Wednesday, May 11, 2016

Balasandilyan's Haiku kavithaigal

டாக்டர் பாலசாண்டில்யன் எழுதிய ஹைக்கூ கவிதைகள்
மின்தடை சமயம்
அதே நேரம்
பழகிய தேகம்
ஓடாத கடிகாரம்
________________
கூடங்குளம்
படகுகள் ஓய்வு
மீன்கள் கலவரம்
மின்சாரம் அணு ஓரம்
__________________________
அன்னா ஹசாரே
உறங்கிய பசி
ஊழல் விழிப்புணர்வு
எழுச்சியில் தேசம்
___________________________
தொந்தரவு
பக்கத்தில் குறட்டை
பறந்த தூக்கம்
பாவமாய் நான்
____________________________
வெறுப்பு
ஒற்றை செறுப்பு
அலைந்த கண்கள்
கோவில் வாசல்
______________________________
மனுசுக்குள்
மெட்டி ஓசை
மல்லிகை வாசம்
மனைவி வருகை
_________________________________
என்னவள்
மேகத்தின் நடுவே
எட்டிப் பார்க்கும் நிலா
காணவில்லை அவள்
______________________________
படபடப்பு
பட பட பட
தட்டப்படும் கதவு
நுழைந்தது காற்று
______________________________________
தேதி பார்த்தேன்
ஆடிய காலண்டர்
மூடிய சமையலறை
இன்று விடுமுறை
_____________________________________________
மன ஓசை
நீட்டிய கை
கண்ணில் பட்ட மோதிரம்
பிச்சைக்காரன்
______________________________________________
இது சீசன்
ஆட்ட மைதானம்
ஒளி உமிழும் விளக்குகள்
ஒத்து ஊதும் நிலா மேலே !
__________________________________________
ஏமாற்றம்
காத்திருந்த காதுகள்
ஒலித்தது தொலைபேசி
புரியாத மொழியில் விசாரிப்பு
____________________________________________
கிளிப்
பரந்த முடி
கலைந்த மனம்
ஒன்றிணைத்த சிறு பிடி
_________________________________________________
டிரைவர் மனஒலி
அடுத்த சிக்னலுக்குள்
திறந்து கொள்வாயா
என் விழிகளே !
விலைவாசி
குளங்கள் வற்றியதால்
கொக்கெல்லாம் 
மீனைப் போல் சந்தையில்
______________________________
முதிர்கன்னி
ஜன்னலுக்கு இரு கண்
தானம் தந்தது யார்
அக்கா தான்
______________________
விவசாயக்கூலி
போரடித்தாள் முறமசைத்தாள்
தவிட்டு மடியில்
பசிச்சுமை அந்தோ
___________________________
மாணவன்
பரீட்சை சோகமும்
காலைச் சிற்றுண்டியும்
முட்டையோடு தான்
_______________________________
அவள்
கறுப்பின் மேல் வெள்ளை
கொள்ளை அழகு
கூந்தல் செடியில் ரோஜா
_____________________________________
சந்தேகம்
காசு கொடுத்தவன்
தலையிலேயே கை
யானை
___________________________
வாடிக்கை
கன்னம் வைத்தான்
களவு போனது
காதல் இதயம்
_____________________________
வியப்பு
போடும் போது பச்சை
போட்ட பிறகு சிவப்பு
வெற்றிலை
______________________________
மாற்றம்
அக்காவுக்கு ஜீன்ஸ்
அவள் சீலை உனக்கா
ஜன்னல்
____________________________
வினோதம்
கண்டு நடுங்கினாள் மனைவி
பொறாமையோடு கணவன்
கரப்பான்பூச்சி
_____________________________
காரணம்
மிரண்டு போனது சிறுமி
மதில் மேல் மீசைக்காரன்
பூசணிக்காய்
_________________________
ஞாபகம்
அழகான டப்பா
திறந்ததும் சிரித்தது
பாட்டியின் பல்செட்
_____________________________________
அநியாயம்
அஸ்திவாரம் ஆரவாரமாய்
வளர்ந்தது வேகமாய் புதுவீடல்ல
கடனுக்கு வட்டி
________________________________
பாவம்
அறுபதைத் தொட்ட அப்பா
அழகாய் ஈசி சேரில் ....அம்பது தாண்டிய அம்மா
அடுப்படியில் இன்னும்
____________________________________
விதி
அழகு மனைவி சமூகசேவகி
அடுப்புக்கரி
அம்மா முகத்துக்கு மட்டும்
___________________________________
கவலை
கண்களுக்கு சொந்தம்
கண்ணீர் மட்டுமா
கைக்குட்டையும் தான்
____________________________________
ஏழை
வானமே அழு
என் குடையை தைத்த பின்
அழு வானமே
_______________________________
வியப்பு
மழை நின்ற பிறகும்
மழை
மரத்தடியில் ...!
________________________________
ஓலம்
தெருவில் வெள்ளம்
அணைந்தது அடுப்பு
பசி தீ தானே
_________________________________
அக்கப்போர்
நாய்களின் சண்டை
குப்பைத்தொட்டி அருகே
ஜெயித்தான் மனிதன்
__________________________________
அறிவு
மனிதன் ஓரறிவு மிகுந்த
மிருகம் !....மிருகம்
ஓரறிவு குறைந்த மனிதன்
_____________________________________
சூரியனே
நான் காந்தி
என்பதால் சுட்டாயோ
சூரிய காந்தி !
_______________________________
மாறுபாடு
உப்பு நீரில் உயிர் வாழும்
கடல் மீன்கள்
உப்பு நீரை உற்பத்தி செய்யும்
விழி மீன்கள் 

No comments:

Post a Comment