Sunday, May 16, 2021

கொரோனா கர்மவினை

 கொரோனா கர்மவினை :- பாலா

கொரோனாவை கட்டுப்படுத்த நம்ம கையில் ஒன்றும் இல்லை என்றாலும், நாம் அடிக்கடி கை கழுவித் தான் ஆக வேண்டும்.
ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டிக் குவித்து லாரியில் ஏற்றி அனுப்பினோம் அன்று. இன்று ஆக்சிஜன் சிலண்டர்களை லாரியில் ஏற்றி வருகிறோம்.
பிழைத்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தால் அன்று மிகவும் மகிழ்ந்தோம். ஐ சி யு வில் இடம் கிடைத்தால் இன்று மகிழ்கிறோம்.
இவர் எந்த மதம், புதைப்பதா எரிப்பதா என்று விவாதங்கள் நடந்தது ஒரு காலம். இன்று யாராக இருந்தாலும் மூட்டை கட்டி முகம் கூடக் காட்டாமல் எரிக்கும் கொடுமை இக்காலம்.
ஊரடங்கில் வெளியே வந்தால் தண்டனை கொடுத்தது ஒரு காலம். இன்று அவர்களுக்கு நிற்க வைத்து பூஜை செய்து பாடம் புகட்டுவது இக்காலம்.
ஆயிரம் பொய் சொல்லி ஆயிரம் பேரை அழைத்து திருமணம் செய்தவர்கள் இன்று காதும் காதும் வைத்தது போல வாயை மூடி நான்கைந்து பேரை வைத்து திருமணம் செய்கிறார்கள்.
பிள்ளைகள் மொபைல் பார்த்தால் திட்டிய பெற்றோர், இன்று புதிய புதிய மொபைல் வாங்கிக் கொடுத்து பாடம் படிக்க சொல்லுகின்றனர்.
காய்கறி நறுக்குவதற்கு கூட அடம் பிடித்த குழந்தைகள் இன்று சமையலறையில் புதிது புதிதாக ரெசிபி செய்து போட்டோ எடுத்து அலப்பறை செய்கிறார்கள்.
விருந்தாளிகளுக்கு பன்னீர் தெளித்து வரவேற்போம் அன்று. இன்று அவர்கள் சென்ற உடனே அந்த இடத்தை சானிடைசர் தெளித்து சுத்தம் செய்கிறோம்.
விதவிதமாக பரிசு அளித்தவர்கள் இன்று மாஸ்க், சானிடைசர் என்று பரிசளிக்கிறார்கள்.
ஆபீஸ் ஏன் வரவில்லை என்று கேட்டவர்கள் இன்று ஆபீஸ் மட்டும் வராதீர்கள் என்று சொல்லும் நிலை.
புயல் வெள்ளம் என்றால் மக்கள் தங்குவது பள்ளி மற்றும் கல்லூரியில், இன்று நோயாளிகள் சென்று அங்கு தங்குகின்றனர். பாடம் நடப்பதில்லை..மாறாக சிகிச்சை.
மால் தியேட்டர் என்று சுற்றியவர்கள் இன்று மருத்துவமனை, மருந்து கடை என்று அலைகிறார்கள்
திருமண வீட்டில் சாப்பிடும் ஒருவர் பின் நின்று அவர் சாப்பிட்ட உடன் அந்த சீட்டை பிடிப்பது உண்டு. இன்று ஒருவர் டிஸ்சார்ஜ் ஆனால் அவர் படுக்கையை இடம் பிடிக்கிறார்கள்.

No comments:

Post a Comment