Friday, August 28, 2026
காதல் கவிதை / பாடல்
பாலசாண்டில்யன்
பல்லவி
மனதின் சுவாசம் திங்கள் அறியுமோ?
மதியின் வாசம் செவ்வாய் அறியுமோ?
மங்கல நாதம் கிழமை வழங்குமோ?
மாவிலைத் தோரணம் நாளை ஆடுமோ?
சரணம் 1
மௌனத்தின் மொழியை விழிகள் பேசுமோ?
மறந்தநன் னாளும் நினைவில் பூக்குமோ?
தேனினும் இனிய குரல் கேட்குமோ?
தேடிடும் இரு விழிகளில் வெட்கமோ?
உயிரினில் கலந்த உறவின் ரகசியம்
உலகத்தின் காற்றில் ஓசையாய் மாறுமோ?
பயிரினில் துளிர்க்கும் பசுமை போலவும்
பயணத்தின் முடிவில் பந்தம் நீளுமோ?
சரணம் 2
இரவினில் எரியும் சுடரின் தாகமும்
இமைக்குள் தெரியும் உருவின் மோகமும்
வரவெனக் கேட்கும் இளமை ஆசையும்
வார்த்தையில் அடங்கா அன்பின் பாசமும்...
காலத்தின் வண்டியில் கதையாய் ஓடுமோ?
காற்றினில் தென்றலாய் நம்மைச் சேருமோ?
கோலத்தின் புள்ளிகள் இணையும் வேளையில்
கோயில் மணிபோல நாதம் கேட்குமோ? S
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment