Wednesday, November 27, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 22


நேரம் உயிர் போன்றது, போனால் வராது 
காலத்தின் அருமை காலனின் அருமை இரண்டுமே மிகவும் முக்கியம். காலமும் காலனும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதனால் தான் நிகழ்காலம், இறந்த காலம் என்றும் எதிர்காலம் அல்லது வருங்காலம் என்றும் குறிப்பிடுகிறோம். 
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.  
என்பார் திருவள்ளுவர். எது செய்தாலும் அதை நேரத்தை செய்தால் தான் மதிப்பு. ஆடி கழித்து ஐந்தாம் நாள் என்பார்களே அப்படிச் செய்தால் அதற்கு நிச்சயம் பயனில்லை.
A friend in need is a friend indeed என்பார்கள் ஆங்கிலத்தில். எதற்கும் கால நேரம் என்பது மிக முக்கியம். 
காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்று பாரதி சொல்லுவது கூட இதைத்தான்.
பாண்ட் போட்டு உள்ளாடை போடுபவன் சூப்பர்மேன். உள்ளாடை போட்டு பாண்ட் போடுபவன் சாதாரணன் தான். எனினும் அதுவே சிறப்பு. எதை முன்னால் செய்வது. எதை பின்னால் செய்வது என்று வரையறுத்துக் கொள்ளுவது நல்லது.
பல நிறுவனங்களில் சந்திப்பு நேரம் குறித்துத் தருவார்கள். நாம் சென்று பார்க்க வேண்டும் என்றால் நம்மில் பலர் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் முன்பே அங்கு செல்லுவது வழக்கம். சந்திக்க அழைத்திருப்பவர்கள் பத்து மணி என்று சொல்லி விட்டு இரண்டொரு முறை நினைவூட்டிய பிறகும் பதினோறு மணிக்குத் தான் உள்ளே அழைப்பர்.  அது தான் நமது இந்திய பங்சுவாலிட்டி. அடுத்தவரின் நேரத்தை பெரும்பாலும் மதிப்பதில்லை.
பெரும்பாலும் கூட்டம் நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்பவர்களைப் பாருங்கள். மாலை 5 மணி என்று போட்டு விட்டு ஏற்பாட்டாளரே 5.15 க்கு தான் வருவார். கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் 4.50 க்கே வந்து அங்கும் இங்கும் டென்க்ஷனுடன் அலைந்து கொண்டிருப்பார்.
அதே போல ஐந்து நிமிடங்கள் வாழ்த்துரை என்று மேடைக்கு அழைத்து மைக் முன்பு நிறுத்தப்பட்டவர் அவர்களே இவர்களே என்றும் தன்னைப் பற்றிய சுய பிரதாபங்கள் பற்றியும் பேசி முடிக்கவே ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டு தமது பேச்சுக்குள் நுழைந்து முடிப்பதற்குள் சுமார் 23 நிமிடங்கள் கடந்து இருக்கும். ஏற்பாட்டாளர்கள் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போலச் சுற்றித் திரிவார்கள். பேசுபவருக்கு சிட்டு கொடுத்து அனுப்பினாலும் அவர் அதனை பார்க்கவே 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுவார்.  தமது பேச்சை முடித்துக் கொள்ளுவதற்கு முன்பு "காலத்தின் அருமை கருதி இத்துடன் எனது பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். பேசிட இன்னும் நிறைய இருக்கிறது. என்ன செய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எனக்கு அதற்குள் மூன்று முறை சீட்டு அனுப்பி விட்டார்" என்று அங்கலாய்த்துக் கொண்டு தரை இறங்குவார்.
இருப்பதிலேயே மிகவும் சுலபமான காரியம் என்னவென்றால் பிறரை குறை சொல்லுவது, கேள்வி கேட்பது,  விமர்சிப்பது, கேலி செய்வது, தூங்குவது, உண்பது, உறங்குவது எல்லாம் தான். அதே போல பேசுவது சுலபம். அதனைக் கேட்பது தான் மிக மிக கடினம். ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து வருவது மிகவும் சுலபம். அவரை காலத்தே பேசி முடிக்கச் செய்து திருப்தியுடன் அனுப்பி வைப்பது என்பது மிகவும் கடினம்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் மிகவும் கடினம். அந்தக் கலை எல்லோருக்கும் வருவதில்லை. அதுவும் மிகவும் சுவாரசியமாகப் பேசி இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருக்கலாமே என்று நினைக்கும் போது முடித்து விடுவர் சிலர். அவர்களை நாம் மிக மிக அரிதாகத் தான் காண முடிகிறது.
கேட்க அமர்ந்து இருப்பவர்கள் மாணவர்கள், இது உணவு நேரம், நம்மை இது வரை ரசித்துக் கேட்டு விட்டார்கள், இப்போது முடித்துக் கொள்ளுவது நமக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது. நமக்குப் பிறகு இன்னும் பேச ஓரிருவர் இருக்கிறார்கள் என்று குறிப்பறிந்து பேசுகிற மனிதர்கள் நிச்சயம் தமது கையிலே சில குறிப்புகள் வைத்துக் கொண்டு 'டு த பாயிண்ட்' என்பது போல நச்சென்று பேசி முடித்து அனைவரின் பாராட்டினைப் பெற்று விடுவார்கள். அந்த ரகசியம் அறியாதவர்கள் நிச்சயம் எல்லோர் வாயிலும் விழுந்து எழுவார்கள்.
நமது நேரமும் பிறர் நேரமும் மிகவும் முக்கியம். அதனை நாம் மிகவும் மதிக்க வேண்டும். காலம் பொன் போன்றது என்பார்கள் சிலர். பணம் கொடுத்து பொன்னை பொருளை வாங்கி விடலாம். ஆனால் கடந்து விட்ட நேரத்தை வாங்க முடியாது. எனவே காலம் உயிர் போன்றது. போனால் வராது என்பதை நிச்சயம் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்கள் நேரம் உங்கள் உரிமை. எனவே நேரம் கிடைக்கும் போது இதனை வாசித்து மகிழுங்கள். பயன்பெறுங்கள். 

No comments:

Post a Comment