Thursday, November 28, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 22


பிரிவினையும் பிற வினையும் 
நமது வாழ்வில் எல்லாவற்றிலும் ஒரு பிரிவினை இருக்கிறது. நல்லது கெட்டது, பெரியது சிறியது, பெரியோர் சிறியோர், ஏழை செல்வந்தர், படித்தோர் படிக்காதோர், உயர் சாதி கீழ் சாதி, உயர்ந்தது தாழ்ந்தது, மேடு பள்ளம், நகரம் கிராமம், எளியோர் வலியோர், கற்றோர் கல்லாதோர் என்று  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரித்தாளும் யுக்தியை இந்தியர்களுக்கு சொல்லித் தந்ததே ஆங்கிலேயன் தான். டிவைட் அண்ட் ரூல் என்பார்கள். அப்படி பிரிவினை என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. அதனால் ஏற்படும் பிறவினைகளையும் நாம் சந்தித்த வண்ணம் தான் இருக்கிறோம்.
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அக்காலம் முதற்கொண்டே சொல்லி இருக்கிறார்கள். அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்று சொல்லுவார் பாரதி. பண்புள்ளவரை மக்கள் என்றும் பிறரை மாக்கள் என்றும் சொல்லுவது உண்டு. 
இப்போது சொந்த வீடு வாடகை வீடு என்பது போல, கணினி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், செல் வைத்திருப்பவர்கள் செல் இல்லாதவர்கள் என்று பிரிக்கிறார்கள். அதிலும் வாட்சப்பில் இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடும் உண்டு. அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர். டெக்னாலஜி தெரிந்திருப்பவர் தெரியாதவர் என்ற பிரிவு அது. 
அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் சர்க்கரை கார்ட் வைத்திருப்பவர்கள் என்ற பிரிவினை சென்ற வாரம் மாநில அரசு தகர்த்து விட்டு விருப்பம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் சென்று அரிசிகார்ட் வாங்கிக் கொண்டு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் வாங்கி விடலாம் (இன்று முதல் - 29.11.2019 )
பிரித்துப் பார்த்ததை எல்லாம் சேர்த்து பார்ப்பது பிற வினை கருதித் தான். எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் அவர்களும் நம் பக்கம் இருப்பார்கள் என்பது ஒரு யுக்தி.
இதை ஆங்கிலத்தில் இன்க்ளுசிவ் (சேர்த்துக்கொள்ளப்பட்ட அல்லது இணைத்துக்கொள்ளப்பட்ட) என்று சொல்லுவார்கள். ஆகவே பிரிவினை ஒரு புறம் இருந்தாலும் அதனால் ஏற்படும் பிற வினை கருதி மாற்றி அமைக்க எண்ணுகிற பாங்கு சில சமயம் ஏற்படுகிறது.
மேற்சொன்னதெல்லாம் சமூக வெளியில். வீட்டில் பார்த்தால் தற்போது தனிகுடித்தனமே பல இடங்களில் நடக்கிறது. அது வேலை, இருக்கும் இடம், கிடைக்கும் வருமானம் என்று பல காரணிகளால் உருவானது. சில திருமண நிபந்தனைகளால் கூட என்றும் சொல்லலாம். இந்த குடும்பப் பிரிவினை பெற்றோரை பெரியோரை பிரித்து வைத்து விட்டது. இதன் பிற வினை என்று பார்த்தால், உறவினர்களின் தொடர்பு அறவே அகன்று போகிறது. தவிர, பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி இவர்களின் அரவணைப்பு அன்பு, வீட்டுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் போகிறது.
இப்படித் தான் முன்பு சொல்லி வைத்தார்கள் : அன்னைக்குப் பின் உண்டி பாழ்; தந்தைக்குப் பின் கல்வி பாழ் என்று. இப்போது ஸ்விக்கி, ஊபர் வந்து விட்ட பிறகு அன்னையின் கவலை இல்லை. கூகிள் வந்த பிறகு மாதா பிதா கூகிள் தெய்வம் என்றாகி விட்டது. ஆகவே பிரிவினை என்பது பல இடங்களில் பலவாறு நடைபெற்று வருகிறது.  அதன் பிற வினைகளையும் அனுபவிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
நிறுவனங்களில் கூட நாமெல்லாம் ஒரே நிறுவனம் என்ற உணர்வை விட நீங்கள் இந்த டீம், நாங்கள் அந்த டீம் எனும் போது அந்த குழுவிற்குள் இருக்கும் ஒற்றுமை நிறுவனம் முழுவதும் இருப்பதில்லை. இதுவும் பிரிவினையால் வந்த பிற வினை என்று கொள்ளலாம். அந்தந்த பணிகளின் அடிப்படையில் இந்த டீம் பிரிக்கப்பட்டாலும், எல்லோரும் ஒரே நோக்கத்துடன் ஒரே நிறுவனத்திற்கு பணி புரிகிறோம் என்ற அந்த ஒத்துணர்வு எண்ணம் நிறுவனத்தை நிச்சயம் பல படிகள் மேம்படுத்தும்.
மலர்களில் சாதி (சாதி முல்லை) இருக்கிறது. பறவைகளில் பல வகை உண்டு. விலங்குகளில் வீட்டில் வளர்க்கும் வகை, காட்டில் வசிக்கும் சில ஆக்ரோஷமான விலங்குகள் இருக்கின்றன. இந்த பிரிவினை சில நேரம் தேவைப்படுகிறது. 
கோவில்களில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என உண்டு. அதே போல ரயில் வண்டிகளில் சாதாரண வகுப்பு, எல்லா வசதிகளும் கொண்ட முதல் வகுப்பு என்றும் இருக்கிறது. இதில் என்ன பிற வினை என்று நீங்கள் கேட்கலாம். பணம் படைத்தோர் எங்கு சென்றாலும் சிறப்பு அடைகிறார்கள் என்று மாறி விட்ட உலகம் இது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது நிச்சயம் நாளுக்கு நாள் உலகெங்கும் குறைந்து வருகிறது. இதில் என்ன சந்தேகம்.
அன்னை தமது குழந்தைகளை பிரிவினை ஏதும் இன்றி அன்பு செலுத்துவது போல அரசனும் (ஆட்சியாளர்களும்) மக்கள் அனைவரையும் தம் மக்கள் என்று எண்ணுதல் வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அப்படி இல்லை என்பது நாம் அறிவோம். அது அரசியல். அதற்குள் நுழைய விழையவில்லை.
பிரிவினை தவிர்த்தால் பிற வினைகள் தானே மறையும் என்பது தான் இங்கே சொல்ல வந்த கருத்து. இயலுமா ? நிச்சயம் கருத்துப் பிரிவினை இதனைப் படிப்போர் மத்தியில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment