கேள்விகள் ஆயிரம்
ரமேஷ் கஸ்பேகர் சென்னையின் மிகப்பெரியதொரு நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர் தமது அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்த கல்பனா எனும் தமிழ்ப் பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
ரமேஷ் விடுமுறை எடுத்துக் கொண்டு திருச்சி கிளம்பினார். நேராக சென்று முறைப்படி பெண் கேட்டார். கல்பனாவின் அம்மா (அப்பா இறந்து விட்டதால் அவர் தான் குடும்பத் தலைவி) மகளின் விருப்பம் கேட்டு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்.
ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பம் என்பதால் நிறைய பேர் இருந்தனர். வீட்டில் எல்லோரும் மராட்டி மொழியில் பேசினர். கல்பனாவிற்கு மொழி புரியாததால் பல சமயம் தன்னைப் பற்றி ஏதோ தப்பு தப்பாக பேசுவதாக யூகிக்க ஆரம்பித்தாள். அந்தக் கோபத்தை ஆபீசில் காட்ட ஆரம்பித்தாள். ரமேஷ் தனக்கு நேருகின்ற அவமானங்களை மாற்ற நினைத்து கல்பனாவை வேலையை விட்டு விட சொன்னார்.
கல்பனா சரி என்று அன்றே ராஜினாமா செய்தாள். சந்தோஷமாக வீடு சென்ற ரமேஷ் கல்பனாவைத் தேடினார். அவளுக்கு போன் போட்டார். கல்பனா அங்கு இருந்தால் தானே...அவள் திருச்சி வந்து சேர்ந்தாள் அம்மா வீட்டிற்கு.
கோபத்தில் கிளம்பி வந்த கல்பனா மிகவும் கஷ்டங்களை சந்தித்தாள் .ரமேஷ் அடுத்த வாரமே திருச்சியில் வந்து நின்றார். கல்பனாவை தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சிப் போராடிப் பார்த்தார். கல்பனாவின் ஒரே பதில் தனிக் குடித்தனம் வைப்பது பற்றி தான். பாரம்பரியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ரமேஷ் செய்வது அறியாது தவித்தார். வந்த வழியே கிளம்பினார் எதுவும் சொல்லாமல்.
சென்னை திரும்பிய ரமேஷ் தனது குடும்ப சம்மதத்தோடு தனிக்குடித்தனம் வைக்க வீடு பார்த்தார். கல்பனாவும் வந்து சேர்ந்தாள். ஆனால் ரமேஷ் அவர் வீட்டிற்கு ஒரு போதும் போகக்கூடாது, தானும் வர மாட்டாள் என்று நிபந்தனை விதித்தாள். பெண் குழந்தை பிறந்தது. அவளைக் கொண்டு போய்க் கூட ரமேஷ் பெற்றோரிடம் காட்டக்கூடாது என்றாள்.
போகப் போக கல்பனா - ரமேஷ் இடையில் நிறைய இடைவெளி ஆரம்பம் ஆனது. போன கால் நிற்குமா? மீண்டும் கல்பனா குழந்தையுடன் திருச்சி கிளம்பி விட்டாள்.
திருச்சி வந்த சில நாட்களில் கல்பனா தனது தாயை இழந்து தனியள் ஆனாள். தனிக்குடும்பம் நடத்திய அவள் தினம் தினம் மனப் போராட்டத்துடன் வாழ்ந்தாள். மறுபடி இறங்கி வந்தார் ரமேஷ். கல்பனா ஏறிய பிடிவாதத்தில் இருந்து இறங்க மறுத்தாள்.
ரமேஷ் சென்னையில் பெற்றோர் வீட்டுக்கு போகாமல் தனியாக வாழ்ந்தார். சிக்கல்கள் நிறைந்த நூற்கண்டு ஆனது அவர் வாழ்க்கை.
கல்பனாவின் மகள் சாந்தி வளர்ந்து யுவதி ஆனாள். அம்மாவை போலவே பிடிவாதக்காரி. நிறைய கேள்விகள் கேட்டாள். கல்பனாவால் கற்பனை கூட செய்து முடியாத கேள்விகள்.
இருக்கும் பதில்களை நெஞ்சுக்குள் முழுங்கினாள் கல்பனா. படித்து முடித்து கனடாவில் செட்டில் ஆவேன் என்று அடம் பிடித்தாள் சாந்தி. கேள்விக்குறி ஆனது கல்பனாவின் வாழ்க்கை.
No comments:
Post a Comment