Tuesday, January 12, 2016

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சஹஸ்ர சந்திர தரிசன விழா - அமரபாரதி சிறப்பு மலருக்கு சமர்ப்பணம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சஹஸ்ர சந்திர தரிசன விழா - அமரபாரதி சிறப்பு மலருக்கு சமர்ப்பணம்

- டாக்டர் பாலசாண்டில்யன், சென்னை மேற்கு மாம்பலம்  
(கவிஞர், எழுத்தாளர், மன நல ஆலோசகர், மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர்) www. visionunlimited. in. Mobile - 9840027810

1954 ஆம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி மடத்தில் இணைந்த சுவாமிகள் இன்று ஹிந்து மதத் தலைவர்களில் தலையாய ஒரு தலைவராகத் திகழ்கிறார். ஹிந்து மதம் குறித்த இவரது அளப்பரிய ஞானம், இதர மதத் தலைவர்களோடு இவரது நல்லிணக்கம் இவற்றால் இவர் பெரிதும் போற்றப் படுகிறார். இவரது பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தியாவில் மற்றும் இன்றி வெளிநாடு வாழும் அமேரிக்கா உள்ளிட்ட நாட்டைச் சார்ந்தவர்களும் உண்டு

வெறும் கடவுள் பக்தி, பூஜை, மத வழிபாடு என்று நிறுத்திக் கொள்ளாமல் காஞ்சி மடத்தின் சேவைகளை கல்வி, மருத்துவம், பொதுச் சேவை என்று பல்வேறு திசைகளில் முடுக்கி விட்ட பெருமை சுவாமிகளையே சேரும்

9, ஜனவரி 1995 க்குப் பிறகு மடத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்ற பிறகு சுவாமிகளின் பங்களிப்பு பெரிதும் அதிகமானது

எது செய்தாலும் அதில் அன்பு மட்டும் மேலோங்கி இருக்கட்டும்
நடத்தை அன்பைச் சார்ந்தே இருக்கட்டும்

அதீத தேவை, கோபம், வெறுப்பு போன்ற குணங்களை முற்றிலுமாக மக்கள் கைவிட வேண்டும்

எந்த ஒரு செயலுக்கும் அன்பே பிராதானமாக விளங்கும் போது இந்த உலகின் பெரும்பாலான துன்பங்கள் விலகும்

கவலை நீங்கி மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்திட இறைவனுக்கு நமது ஒவ்வொரு காரியத்தையும் அர்ப்பணித்தல் வேண்டும்
அவரது அருள் இருக்கையில் நமக்கு சந்தோஷம் மட்டும் தான் கிடைக்கும், துன்பத்திற்கு இடமே இல்லை

இறைவன் நமது போற்றுதல் அல்லது தூற்றுதல் இவற்றிற்கு ஒரு போதும் மயங்குபவன் இல்லை, நமது மனங்களின் தூய்மை தான் அவன் அருள் பெறச் செய்யும் - இது போன்ற அரிய கருத்துக்களை சுவாமிகள் தமது ஒவ்வொரு அனுக்ரஹ பாஷனைகளிலும் வலியுறுத்திச் சொல்லி வந்தார் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது

இது போன்றே
நட்பிலும் அன்பிலும் மனிதனின் மனது நிறைந்திருக்கட்டும்.
பிறர் நம்மை எப்படிக் காண விழைகிறோமோ அப்படியே நாம் அவரைக் காண வேண்டும்

பொறாமை, போரிடும் குணம் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும்
பூமித்தாய் காமதேனு போன்றவள், நமது எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்ய வல்லவள். அதே போல இறைவன் கருணை பொழியும் ஒரு தந்தை.

