Saturday, February 1, 2020

அன்பெனும் நூற்கண்டு



அன்புப் பிணைப்பின் நூற்கண்டு
அன்பே உன் விரலில் சிக்குண்டு  
ஆனந்த வலியில் நான் கிடக்க   
அன்பின் முடிச்சை அவிழ்க்கும் அரிய  
ரகசியம் மனம் சற்றும் அறியவில்லை 
என்னுடலின் நரம்பெல்லாம் மேகம் துளைத்து 
இன்னிசையாய்  நுழைவது  காதலா மோகமா 

பிணைப்பில் வைக்க எனைத் தேர்வு செய்த 
பித்து நீ அறிவேன், நான் என்றோ அதனை - என் 
அணைப்பில் வைக்க உனைத் தேர்வு செய்த 
பித்து நானும் தான், அறிகிலேன் அதனை 
நான் இரவென்றால் நீ பகல் - அந்த 
வான் சந்திக்கும் மாலை இடுவேன் நான் மாலை 
வானளாவும் நமதன்பு என்றும் இருவழிச் சாலை 

என்னிதயம் கவலையுற்று இருந்ததில்லை - அதில் 
எல்லையற்ற அன்பு நீ, அதை நான் மறந்ததில்லை 
எனது தகவல்கள் வந்து சேரும் புது முகவரி நீ 
எனது உளறல்கள் எல்லாம் அறிவாய் நீ - நாம் 
யாரென்று மனதிற்குள் சொல்லித் திரிவாய் நீ 
யாருமில்லா வீதியில் கண்மூடி நடப்போம் வா 
யாருமே நமக்கில்லை ஈடென்று கிடப்போம்.வா 

- பாலசாண்டில்யன் 

No comments:

Post a Comment