Thursday, May 10, 2018

என்னைப் போலவே என் மாணவர்கள்

என்னைப் போலவே என் மாணவர்கள் 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
(மனநல/கல்வி/தொழில்  ஆலோசகர், மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர்)

அது 1987 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் வேலை பார்த்து விட்டு, ஓராண்டு மஸ்கட்டில் வேலை பார்த்து விட்டு சென்னை திரும்பி விட்டேன். நான்கைந்து மாதங்கள் வேலை எதுவும் கிடைக்கவில்லை. திரும்பவும் மும்பை அல்லது வெளிநாடு செல்லலாமா என்று குழம்பித் திரிந்த பொழுது இண்டோ இன்டெர்நேஷனல் எனும் தோலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் வேலை கிடைத்தது. அப்போது இளங்கலை படிப்பிற்கு பிறகு ஐந்து பட்டயங்கள் பெற்று இருந்தேன். ஹிந்தி நன்றாக பேசத் தெரியும்.

இரவு பகலாக உழைத்தேன். அடிமட்ட உழைப்பாளி தோழனிடம் கூட வேலை கற்றுக் கொண்டேன். பிறகு தைக்கத் தெரியாது. மற்றபடி பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு தோலை எடுத்து முகர்ந்து பார்த்தாலே அது ஷீப் அல்லது கோட் அல்லது கௌ லெதர் என்று சொல்லி விடும் அளவிற்கு தேர்ந்து போனேன். இரண்டே வருடங்களில் பேக்டரி மேனேஜர் ஆனேன். பிறகு ஹெட் ஆபீஸில் அமர்ந்து நான்கு பேக்டரிகளை மேனேஜ் செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். நல்ல பல தொடர்புகள் ஏற்பட்டது. வெளிநாடுகள் சென்று வந்தேன். அதற்குள் மேலும் நான்கு பட்டய படிப்புகள் முடித்தேன். 

பத்து ஆண்டுகள் நிறைவு. பிறகு 1997 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் அப் லெதர் ப்ராடக்ட்ஸ் எனும் தொழிற்கல்வி நிறுவனத்தின் செயல் இயக்குனராக சேர்ந்தேன். அங்கே 2007 ஆண்டு வரை பணியாற்றினேன். கிட்டத்தட்ட பத்தரை ஆண்டுகள். அங்கே காலணி, தோலாடை மற்றும் தோல் பொருட்கள் என்று மூன்று பிரிவிலும் சான்றிதழ், பட்டயம், மற்றும் பிஜி டிப்ளமோ படிப்பு இருந்தது. ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 300 கும் மேற்பட்டவர்கள் படித்து முடித்து பணிக்கு சென்றார்கள்.  ஆண்டுக்கு இருமுறை அட்மிஷன் செய்தோம். 

தவிர எங்கள் பயிற்சி நிறுவனம் குறித்து பல தனியார் தொலைக்காட்சிகளில் எனது பேட்டி வந்தது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, மற்றும் மைனாரிட்டி வகுப்பை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து இலவசமாக பயிற்சி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு என்று 5000 மாணவர்களுக்கு மேல் பயன்பெற்றார்கள். மேலும் சுய உதவிக் குழு பெண்கள், ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்கள், சாலைகளில் பங்க் கடை வைத்து காலணி தைப்பவர்கள் 150 பேருக்கும் மேலாக எங்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பலன் பெற்றார்கள். தோலாடை பற்றி முதன்முதலாக நூல் எழுதி வெளியிட்ட பெருமை எனக்கு கிடைத்தது.

இந்த கதை ஒரு புறம் இருக்கட்டும். 

2008 ஆம் ஆண்டு விஷன் அன்லிமிடெட் என்ற மனிதவள பயிற்சி நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்து ஒன்றரை லட்சம் பேருக்கு மேலாக பயிற்சி அளிக்கும் வாய்ப்பினை பெற்றேன். இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளேன். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்துள்ளேன். அரசு ஊழியர்கள், நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், நிறுவன அதிபர்கள், மேலாளர்கள், வங்கி அதிகாரிகள் என்று நான் சந்திக்காத துறை கிடையாது. ஆனால் தோல் துறையில் 20 ஆண்டுகள் பணி செய்த பிறகும் ஓரிரு நிறுவனங்கள் தவிர வேறு எந்த தோல் துறை சார்ந்த நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளவில்லை. அவர்களுக்கு பயிற்சியும் தரவில்லை. இப்படித்தான் என்னிடம் பயின்ற மாணவர்களும் என்பதை பின்னாளில் அறிந்த பொழுது ஆச்சரியம் கொண்டேன். 

பல சம்பவங்கள் இருந்தாலும் மூன்று நிகழ்வுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

ஒரு முறை விருகம்பாக்கத்தில் எனது நண்பர் முனைவர் தென்காசி கணேசன் அவர்களின் இல்லம் செல்ல வேண்டும். நான் சென்ற ஓலா வண்டி என்னை எங்கோ தவறுதலாக வேறு தெருவில் இறக்கி விட்டு சென்று விட்டார். அங்கே குடிநீர் சப்ளை செய்யும் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வந்தார். சார் நீங்க இங்கே யாரைத் தேடுகிறீர்கள் என்றார். நான் விவரம் சொன்னேன். ஏறுங்கள் வண்டியில், நான் உங்களிடம் பயின்ற மாணவன், என்று  இரண்டு தெரு தள்ளி இருக்கும் விலாசத்தில் கொண்டு போய் இறக்கும் பொழுது சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனக்கு அவரை நினைவில் இல்லை. 

அடுத்த சம்பவம் அதை விட ஆச்சரியம். என் மகள் ஒரு முறை பீச் சென்ற பொழுது தனது பர்ஸை தொலைத்து விட்டார். தெரியாத நபர் ஒருவர் எனக்கு போன் செய்து உங்கள் மகளின் ஆதார் கார்ட், லைசன்ஸ், போன்ற டாக்குமெண்ட்ஸ் என்னிடம் உள்ளது. நீங்கள் டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பேசியவர் சற்று கறாராக பேசினார். நானும் அங்கே போய் காத்துக் கிடந்தேன். ஆட்டோ ஒன்று வந்து யு டர்ன் போட்டு நின்றது. இறங்கியவர் என்னைக் கண்டு ஆச்சரியத்தோடு இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு, "சார் உங்க பொண்ணுடையதா?" என்றார். நான் ரொம்ப வெகுளியாக உங்களுக்கு என்னை முன்பே தெரியுமா என்று கேட்டேன். அவர் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சார் நான் உங்கள் ஐஐஎல்பி மாணவர். நல்லா இருக்கீங்களா என்று எனது காலைத் தொட வந்தார். நான் தடுத்து நிறுத்தினேன். நான் அவருக்கு கொடுத்த பெட்ரோல் செலவு பணத்தை வாங்க மறுத்தார். பிறகு அவர் சட்டைபையில் பணத்தை போட்டு விட்டு தாங்க்யூ சொன்னேன். 

இன்று நடந்ததும் சற்று ஆச்சரியம் தான். தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ள 2017 ஆண்டு பிரசுரம் செய்துள்ள நூல்களுக்கு பரிசு எனும் திட்டத்தின் படி விண்ணப்பம், வரைவோலை, மற்றும் நூலின் பத்து பிரதிகள் கொடுக்க தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் சென்றேன். முதலில் ஒரு அதிகாரியை சந்தித்தேன். அவர் ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்து விட்டு அங்கே அமர்ந்து இருக்கும் ஒருவரின் பெயர் சொல்லி அவரிடம் இந்த நூல்களையும் விண்ணப்பத்தையும் கொடுத்து விடுங்கள் என்றார். நான் அவர் சீட்டை தேடிச் சென்றேன். என்னை ஒரு முறை இரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு எழுந்து நின்று வணக்கம் சொன்னார். உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று கேட்டேன் வழக்கம் போல. அவர் புன்னகையுடன் சார் நான் உங்கள் மாணவன் ஐஐஎல்பி நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு படித்தேன். இங்கே மூன்று ஆண்டுகளாக பணியாற்றுகிறேன் என்றார். என்ன ஆச்சரியம். மன்னிக்கவும் எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லை என்றேன். அவர் நன்றாக வளர்ந்து நடிகர் விஜயசேதுபதி போல இருந்தார்.

என்னைப் போலத்தான் எனது மாணவர்களும். ஒருவரும் தான் படித்த லெதர் துறையில் இல்லை. எங்கெங்கோ பணியாற்றி வாழ்க்கையை வெற்றிகரகமாக நடத்தி வருகிறார்கள். (லெதர் துறை சரியாக வாய்ப்புகள் மற்றும் வருமானம் தரவில்லை என்பதும் ஒரு காரணம்). உங்கள் மாணவர் என்று சொல்லும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு விதத்தில் ஒரு சிறு மாற்றம் என்னால் அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் பொழுது மனநிறைவு ஏற்படுகிறது. எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லா வளங்களும் பெற்று இன்பமாக இருக்கட்டும். இதுவே எனது பிரார்த்தனை. 

No comments:

Post a Comment