Tuesday, January 27, 2015

இமைகள் போல் இருவர் (டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பு)

இமைகள் போல் இருவர் (டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ப்பு)
-டாக்டர் பாலசாண்டில்யன் 

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதிலும் பதின் பருவக் குழந்தைகள் எப்போதும் பெற்றோருக்குத் தருவது மன அழுத்தம் தான்

நாளுக்கு நாள் பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் விரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மாறி வரும் உணவு, உடை, ஊடகங்கள், நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஒட்டு மொத்த சமூகத்திற்கே ஒரு சவால் தான். கூடவே குடும்பத்தில் பெருகி வரும் வசதிகள், கல்வி எதிர்பார்ப்புகள், போட்டி மனப்பாங்கு, தொழில் நுட்ப மாற்றங்கள், சுற்றி நடக்கும் சம்பவங்கள் இவை அனைத்தும் பிள்ளை வளர்ப்பை தீர்மானிக்கின்றன.

என்ன என்ன சிக்கல்கள் பிள்ளைகள் தருவதாக பெற்றோர்கள் இன்று உணர்கிறார்கள் ? 1. இளமையில் காதல், தாமதமாக உறங்குதல், எழுதல், ஒவ்வாத உடை மற்றும் முடி அலங்காரங்கள் 2. ஊர் சுற்றி விட்டு தாமதமாக வீடு வருவது, கண்டதை தின்று விட்டு வீட்டு உணவு வேண்டாம் என்பது 3. மூத்தவர்களை அவமதிப்பது, மோசமான படப் பாடல்கள் பார்ப்பது அல்லது கேட்பது, அடிக்கடி பார்ட்டி அல்லது திரைப்படம் பார்க்க கூட்டமாக செல்வது, எப்போதும் அலைபேசி, டிவி, இன்டர்நெட் என இருப்பது. 4. குண்டாகி விடுவது, பொடுகு, பரு வரவழைத்துக் கொள்வது, அவை பற்றிப் பேசினால், கருத்து சொன்னால் கோபப்படுவது, 5. படிப்பில் கவனம் செலுத்தாமல் மதிப்பெண் சிக்கலில் தவிப்பது 6. பிரார்த்தனை மற்றும் வீட்டு சடங்குகளில் கலந்து கொள்வதில் வாதம் மற்றும் பிடிவாதம் 7. உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நிகழ்சிகளை சாக்குபோக்கு சொல்லி தவிர்ப்பது 8. அடிக்கடி பணம் கேட்பது, பணத்தின் மதிப்பு பற்றி சற்றும் புரிந்து கொள்ளாதிருத்தல், நண்பர்கள் போல இருக்க முயல்வது, அவர்களை வீட்டிற்கு கூட்டி வருவது 9. வீட்டை ஒரு விருந்தினர் இல்லமாக பாவிப்பது, எந்த உதவியோ ஒத்துழைப்போ வழங்காமல் இருப்பது 10. எல்லாவற்றையும் தேடிக் கொண்டே இருப்பது, கழிவறைகளில் அதிக நேரம், கண்ணாடி முன் அதிக நேரம், பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது என்று இந்தப் பட்டியல் நீளுகிறது.
இவர்களை எப்படி சமாளிக்கலாம் ?. 1. பெற்றோர் தான் சிறந்த முன் உதாரணம் என்பதால் நாம் வீட்டிலும் வெளியிலும் எப்படி நடந்து கொள்கிறோம் என்று முழுமையாக உணர்தல் அவசியம். 2. இனம் புரியாத கோபம், கெட்ட சகவாசம், கெட்ட பழக்கம், தனிமை விரும்புவது இவற்றை உற்று நோக்கி கவனித்து அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சித்தலின் அவசியம். 3. நண்பரைப் போல் அடிக்கடி பேசி நேரம் செலவு செய்து புரிந்து கொள்ளுதல், தொண தொணக்காதிருத்தல், அவர்கள் நட்பை மதித்தல் மிக முக்கியம். 4. எளிதில் பேசி விடும் பெண் பிள்ளைகளை விட யோசித்து அல்லது கடிந்து பேசும் ஆண் பிள்ளைகள் சற்று கடினமானவர்கள் என்பதை மனதில் கொள்ளல் 5. மாறிக் கொண்டு இருக்கும் வானிலை போல இவர்கள் மனநிலையும் மாறும். அப்போது விவாதம் செய்யும் சூழல் வீட்டில் ஏற்படும். அத்தருணம் பொறுமை கடைபிடிக்கும் பெற்றோர் வெற்றி பெறுகிறார்கள்


பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது என்ன ?
1. யார் நடத்தையையும் சட்டென்று மாற்ற முடியாது. சிறு வயது முதலே இருக்கும் மனப்பாங்கை தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல தீடிர் என மாற்ற முயற்சிப்பது இயலாத ஒன்று. 2. அடிக்கடி கத்துவது, கோபப்படுவது, திட்டுவது, மிரட்டுவது, சொந்த விஷயத்தில் தலையிடுவது நல்லதல்ல. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இவை நினைவில் இருக்கட்டும்.
3. இலக்குகள் நிர்ணயம் செய்வதில் கண்டு கொள்ளாதிருத்தல் தவறு.
4. அவர்களுக்கு இணையாக இக்கால பாடல்கள், நடிகர்கள் பற்றிய தகவல் அறிவு அவசியமில்லை என நினைப்பது, மொபைல், முகநூல், புதிய சமையல் குறிப்புகள் பற்றி சற்றும் விருப்பம் காட்டாதிருத்தல் தவறு. 5. அவர்கள் 'அவர்கள்' தான். 'நாம்' அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முயற்சிக்காமை 

நமது குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள் என நம்புதல் நன்மை தரும். அவர்கள் இடத்தில நம்மை வைத்துப் பார்த்தல் நிச்சயம் நல்லது. அவர்களைப் சந்தேகப்படாதிருத்தல், பொறுப்புகளை பகிர்ந்து அளித்து காத்திருத்தல், வீட்டு முடிவுகளில் அவர்களை ஆலோசித்தல், அவர்களின் நவீன சிந்தனைகளை பாராட்டுதல், குறிப்பாக அவர்களின் நண்பர்களை மதித்தல் பல நேரங்களில் நல்ல உறவுமுறையை ஏற்படுத்தும்


இன்றைய பெற்றோர்கள் பழைய பஞ்சாங்கமாக இருத்தல்எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தல், தமது கனவுகளை குழந்தைகளின் மீது திணித்தல், இதர பிள்ளைகளோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தல், ஒழுக்கம் என்ற பெயரில் மிலிடரி போல நடந்து கொள்ளுதல், வளர்ந்து விட்டார்கள் என்பதை மறந்து கை நீட்டுதல், உறவினரிடம் மற்றும் நண்பர்களிடம் குற்றப் பத்திரிகை வாசித்தல், எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்டல், அவர்கள் முன்பு சண்டை போட்டுக் கொள்ளுதல், - இவை அனைத்தும் மாற்றிக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இது இரு கோடிட்ட வரிகள் என்று நினைத்துப் படிக்கவும். நம் குழந்தைகளுக்கு பிடித்த நண்பர்கள், உடைகள், உணவு வகைகள், நடிகர்கள், நடிகைகள், டிவி சானல்கள், அவர்கள் கேட்கும் பாடல்கள், பொழுதுபோக்கு, அவர்கள் படிக்க நினைக்கும் படிப்பு, செல்ல நினைக்கும் இடங்கள், புதிய திறமைகள், கனவுகள் பற்றி எல்லாம் கேலி செய்யாது இருத்தல் இன்றைய பெற்றோரின் தலையாய செயல்பாடு எனலாம்.


No comments:

Post a Comment