Tuesday, November 23, 2021

நீர் வளங்களைப் பற்றி

 நீர் வளங்களைப் பற்றி எல்லோரும் ஊடங்கங்களில் புலம்புவதைப் பார்க்கும் போது மனம் வெதும்புகிறது.

மும்பையிலும் கேரளத்திலும் ஓவ்வொரு ஆண்டும் மாரி தவறாமல் பொழிகிறது.
அவர்கள் அதற்குத் தயாராகிறார்கள் மனதளவில் மற்றும் எல்லா விதத்திலும்.
முகம் சுளிப்பதில்லை. வேலை நின்று போவதில்லை. சில சமயம் ரயில் பஸ் போக்குவரத்து ஸ்தம்பித்து போனாலும் சமாளிக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளுவார்கள். எதற்கும் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
நான் மும்பையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் அங்கு மழை மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.
நம்ம ஊரில் குப்பை, பிளாஸ்டிக், தீபாவளி பட்டாசு கழிவுகள், உணவுக் கழிவுகள் இவற்றைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் எங்கு வேண்டுமானாலும் விட்டு எறிவதை நாம் பார்க்கலாம். மழை சொல்லி வந்தாலும் சொல்லாது வந்தாலும், நாம் மழையை மற்றும் அரசை குறை சொல்லிப் பழகி விட்டோம். நமக்கு வெயில் பிடிக்குமா? இருப்பினும், நீர் இன்றி அமையாது உலகம் என்று சும்மாவா சொன்னார்கள்?
குடை, ரெயின் கோட், மழையில் நனைவது எதுவுமே பிடிக்காத நாசுக்கான மக்கள் நாம். எது நடந்தாலும் போட்டோ எடுப்பது, டிவியில் பேட்டி கொடுப்பது, போனில் பகிர்வது இப்படியே இருப்பவர் நம்மில் அதிகம் இன்று. நமக்கு உள்ள பொறுப்பு உணராது பிறர் வந்து செய்ய வேண்டும். குறிப்பாக அதிகாரிகள், அரசு வந்து நம் வீட்டு தீபாவளி குப்பையை எடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்?
"நமக்கென்று கடமைகள் உண்டு, அதை நம் கையால் செய்வது நன்று" என்று ஒரு பழைய பாடல் கேட்ட நினைவு உண்டு.
நாம் வாழும் இடம் நமது. நாம் இந்த உலகிற்கு வந்துள்ள விருந்தாளி தான். ஆனால் சில நாட்களுக்கு அல்ல. சில பல வருடங்களுக்கு என்பதை நினைவில் கொள்வோம். எனவே நாம் ஒன்றும் பேயிங் கெஸ்ட் அல்ல. அவரவர் வீட்டிற்கு அருகே சுத்தமாக வைத்துக் கொண்டால் எப்போதும் நன்மை தான். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவோம். பிளாஸ்டிக் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்போம்.
இதனை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் அடுத்தடுத்த மழையின் போது நிச்சயம் அவதி குறைவு என்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment