Tuesday, November 26, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 21

சிறு கூறுகள் மலைப்பைத் தராது 

எந்த செயலையும் கூறுகளாகப் பிரித்துக் கொண்டால் மலை ஏறுவது கூட மலைப்பாகத் தெரியாது. கூறுகள் ஆக்குவது என்பது சிறு விஷயங்களை பெரிய கூறுகளாகப் பிரித்தல், பெரிய விஷயங்களை சிறு கூறுகளாகப் பிரித்துக் கொள்ளுதல் இரண்டுமே சிறந்த வழிமுறை தான்.
பத்து பேருக்கு சமைத்தல் என்று ஒரு செயல்பாடு வரும் போது பெண்களை உற்று நோக்குங்கள். காய்கறிகளை நறுக்கி தனித்தனியாக வைத்துக் கொள்ளுவர். பிறகு அடுத்தடுத்த விஷயங்களை மிகச் சரியாக எடுத்து வைத்துக் கொண்டு எது முன்னே செய்ய வேண்டும், எது பின்னே செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு திட்டத்தோடு செயல்படுவார்கள்.
ஒரு பூனை எலி பிடித்து விட்டு எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். வாயில் வைத்திருக்கும் எலியை வசதியான அமைதியான இடத்திற்கு கொண்டு சென்று சிறிது சிறிதாக கடித்துத் தின்னும்.
ஒரு டெலிபோன் ஆபரேட்டரை கவனியுங்கள். 9840027810 எனும் எண்னை பிரித்து 984 00 27 810 என்று சொல்லும் போது எதிரில் பேசுபவர் எளிதில் கவனித்துக் கொண்டு குறித்துக் கொள்ள முடியும் என்று அவர்களுக்கு தெரியும்.
தல தோனி அவர்களைப் பார்த்திருப்போம். 20 ஓவர்களில் 240 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால். அவர் பதட்டமே படமாட்டார். ஒரு ஓவருக்கு (ஆறு பந்துகளில்) 12 ரன் - அதாவது ஒரு பந்திற்கு இரண்டு ரன் அடிக்க வேண்டும். அதை 4, 2 அல்லது 6 என்று எப்படி வேண்டுமோ முடிக்கலாம். ஆனால் 240 ரன்களா என்று மலைத்துப் போனால் நிச்சயம் தொடக்கமே டென்க்ஷன் தான். இது அவருக்கு நன்றாகத் தெரியும்.
ஒரு எல்ஐசி ஏஜென்ட் ஆண்டுக்கு 12 பாலிசி பிடிக்க வேண்டும் என்றால் மாதத்திற்கு ஒன்று என்று எடுத்துக் கொண்டால் ஏது மனக்கவலை. அப்போது என்ன, மாதம் ஒன்று தானா? ஏன் நாம் வாரம் ஒன்று முடிக்கக் கூடாது என்று அவர்களே தங்கள் இலக்கை அதிகமாக நிர்ணயித்துக் கொண்டு உற்சாகமாக செயல்படுவார்கள்.
ஒரே நேரத்தில் பல்பணி என்று சொல்லக்கூடிய மல்டிடாஸ்கிங் இன்று தேவைப்படுகிறது. இருந்தாலும் அவை வேகத்தை துல்லியத்தை தராது. அது மூளைக்கு ஒரே சமயம் பல விஷயங்களில் கவனம் செலுத்தும் அழுத்தம் ஏற்பட்டு ஏதோ ஒன்றில் நாம் தவறு செய்து விடுவோம். ஒரு சமயத்தில் ஒன்றை எடுத்து அதனை அழகாக சீராக சரியாக செய்து முடித்தலே சிறப்பு. இடையே வரும் இடையூறுகளை சமாளித்தல், குறுக்கே வரும் இன்னபிற சிறு வேலைகளை தவிர்த்து விட்டு எடுத்த காரியத்தை முடித்தல் என்பது நன்மை பயக்கும்.
அதே போல நடுநடுவே வேறு வேறு செயல்களை கொஞ்சம் கொஞ்சம் செய்தல் எல்லா வேலைகளையும் முழுமையாக செய்யாததை நமக்கு உணர்த்திவிடும்.
சிறு கூறுகளாக பகுத்துக் கொள்ளுதல், ஒவ்வொன்றாக செய்து முடித்தல் இரண்டுமே நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தும், மனநிறைவைத் தரும், மன அழுத்தம் குறைக்கும், வெற்றிகரமாக முடித்த நல்லுணர்வைத் தரும். நமது வேலையிலும் நேர்த்தி இருக்கும்.
மாணவர்களுக்கும் இந்த முறை மிகவும் பயனளிக்கும். மிகப் பெரிய புத்தகத்தை எடுத்து பரிட்சைக்கு முன்தினம் வைத்துக் கொண்டால் தலை சுற்றும், தூக்கம் வரும். அதுவே அன்றாடம் கொஞ்சம் கொஞ்சம் படித்து முடிக்க கடைசி தருணத்தில் அப்படியே புரட்டிப் பார்த்தால் போதும். இல்லையேல் அந்த புத்தகம் நம்மை புரட்டிப் போடும். நாம் தான் புத்தகத்தினை புரட்ட வேண்டும்.
ஒரு கோட்டையை ஒரு கோணத்தில் பார்க்கலாம். தாஜ்மஹால் என்று கொள்ளுவோம். சுற்றி வந்து பகுதி பகுதியாகப் பார்த்து ரசித்துப் பார்க்க வேண்டும். அதே போல குருடர்கள் யானையைப் பார்த்த கதை நமக்கு தெரியும். ஒரு சமயம் யானையின் ஒரு பகுதியை மட்டுமே பார்த்து உணர வேண்டும். 
பல வேலைகள் செய்யத் தெரிந்து கொள்ளுவது வேறு. பல வேலைகளை ஒரே சமயம் செய்வது வேறு.
கூறுகள் பிரித்து காரியம் செய்யுங்கள் என்று 'கூறு'வது வேறு. அதனைப் பின்பற்றி அதனை செயல்படுத்துவது வேறு. 
இந்த கட்டுரையை பாருங்கள். பத்தி பத்தியாக பிரித்து எழுதுவதன் காரணமே நீங்கள் பார்த்தவுடன் மலைத்துப் போகாமல் இருக்கவே. என்ன நான் கூறுவது சரி தானே?

No comments:

Post a Comment