Tuesday, October 23, 2012

thought to ponder

அன்று மலர்ந்து ...இன்று  உதிர்ந்து...! -
 டாக்டர் பாலசாண்டில்யன்

நீ சேர்த்து விட்ட இல்லம்
 நிறைவாகத் தான் இருக்கிறது
இங்கு உள்ளவர் பலரும்
என்னைப் போல் என்பதால்....!

உன்னை பள்ளியில் சென்று தள்ளிவிட்ட
உருக்கமான அந்த நாள் நினைவுக்கு வருகிறது
கதறக் கதற உன்னை உதறி வருவேன்
பள்ளியில் போதிய வசதி பற்றி
பாவி நான் விசாரித்ததில்லை
உனக்குப் பிடிக்காத ஆசிரியர்
உன் முதுகை வேலுப்பதை விசாரித்ததில்லை நான்

நல்ல இல்லமா என்று நீயும்
நன்கு விசாரித்திருக்க மாட்டாய் இது திண்ணம்
நாற்றமடிக்கும் இந்த இல்லம்
நான் உன்னை பள்ளி தள்ளிய
காட்சியை தான் நினைவூட்டுகிறது

அன்று நான் உன் மீது
அன்பும் நேரமும் காட்டியதில்லை
இன்று நீ என் மீது
அக்கறையும் நேரமும் காட்டவில்லை
கணக்கிட்டுப் பார்த்தால்
சரியெனத் தான் தோன்றுகிறது

அன்று உன் எதிர்காலத்தைப் பற்றி
வியந்து பார்த்ததில்லை நான்
இன்று என் எதிர்காலத்தைப் பற்றி
பயந்து பார்க்கிறேன் அதனால் தானோ ?

நீ எப்படி இருக்கிறாய் எனக் கேட்க அருகதையில்லை
நான் எப்படி இருக்கிறேன் எனக்கேட்க நாதியில்லை
எங்கிருந்தாலும் நீ நன்றாயிரு
இங்கிருந்தே நான் வாழ்த்துகிறேன்
வர வேண்டாம் உனக்கு என் நிலை
முதியவனாய்  நீ ஆகும் போது ..!

No comments:

Post a Comment