Tuesday, November 12, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 12

12.  என்ன நிகழக் கூடும் ?
அடுத்து என்ன நிகழக் கூடும் என்பது பற்றிய ஒரு உள்ளுணர்வு அல்லது அறிவு பொதுவாக பெண்களுக்கு ஆண்களை விட மிக அதிகம் உள்ளது என்று மனநல ஆலோசகர்கள் கண்டறிந்து சொல்கிறார்கள். அது அவர்களுக்கு இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை எனலாம். 

சில சமயம் வீடுகளில் ஒரு சம்பாஷணை நிகழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது பெண்கள் கண்களாலேயே தமது கணவர்கள் அல்லது மகன்களுக்கு ஜாடை காட்டி எச்சரிக்கை செய்வார்கள். ஆனால் ஆண்கள் அவற்றைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் செய்வதேயே செய்து மாட்டிக் கொண்டு முழிப்பார்கள். இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கலாம்.அடுத்து இப்போது கொஞ்சம் மெதுவாக பேசுங்கள், எங்கேயாவது கேட்டுக் கொண்டே அவர்கள் வந்து விடப் போகிறார்கள் என்று பெண்கள் எச்சரிப்பார்கள். எப்படித் தான் அவர்களுக்குத் தெரியுமோ அதே போல நடக்கும். அவர்கள் சமையல் செய்யும் பொழுது கூட ஓரிருவருக்கு சேர்த்து செய்து வைப்பார்கள். அங்கே அவர்கள் கணித்த படி சில திடீர் விருந்தாளிகள் வந்து நிற்பார்கள்.சில நேரம் காலையில் வெயில் அடிக்கும் பொழுது இன்று மழை வந்தாலும் வரும், எதற்கும் குடை கொண்டு போங்கள் என்று சொல்லுவர் பெண்கள்.

இந்த அடிப்படை உள்ளுணர்வு ஆண்களுக்கு இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களுக்கும் இது உண்டு. அப்படித்தான் பெரு நிறுவனங்களின் தலைவர்கள் சில டெண்டர்களை கோட் செய்வர். சில ஆர்டர்களை நினைத்தவாறு அடைந்து நிற்பர். சில உயர் அதிகாரிகளை சில நிமிடங்களில் நேர்காணல் செய்து தேர்வு செய்வர் அல்லது வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்வர். அவர்கள் முடிவு பெரும்பாலும் சரியாகத் தான் இருக்கும். தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்களைக் கொண்டு எதிர்காலக் கணிப்புகளை மேற்கொள்ளுவதில் நிறுவனத்தின் தலைவர்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்பதை அவர்களால் துல்லியமாகக் கணிக்க முடியும். வாடிக்கையாளர்கள் இன்று எவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

பிறகு, எதிர்காலத்தில் அந்த வாடிக்கையாளர்கள் எந்த வகையான பொருள்களையும் சேவைகளையும் வாங்குவார்கள் என்று அவர்கள் தீர்மானிக்கின்றனர்.சில நிறுவனங்களின் தலைவர்கள் நெருக்கடிகளையும் முன்கூட்டியே எதிர்பார்க்கின்றனர். (பெண்கள் அஞ்சறைப் பெட்டிக்குள் நாளைக்கான செலவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்திருப்பர்) ஏதோ ஒன்று நிகழும்வரை அவர்கள் காத்திருப்பதில்லை. "எது தவறாகப் போகக்கூடும்?நிகழக்கூடிய எந்த விஷயம் என்னுடைய தொழிலுக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது?" என்று அவர்கள் எப்போதும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர்.சிறந்த தலைவர்கள் இன்னொரு வகையான சிந்தனையிலும் ஈடுபடுகின்றனர். எதிர்காலத்தை முன்னோக்கிப் (விஷினரி) பார்த்துவிட்டு நிகழக்கூடிய சாத்தியமுள்ள அனைத்து விளைவுகளையும் அவர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்கின்றனர்.பிறகு தான் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டில் இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு சில விளைவுகளை எதிர்பார்த்து கணித்து விளையாடிய இந்திய வீரர்கள் தலைவர்கள் என்றால் அது கபில்தேவ் மற்றும் அனைவரும் போற்றும் தல தோனி இருவரும் ஆவர்.

நெப்போலியன் தன்னுடைய போர்களில் பெரும்பாலானவற்றைத் தன்னுடைய கூடாரத்தில் வென்றதாகக் கூறப்படுகிறது.என்ன விஷயங்கள் தவராகப் போகும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு கணித்து அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார் என்று சொல்லப்படுகிறது.

முன்கூட்டியே சிந்திப்பதற்கு நேரம்
ஒதுக்கிடும்  மக்கள் உத்திசார் சிந்தனையில் சிறந்தவர்கள். மேலும் அவர்கள் மிகச்
சிறந்த அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றனர்.எனவே நாமும் வாழ்வில் அடுத்தடுத்து என்ன நிகழக்கூடும் என்று சிந்தித்து அதற்கான உத்திகளோடு செயல்பட்டு வெல்லுவோம். சரி தானே ?

No comments:

Post a Comment