Tuesday, June 8, 2021

மில்லியனியல்ஸ்

 


மில்லியனியல்ஸ் எனப்படும் தலைமுறையினர் 

டாக்டர் பாலசாண்டில்யன் - மனநல ஆலோசகர்/கல்வியாளர் 

இப்படி அழைக்கப்படுகிற இவர்கள் பொதுவாக 1981 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர் (94-96 க்கு முன்பு பிறந்தவர் ) எனக் கொள்ளலாம் - நிர்வகிக்கக் கடினமானவர்கள், சோம்பல் மிகுந்தவர்கள், கவனம், உரிமை  மற்றும் சுய ஆர்வம் செலுத்தாதவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல என்பதே உண்மை. இவர்களுக்கு இப்போது 25 முதல் 40 வயது இருக்கிறது என்று கொள்ளலாம். இவர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். பெரும்பாலும் தோல்வியை அதிகம் காண்பவர்கள்.

நாம் இது பற்றித் தான் இந்த கட்டுரையில்  விரிவாகப் பார்க்கப் போகிறோம். 

அவர்களிடம் அவர்களின் மூத்தோர் எப்போதும் கேட்பது "உங்களுக்கு என்ன வேண்டும்?". அவர்களின் பதில் பெரும்பாலும், "நாங்கள் நல்ல நோக்கத்துடன் ஓர் இடத்தில் வேலை செய்ய விரும்புகிறோம். அதையே எங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம்."

"நாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்". இதனை பலர் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களுக்கு இலவச உணவு, டீ, காபி, பீன் பாக் போன்ற அமர்விடம், யாரும் கேள்வி கேட்காத நிலை என்று தான். இவை எல்லாம் ஏற்கனவே பல நிறுவனங்கள் அளித்துள்ளன என்பது வேறு விஷயம். இருந்தும் இந்த குறிப்பிட்ட தலைமுறையினர் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் ஒரு குறைபாடு இங்கே தலை தூக்குகிறது. அவை பெற்றோர் வளர்ப்பு, தொழில் நுட்பம், பொறுமையின்மை, வளர்சூழல் மற்றும் வாழும் சூழல் இவற்றில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. 

நிறைய பேரின் வாழ்க்கை இன்று சீரழிந்து வருகிறது என்றால் அது தவறான வளர்ப்பினால் என்றால் அது மிகையாகாது. அந்தக் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர் திரும்பத் திரும்பச் சொன்னது இது தான் : " நீங்கள் எப்போதும் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல், உங்களுக்கு என்ன தேவை என்றாலும் தருவது எங்கள் கடமை." அப்படித்தான் சிலருக்கு மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் அவர்களின் மதிப்பெண் குறைவென்றால் கூட." 

அதே போல பிள்ளைகளும் மிக அதிக மதிப்பெண் எடுத்தார்கள், அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என்பதால் அல்ல, அவர்களின் பெற்றோர் அதனை மிகவும் விரும்பினார்கள் என்பதால். தவிர, அந்த செல்வந்தர்களின் பெற்றோரை ஆசிரியர்களும் சந்திக்க விரும்பவில்லை என்பதால் அப்படி நடக்கிறது என்றும் கூறலாம். நிறைய பிள்ளைகளுக்கு 'பங்கு பெற்ற சான்று மற்றும் விருதுகள்' கிடைத்தன.  கடைசியில் முதல் (for coming in last) என்று கூட மெடல் கிடைக்கிறது எனலாம்.  அப்போது உண்மையில் அந்த மெடலை உழைத்துப் பெற்ற மாணவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று இங்கே சொல்லவும் வேண்டுமோ ?

அது மட்டுமா? எதுவுமே செய்யாமல் மெடல் பெறும் அந்த மாணவனுக்கும் ஒரு குற்ற உணர்வு இருக்கவே செய்கிறது அல்லவா ? அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அந்த மெடலுக்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று. ஆகவே மெடல் பெற்ற பிறகும் அவர்கள் மனம் வருத்தமாக இருக்கும். இதற்கு யார் பொறுப்பு ?

அதே பிள்ளைகள் பின்னாளில் படிப்பு முடித்து ஒரு வேலைக்கு சேர்ந்த பிறகு, அவர்களை அந்த பணம் ஈட்டும் உலகிற்குள் தள்ளி விட்ட பிறகு அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக, அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் உத்தியோக உயர்வு இரண்டையும் அவர்களின் பெற்றோரால் பெற்றுத் தர முடியாது. அதனை அவர்கள் உண்மையில் உழைத்து நேர்மையாக ஈட்ட வேண்டும் என்பது தான் கசப்பான உண்மை. 

வேண்டும் என்பதற்காக எதுவும் கிடைத்து விடுவதில்லை. எதுவுமே இங்கே ரெடிமேட் இல்லை. இந்த சூழலில் அவர்களின் சுய பிம்பம் உடைந்து போகிறது. நாம் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஒரு தலைமுறையே இப்படி சுய மதிப்பு குறைந்தவர்களாக வளர்கிறார்கள், தொடர்கிறார்கள், சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் முந்திய தலைமுறைக்கு கிடையாது. 

எல்லாவற்றையும் விட ஒரு வருத்தம் தருகிற விஷயம் தான் இந்த தலைமுறை பிள்ளைகள் பேஸ்புக் எனும் முகநூல் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் உலகில் வாழ்கிறார்கள் எல்லோருக்கும் ஈடு கொடுக்க. பிறருக்கு தனது வாழ்க்கை மிகவும் சிறந்தது என்று எடுத்துரைக்கும் கருவியே இவை இரண்டும். "நான் சிறந்தவன், சிறப்பான விஷயங்கள் என்னிடம் உண்டு, எனது வாழ்க்கை உங்களை விட அற்புதமானது" என்று போலித்தனத்தை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது என்பது கொடுமை. 

எல்லோருமே அதனால் தான் மிகவும் சிறந்தவர், வெற்றியாளர், என்று தினம் தினம் பிறருக்கு சொல்லிக் கொண்டும், நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டிய கடுமையான சூழல். தான் செய்வது தவறு போலியானது என்று தெரிந்தாலும், என்ன செய்ய "இதைத் தானே நானும் செய்ய வேண்டி இருக்கிறது?" என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலையில் தள்ளப்படுகிறார்கள். 

அதில் இருந்து வெளியே வர அவர்களுக்கு தெரியாது. யாரும் அதனை கண்டறியவில்லை. குறைவான சுய மதிப்பீட்டுடன் வாழும் இவர்கள் முந்திய தலைமுறையை விட கஷ்டப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பு இல்லை. அது அவர்கள் தவறு இல்லை. அவர்கள் அப்படி நடத்தப்பட்டு, அந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

தொழில்நுட்பம் எனும் மாயவலை இவர்களை ஆட்டிப்படைக்கிறது. சமூக வலைத்தளங்கள், கையில் இருக்கும் செல் போன் இவர்களின் மூளையில் 'டோபோமெயின்' எனும் கெமிக்கலை அள்ளித் தருகிறது. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த மாயவளைக்குள் தெரிந்தே நுழைந்து சிக்கித் தவிக்கிறார்கள். என்ன செய்ய ? அதனால் அவர்கள் தனிமையில் இருக்கும் போது "சூப்பர், ஆஹா, பிரமாதம்" என்கிற மெசேஜ்கள் அவர்கள் விருப்பப்படி வந்து கொண்டே இருக்கிறது. அவர்களும் பிறருக்கு அவற்றை அனுப்புகிறார்கள். அது அவர்கள் தனிமையை, சோகத்தை, வெற்றிடத்தை, தாழ்வு மனப்பாங்கை விரட்டுகிறது. 

அவர்கள் மீண்டும் மீண்டும் " ஹாய் ஹாய் " என்று நண்பர்களுக்கு (உண்மையில் அவர்கள் ஒன்றும் நெருக்கமான நண்பர்கள் இல்லை, சிலர் இன்னும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டது கூட இல்லை, சிலர் நண்பர்களின் நண்பர், சிலர் உண்மையில் அந்த பெயருடன் தான் இருக்கிறார்களா என்று யாருக்கும் தெரியாது) அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் நட்பு உறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பது வருத்தம் தருகிறது. 

அவர்கள் தங்கள் சுயமதிப்பை உயர்த்தி உண்மையில் தம்மை யார் விரும்புகிறார்கள், மதிக்கிறார்கள் என்று அறிய நேரம் இல்லை, துணிவும் இல்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்றால் அது மிகையல்ல. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் கடைசி வரை போலி வாழ்க்கை வாழ்ந்து பிறரின் பாராட்டை எதிர்பார்த்து கிடைத்தால் மகிழ்ந்து, கிடைக்காவிட்டால் மனம் நொந்து தமது வாழ்வை கடப்பார்கள்.

இதற்கு ஒரே வழி பெற்றோர் அவர்களுடன் நல்ல உரையாடல்கள் வைத்துக் கொள்ளுவது, தரமான நேரத்தை அவர்களோடு செலவு செய்து யதார்த்தமான நிலையினை புரிய வைத்து, அவர்களை நல்வழிபடுத்திட வேண்டும். அவர்களுக்கு நல்ல திருமண வாழ்வும் அமைய வேண்டும். இல்லையேல் கேள்விக்குறியாக இருக்கும் அவர்கள் வாழ்க்கை கேலிக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே,  இந்த மில்லியனியல்ஸ் தலைமுறை இணையத்தில் மட்டும் தொலைந்து போய் விடாமல் நிதர்சன வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பழகிட, பகிர்ந்திட, பரிவு காட்டிட நல்ல நட்பை, உறவுகளை உருவாக்கி வைத்துக் கொள்ளுதல் இங்கே மிகவும் அவசியம். இணையம் தாண்டிய மனித இணைப்பு தான் அவர்களுக்கு பாசம், பரிவு, பகிர்வு எல்லாம் பெற்றுத் தரும். 

தொழில்நுட்பம் நினைக்கிற எல்லாமே பெற்றுத் தந்து விடும் பலம் பெற்றிருந்தாலும், மனிதநேயம், உறவு, நட்பு எனும் உன்னதமான விஷயங்கள் நுட்பமான ஒன்று. அதனைத் தேடி உணர்ந்து பெற்றிடும் நிலை வர வேண்டும். அப்படி இந்த தலைமுறையினரை மாற்றிடும் பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் உள்ளது. 

உபாயமே இல்லாத அபாயங்கள் மட்டும் நிறைந்த வருங்கால வாழ்வினை எதிர்கொள்ள நேர்மையான அறிவு கொண்ட தலைமுறை தேவை. எந்திரமயமாகும் நிலை வெகுதூரம் இல்லை எனும் இந்த தருணம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் இவற்றைச் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் நிம்மதியான வாழ்வுடன் தப்பித்து வாழலாம்.

செய்யும் வேலையில் கவனம், விருப்பம், ஈடுபாடு, முழுமையான கடப்பாடு என்று இவர்கள் இருக்கத் தொடங்கும் சமயம் எப்போதும் ஆனந்தம் வாழ்வில் நிலைத்து நிற்கும்...என்ன சந்தேகம் ?

No comments:

Post a Comment