Friday, November 15, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 14

இது தான் நல்ல தருணம் 
சரியான தருணம் வருமென்று காத்திருந்தால் அதே வராமலே போகலாம். ஒவ்வொரு நாளுமே தனித்தன்மை வாய்ந்த தருணங்கள் நிறைந்தவை. மிகச் சரியான நேரம் அல்லது வாய்ப்பு வரும் அது வரை பொறுத்திருப்போம் என்று காத்திருக்க வேண்டியது இல்லை. சரியான ஊக்கம் கிடைக்கும் அது வரை பொறுத்திருப்போம் என்பதும் தவறு. நாம் விரும்புகிற அந்த சிறப்புத் தருணத்தை நாமே உருவாக்கலாம் என்பதே உண்மை. 
தினம் தினம் மிக நல்ல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடக்கின்றது. நாமும் இது போல தொடங்கிச் செய்து விடலாம் என்று காத்திருக்கும் பொழுது நாம் செய்யத் தவறி விடுகிறோம். காத்திருக்கும் நேரம் அப்படி ஒன்றும் நாம் புதிதாக கற்றுக் கொண்டு விடுவதில்லை. நாம் பெரிதாக முன்னேறி விடுவது இல்லை. புதிய அனுபவங்கள் பெற்று விடுவதில்லை. சும்மா இருக்கும் பொழுது எப்படி ஞானமும் அனுபவமும் கிடைத்து விட முடியும் ?
நாம் காத்திருக்கும் நேரங்களில் பெரும்பாலும் பற்பல மாற்றங்கள் நம்மைச் சுற்றி நடந்து விடுகின்றன. மக்களின் விருப்பங்கள் தேர்வுகள் மாறி விடுவதும் உண்டு. வேறு சிலர் நாம் நினைத்து வைத்திருந்ததை தொடங்கி விடும் வாய்ப்பும் உண்டு. அப்போது நாம் வருந்துவோம். நான் மட்டும் அன்றே தொடங்கி இருந்தால் என்று வருத்தமான கதைகள் சொல்லுவதில் உங்களுக்கு நேரம் உள்ளதா? 
என்பது வயதில் கூட ஹார்மோனியம் அல்லது வயலின் கற்றுக் கொள்ளலாம். மலை ஏறி விடலாம். ஆனால் 45 வயதில் அது இன்னும் சுலபமாக இருந்திருக்கும் அல்லவா ? சரியான தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் நல்ல விளைவுகளை மாற்றங்களை வாழ்வில் கொணரும். முடிவெடுத்து செயலில் இறங்கி அதில் தோற்று பாடம் கற்று கிடைக்கும் ஓர் அனுபவம், சும்மா இருந்தால் கிடைத்து விடுமா?
நல்ல தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து கோட்டையைப்  பிடிப்பதற்கு பதில் கோட்டை விட்டு விட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருத்தல் முட்டாள்தனம் தான். நமது வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நேரம் காலம் தருணம் கிரகம் என்று வேறு பலவற்றின் கட்டுப்பாட்டில் போய் விடுவது மிகவும் துரதிர்ஷ்டமே. ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, என்று பார்த்துப் பார்த்து நாம் தொடங்கும் நல்ல நாள் நமக்கு மிகவும் கஷ்டமான நாளாக இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் தான் பெரியோர் 'நாள் என் செயும் வினை தான் என் செயும்' என்று சொன்னார்கள். 

தான தருமம் கூட நினைத்த மாத்திரத்தில் செய்யாமல் சில கணங்கள் கழித்து யோசிக்கும் பொழுது மனது மாறி விடலாம். அப்போது பத்தாயிரம் ரூபாய் வழங்க எண்ணும் நாம் இரண்டாயிரத்தில் முடித்து விடுவோம். ஒன்றுமே கூடக் கொடுக்காமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நன்றி சொல்ல, மன்னிப்பு கேட்க, விருபுகிறேன் எனச் சொல்ல, நலம் விசாரிக்க, உடல்நலம் சரியாதவரை சென்று காண என்று சில விஷயங்களை தள்ளிப் போட்டால் அது நடைபெறாமலே போய் விட வாய்ப்பு உள்ளது. ஆக எல்லா விஷயங்களுக்கும் இது தான் நல்ல தருணம்.
நம்மை, நமது திறனை, ஆற்றலை, நமது நேரத்தை நாம் மதிக்கத் தொடங்கினால் எல்லா நாளுமே சிறந்த நாளாக மாறிவிடும். சிறு சிறு ரிஸ்க்கள் எடுக்காமல் வாழ்வில் சுவாரசியமே இருக்காது. சவால்கள் வேண்டும். அவற்றை சமாளிக்கும் திறனும் சாதுர்யமும் நமக்குள் இருக்கிறது.
நாளைக்காக காத்திருந்தது போதும். நல்ல நாளைக்காக காத்திருந்தது போதும். இன்றே இப்போதே நல்ல தருணம் என்று தொடங்குங்கள் நீங்கள் ஆசைப்படுவதை, நினைப்பதை, அடைய எண்ணுவதை. மாயங்கள் நிகழும் என்று காத்திருக்காமல் மாயங்களை நாம் நிகழ்த்திக் காட்டுவோமே. நீங்கள் வெற்றிப்படிகளில் ஏறி விட்டதாக கற்பனையில் பார்த்துக் கொண்டு தியானம் செய்வதை விட, வெற்றிப்படிகளில் ஏறி விடலாம் சீக்கிரமாக. எதற்கு இந்த காத்திருப்பு. காலம் நம்மை கழுத்தறுத்து விடும். நமது காலத்தை தருணத்தை வெற்றியை சந்தோஷத்தை உருவாக்குவோம். தள்ளிபோடுவதால் தள்ளாமை தான் வரும். உழைப்பை அள்ளித் தருவதால் வெற்றி நம்மைத் துரத்தும். உலகம் நம்மை உற்றுப் பார்க்கும்.


நிறைவாக இந்தப் பாடலை நினைவில் வைப்போம்: "நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்". எனவே கற்பனையில், உறக்கத்தில் தயக்கத்தில் நாட்களை கழிப்பதை விடுவோம். உடனே தொடங்கி உன்னதம் அடைவோம்.

No comments:

Post a Comment