Sunday, May 16, 2021

இணைப்பு துண்டிக்கப்பட்ட முதியவர்கள்

 இணைப்பு துண்டிக்கப்பட்ட முதியவர்கள் 

- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல ஆலோசகர்)
Thought Leader/Transformation Coach/Senior Corporate Trainer

மனிதனின் அடிப்படித் தேவைகளில் மிக முக்கிய ஒன்று 'சமூக தேவை'. மனிதனை ஒரு சோசியல் அனிமல் (சமூக விலங்கு) என்று அழைப்பர். 

ஒருவரோடு சந்திப்பது, பேசுவது, கருத்துக்கள் பரிமாறுவது, சுக துக்கங்களை பகிர்வது, நல்ல மற்றும் கெட்ட விசேஷங்களில் பங்கேற்பது என்ற ரொடீன் எனும் வழக்கம் இப்போது சுமார் ஒன்றரை வருடங்களாக இல்லை. உறவினர்கள், நண்பர்களை சந்திக்க முடியவில்லை.

யாரிடமும் நேரடித் தொடர்பு இல்லை. ஒருவர் மற்றொருவரின் இல்லத்திற்கு செல்லுவதில்லை. காலை நடைபயிற்சி, கோவில் மசூதி மற்றும் தேவாலயங்களுக்கு செல்ல முடியாமை, நண்பர்களை சந்தித்து அளவளாவி ஒரு தேநீர் பருக முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் எதுவுமே முன்போல் இல்லை. காரணம் இந்த கொரோனா தொற்று தான். 

தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், நோய்த் தொற்றின் தீவிரம் இப்போது அதிகரித்து வரும் நிலையில் யாருமே வெளியே இயல்பாக செல்ல முடியாத நிலை, அதுவும் முதியவர்கள் நிச்சயம் செல்ல முடியாத நிலை. 

இது அவர்களை மனதளவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ? சமூக, அரசியல், இலக்கிய, ஆன்மீக கூட்டங்கள் எதுவுமே நடக்கவில்லை. முதியவர்களால் (வீட்டில் எல்லோருமே அடைந்து கிடப்பதால்) போதிய சுதந்திரத்துடன் நடந்து கொள்ள முடியவில்லை. டிவி மற்றும் ஊடகங்கள் மிகவும் அச்சம் தருகின்றன. 

வீட்டில் எதுவுமே முன்பு போல நேரத்தில் எழுதல், உணவு தயாரித்தல் இல்லை. சிறிய சிறிய உடல் உபாதைகளுக்கு கூட மருத்துவமனை செல்ல முடியவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் யாருமே அவரவர் வேலையில் மூழ்கி இருப்பதால் இவர்களோடு அமர்ந்து உரையாடுவதில்லை. இப்போது முதியவர்கள் என்ன தான் செய்வார்கள் ?

தவிர, அவர்களின் பல நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் பலரின் இறப்புச் செய்தி அவர்களை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கி இருக்கிறது. அப்படிப்பட்ட சில துயரச் சம்பவங்களுக்கு அவர்களால் நேரில் கூட செல்ல முடிவதில்லை. 

முதியவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு சிறிதும் நேரம் இல்லை. என்ன செய்ய ? 

தமது வழக்கமான ரொடீன் மாறி விட்டால், முதியவர்களால் நிச்சயம் அதனை அவ்வளவு எளிதில் ஏற்க முடியவில்லை.  வீட்டில் எப்போதும் இரைச்சல், விவாதங்கள், சச்சரவுகள் என்று இருப்பதால் அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் இல்லை. நள்ளிரவு வரை விளக்குகள் ஏறிகின்றது. விடிந்த பிறகும் பலர் வீட்டில் விடியவில்லை. நல்ல பழக்கங்கள் கொண்ட முதியவர்களால் இந்த சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எப்போ வருமோ இங்கே பழைய காலம் ? எப்போ தொலையும் இந்த பாழும் கொரோனா காலம் ? வினா வினா அதே வினா. விடை தருவார் யாரோ ! விரைவில் எல்லாம் சரியாகட்டும். நல்ல தீர்வு கிடைக்கட்டும். இயல்பு வாழ்க்கை திரும்பட்டும். பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment