Sunday, May 13, 2018

எச்சரிக்கை மணி




எச்சரிக்கை மணி 
- டாக்டர் பாலசாண்டில்யன் 
தொழில் ஆலோசகர் - CEO www.visionunlimited.in
Thought Leader/Transformation Coach/Psychologist/Leading Behavioral Catalyst

ஆட்டோமேஷன் என்று சொல்லக்கூடிய இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் வேகம் சற்று குறைவு தான் என்றே சொல்ல இயலாது. சூடு பிடித்து விட்டது எனும் இந்த எச்சரிக்கை மணியை நான் தயங்காமல் அடிக்க விரும்புகிறேன்.
முழுமையாக துணி தோய்த்து தரும் வாஷிங் மெஷின், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மால்களில் இயங்கும் எஸ்கலேட்டர், வங்கிகளில் பணம் எண்ணும் இயந்திரம், மற்றும் பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரம், பணம் பெறும் இயந்திரம், பார் கோட் பில்லிங் இயந்திரம், இப்படி ஏற்கனவே நாம் காண்கின்ற அல்லது பயன்படுத்துகின்ற இயந்திரங்களைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை.
பல தொழிற்சாலைகளில் மூளையை அதிகம் பயன்படுத்தாத ரொட்டின் (routine) என்று சொல்லக்கூடிய வழக்கமான செயலப்பாடுகளை மனிதர்கள் செய்கிறார்கள் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை. அங்கே ரோபோ என்று சொல்லக்கூடிய தானியங்கி இயந்திரங்களின் பயன்பாடு இன்று அதிகமாகி வருகிறது.
இதன் காரணமாக பல பன்னாட்டு உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹெல்பர் என்று சொல்லக்கூடிய உதவியாளர்களுக்கு வேலை போய் விட்டது. அங்கே ஒரு ரோபோ வந்து அதிவேகமாக அற்புதமாக அசுரத்தனமாக வேலை செய்கிறது. அதிக உற்பத்தி, உற்பத்தித்திறன், சீரான தரம், செலவுக் கட்டுப்பாடு, லாபம் இவற்றை முன்வைத்து இந்த நடவடிக்கைகளில் நிறுவனங்கள் சில முடிவுகளை எடுக்கின்றன.
கிட்டத்தட்ட 1200 கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு ரோபோவை ஒரு இந்திய தனியார் வங்கி அறிமுகம் செய்து உள்ளது. இதனைப் பார்க்கும் பொழுது உற்பத்தி துறை தவிர வணிகம் மற்றும் சேவை துறைகளிலும் இந்திரமயமாக்கல் அதிவேகமாக பரவி வருகிறது என உணரலாம்.
தவிர 'டிஜிட்டல் இரா' எனும் இந்த நவீன யுகத்தில் கண்ணுக்கு புலப்படாத போட்டியும் நிலவுகிறது. நிகான் கேனோன் போன்ற கேமரா நிறுவனங்களுக்கு போட்டி சாம்சங் மற்றும் விவோ மொபைல் போன்கள் எனலாம். எச்எம்வி மற்றும் சோனி நிறுவனங்களை விட அதிகமாக இசையை விற்பது ஏர்டெல் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் தான் என்று எனது நண்பர் முனைவர் மேகநாதன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
இந்த நிலை பல்வேறு இடங்களில் நடக்கலாம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது துணிமணிகள் விற்கும் ஒரு மால் ஆக இருக்கலாம். வாடிக்கையாளர்களோடு அளவளாவி வணிகம் பெருக்கும் ஒரு விற்பனையாளருக்கு பதில் வெறுமனே அவர்களின் சந்தேகங்களுக்கு மட்டும் விடை அளிக்கும் ஒரு கஸ்டமர் கேர் மனிதர் மட்டுமே அங்கு இருக்கிறார் என்றால் அங்கே மனிதர்கள் தேவை இல்லை என்ற ஒரு நிலை உருவாகி வருகிறது. அப்போது இன்று இருப்பது போல பிரம்மாண்டமான துணிக்கடைகளில் அதிகம் படிக்காத பல சேல்ஸ்மேன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை இழக்க நேரிடும் என்ற ஒரு கணிப்பு உருவாகி உள்ளது. அவர்கள் வேறு சில திறன்களை வளர்த்துக் கொண்டால் பிழைத்தார்கள்.
மேலும் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களே இதற்கு சாட்சி.
பண பரிவர்த்தனை செய்ய மக்கள் இன்று வங்கிகளுக்கு செல்லுவதற்கு பதில் மொபைல் ஆப் பலவற்றின் வாயிலாக அதனை செய்கிறார்கள் என்பது யாவருமே அறிந்தது தான்.
குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் துப்பு துலக்க நாய்களுக்கு பதில் பெரும்பாலும் சிசிடிவி காமெராக்கள், மொபைல் ஆடியோ மற்றும் விடீயோக்கள் தான் பயன்படுகின்றன.
ஹோட்டல்களில் உணவு கொண்டு வந்து மேசையில் பரிமாற இனி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் (ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளது போல) பயன்பாட்டில் விரைவில் வரும். அப்போது உணவு சப்ளையர்கள் பலருக்கு வேலை போய் விடும் என்பது ஏற்க கடினமான ஒன்று என்றாலும் உண்மை நிலை அது தான். பெட்ரோல் பங்கில் கூட பணியாளர்கள் வேலை இழக்கலாம்.
துணிக்கடைகளில் ட்ரையல் ரூம் செல்ல வேண்டாம் எனும் தொழில்நுட்பம் அதிவேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட கேமெராக்கள் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட ஆடையில் எப்படி இருப்போம் என்று பட்டனை அழுத்தினால் தெரிந்து விடும். போட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஓகே பட்டனை அழுத்தினால் அந்த துணி தானாகவே கேஷ் கவுண்டருக்கு சென்று விடும். இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் வந்து விட்டால் பலருக்கு வேலை போய் விடும்.
அயல்நாடுகளில் பிள்ளைகளுடன் செல்ல ரோபோ குரு உருவாக்கி உள்ளார்கள். இது மாணவர்களோடு பள்ளி சென்று எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. அங்கே ஒரு படி மேலே சென்று மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை அன்று பள்ளி செல்ல முடியவில்லை எனும் சூழலில் அவர்களுக்கு பதில் இந்த ரோபோ குரு பள்ளி செல்லும் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் வெகு விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோ குரு வரலாம். பள்ளி மேற்படிப்பு, மற்றும் கல்லூரி மேற்படிப்பு, திறன் மேம்பாடு இவற்றிற்கு மட்டும் ஆசிரியர்கள் இருப்பார்கள். மற்ற இடங்களில் அங்கே இயந்திரம் வந்து விடும் எனும் அபாயம் உருவாகி வருகிறது. நிறைய பாட்டு வாத்தியார்கள் இன்று ஸ்கைப் மூலம் பல வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இயந்திர காதலிகள், காதலர்கள், சமைக்கும் ரோபோக்கள், என்று கூட அயல்நாடுகளில் முயற்சி செய்யத் தொடங்கி விட்டார்கள். இங்கு அவை எல்லாம் வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி விட முடியாது.
கையில் அணியும் வாட்ச் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, எவ்வளவு நடந்து இருக்கிறோம், எத்தனை கலோரி செலவு ஆகி உள்ளது, போன் பேசுதல், போட்டோ எடுத்தல், உடலில் உள்ள நோய் அறிகுறிகள் எல்லாமே தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. அப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் பல இயந்திரங்கள், கருவிகள் இவை எல்லாம் பயனற்று போய் விடும் நிலை உருவாகி வருகிறது. சில கருவிகளை இயக்கம் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.
ஐபிஎல் பார்க்கிறோம். முன் போல ஒரு கபில்தேவ், ரவி சாஸ்திரி இவர்கள் மட்டுமா ஆல்ரௌண்டர்கள் ? ரெய்னா, ஜடேஜா, பிராவோ, என்று ஒவ்வொருவரும் ஆல்ரௌண்டர்கள் தான். பன்முகத்தன்மை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறார்கள்.
இங்கே பலருக்கு வேலை போய் விடும் எனும் எச்சரிக்கை மணி இந்த கட்டுரை என்று கொள்ள வேண்டாம். பழையன கழிந்து புதியன புகுகின்ற நேரம் என்று கொள்ள வேண்டும். அதாவது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் திறன் இனி பயனற்று போகும். புதிய திறன்களை அறிய வேண்டி வரும். நாம் செய்யும் தற்போதைய வேலைக்கு பதில் புதிய வேலை செய்யும் நிலை உருவாகும்.
ஏற்கனவே மனிதர்கள் செய்யும் கைமுறை வேலைகள் பலவற்றை இன்று கருவிகள் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாளுக்கு நாள் மேலும் இயந்திரமாக்கும் சூழல் உருவாகும் பொழுது நாம் அந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது.
வாக்கிய அமைப்பு, இலக்கணம் இவற்றிற்கு எப்படி கணினி உதவுகிறதோ, போட்டோக்கள் மற்றும் எக்ஸ்ரே இவை ஈரத்தை காய வைக்காமல் உடனே கணினி மூலம் பிரிண்ட் ஆகி வருகிறதோ, திரைப்படப் பாட்டுகள் இசை அமைப்பதில், அசுரவேக பிரின்டிங் என்று பலதுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிடும் இந்த சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளை தேர்வு செய்து படித்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு இருக்கின்ற படிப்பை படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் புதிய மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டால் அவர்கள் வேலை பிழைக்கும். இல்லையேல் நோக்கியா போன்ற நிறுவனங்களில் திடீர் என்று வேலை போனது போல பலருக்கு நேரிடலாம். அதனைத் தவிர்க்க அன்றாடம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எச்சரிக்கை மணி.
ரெடிமேடாக காம்பௌண்ட் சுவர்கள் கூட தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விட்ட இந்த தருணம், குறைந்த பட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன் கொண்டிருத்தல் வேண்டும். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல் இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளுதல் தான் இதற்கு முக்கிய தீர்வு.
இயந்திரமயமாக்கல் ஒரு புறம் வேகமாக பரவி வந்தாலும், சிந்திக்கும் செயல்படுத்தும் பணிகள் எப்போதும் மனிதர்களே செய்வர். ஆகவே சிந்திக்கும் புதிய யுக்திகளை செயல்படுத்தும் நுட்பமான மனிதர்களாக நாமும் மாறுவோம். மாற்றத்தோடு வேகமாக நாமும் மாறுவோம். மாற்றம் தான் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுவோம்.
செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் மிக அதிகமாக ஒவ்வொரு துறையிலும் நுழையக் காத்திருக்கும் மிக முக்கிய தருணம் இது. இதில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்பது மிகவும் பொருத்தமான வரி தான்.


No comments:

Post a Comment