Wednesday, May 19, 2021

சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை

 சூப்பர் சிங்கர் செய்யும் இசைக்க(கொ)லை 

- பாலசாண்டில்யன் 

டிவி நியூஸ், டிவி சீரியல் பிடிக்காது என்பதால் சில நேரம் டிவி விவாதங்கள் (அதுவும் நல்ல பேச்சாளர்கள் இருந்தால் மட்டும்), நீயா நானா என்று பார்ப்பது வழக்கம். விடாது பார்ப்பது இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள். 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பல சீசன்களாக பார்த்து வருகிறேன். அதில் இருந்து வெளியே வந்துள்ள சாய் சரண், மாளவிகா, விக்ரம், ஸ்ரீகாந்த், பிரியங்கா, ஸ்ரீஷா, சத்யபிரகாஷ், பிரகதி, ஷிவாங்கி, மூக்குத்தி முருகன்  என்று பற்பல நல்ல திறமையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றாலும் இப்போது இரண்டொரு சீசன்களாக வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிச்சயம் ஒரு கேலிக்கூத்து தான். இசைக்கு செய்யும் பெரிய துரோகம் தான். நிச்சயம் சந்தேகம் இல்லை. 

மிகவும் வருந்தத்தக்க விஷயமே மிகவும் இசை ஞானம் மிக்க நடுவர்களாக வரும் திரு உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் போன்றோரின் நிலை தான். நிகழ்ச்சியில் வரும் மிமிக்ரி, நடனம், கெட்ட கெட்ட வசனம், கிறுக்கு ஜோக்குகள், சிறுபிள்ளை விளையாட்டுகள், நேரத்தை வீணடிக்கும் வெட்டிப் பேச்சுக்கள் என்று இசை தவிர எல்லாமே உண்டு இந்த நிகழ்ச்சியில். அவற்றை சகித்துக் கொண்டு இந்த நடுவர்கள் அமர்ந்து கொண்டு இருப்பது தான் மிகவும் கொடுமை. சில நேரம் இந்த அச்சுபிச்சு விளையாட்டுகளில் நடுவர்களையும் சேரச் சொல்லி அவர்களையும் கீழ் நிலைக்கு தள்ளுவது ...!!

தற்போது நடக்கும் சீசனில் மானசி, அபிலாஷ்,பரத், அனு, ஸ்ரீதர் சேனா என ஐந்தாறு திறமைசாலிகளின் பாடல் கேட்க இசைப் பிரியர்கள் வீணடிக்கும் (அல்லது வீணடிக்கப்படும் நேரம்) நேரம் இரண்டு எபிசோடுகள். எவ்வளவு நேர, பண, சக்தி விரயம்.

அதுவே ஓர் ஒப்பீடுக்கு என்றாவது - ஹிந்தி மொழி தெரியாவிட்டாலும், நீங்கள் ஓர் இசைப்பிரியர் என்றால் சோனி எண்டெர்டைன்மெண்ட் சானெலில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 9.30 க்கு 'இந்தியன் ஐடல்' வைத்துப் பாருங்கள். 

நடுவர்களாக இசை அமைப்பாளர்கள் திரு ஹிமேஷ் ரேஷமையா, திரு விஷால், பின்னணி பாடகி நேஹா கக்கர் மூவரும் எப்படி கண்ணியமாக, இசையை ரசிக்கிறார்கள், உண்மையாகப் பாராட்டுகிறார்கள், எப்படி போட்டியாளர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று கவனித்தே ஆகவேண்டும். 

அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் (உதித் நாராயணன் மகன்) ஆதித்ய நாராயண் எத்தனை நகைச்சுவையுடன், கவிதை ரசனையுடன், தேவையில்லா குறும்புகள் இல்லாமல் அழகாக செய்கிறார் என்று பார்த்தால் புரியும்.

