Wednesday, December 1, 2021

உரிமை

 உரிமை  

குறுங்கதை
- டாக்டர் பாலசாண்டில்யன்
 
வெங்கி  ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர். நிறுவனத்தில் சில சமயம் இரவு கூட தங்க வேண்டி இருக்கும். அவ்வளவு வேலை பிரஷர்.

சரியாக போய்க்கொண்டிருந்த நிறுவனத்தில் திடீர் பிரச்சனை. சம்பளம் வருவதற்கு கூட தாமதம் ஆனது. வீட்டில் பண சிக்கல். வெங்கிக்கு  சொல்ல முடியாத மனச்சிக்கல். குடிக்க ஆரம்பித்தான். இதற்கு நடுவே ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் அவனுக்கு தனக்கு கீழே வேலை பார்க்கும் ரூபாவின் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளத் திருமணத்தில் போய் முடிந்தது.

நிறுவனத்தில் சம்பளம் சில சமயம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் வந்தது. இரண்டு குடும்பம். குடிப் பழக்கம். இருதலைக்கொள்ளி எறும்பாக சிக்கினான் வெங்கி.

ஒரு நாள் நிறுவனத்தில் வந்து கையெழுத்து போட்டு சிறிது நேரம் இருந்து விட்டு எல்லோரும் வீட்டுக்கு போகலாம். பாதி சம்பளம் என்றனர். வெங்கி சுமார் 11.30 மணிக்கு கிளம்பினான். கொஞ்சம் குடித்துவிட்டு பிறகு பஸ் ஸ்டாண்ட் போனான்.

பஸ் கூட்டமாக இருந்தது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.  வேறு வழியின்றி ஏறினான். பஸ் கொஞ்ச தூரம் கூட போய் இருக்காது. நடக்கக் கூடாத அந்த சம்பவம் நடந்தது.

தொங்கிக்கொண்டு போன வெங்கி  ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதி மண்டையில் அடிபட்டு அங்கேயே கீழே விழுந்தான். தலையில் பலத்த காயம்.
பஸ் நின்றது.

வெங்கியை  அதே பஸ்ஸில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவன் நிறுவன நண்பர்கள் மற்றும் சில பயணிகள் பெரிய ஆஸ்பத்திரி சென்றனர். போகும் போதே வெங்கியின் உயிர் பிரிந்தது.

காரியம் முடிந்து போய் ஒரு மாதம் கழித்து வெங்கியின்  மனைவி ரமா, அவன் தாய், அவனின் இரண்டாவது மனைவி ரூபா மூவரும் வந்து எச் ஆர்  மானேஜரிடம் கத்திக்கொண்டு இருந்தனர்.

வெங்கியின்  பிஎப் தனக்குத் தான் வர வேண்டும் என்று. வெங்கி  அவனது ஆரம்பத்தில் கொடுத்த அவன் அம்மா பெயரை மனைவி பெயரில் மாற்றவில்லை. இப்போது சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது மனைவி வேறு.

எச் ஆர் மேனேஜர் அதற்கு தீர்வு சொல்லிக்கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டு இருந்தார்.

போய் சேர்ந்த வெங்கிக்கு  என்ன கவலை...? 

பெயரில் மட்டும் ரூபா இருந்தாலும் உரிமைப் போராட்டத்தில் வெல்லப்போவது யார் ரமாவா அவள் மாமியாரா ?

No comments:

Post a Comment