Tuesday, May 8, 2018

விடை தருவார் யாரோ?

நாமென்ன ஒட்டு வங்கி மட்டுந்தானா ? (விடை தருவார் யாரோ?)

ஏன் இப்படி நடக்கிறது? நம்மை சாதியாலும் மதத்தாலும் பிரிக்க நினைக்கும் நாடகம் தினம் தினம் அரங்கேறுகிறது. பேசும் எல்லாவற்றிலும் மதங்கள், இனங்கள், பிரிவினைகள் பற்றியே இருக்கின்றனவே. நினைத்தாலும் புரியவில்லை இவர்கள் நோக்கம். நெடுநாட்களாக நமக்கு சொல்லித் தரப்பட்டவை இவை தானா ? யார் சொல்லி இப்படி நடக்கிறது? யாருடைய உள்நோக்கம் இது? ஒரு வினாடி நின்று நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். 

கிறித்துவர்கள் அனைவருமே மத மாற்றம் செய்ய வந்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோருமே கெடுதல் செய்பவர்கள், ஹிந்துக்கள் எல்லோரும் நாட்டை உலகை ஆளப் புறப்பட்டு விட்டார்கள்? எங்கிருந்து கிளம்பியது இந்த சித்தாந்தங்கள்? கிளப்பி விடக்கூட ஓர் அளவு வேண்டும் அல்லவா ?

எப்போது கடைசியாக ஓர் அரசியல்வாதி மிகவும் நாகரீகமாக பேசியுள்ளார்? நினைவில் உள்ளதா? நமது வேலை, விவசாயிகள், பொருளாதர வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை, நீராதாரம், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, மக்களின் சிரமங்கள் பற்றி? நமது அமைச்சர்கள், முதல்வர்கள், அதிகாரிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டு இருக்கும் நிலையை  தானே நாம் தினம் தினம் வேடிக்கை பார்க்கிறோம்?

அன்றாடம்  வங்கிகள் பணம் இழந்த கதை, தொழிலதிபர்கள் ஓடிப் போன கதை படிக்கிறோம். யாருடைய பணம் அது ? நமது தானே? உண்மையான கவலை உள்ள ஒருவரை காண முடிகிறதா?

அரசாங்கம் நமக்கு தர வேண்டியது கல்வி, மருத்துவம், சுத்தமான நீர் மற்றும் உணவு. யார் இவற்றைப் பற்றி பேசுகிறார்கள்? யார் கவலைப் படுகிறார்கள்? மிகப் பெரிய செல்வந்தருக்கு கூட நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல குடிநீர், சுத்தமான காற்று இல்லை. இது தான் இன்றைய நிலை. இது மிகைப்படுத்தப் பட்ட விஷயம் இல்லை. உண்மை. யதார்த்தம். ஆனால் தினந்தோறும்  ஊடகங்களில் பேசப்படுவது நமது வித்தியாசங்கள், பிரிவினை, மக்கள் செய்யும் போராட்டங்கள், ஏமாற்று விளையாட்டுகள், நடிகர் நடிகையர் விஷமங்கள்  பற்றித் தான். 

மழையை மழையாக யார் பார்த்தார்கள்? காட்டை மரத்தை இயற்கையை யார் கவனித்தார்கள்? சிலைகளுக்கு மாலைகள், பேசி வைத்தவர்களுக்கு விருதுகள் என்று ஒருபுறம், வரி கட்டினாலும், சட்டங்களுக்கு கட்டுப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும் மனிதனை மனிதனாக இங்கே யார் பார்க்கிறார்கள்? ஒட்டு அடிப்படை எண்ணிக்கையாக தான் பார்க்கிறார்கள்? ஓட்டளிக்க சொல்லி வாட்ஸ் அப் செய்திகள், காகித மடல்கள், சுவரொட்டிகள், தொலைபேசி அழைப்புகள்  எல்லாம் வருகிறதே!

இவர்கள் பேச்சை எப்போது நாம் புறந்தள்ளப் போகிறோம்? நமது மத இன உணர்வை வியாபாரமாக மாற்றும் இவர்களை நாம் ஒதுக்கி வைக்க முடியுமா? காற்று மற்றும் நீர் மாசுபடுதல், நீராதாரங்கள் அழிக்கப் படுதல், மணற்கொள்ளைகள், தனிநபர் சொத்து பறிப்பு, முறையற்ற கல்வி வழங்கப்படுதல், கலப்படம், கற்பழிப்பு, கொலை, இவற்றை எப்போது குறைக்கப் போகிறார்கள்? 

இறக்கும் குழந்தைகள், வேலை இல்லா இளைஞர்கள், ஏமாற்றும் நிறுவனங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்கள், கல்வி மற்றும் மருத்துவத்தில் வணிகம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராம மக்கள், அடுத்த சந்ததியர் படவிருக்கும் மத இன சிக்கல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல்கள், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் சுரண்டல்கள், இவற்றை பற்றி நோக்காமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் மட்டுமா இவர்கள் வேலை?

விழித்து எழும் வேளை வந்து விட்டது. நம்மை நாமே உணர்ந்து புரிந்து கொள்ள...நாம் ஒன்றும் வெறும் ஓட்டுச்சீட்டு அல்ல. ஒட்டுமொத்த தேசமே நாம் தான். நமக்காக தான் இவர்கள். நம்மால் தான் இவர்கள். நாற்காலி ஏறும் முன்பு ஒரு பேச்சு, ஏறிய பிறகு வேறு பார்வை, பேச்சு இதற்கு வைக்க வேண்டும் முற்றுப்புள்ளி. இவை எல்லாம் சரியானால் தேசம் நமக்கு. இல்லையேல் சேதம் நமக்கு. யார் செய்யப் போகிறார்கள் இதற்கு வைத்தியம்? யார் தரப்போகிறார்கள் இதற்கு தீர்வு? யார் வந்து இதனை சீர்செய்யப் போகிறார்கள்? கேள்விகள் பல உண்டு. விடைகள் தான் இல்லை இங்கு. 

No comments:

Post a Comment