அதில் வருகிற சிறப்பு விருந்தினர்கள் என்று பார்த்தால் நடிகர் தர்மேந்திரா, ஜிதேந்திரா, ஹேமமாலினி, நடிகை ரேகா, பிரபல இசை அமைப்பாளர்கள் ஏ ஆர் ரஹமான், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, அஜய் அதுல், ஜெயப்பிரதா, ஜாக்கி ஷ்ரோப் என்று மிகப்பெரிய நபர்கள் வருகிறார்கள். அவர்கள் அதில் பங்கு பெறும் ஒவ்வொருவரின் பின்னணி, மற்றும் அவர்களின் முந்தைய பாடல்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்கள். 

இயன்றவர்கள் பரிசு அளிக்கிறார்கள், சிலர் வாய்ப்பு அளிக்கிறார்கள், சிலர் பொன் பொருள் தருகிறார்கள்.

இங்கே சொல்லியே ஆக வேண்டியது பாடுகிற திறமைசாலிகள் - ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலங்களில் வந்தவர்கள். வெவ்வேறு மொழி பேசுபவர்கள். ஆனால் பாடுவது ஹிந்தி பாடல்கள். ஒவ்வொருவரின் பின்னணியும் மிகவும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு, சவாய் பாட் எனும் ஒரு இளைஞர் ராஜஸ்தானை சேர்ந்தவர். தெருவில் பொம்மலாட்டம் செய்து பாடிப் பிச்சை எடுத்து குடும்பத்தை காப்பாற்றுபவர். 

அருணிதா(மேற்கு வங்கம்), பவன் தீப் - ஹார்மோனியம், ட்ரம்ஸ், டோல் கி, பியானோ என்று சகலமும் வாசிக்கும் திறன் கொண்டவர் (உத்தராகண்ட்), ஷண்முகப்ரியா (ஆந்திரா), நேஹால், சாயலி, குல்கர்னி (மஹாராஷ்ட்ரா), மொஹம்மத் தானிஷ் (டில்லி), அஞ்சலி கைக்வாட் (ஹிந்துஸ்தானி இசை பாடுபவர்) என்று திறமையின் உச்சத்தை பெற்றவர்கள் அனைவருமே. இவர்களில் கடைசி 5 பேரை தேர்வு செய்வதே மிக கடினம். ஒவ்வொரு வாரமும் இவர்கள் அனைவரும் பைனல் நிகழ்வில் பாடுவது போல பாடுகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் இவர்களின் திறன் மேம்பட மிகவும் உழைக்கிறார்கள். இசையே இவர்களின் உயிர்நாடி என்று இருக்கும் இந்த இளைய தலைமுறை தான் அடுத்த பத்து ஆண்டுகள் நாம் கேட்க இருக்கும் பின்னணி குரல்கள் என்று சொல்லி விடலாம். அத்தனை திறமை வாய்ந்தவர்கள். இவர்களின் பாடல்கள் கேட்டாலே மனதின் பாரம் மற்றும் கவலை காற்றில் பஞ்சாகப் பறந்து விடும். இவர்கள் அனைவருக்குமே கந்தர்வ குரல் என்று சொல்லலாம். ஏற்கனவே சிலர் போட்டி நடந்து கொண்டிருக்கும் சமயத்தியிலேயே சில ஆல்பங்கள் பாடி விட்டார்கள். 

இசை நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் 'இந்தியன் ஐடல்' தான். நான் சற்றும் மிகைப்படுத்தவில்லை. நீங்களே நிகழ்ச்சியை கண்டு களித்து பிறகு சொல்லுங்கள். நிச்சயம் இந்த இளம் திறமையாளர்கள் பின்னாளில் தமிழ் மொழியிலும் பாடலாம் ஒரு உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், போல. 

உண்மையில் வடநாட்டு இளைஞர்கள் இசைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். இசையும் இருக்கட்டும், இல்லை என்றால் ஐடி வேலைக்கு போகலாம் என்றில்லை இவர்கள். தொடர்ந்து தம்மை மேம்படுத்தி உயர் தர இசையை தருகிறார்கள். இது தான் மிகைப்படுத்தாத உண்மை.

No comments:

Post a Comment