், விக்னேஷ் சிவன், ரோஷன் ஜாம்ரோக், தனுஷ், சிம்பு, சென்னை தமிழன், உமா தேவி, லொள்ளு உதயா, சங்கர் தாஸ் என்று நீளுகிறது. 

தமிழ் இசையில் புரட்சி என்று பார்க்கும் போது முழுக்க முழுக்க கர்நாடக கச்சேரி பாடல்கள் போலவே இருந்தது மாறியது என்றால் எம் எஸ் வி அவர்கள் காலத்தில் தான் என்றால் மிகையாகாது. அதன் பிறகு 80 களில் இசைஞானி அவர்களின் அறிமுகம் மூலம் மீண்டும் மிகப் பெரிய ஒரு புரட்சி - கிராமிய மணமும் கர்நாடக இசையின் குணமும் கலந்து அற்புதமான ஆயிரம் பாடல்கள் நம்மால் கேட்டு ரசிக்க முடிந்தது. 

சூழலுக்கு ஏற்ற பாடல் வரிகள், நல்ல குரல்கள், இனிமையான இசை, பின்னணி இசை, வாத்திய அற்புதம் என்று இருந்த போது வந்தது இசைப் புயல் ஏ ஆர் ரஹமான் அவர்கள் வந்து மற்றொரு புரட்சி இசை தந்து மக்களை மயக்கினார். இன்னும் மயக்கிய வண்ணம் இருக்கிறார். 

இதற்கிடையில் ஓசைப் படாமல் சில ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அவர்கள் தேவா, ஜி வி பிரகாஷ், வித்யாசாகர், பரத்வாஜ், ரமேஷ் விநாயகம், இமான், என்று நீளும் போது திடீர் என உள்ளே நுழைந்திருப்பவர் சந்தோஷ் நாராயணன் அவர்கள். 

அவர் ஆஸ்திரேலியாவில் இசை ஏற்பாடு செய்து இங்கு வெளியிடுகிறார் என்று ஒரு புறம் செய்திகள் கசிந்தாலும் ஆசை ஒரு புல்வெளி, மோகத்திரை, பூ அவிழும் பொழுது, ஆகாயம் தீ பிடிச்சா, போன்ற மனதை வருடும் பாடல்கள் கொடுத்த பின்பு மாயநதி மற்றும் நெருப்புடா பாடல்கள் மூலம் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்த இவர் இசையை உயர்த்தி இருக்கிறாரா என்று கேள்வி புதிதாய் கிளம்புகிறது.

இதற்கு இடையில் அடியே அழகே, வா மச்சானே, கண்ணான கண்ணே, மனசுல சூரக்காத்து, போன்ற பாடல்கள் பாடி மனத்தைக் கொள்ளை அடித்து வருபவர் பிரபல மிருதங்க வித்வான் ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவ் மற்றும் பத்மா சாண்டில்யன் அவர்களின் மகன் ராகவேந்திர ராஜா என்கிற சீயன் ரோல்டன் எனும் இசைக் கலைஞன். 

அதே போல நேஹா பாஸின், அர்ஜித் சிங், ரஹத் பாத்தே அலி கான், பாம்போன் போன்ற ஹிந்தி இசைக் கலைஞர்கள் நம்மை மகிழ்வித்து வருகின்ற இந்த தருணம் எங்கே போயினர் நமது எஸ் பி பி, சித்ரா, ஸ்ரீனி, சங்கர் மஹாதேவன், ஹரிஹரன், சுஜாதா போன்றவர்கள் எனும் கேள்வியும் எழுகிறது? 

அதே போல பாடல்கள் எழுதுகின்ற வைரமுத்து, நா முத்துக்குமார், கபிலன், பிறைசூடன், அறிவுமதி, பழனிபாரதி, தாமரை இவர்களுக்கும் ஓய்வு அளிக்கப் பட்டு விட்டதா? என்ற கேள்வியும் மனதில் வந்து போகிறது. 

ஐ டி நிறுவனங்களில் அதிக சம்பளம் கொடுக்க முடியாத போது நிறைய சம்பளம் வாங்குபவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு குறைவான கூலியில் அதிகம் வேலை பார்ப்பவர்களை அமர்த்துகிறார்கள் அது போல தமிழ் மட்டும் ஹிந்தி படங்களில் புதிய நட்சத்திரங்கள், பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்று மாற்றப் படுவதை நான் பார்ப்பது போல் நீங்களும் கவனித்தீர்களா ?

இன்று ஹிந்தி படங்களில்  அதிகமாக போஜ்புரி மற்றும் பஞ்சாபி பாடல்கள் தான் இடம் பெறுகின்றன - இதற்கு அதில் பங்கு பெறும் கலைஞர்கள் தான் காரணமா? அது போல் தான் இங்கு தமிழ் படங்களில் ஹீரோவே பாடல் எழுதுகிறார் பாடுகிறார், அல்லது புதிய நபர்கள் தான் படத்தை இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள், எழுதுகிறார்கள், இசை அமைக்கிறார்கள், பாடுகிறார்கள் - இது வரம் மற்றும் சாபம் தான். 

புதியவர்களுக்கு திறமை இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், திறமையான பரிச்சயமான நபர்கள் ஏன் காணாது போனார்கள் ? கண்டுபிடித்து சொல்லுங்கள். 

முன்பெல்லாம் ஜெமினி படம் என்றால் பி பி எஸ் அல்லது ஏ எம் ராஜா பாடுவார். சிவாஜி எம்ஜிஆர் இருவருக்கும் டி எம் எஸ் பாடுவார், எப்போதாவது எஸ் பி பி பாடினார் - சற்று பொருந்தாவிட்டாலும். பிறகு கமல் மற்றும் ரஜினி என்றால் எஸ் பி பி தான் பாடுவார். 

இன்று பிரதீப் மற்றும் அருண்ராஜ் காமராஜ் ரஜினிக்கு பாடினால் சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உங்களுக்கு எப்படி?

சமீபத்தில் கூட விஜய் படத்தில் ஹரிஹரன் பாடி ஒரு ஹிட் பாடல் கொடுத்தார். 

ஹிட் கொடுக்க ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ், ஒளிந்து இருந்து பாடி வந்தவர்கள், வீட்டு ஸ்டுடீயோவில் பாடியவர்கள் என்று  ஒரு கூட்டமே கிளம்பி விட்டது. கேட்டு ரசிக்க, ரசித்துக் கேட்க நாம் தயாரா? ஒரு கிடார் ஒரு தாள வாத்தியம் வைத்துக் கொண்டு மிக மிக குறைந்த செலவில் பாடல்கள் இன்று ரெடி. சில பாடல்கள் இந்தக் கட்டுரையில் மேலே சொன்னது போல ஹிட் ஆகி விட்டன. 

இசை வெல்லட்டும். மனம் ரசிக்கட்டும். ஆன்மா லயிக்கட்டும். எல்லோரும் ஜெயிக்கட்டும் என்று வாய் சொன்னாலும் இசைஞானி, ரஹ்மான், வைரமுத்து, முத்துக்குமார், எஸ் பி பி, ஹரிஹரன், சுஜாதா இவர்கள் இல்லாத திரை இசையை ஏனோ ஏற்க முடியவில்லை. செலவு எனும் பெயரில் இவர்களை தள்ளி வைக்கும் புதிய திரை உலகம் நமக்கு இனி நல்லவை தருமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

கொஞ்சம் 'மகிழ்ச்சி'யுடன் அதிக கவலையுடன் சோகத்துடன் முடிக்கிறேன் திரை இசை பற்றிய இந்தக் கட்டுரையை...

No comments:

Post a Comment