Saturday, November 16, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 15

15. விதிவிலக்குகள் கிடையாது 
எந்த விதிக்கும் விதிவிலக்குகள் கிடையாது என்பது தான் விதிவிலக்கு. அப்படியெனில் சில விதிவிலக்குகள் உண்டு.
சிக்கல்கள் கவலைகள் இருப்பதில் குழந்தைகள் தான் விதிவிலக்கு என்று நாம் சொல்லுவோம். குழந்தைகளைப் பள்ளியில் சேருங்கள். வீட்டுப்பாடம், மனப்பாடம், பரிட்சை என்று அவர்கள் படும் அவஸ்தைகளுக்கு அளவே கிடையாது.
எல்லோருக்கும் பசி எடுக்கிறது, எல்லோருக்கும் தாகம் எடுக்கிறது, எல்லோருக்கும் தேவைகள் இருக்கிறது. எல்லோருக்கும் பணம் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் வேட்கை இருக்கிறது. எல்லோருக்கும் வெற்றியும் பாராட்டும் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் கடமைகள் கனவுகள் இருக்கின்றன. எல்லோருக்கும் பொறுப்புக்கள் இருக்கின்றன.எல்லோருக்கும் நோய் வருகிறது. எல்லோருக்கும் வயோதிகம் வருகிறது. எல்லோருக்கும் மரணம் நிகழ்கிறது. இப்படி சில வாக்கியங்களைப் படித்த பின்பு என்ன தோன்றுகிறது? யாரும் இவற்றில் விதிவிலக்கு கிடையாது என்பது தானே?
மருத்துவர் என்றாலும் சில நேரம் வலி வேதனை வருகிறது. போலீஸ் வீட்டிலும் திருட்டு நடக்கிறது. அரசன் வீட்டிலேயே குற்றங்கள் நடக்கிறது. கடவுள் சிலை கூட காணாமல் போகிறது. பிரதமரை அவர் காவலாளியே கொன்றது நம் நாட்டில் தான்.
நெருப்பென்று சொன்னால் நீரில் அணைகிறது. நீர் என்று சொன்னால் நெருப்பில் வேகிறது. வானத்தில் கூட ஓட்டை விழுகிறது. ஆழ்கடலிலும் பேரலை அடிக்கிறது.
யானைக்கும் அடி சறுக்கும் என்று ஏன் சொன்னார்கள்? தவறு என்பது யார் வேண்டுமானாலும் செய்ய நேரிடலாம் என்பதை உணர்த்தத் தான். 
இவற்றையெல்லாம் மீறி சில விதிவிலக்குகள் இருக்கின்றன. கோவில்களில் அமைச்சர் ஒருவர் வந்தால் வரிசையில் நிற்க வேண்டாம். பேருந்தில் குறிப்பிட்ட வயது வரை பயணச்சீட்டு எடுக்க வேண்டாம். சேவை செய்யும் தன்னார்வ நிறுவனங்களின் வருமானத்திற்கு வரிவிலக்கு இருக்கிறது. சில பொருட்களுக்கு அரசு வரி விதிப்பதில்லை. சில நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுவதில்லை. சில நாடுகளில் எந்த பொருளுக்கும்  விற்பனை வரி வைப்பதில்லை. 
அதிகம் பார்த்தால் கண்கள் வலிக்கும். அல்லது கண்களில் நீர் வரும். அதிகம் சாப்பிட்டால் வயிறு வலிக்கும். அதிகம் நடந்தால் கால்கள் வலிக்கும். அதிகம் தூங்கினால் உடற்சோர்வு வரலாம். அதிகம் உழைத்தால் மயக்கம் வரலாம். ஆனால் அதிகம் கேட்பதால் காதுகள் வலிப்பதில்லை. (கேட்டால் காது வலிக்காது).
இப்படி சில விதிவிலக்குகளை பொதுவாக்கிட முடியாது. விதிகள் ஒரு நாள் மாறலாம். ஆனால் அன்றும் அந்த விதிகளில் ஏதேனும் விலக்குகள் இருக்கும். 
விதிவிலக்குகளை விதிகளாக மாற்றி விட முயற்சி செய்யக்கூடாது. உதாரணத்திற்கு ஒன்பது மணி அலுவலக நேரம் என்றால் பத்து நிமிடம் வரை தாமதமாக வரலாம். சிலர் அந்த பத்து நிமிடங்களைச் சேர்த்து தமது அலுவலக நேரத்தை 9.10 என்றே மாற்றி விடுவதுண்டு.
சிவப்பு விளக்கைப் பார்த்த பிறகு நான்கைந்து வாகனங்கள் கடக்கும். விடியற்காலையில், மதிய நேரத்தில் சிக்னல் அருகே போலீஸ் இல்லை என்று தெரிந்தால் ஒரு வழிச்சாலை கூட இரு வழிச்சாலை ஆகும். இது போல விதிகளை மீறுவது நல்லது இல்லை தானே?
விதிகளை மதிப்போம் என்று நான் இங்கே சொன்னால், தலை'விதி' என்று (கர்மா) என்று புரிந்து கொள்ள வேண்டாம். அப்படியே எடுத்துக் கொண்டாலும் சில ஆன்றோர்கள் சொல்லுகிறார்கள் விதியைக் கூட மதியால் வென்று விட முடியும் என்று. விதிகளை மீற வேண்டும் என்ற எண்ணங்களை விலக்கி வைப்போம். எல்லாமே சீர்மையுடன் மிகச்சரியாக  நடைபெற விதிக்கப்பட்டவற்றை மீறுவதில் ஒன்றும் புரட்சி வந்துவிடாது. 

No comments:

Post a Comment