Thursday, March 1, 2018

சிந்திக்க சில நொடி

சிந்திக்க சில நொடி 

- டாக்டர் பாலசாண்டில்யன்
(மனநல ஆலோசகர்)

கணினி வந்த பொழுது எல்லோருக்கும் வேலை போய் விடும் என்று பயந்து போனோம். ஆனால் இன்று கணினி முன்னால் தான் அமர்ந்திருக்கிறோம். அல்லது உள்ளங்கையில் கணினியை வைத்திருக்கிறோம்.
எல்லா வங்கிகளையும் இணைத்து கோர் பாங்கிங் செய்த பொழுது எல்லோரும் கிளர்ந்து எழுந்தனர். பிறகு இன்று அந்த வசதியை எல்லோரும் பயன்படுத்துகிறோம்.
WiFi வந்தவுடன் ப்ரொவ்சிங் சென்டர் எல்லாம் படுத்து விடும் என்று தான் நினைத்தோம். அப்படி ஒன்றும் பெரிதாக நிகழவில்லை
கால் டாக்ஸி வந்தால் மற்ற நபர்களுக்கு தொழில் போகும் என்று ஒரு புறம் மக்கள் கூறினாலும் எல்லோரும் காரில் ஆட்டோவில் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள்
பர்கர், பிஸ்ஸா வந்தால் இட்லி வடை பொங்கல் விற்காது என்று ஒரு சிலர் சொன்னாலும், எல்லாரும் எல்லாம் சாப்பிடுகிறார்கள்
மால் வந்துவிட்டால் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் குறைந்து விடும் என்றனர். இருப்பினும் எல்லா இடங்களிலும் கூட்டம் தான்.
ATM மற்றும் மொபைல் ஆப் வந்து விட்டால் யாரும் பாங்க் பக்கம் போக மாட்டார்கள் என்று சொன்னவர்கள் இருந்தாலும் நாம் பணம் போட பணம் போட வங்கி செல்கிறோம்.
கார்கள் அதிகமாகும் பொழுது பெட்ரோல் டீசல் தேவை. வீடுகள் மக்கள் தொகை பெருகும் பொழுது நமக்கு மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு தேவை.
நிலக்கரி, தங்கம், வைரம், பெட்ரோல், டீசல், தண்ணீர் எல்லாமே நிலம் தரும் வரம். அவை குறைந்து கொண்டே வரும் பொழுது அதற்கேற்ற மாற்று விஷயங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. நாமும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
அதன் விளைவு தான் சோலார் பவர், அணு சக்தி, ஜெனெரேட்டர், இன்வெர்டர், பேக்கிங் தண்ணீர் போன்ற விஷயங்கள். இன்னும் மாற்றங்கள் வரும். நாம் அதற்கேற்ப மாற வேண்டும். நமது பிள்ளைகளுக்கு இன்னும் கடினமான வாழ்க்கை காத்திருக்கிறது.
எப்படிப்பட்ட உலகை நாம் விட்டுப் போகப் போகிறோம். எப்படிப்பட்ட அடுத்த தலைமுறை மக்களை நாம் விட்டு விட்டு போகிறோம் என்று இரண்டையும் தான் பார்க்க வேண்டும்.
உலக வெப்பமயம் ஆதல், உணவு தட்டுப்பாடு, நீர் தட்டுப்பாடு, காற்று மாசுப்படுத்தல், மனித குலத்தின் நீழ்ச்சி (மருத்துவ முன்னேற்றம் தருவதால்), என்று சவால்கள் நிறைந்த உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும், எதிர்ப்பும், ஏற்பும் ஒரே சமயத்தில் நடைபெறாவிட்டாலும், சில காலம் கழித்து நிலை மாறும். நாமும் இருந்து தானே ஆக வேண்டும். மாறினால் வளர்ச்சி என்று பார்க்கலாம். மாறினால் வீழ்ச்சி என்றும் பார்க்கலாம்.
அறிவியல் ஆக்கமும் தரும். அழிவும் தரும். நம்மை பொருத்தும் அது மாறும். நெடுவாசல் மாறலாம், நரிமணம் மாறலாம். வீடுவாசல் தப்பிக்க என்ன செய்ய ..! தொடர்ந்து சிந்திப்போம். போராட்டங்களை விட தொடர் சிந்தனைப் போராட்டங்கள் நிறைய தீர்வுகளை நமக்கு எடுத்து முன்வைக்கும். அறிஞர்களை அரசும் மக்கள் இயக்கமும் நாட வேண்டும். அவர்களை நம்ப வேண்டும்.
அரசனை விட மதிமந்திரி (சாணக்கியர்கள்) இன்று மிக முக்கியம். நல்ல வழி பிறக்கட்டும். நம்புவோம்.
சரியாக வரும் வராது என்பது யூகம், எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு.
சரியாக வரும் என்பது சில சமயம் பின்னாளில் அனுபவம், நல்நினைவு (மெமரி), மற்றும் நம்பிக்கை ஆக மாறும். அந்த நம்பிக்கை பற்றித் தான் இங்கே சொல்ல நினைக்கிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை.

No comments:

Post a Comment