Monday, May 17, 2021

கர்ணன் தனுஷ்

 கர்ணன் தனுஷ்

- பாராட்டுரை
- பாலசாண்டில்யன்
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பாடகர், கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், நூலாசிரியர் என்பதை எல்லாம் தாண்டி நான் நல்ல கலை ரசிகன்.
அந்த வகையில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் தனுஷ் அவர்களை பல்வேறு படங்களில் கண்டு அவரது பரிமாண வளர்ச்சியைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன்.
எனது பயிற்சி வகுப்புகளில் மகேந்திர சிங் தோனி மற்றும் நடிகர் தனுஷ் பற்றி அடிக்கடி குறிப்பிடுவேன். குறிப்பாக அவர்களின் தொடர் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து.
2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை', 2003 ல் திருடா திருடி போன்ற படங்களில் அவர் நடித்த பொழுது மிகவும் எரிச்சலாக, கோபமாக பார்த்ததுண்டு. அவருக்கு யார் எழுதித் தந்ததோ, "என்னை எல்லாம் பார்த்தால் பிடிக்காது, பார்க்கப் பார்க்க பிடிக்கும்" என்று அவர் பேசிய வசனம் நிச்சயம் அவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல.
தனுஷ் எனும் மனிதர் ரஜினியின் மாப்பிள்ளை, இயக்குனர் செல்வராகவன் தம்பி, இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்றெல்லாம் ஆரம்ப காலத்தில் கால் பதிக்க உதவி இருக்கலாம். அதன் பிறகு நடிப்பு, நடனம், நீச்சல், வாகனம் ஓட்டுதல், சண்டை போடுதல், தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்குதல், வசன உச்சரிப்பு என்று பல திறன்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு மிகச் சிறந்த இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து படிப்படியாக முன்னேறிய முழுமையான நடிகர் இன்று.
பல பிலிம் பேர் விருது, தேசிய விருது என்று பெற்று விட்ட கலைஞன் தனுஷ் ஆடுகளம், மரியான், வி ஐ பி, மாரி, படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம், கொடி என்று பல வேடங்களில் நடித்து தனது காலை சரியாக ஊன்றிய பிறகு 'ஷமிதாப்' எனும் ஹிந்தி படம் (உயர்ந்த மனிதர் அமிதாப் பச்சனுடன்), பிறகு ராஞ்சனா (அம்பிகாபதி) எனும் மற்றொரு ஹிந்தி படம் - இரண்டிலும் சொந்தமாக ஹிந்தி மொழி கற்று சொந்தக் குரலில் டப்பிங் பேசியது பெரிய பாராட்டுக்கு உரியது.
அண்மையில் ஆங்கிலம் மொழியில் - பிரெஞ்சு படமாகிய 'பகிர்' (பக்கிரி) படத்தில் என்ன ஒரு ஸ்டைல், லாவகம், அற்புதமான பாடல் என்று காண்பவர் மனதைக் கவரும் தனுஷ் அசுரன் படத்தில் ராட்ஷசன் போல நடித்து தேசிய விருது பெற்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். எதுவுமே புதிய செய்தி இல்லை.
அண்மையில் 'கர்ணன்' படம் பார்த்த பொழுது அதிக ஆர்ப்பாட்டம், சத்தம் எதுவுமே இல்லாமல் ஆனால் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டு நடித்திருக்கும் விதம் மிகவும் அருமை. படத்தில் வரும் கால்கள் கட்டிய கழுதை, குதிரை, வீச்சரிவாள் வெட்டு படும் மீன், பூனை, அவ்வப்போது சாமியோ பூதமோ என்று வந்து போகும் ஹீரோவின் இறந்து போன தங்கை எனும் குறியீடுகள் கதைக்கு மிகவும் வலு சேர்த்துள்ளது.
அது மட்டுமா ? உன்னிப்பாக கவனித்தால் மஹாபாரதத்தில் கண்ணபிரான் எல்லோரையும் - கர்ணன் உட்பட அழிப்பது போல இந்த படத்தில் கர்ணன் கண்ணபிரான் எனும் அதிகாரியை வதம் செய்வது - அதிகார வர்க்கத்தை அழுத்தப்பட்ட வர்க்கம் கணக்கு தீர்ப்பது போல வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். நிச்சயம் இந்த படத்திற்கும் ஒரு விருது உண்டு தனுஷ் அவர்களுக்கு.
இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகம் பல மாநிலங்களில் பல கிராமங்களில் வாழ முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த படத்தில் யாரும் மது அருந்தவில்லை, குழந்தைகள், மற்றும் மனைவியை அடிக்கவில்லை. மோசமான வசனங்கள் இல்லை.
என்ன இருந்திருக்கலாம் ? ஹீரோ படித்தவனாக இருந்திருக்கலாம். கிராமத்தில் போராடி அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், சிறுதொழில் வாய்ப்புகள் என்று உருவாக்கித் தருபவனாக, அந்த கிராமத்தை 'ஸ்மார்ட் கிராமமாக' உருவாக்கும் ஒருவனாக சித்தரித்து இருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும் என்பது எனது ஆதங்கம்.
நிறைவாக மீண்டும் அற்புதமான நடிகர் தனுஷுக்கு எனது பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
. இன்னும் இது போன்ற நல்ல படங்களை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment