Tuesday, May 8, 2018

கைபேசி விதவை ஆகலாமா?

கைபேசி விதவை ஆகலாமா?

- டாக்டர் பாலசாண்டில்யன் - மனநல ஆலோசகர் 

உங்களை விட அதிகமாக லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்! ஒரு காதல் ஒழிஞ்சிச்சோ ஒரு காதல் செத்துச்சோ?

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்ப சற்று சிரமம் தான். வீட்டில், வெளியில், ஹோட்டலில், டிவி பார்க்கும் பொழுது, நாம் பேசும் பொழுது, ட்ரிங் ஓசை கேட்டு போனை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு மெசேஜை மட்டும் பார்த்து விட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் பதில். ஏன் எனில் போனை கையில் எடுத்தவுடன் அடுத்து அடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை. 

உள்ளங்கை அளவில் ஒரு எதிரி என்றால் அது ஸ்மார்ட் போன் தான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதை விட நம்மை அவர் ஒதுக்கி வைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலை தூக்குகிறது. நீங்கள் ஒரு கணவன் இருந்தும் கைவிடப்பட்ட கைபேசி கைம்பெண் ஆகலாமா?

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? நமக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகி உள்ளன. இப்போது தான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்ன தான் இந்த சனியன் போனில் உள்ளது? ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில். இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போது தான் உலகத்தில் என்ன நடக்கிறது, எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று கூட பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் போட்டோ முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் ..உனக்கு அதில் விருப்பம் இல்லையா?

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது. நீங்கள் பேசாமல் என்னை திருமணம் செய்து கொண்டதற்கு பதில் இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என்னை ஏன் உயிர் எடுக்கிறீர்கள்? 

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? என் கணவர் முன்பு போல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை. சாப்பாடு, உறக்கம், செல்போன், ஆபீஸ் இது தான் அவர் உலகம் என்றால் நான் எதற்கு இடையில்? 

ஆனால் பெண்களும் இப்படி ஆகி வருவதும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டால் வேறு எங்காவது சந்தோஷம் கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. 

மனக்கிலேசங்கள் வரும் பொழுதே உரையாடல் மூலம் அவற்றை சரி செய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாட்களில் உணவு, காய்கறி, வீட்டு சாமான், காஸ் புக்கிங், பண பரிவர்த்தனை இவற்றிற்காக கையில் எடுக்கும் போன் கீழே வைக்கப் படுவதில்லை. ஏனெனில் அதில் தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, போட்டோ எடுப்பது, டிவி ரிமோட், வீடியோ பார்ப்பது, மெயில் செக் செய்வது, எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது. 

பெண்களே நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்த போனும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இழந்த நேரத்தை இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது. 

இன்று வேலை வாழ்க்கை போன் இவை மூன்றையும் மிகச் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுது போக்கிற்காக டிவி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தை காப்பது, சமூக பொறுப்புகள் ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, இடையே சற்று காதல் செய்வது எல்லாமே தான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பது போல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியமாகிறது.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் காதல் காமம் அன்பு கருணை எல்லாவற்றிற்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே.உங்கள் போன் உங்கள் கையில். அதே போல உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். ஆல் தி பெஸ்ட். 

No comments:

Post a Comment