ஒழுக்கத்துடன் வாழ்தல், தயாள குணத்துடன் வாழ்தல், கருணையோடு எல்லோரிடமும் பழகுதல், எல்லோரும் இன்பமாக இருக்க நம்மால் இயன்றதை செய்தல் போன்ற பல்வேறு நல்ல சத்விஷயங்களை மக்களிடம் எப்போதும் சொல்லி வந்தார்

ஸ்ரீ காஞ்சி மடம் கிட்டத்தட்ட 44 மருத்துவமனைகளையும், 15 மருத்துவ சேவை மையங்களையும் சீராக நடத்த உதவி செய்து வருகிறது. பல லட்சம் நோயாளிகள் இதனால் பயன் பெற்றுள்ளனர். மேலும் லட்சம் பேர் கண் அறுவை சிகிச்சை இலவசமாகப் பெற்று பயன் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட லட்சம் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஸ்ரீ மாதா டிரஸ்ட் மூலம் பயன் அடைந்துள்ளார்கள். கோயம்புத்தூர் , சென்னைதமிழ்நாடு தவிர உத்தராஞ்சல், ஓடிஸா, பீகார்,அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் கடைக்கோடி ஏழை மக்கள் இலவசமாக அல்லது குறைந்த செலவில் மருத்துவ சேவை பெறும் நிலையங்களை ஸ்ரீ காஞ்சி மேடம் நிர்வாகித்து வருகிறது. ரோட்டரி மூலமும் ஸ்ரீ காஞ்சி மடம் பல்லாயிரம் மக்கள் கண் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெற்றிட உதவி வருகிறது

1987 ஆம் ஆண்டில் 'வந்தேமாதரம்' எனும் திட்டம் மூலம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச கண் மருத்துவம் வழங்கப்பட்டது.

'வானவில்' எனும் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறு சம்பந்தமான மருத்துவம் கோயம்புத்தூர், திண்டுக்கல், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்த திட்டங்கள், மேலும் நைஜீரியா நாட்டு மக்களுக்கும் இந்த சேவை வழங்கப்பட்டது என்பது பாராட்டுக்கு உரியது

'இருள் நீக்கி' திட்டம் மூலம் மலைவாழ் மக்களுக்கு இலவச கண் மருத்துவம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டது. 'கண்ணொளி' திட்டம் மூலமும் சேரி வாழ் ஏழை மக்களுக்கு அதே மாவட்டத்தில் இலவச கண் மருத்துவம் வழங்கப்பட்டது. கம்போடியா நாட்டின் கண் மருத்துவர்களுக்கு நமது நாட்டின் சிறந்த மருத்துவர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டது

நேபாலில் காத்மாண்டு எனும் இடத்திலும் இலவச கண் மருத்துவப் பயிற்சி அங்கே உள்ள மருத்துவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

'வந்தேமாதரம் பாரத்' எனும் திட்டத்தின் மூலம் நமது நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி உத்திரப்பிரதேசம், ஓடிஸா, ஆந்திராவில் கம்மம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் கண் மருத்துவம் சென்று அடைய சங்கரா சொசைட்டி மூலம் வழி வகை செய்யப்பட்டது

'கிராம தத்து திட்டம்' மூலம் கிட்டத்தட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் அருகே 10 கிராமங்களை தத்து எடுத்து 30 ஆயிரம் பேருக்கு மருத்துவம், கல்வி, குடிநீர், பெண்கள் சுயதொழில் போன்ற பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கண் பார்வைக் கோளாறு  இவற்றில் இருந்து விடுபட பல்வேறு நிறுவனப் பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டன

'சங்கரம்' திட்டம் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒத்த சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களை இணைத்து அடைய முடியாத நபர்களையும் சென்றடைந்து உதவி செய்தல் எனும் திட்டம் உருவாகி அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஊரக வளர்ச்சி டிரஸ்ட் மூலம் ஒடுக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு பலன் கிடைக்கும் வண்ணம் வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி, வாழ்வாதாரப் பயிற்சி, சுய வேலை வாய்ப்புத் திட்டம், நலத் திட்டம் என்று பலவேறு உதவிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதரவற்ற பெண் குழந்தைகள் பாதுக்காப்பாக தங்கிட ஹாஸ்டல் ஒன்றும் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 150 சுய உதவிக் குழு பெண்களுக்கு வாழ்வாதாரம் மேம்படும் படியான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் பட்டன. கிட்டத்தட்ட 3000 ஏக்கர் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கலவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இல்லம் கட்டப்பட்டு, அங்கே மூன்று சக்கர வண்டி மற்றும் ஊன்று கால்கள் வழங்கப்பட்டது

ஸ்ரீ மடத்தை நாடி வரும் ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ள உதவிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பல்வேறு உதவிகள், ஈமச் சடங்குகளுக்கு உதவிகள் என்று பல்வேறு அறப்பணிகளும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சுவாமிகள் இந்தியாவில் பயணம் செய்யாத ஊரே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய சேரி என்று சொல்லப்படும் மும்பை தாராவியில் கோவில் மற்றும் பள்ளி கட்டப்பட்டதை அடுத்து பல்லாயிரம் வீடுகளில் பெரியவாளின் திருவுருவப்படம் இடம் பெற்று இருப்பது போற்றுதலுக்கும் பாராட்டிற்கும் உரியது. இங்கே அரசியல்வாதிகளும், காவல் துறையுமே செல்லத் தயங்குவர் என்பது தான் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம்

பீகார் மாநிலத்தில் (நேபால் எல்லைக்கு அருகே) மதுபானி எனும் வெகுதூர பிற்படுத்தப்பட்ட இடத்தில் இளைஞர்கள் இலவசப் பயிற்சி பெற்று தமது வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் திட்டம் நிறைவேற்றப் பட்டது

பசுவை தெய்வமாகப் போற்றும் நமது நாட்டில் பல்வேறு இடங்களில் கோஷாலா நிறுவி பசுக்களுக்கு உரிய பாதுக்காப்பும், கவனிப்பும் வழங்க ஆவன செய்யப் பட்டுள்ளது

ஏழை இசை விற்பன்னர்கள் நலம் பெற தனியான ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஜனைப் பாடல்கள் மூலம் பக்தி வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பஜனைப் பாடல்கள் கொண்ட ஒலிபேழை வெளியிடப்பட்டு அதில் கிடைக்கப் பெற்ற வருமானத்தை ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது

நித்ய அன்னதானம் வழங்கும் திட்டப் படி காஞ்சி மடத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் வருகிற எல்லோருக்கும் இலவச உணவு தினந்தோறும் அளிக்கப் படுகிறது

'பிடி அரிசி திட்டம்' மூலம் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு பிடி அரிசி பெறப்பட்டு (வாரம் ஒரு முறை) கோவில்களில் நைவேத்யம் மற்றும் அன்னதானத்திற்கு, பிரசாதத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. பெரியவாளின் ஆசியுடன் இந்த பிரசாதம் சிறையில் உள்ளவர்களுக்கு, ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, அநாதை இல்லங்களுக்கு வழங்கப் படுகின்றன

குஜராத் பூகம்பத்திற்கு பிறகு இரண்டு கிராமங்கள் தத்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசத் தங்குமிடம் கட்டிக் கொடுக்கப் பட்டது

பற்பல வேத பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அவற்றில் மூன்று வேதங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது தவிர 51 ஓரியண்டல் பள்ளிகளில் (தேசம் எங்கும்) மடத்தின் மூலம் இலவசமாக வேதம் சொல்லித் தரப்படுகிறது

சென்னையில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் நிறுவப்பட்டு இலவச மருத்துவம் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அருகில் உள்ள கிராம மக்களுக்கு மூலிகை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம், மற்றும் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்கள் மூலம் கிடைக்கும் மூலிகைகளுக்கு உரிய பணமும் வழங்கப்படுகிறது.

