Friday, November 29, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 23


சூழலை மாற்றினால் சுகம் தான் 
நமது நடத்தை எல்லாமே ஏதோ ஒரு வகையில் பிறரிடமிருந்து கற்றுக் கொண்டவை தான். (Every behavior is a learned behavior). பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், உடன்பணியாற்றுபவர்கள், அக்கம் பக்கத்தினர், ஊடகங்கள் (எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள்) என்று எல்லா நிலையிலும் ஒருவரால் கற்றுக் கொள்ள முடிகிறது.
ஏற்கனவே இருக்கும் எண்ணங்கள், மனப்பாங்குகள், பண்புகள், செயல்பாடுகள் எல்லாமே நமது சூழலினால் தலைகீழாக மாறிடும் வாய்ப்பு உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
'சத்சங்கத்வே நித்சங்கத்வம்' என்று சொல்லுவார்கள் வடமொழியில். அதாவது நாம் எந்த ஒரு மக்களின் தொடர்பில் உறவில் இருக்கிறோமோ அவர்களின் தாக்கம் நிச்சயம் அங்கே ஏற்படும் ஒவ்வொருவருக்கும். 
இதனை 'கூடாநட்பு' என்கிறார் வள்ளுவர். இந்த கூடா நட்பினால் அவதிப்பட்டவர்கள் ஏராளம். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல மிகப்பெரிய அறிவாளிகள் கூட சிக்கலில் மாட்டிக்கொண்டு இறக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்பார்களே அது போல நமது மனநிலை, அகச்சூழல் மற்றும் புறச்சூழல் மாறிட நாம் யாரிடம் பழகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். அப்படி நமது சூழலின் மாற்றத்தினை எப்படி சமாளிக்க வேண்டும் எனக் கற்க வேண்டும்.
செல்வந்தரோடு பழகினால் அவர்களின் சில செலவுப் பழக்கங்கள், புதிய பழக்கங்கள்  நமக்கும் தொற்றிக் கொள்ளும். சில பொல்லாதர்வகளின் இணக்கத்தினால் நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மாறும். இது குழந்தைகள் என்றால் அவர்கள் உடனே கற்றுக் கொள்ளும். பசு மரத்தாணி போல என்றும் ஐந்தில் வளையாதது என்றெல்லாம் சொல்லுவார்கள் பெரியோர்கள். இது நாம் அறிந்தது தான்.
பல நிறுவனங்களில் பார்க்கலாம். சிலர் ஒன்றாக வலம் வருவார்கள். ஒரே ஊர்க்கார்கள், ஒரே பழக்கம் (நல்ல மற்றும் கெட்ட) உள்ளவர்கள், ஒரு நபரை நேசிப்பவர்கள் அல்லது வெறுப்பவர்கள், ஒரே மாதிரி சிந்தனை அல்லது எண்ணங்கள் கொண்டவர்கள், ஒரே மாதிரி பதவியில் உள்ளவர்கள் என்று ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் ஒன்றிணைவார்கள். அப்போது அவர்களின் குணம் பழகும் ஒவ்வொருவருக்கும்  தொற்றிக்கொள்ளும் என்பது திண்ணம். எல்லோரும் ஒருபோலவே சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.
ஒரு சாயம் போகும் துணியோடு வெள்ளைத்துணியை துவைத்துப் பாருங்கள். அந்த வெள்ளைத் துணி என்னவாகும் என்று. காந்தத்தோடு இரும்பை சில மணித்துளிகள் உரசினால் இரும்புக்குக் கூட காந்த சக்தி வரும் என்பார்களே அது போல.
சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட் எனும் காயை பச்சை நிறத்தில் இருக்கும் பீன்ஸ் அல்லது முட்டைகோஸ் காயோடு சேர்த்து சமைத்தால் பாத்திரத்தில் இருக்கும் பதார்த்தம் எல்லாமே சிவப்பாகத் தான் இருக்கும்.
ஓர் அழுகிய காய் அல்லது கனியோடு நல்லதொரு காய் கனியை சேர்த்து ஒரு கூடையில் சேர்த்து வைத்தால் அதில் உள்ள எல்லாமே அழுகிப் போகும். அப்படித்தான் மனிதர்களும் தனது சூழலால் சகவாசத்தால் மாறித்தான் போகிறான்.
நீரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாம் என்ன பொருள் போடுகிறோமோ அதன் வண்ணத்தில் அது மாறும் (காபித்தூள், மஞ்சள் தூள்).  எந்த இடத்தில் இருக்கிறதோ அதன் வடிவத்தில் (கிணற்றில், குளத்தில், ஏரியில், நதியில், கடலில்) மாறி விடும். சாயம் கலந்தால்  நீரின் தன்மையே மாறிப்போகும்.. கடல் நீரோடு நல்ல நீரைக் கலந்தால் எல்லாமே உப்பாக மாறிவிடும். 
கோழிக்குஞ்சுகள் இருக்கும் கூண்டில் ஒரு கழுகு குஞ்சு சிக்கிக் கொண்டால் சில நாட்களுக்குப் பிறகு கழுகும் கோழிக்குஞ்சு போல மாறி விடும். வீரியம் உள்ள ஒரு வேட்டை நாய்க்கு தயிர் சாதம் போட்டு (மாமிச உணவிற்குப் பதில்) வளர்த்தால் அந்த நாய் மிகவும் சாதுவாக மாறி தனது உண்மையான குணத்தையே மாற்றிக் கொள்ள நேரிடுகிறது.
எங்கு பார்த்தாலும் ஆன்மீக எண்ணங்கள், பிரார்த்தனை, பக்தி என இருக்கும் ஓர் ஊரில் எல்லோருமே (வெகு சிலரை விட) அப்படி மாறிடும் நிலையைக் காணலாம். அதுவே ஒரு ஊரில் எல்லோருமே போராட்ட மனநிலையில் இருக்கிறார்கள், மிகவும் கோபப்படுகிறார்கள், தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள் என்றால் அங்கே வசிக்கும் பிற மக்களும் அப்படி மாறிவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனை நாம் அண்மையில் பல இடங்களில் பார்த்திக்கிறோம் . கொல்கத்தாவில் வசிக்கும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட மீன் சாப்பிடுகிறார்கள் என்று அறியமுடிகிறது. 
மேற்சொன்ன பல உதாரணங்களைப் பாருங்கள். வாழும் சூழல் மாறினால் மனநிலை, எண்ணங்கள், நடத்தைகள், எல்லாமே மாறும். எனவே சூழல் மாறினால் சுகம் தான். ஆனால் சூழலை மாற்ற முடியாவிடினும், நம்மை எப்படி மாற்றாது அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்பது தான் சுய கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு. 

No comments:

Post a Comment