Sunday, November 24, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி 19

ஒத்து ஊதுவதும் ஒத்துப் போவதும் 
நமது அன்றாட வாழ்வில் நிறைய பேர் ஒத்து ஊதுவதில் நிறைவடைந்து விடுகின்றனர். அதே சமயம் ஒத்து ஊதாது எதிர்க்கருத்து வைப்பவர்களும் உண்டு. அவர்களை பொதுவாக நாம் எல்லோரும் எதிரியாகப் பார்ப்பது வழக்கம். எதிர்க்கருத்து சொல்லுபவர்களை உற்று நோக்குங்கள். ஏன் அவர்கள் ஒத்து ஊதவில்லை என்ற பொருள் விளங்கும். நமது கருத்தும் எண்ணமும் கூட மெருகேறும்.
ஆம் என்று எதெற்கெடுத்தாலும் சொல்லுபவர்கள் பல நேரங்களில் குற்ற உணர்வுகளில் இருக்கிறார்கள் - நம்மால் ஏன் நமது கருத்தை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்று. தவறு என்றோ நோ என்று சொல்லுபவர்களையோ நாம் எதிரியாகப் பார்க்க வேண்டியதில்லை. அது அவர்கள் உரிமை. அவர்கள் அப்படிச் சொல்லுவதற்கு சில காரணங்கள் உண்டு. "நான் நீங்கள் சொல்லுவதை ஏற்கும் நிலையில் இல்லை, நீங்கள் என்னை அசௌகரிய நிலைக்கு தள்ளுகிறீர்கள், நீங்கள் சொல்லுவது புரியவில்லை, வேறு அபிப்ராயம் எதிர்பார்க்கிறேன், இன்னும் சில விளக்கங்கள் கொடுத்தால் நல்லது, மற்றவர்களை ஆலோசித்து சொல்கிறேன்" இப்படி பல.
அப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக நோ என்பவர்களை சரி யெஸ் என்று சொல்ல வைத்தால் அது அவர்கள் மனசாட்சிக்கு எதிராக இருக்கலாம். எனவே, அவர்களின் நோ எனும் நிலை சில நேரம் நம்மை இன்னொரு முறை சிந்திக்க வைக்கும், தவறான முடிவுகளில் இருந்து நம்மைக் காக்கும், அவர்களையும் நம்மோடு சேர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். அது முன்னேற்றத்திற்கு உதவும்.
ஒத்துப்போதல் எனும் போது நிறைய விஷயங்களைச் சுருக்கமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது. கணவர் மனைவி இருவரிடமும் இது தேவைப்படுகிறது. அது குடும்ப அமைதி மற்றும் சந்தோஷத்திற்கு உதவுகிறது. அதே போல பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே இந்த ஒத்துப்போதல் தேவைப்படுகிறது. இல்லை எனில் தினம் தினம் போராட்டம். 
நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களாக இருக்க இந்த விஷயம் மிக முக்கியம். இதை ஒத்துணர்வு எனலாம். 
நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் இந்த ஒத்துப்போதல் மிக மிக அவசியம், முக்கியம். அப்போது தான் அங்கே சுமுகமான நிறுவன இயக்கம் நடைபெறும். சக ஊழியர்கள் மத்தியில், வாடிக்கையாளர்கள் மத்தியில் என பல நிலைகளில் இது தேவையாகிறது. 
நோயாளி மருத்துவரோடு ஒத்துப்போதல் இருந்தால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும். ஆசிரியரோடு மாணவர்கள் ஒத்துப்போகாவிடின் அங்கே பயிற்றுவித்தல் நடைபெறாது. காவல் நிலையத்தில் குற்றவாளி ஒரு கட்டத்தில் அதிகாரியோடு ஒத்துழைத்தாக வேண்டும். வக்கீலோடு ஒத்துப் போனால் தான் அவர் ஒரு வழக்கை சிறப்பாக வாதிட்டு வெற்றி பெற முடியும்.
ஒரு குடியிருப்பில் இருக்கும் பிற குடித்தனக்காரர்களோடு ஒத்துப் போகாவிடின் அங்கே வசிப்பது என்பது நரகம் போலாகி விடும். ஊரோடு ஒத்து வாழ் என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஊரோடு ஒத்து வாழ்ந்தால் அங்கே அமைதி மகிழ்ச்சி நிலவும். 
எல்லாவற்றிற்கும் ஒத்துப் போதல் யெஸ் சொன்னால் நமக்கு சுயபுத்தி இல்லை என்றாகி விடும். அது மட்டுமா? உங்களுக்குப் பிடிக்காத ஒன்றிற்கு நீங்கள் சரி என்று சொன்னால் அடுத்தவரை மகிழ்வித்து உங்களை வருத்தப்படுத்திக் கொள்ளுகிறீர்கள். பிறரை வெறுப்பீர்கள், உங்கள் வேலையில் தவறு செய்வீர்கள், உங்கள் சக்தியை இழந்து பலவீனமாவீர்கள், உங்கள் வாழ்வின் ஒரு பகுதியை கெடுத்துக் கொள்வீர்கள். நோ என்று சொன்னாலும் பிறர் மனம் நோகாமல் சொல்லுதல் மிக நல்லது. 


இப்போது யோசித்துப் பாருங்கள். ஒத்து ஊதுதல் வேறு. ஒத்துப் போதல் வேறு. என்ன சரி தானே? நீங்கள் நான் சொன்னது சரி என்றால் மட்டும் ஒத்துக்கொள்ளுங்கள். என்னைப் பிடிக்கும் என்பதால் ஒத்து ஊத வேண்டாம். 

No comments:

Post a Comment