Saturday, November 30, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 24


கடமையும் கடுமையும் 
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே எனும் புறநானூற்றுப் பாடலிலே யார் யாருக்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன என்று மிக அழகாக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது, மகனைப் பெற்றுப் பேணிக் காத்தல் ஒரு தாயின் கடமை, அவனைப் படிக்க வைத்து சான்றோனாக ஆக்குதல் ஒரு தந்தையின் கடமை, நன்னடத்தை உள்ளவனாக விளங்குதல் ஒரு வேந்தனுக்கு கடமை என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாணவனின் கடமை என்பது விடுப்பு எதுவும் எடுக்காமல் தினமும் பள்ளிக்குச் சென்று அங்கே சிறந்த முறையில் கல்வி கற்றல் எனலாம். ஓர் ஆசிரியரின் கடமை என்பது இருக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் சிறந்த முறையில் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல், அவர்களை நல்வழிப்படுத்துதல், ஒழுக்கம் கற்பித்தல், கல்வி மூலம் வாழ்வில் முன்னேறச் செய்தல் எனலாம்.
ஒரு பெற்றோரின் கடமை என்று பார்க்கும் பொழுது, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், அவர்கள் அன்பு செலுத்தி நல்ல விஷயங்களை தமது நடத்தை மூலம் உணரச்செய்து குடும்பத்தை முன்னேற்ற ஆவன செய்து உதவுதல், பிள்ளைகளுக்கு உணவு உடை உறைவிடம் அளித்து அவர்களை ஆரோக்கியமான ஒழுக்கமான பிள்ளைகளாக வளர்த்து அரவணைத்துப் பேணிக் காத்தல் என்று பட்டியல் போடலாம்.
ஒரு நிறுவன ஊழியரின் கடமை எனும் போது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு இவற்றை மனதில் கொண்டு தமக்கு இடப்பட்ட பணிகளை செவ்வனே சிறப்பாக அழகாக நேர்த்தியாக முறையாக தவறுகள் ஏதும் இன்றி செய்து முடித்தல், தவிர நிறுவனத்திற்கு எந்த அவப்பெயரும் வந்திடா வண்ணம் சிறந்த பொருள் அல்லது சேவைகளை வழங்குதல் போன்றவை ஆகும்.
ஒரு சிறந்த தலைவர் - லீடர் என்பவரின் கடமை என்றால் தன்னை தொடருவோர்க்கு நல்ல வழிகாட்டியாக, வெற்றிக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும் எனலாம். தவிர நடைமுறை மாற்றங்களை உணர்ந்து சிறந்த தொலைநோக்கு பார்வையோடு நல்ல யுக்திகளை கையாண்டு பிறரை ஊக்குவித்து முன்மாதிரியாக இருந்து வழிநடத்திட வேண்டும்.
இது தவிர அரசியல் தலைவர் என்றால் முறையே வரி செலுத்துதல், நாட்டின் சட்ட திட்டங்களை கடைபிடித்தல், நேர்மையாக இருத்தல், நம்பகத்தன்மையுடன் திகழ்தல், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நேர்மையுடன் காத்தல், நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தருதல், பொருளாதாரத்தை மேம்படுத்தல், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுதல் என்று பலவகையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
இது போன்ற கடமைகள் என்பது ஒவ்வொரு வகையான மனிதர்களுக்கும் உலகில் இருக்கின்றன. இவற்றை செய்பவர்கள் முழு ஆவலுடன் ஆற்றலுடன், விருப்பத்துடன் செய்கிறார்களா? கடனே என்று செய்கிறார்களா? (கடமை வேறு கடன் வேறு - என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்). கடுமையுடன் ஒரு கடமையை செய்ய நேரிட்டால் அது நிச்சயம் சரியாக இருக்காது.
அக ஊக்கம் மற்றும் வேட்கையுடன் செய்யும் எந்த வேலையிலும் ஒரு நேர்த்தி மற்றும் ஒழுங்கு இருக்கும். அதுவே புற ஊக்கத்துடன் பிறரின் உந்துதலில் கடுமையாக செய்ய வைக்கப்படும் ஒரு கடமை அல்லது வேலை என்பது ஏனோ தானோ என்று தான் முடியும். 
தானாக கனியும் ஒரு பழம் இனிப்பாக இருக்கும். அதை தடியால் கனிய வைத்தால் நிச்சயம் ருசியாக இருக்காது. அதே போல கடமையை கடுமையாக செய்யாமல் ஆவலுடன் விருப்பத்துடன் செய்தால் அதன் சிறப்பே தனி தான்.
கடமை ஆற்றும் போது கடுமையான வலியும் வேதனையும் உடல் மற்றும் மனச்சோர்வும் ஏற்படலாம். அதே கடமையை மிகவும் பிடித்து யாருடைய கடுமையிலும் செய்யாது இருந்தால் அந்த வலி தெரியாது. மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்...கருமமே கண்ணாயினார் என்று அக்கால நீதி நெறி விளக்கம் சொல்லுகிறது.
தானாக உவந்து செய்யும் கடமைகள் என்றும் உன்னதமாக உண்மையாக இருக்கும். ஏதோ ஓர் அழுத்தத்தில் கடனே என்று செய்யப்படும் எந்த செயலிலும் உண்மை இருக்காது. அது உருப்படியாகவும் இருக்காது.
கடுமை, கடுஞ்சொல் தவிர்த்து அன்புடன், அரவணைப்புடன், தட்டிக் கொடுத்து  முடிக்கப்படும் எந்த கடமையும் சிறப்பாக அமையும். கடனே என்றோ கஷ்டப்பட்டோ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. இதன் மூலம் சில நல்ல செய்திகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற கடமையுணர்வோடு எழுதப்பட்டது.

No comments:

Post a Comment