Thursday, May 2, 2013

Living as an independent family!



தனிக்குடித்தனம் - பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம் !
டாக்டர். பாலசாண்டில்யன் 

சிறு வட்டத்தில் வசதி வட்டத்தில் வாழ விரும்பும் இன்றைய கால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவு தான் . தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப் பட்டு இருக்க விரும்புகிறோமா ?

தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை.

வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .

பிடித்ததை பிரிந்து இருக்கலாம் . அது தியாகம். பிடித்தவரை பிரிந்து இருந்தால் அது சுய நலம். பிரிந்து வாழ்ந்தால் வருவது இன்பமா, சந்தோஷமா , திருப்தியா, அமைதியா, சேமிப்பா, சுதந்திரமா ?
சேர்ந்து வாழ்ந்தால் பெறுவது அன்பா, வெறுப்பா, பாசமா, பாதகமா ?
பிரித்து பார்த்து புரிந்து கொள்ளலாம். பிரிந்து வாழ்ந்து புரிந்து கொள்ளலாம்.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.
எது அதிகம் ? அன்பா, வெறுப்பா, பொறுப்பா, வசதியா?
எது குறைவு ? மகிழ்ச்சியா? சுதந்திரமா ?

ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும் என்பார்கள்.
வார்த்தைக்கு வலிமை உண்டு. வலியும் உண்டு.
வார்த்தை புரிந்து போனதால் வாழ்க்கை பிரிந்த கதைகள் நிறைய உண்டு.

வாழ்க்கை புரிந்து போகும் போது வார்த்தை வெறும் வெற்றுச் சொல்லாவதும் உண்டு. வாழ்க்கை என்றால் நிறையும் உண்டு. குறையும் உண்டு.

சேர்ந்து இருக்கும் குடும்பங்களில்
- என்ன சமைக்கலாம் என்கிற சர்ச்சை தினம் வரும்
- தாத்தாவுக்கு ரசம் சாதம்
- பையனுக்கு காரக்குழம்பு
- பேரனுக்கு பிஸ்சா அல்லது நூடுல்ஸ்
என்ன தான் செய்வாள் மருமகளும் மாமியாரும் ஒருவரைப் பார்த்தால் மற்றவர்க்கு ஆகாது.
அடுத்து டிவி சர்ச்சை
- IPL பார்க்க விரும்பும் கணவன்
-கார்ட்டூன் பார்க்க விரும்பும் பேரன்
- நியூஸ் அல்லது பஜனை பார்க்க விரும்பும் பெரியவர்
- சீரியல் பார்க்க விரும்பும் மாமியார்

அதனால் இன்று பல வீடுகளில் அஞ்சறைப் பெட்டி போல வெவ்வேறு சரக்கு தான் ...சமாசாரம் தான்.

அதையும் மீறி பேரனுக்கு தன பென்ஷனிலிருந்து சைக்கிள் வாங்கித் தரும் தாத்தா . கணவனுக்கு முன்னால் மாமனாருக்கு காபி தரும் மருமகள். எது செய்தாலும் நொட்டு சொல்லும் மாமியார். போக வர ஜாடையாய் பேசும் நாத்தனார் ...!

அது சரி...தனிக்குடித்தனம் போனால் அடிக்கடி ஜொள்ளு விடும் பக்கத்து பிளாட்டு பைத்தியக்காரன். வந்து வந்து வம்பு பேசும் எதிர் வீட்டு மாமி. எப்போதும் சண்டை பிடித்துக் கொள்ளும் இளஞ்ஜோடிகளின் சத்தம். எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்கும் பிளாட் செக்ரெடரி. பார்கிங்குக்கு பிரச்சனை தரும் செக்யூரிட்டி. அப்போது நினைத்துப் பார்ப்பது நம் வீட்டு ஹீரோ மாமனாரை...!
குழந்தைக்கு ஜுரம். தூக்கி தூக்கிப் போடும் போது மருமகளுக்கு தூக்கி வாரிப் போடுகிறது. மாமியார் இருந்தால் ஒரு கஷாயம் வைத்து தந்து இருப்பார்.

தினம் தினம் லேட்டாக வரும் கணவன். அப்போது யோசிப்பாள் ...அந்த வீட்டில் எப்போதும் மனிதர்கள் கலகல. உணர்ந்ததில்லை தனிமையும் பயமும்.
மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் இலையின் பசுமை. உதிர்ந்தாலோ பிரிந்தாலோ இல்லை சருகாகும். நிறம் மாறும். தினம் வாடும்.
இணைந்து இருக்கும் போது இயல்பு இருக்கும். இயற்கையான உறவு இருக்கும். உறவுகளின் அர்த்தம் இருக்கும்.

இருட்டும் போது எருமை தெரிவதில்லை. இருக்கும் போது அருமை தெரிவதில்லை. அருமை தெரியும் போது ஆனந்தம் உண்டு. அருமை தெரியவில்லை என்றால் அங்கே கண்ணீரே உண்டு.

தென்னங்கீற்றுகளில் ஓலைகள் பல உண்டு. ஓலைகளும் கீற்றுகளும் தனித்தனியே...ஆனால் மரத்தில் ஒட்டிக் கொண்டு...! மட்டை விழுந்தால் 'மாறு' ஆகி மாறிப் போகும்.
வாழை மரத்தில் இலைகள் பல உண்டு. விரியாத ஒன்று. விரிந்த இளசு ஒன்று. விரிந்து முதிர்ந்த ஒன்று. விதையிடாமலேயே அடுத்தடுத்த வாழை கன்றுகள் ஒட்டியபடி வளர்வது கண்டிருப்போம்.

வாழ்க்கையும்  அப்படித்தான். சேர்ந்து இருந்தால் இனிமை உண்டு.
நிறைவாக நிதானமாக யதார்த்தமாக காலத்திற்கேற்ற ஒரு விஷயம் ஒன்று. ஒரே  பில்டிங்கில் தனித்தனி பிளாட்டில் இருக்கலாம். தவறில்லை. சேர்ந்து ..ஆனால் பிரிந்து ...உண்மை புரிந்து...! ஒரே தெருவில் கூட வேறு வீட்டில் இருக்கலாம். அடிக்கடி வந்து பார்த்துச் செல்ல வசதியாக இருக்கும். நாள் கிழமைக்கு சேர்ந்து கொள்ள  வளமையாக இருக்கும். ஒரே ஊரில் கண் காணாத இடத்தில காத தூரத்தில் வெவ்வேறு வீடா? இதுவே என் கேள்வி.

வாழ்க்கை  ஒரு வேள்வி.  வேள்வியில் பலி பழி இரண்டும் வேண்டாம். எல்லோரும் இன்பமாய் வாழ்வோம் என்ற பிரார்த்தனை இருக்கலாமே ..!
பிரிவோம்...புரிவோம் ...ஆனால் இனிமையில் இணைவோம் சந்திப்போம். இது பற்றி தனிமையில் அல்ல இணைந்தே சிந்திப்போம் ...!

No comments:

Post a Comment