காஞ்சி அருகே ஏனாத்தூர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக் கழகத்தின் ஒரு அம்சமாக மிகப் பெரிய ஒரு நூலகம் ஒன்று நிறுவப்பட்டு பல்வேறு ஓலைச் சுவடிகள், அரிய பல சுவுடுகள், நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை அழிந்து போகாது இருக்க இவை டிஜிடைஜ் செய்யப்பட்டு பாதுகாக்கப் படுகிறது

பாழடைந்த பல்வேறு பழைய கோவில்களை மீட்டெடுக்கும் விதமாக பராமரிப்பு, புனரமைப்பு, பைன்டிங், இவையெல்லாம் காஞ்சி ஸ்ரீ மடத்தின் கீழ் ஒரு பிரத்யேகமான திட்டமாக எடுத்து செயல்படுத்தப் படுகிறது

இப்படி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அரிய பல சமூக, மருத்துவ, கல்வி மற்றும் ஆன்மீக சேவைகளை ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது என்பது மிகைப் படுத்தாத உண்மை

மேற்சொன்னவை எல்லாம் சில விஷயங்களே. இன்னும் விடுபட்ட பல விஷயங்கள் உண்டு என்பது தான் உண்மை

நான் இணைச் செயலாளராக மற்றும் பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் என்ற முறையில் எங்கள் ' உரத்த சிந்தனை' அமைப்பின் சார்பாகவும், எனது தந்தை பாகவத சிரோன்மணி (மற்றும் பெரியவாளின் இளமைக் காலத்தில் அவர் வீட்டிற்குப் பின்னால் வசித்தவர்) மறைந்த திரு Erode Subramaniam கல்யாணராமன் அவர்களின் புதல்வன் என்ற முறையிலும் ஸ்ரீ பெரியவாள் அவர்களை பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன்

மேலும் அவர் முன்னிலையில் எனது பாடல் மற்றும் கவிதைகளை வாசித்து ஆசி பெற்றுள்ளேன். இதற்கு முன்பும் அமரபாரதியின் சிறப்பு மலரில் ஸ்வாமிகள் பற்றி கவிதை மலர் ஒன்று எழுதி சமர்ப்பிக்கும் பாக்கியம் எனக்கு உண்டு. இது தவிர சங்கரா பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சிகளும் வழங்கி உள்ளேன். பள்ளி மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்று ஸ்வாமிகள் முன்னிலையில் பேசிடும் பாக்கியமும் பெற்றேன் என்ற மன நிறைவு எனக்கு என்றும் உண்டு

வெறும் மதம், கடவுள், பக்தி என்கிற விஷயங்களைத் தாண்டி தேச பக்தி, மனித நேயம், மதங்கள் கடந்த ஒருமைப்பாடு என்று பல்வேறு விஷயங்களை வெகு புரட்சிகரமாக எடுத்துச் சொன்ன மகானுக்கு இப்போது சஹஸ்ர சந்திர தரிசன விழா நடைபெற உள்ளது என்றும் அது குறித்த விழாவின் போது முப்பெரும் விழாவாக அது கொண்டாடப் பட உள்ளது என்பதும் அறிந்து கொள்ள மிகவும் பேருவகை கொள்கிறேன். இந்த அற்புதமான தருணத்தை ஒட்டி வெளிவரும் அமரபாரதியின் ஆண்டு மலரில் இந்த எனது கட்டுரை வெளிவருவது நான் செய்த பூர்வ புண்ணியம் மற்றும் இறைவன் அருள் என்று தான் தாழ்மையுடன் கருதுகிறேன்

பெரியவாளின் பாதாரவிந்தங்களை வணங்கி எனது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன். சுவாமிகளின் நற்பணியும், காஞ்சி ஸ்ரீ மடத்தின் சிறந்த சேவையும் மேன்மேலும் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை, ஸ்ரீ காஞ்சி காமாட்சி தாயை இறைஞ்சி பிரார்த்திக்கிறேன்.



No comments:

Post a Comment