Sunday, May 16, 2021

இளைஞர்களின் மாறிவிட்ட பழக்கங்கள்

 இளைஞர்களின் மாறிவிட்ட பழக்கங்கள் 

- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல ஆலோசகர்)

கல்வியாண்டை கல்வி பயிலும் இளையவர்களை நினைத்தாலே மனம் கவலை கொள்ளுகிறது. 

கடந்த 14-15 மாதங்களாக பிள்ளைகள் (10 ஆம் வகுப்புக்கு கீழ்) பள்ளி செல்லவே இல்லை. கட்டிய கட்டணத்திற்கு ஏதோ ஒன்று இணைய வழி நடந்து கொண்டிருக்கிறது. எனினும், ஆசிரியர் மாணவர் இருவரின் நேரடி இன்டெராக்ஷன் எனப்படும் தொடர்பு நிச்சயம் இல்லை என்பதால், கற்பிக்கும் விஷயத்திலும் கற்கும் விஷயத்திலும் அதிகமான சவால்கள் உள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. யாரும் மறுக்கவும் முடியாது. 

பிள்ளைகள் இணைய வழியில் இணைந்து கொள்கிறார்கள். அதில் அவர்கள் ஆசிரியர்களை விட புத்திசாலி என்பதால், தனது வீடீயோவை ஆஃப் செய்து விட்டு, வேறு ஏதோ செய்கிறார்கள். 

அடுத்தடுத்து கொரோனா அலை 2,3, மற்றும் 4 என்று வரலாம் எனும் அச்சம் இருக்கும் போது பள்ளிகள் முழுமையாக எப்போது திறப்பார்களோ தெரியாது. சில பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகளாக வேறு மாறிவிட்டன. இந்த சூழலில் பிள்ளைகள் தமது கல்வியை நிச்சயம் தீவிரமாக தொடர வேண்டும். இல்லையேல் அவர்களின் கற்கும் திறன், மனப்பாங்கு, கற்கும் விருப்பம் எல்லாமே குறைந்து போகும். அது நிச்சயம் அபாயகரமானது. 

இதில் சில வகுப்புகள் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்று ஆகி விட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கிடைத்த வேலைக்கு போய் பணம் ஈட்ட தொடங்கி விட்டார்கள். இது அவர்களுக்கும் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் இந்த கடினமான சமயத்தில் என்றாலும், அவர்கள் இயல்பு நிலை திரும்பும் பொழுது வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்க வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியே !!

மேலும் பள்ளி இறுதி (+2) படிப்பவர்களின் எதிர்காலம் நிச்சயம் பெரிய கேள்விக்குறி தான். அவர்கள் மேற்கொண்டு படிக்க நினைக்கும் படிப்பில் சேர முடியுமா ? தெரியாது. தவிர, ஏற்கனவே படிப்பில் சேர்ந்து இருக்கும் இளங்கலை, முதுகலை, சட்டம், சி ஏ போன்ற தொழில்முறை படிப்புகள், இவற்றில் சேர்ந்துள்ள மாணவர்களின் நிலை இன்னும் கடினமாக உள்ளது.

கவலைக்குரிய விஷயமே, நிறைய வீடுகளில் பெற்றோர் இருவரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். பிள்ளைகளை கவனிக்க போதிய அவகாசம் அவர்களிடம் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் பொறுப்புடன் இல்லை. உறங்குவது, எழுவது, குளிப்பது, உண்பது, என்று அவர்கள் செய்யும் எல்லா வேலைகளின் (வேளைகளின்) நேரமே முற்றிலும் மாறி விட்டது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் மாறி விட்டன. 

பெரும்பாலும் மொபைல், டிவி, நண்பர்களுடன் சாட், அதிக நேரத் தூக்கம் என்று அவர்கள் ஆகி விட்டார்கள். அதிலும் சில பிள்ளைகள் வெளியூர் சென்று படிக்க சென்றார்கள். அங்கே கல்லூரிகள் மூடிய நிலையில் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார்கள். அவர்களின் பாடு இன்னும் திண்டாட்டம் என்று சொல்லவே தேவை இல்லை. 

உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, போதிய உறக்கம் என்று எல்லாமே கெட்டு மாறி விட்ட நிலையில் பிள்ளைகள் உள்ளபடியே நார்மல் என்று சொல்லக்கூடிய சாதாரண வழக்கத்திற்கு மீண்டும் திரும்ப படாத பாடு பட வேண்டி இருக்கும். 

படிப்பை முடிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு கடைசி செமஸ்டர் தேர்வு இன்னும் முடியவில்லை. வழக்கமான கேம்பஸ் நேர்முகங்கள் (வேலையில் சேர) நடைபெறவில்லை. நிறுவனங்களின் பொருளாதாரம் மிகவும் மந்தநிலையில் உள்ளதால் புதிய நபர்களை எந்த நிறுவனமும் வேலைக்கு எடுக்கத் தயாராக இல்லை. இருப்பவர்களுக்கே அவர்களால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. அப்படி என்றால் இந்த இளைஞர்களின் எதிர்காலம் என்ன ஆகும் ? பல பெற்றோரின் பிள்ளைகளின் கவலை இதுவாகத் தான் இருக்கிறது. இதற்கான தீர்வு யாரிடமும் இல்லை.

இந்த கொரோனா நோய் முழுமையாக குறைந்து விரட்டி அடிக்கப்பட்டாலே ஒழிய இந்த சிக்கல் தீராது. அது எப்போது என்பது அரசின் கையில் இல்லை. இயற்கையின் கையில் தான் உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பலர் விடுமுறைக்கு இந்தியா வந்து விட்டு திரும்ப முடியாத நிலை. வெளிநாட்டில் படிக்கச் சென்றவர்கள் படிப்பை முடித்த பிறகும் வீடு திரும்ப இயலா நிலை. இப்படி பல்வேறு சிக்கல்கள் தீர்வின்றி வரிசை கட்டி நிற்கின்றன.

இங்கே நிறைவாக சொல்லப்படும் கருத்து இதுவே : இளைஞர்கள் இந்த கிடைத்திருக்கும் நேரத்தில் புதிய பல விஷயங்களை, திறன்களை கற்றுக்கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். இயன்றால், இணையம் வழி படிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம். அதற்குரிய சரியான விஷயங்களை தேர்வு செய்து அதில் முனைப்புடன் இறங்கி செயல்பட்டால் எதிர்கால பயம் தேவை இருக்காது.  அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதே நிறைவுச் செய்தி.

No comments:

Post a Comment