Monday, November 25, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 20


சொன்னாலும் புரிவதில்லை 
தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கும் அனைவருக்கும் அட்வைஸ் அள்ளிவிடப் போகிறேன் என்று எண்ணி பயந்துவிட வேண்டாம்.
பொதுவாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், சமூக மற்றும் ஊடகவியலார்கள், எழுத்தாளர்கள் என்று யார் சொன்னாலும் நம்மில் பலர் நாம் நினைத்ததையே செய்கிறோம். குறிப்பாக இன்றைய கால கட்டங்களில் 'சிட்டிங் போஸ்சர்' மிக மிக முக்கியம். நேராக அமர வேண்டும் என்று தெரிந்தாலும் நமது சௌரியத்திற்கு மணிக்கணக்கில் அமர்ந்து விட்டு கழுத்து வலி, முதுகு வலி என்று மருத்துவரிடம் போய் நிற்கிறோம்.
படுத்துக்கொண்டு மொபைலில் வீடியோக்கள் பார்க்க வேண்டாம் என்றால் அதையே செய்கிறோம். விரலுக்கு கண்ணுக்கு கழுத்துக்கு பிரச்சனை வரலாம் என்பதால் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் நம் மீது அக்கறை கொண்டோர். ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் சொல்லுகிறார்கள். யார் கேட்கிறார்கள். செல் பேசிக்கொண்டே வீதியில் நடக்க வேண்டாம். விபத்து நடக்கலாம், நாமே தடுக்கி விழலாம். மொபைல் திருடர் கையில் இருந்து பறித்துச் செல்லலாம். இப்படி எல்லாமே நமக்கும் தெரியும். இருந்தாலும் சொன்னாலும் புரிவதில்லை மனதிற்கு, புத்திக்கு.
எதையுமே கடைசி நிமிடத்தில் செய்யாதே. எந்த பொருளையும் எடுத்த இடத்தில் வைத்து விட்டால் தேடும் வேலை மிச்சமாகும். சரியான நேரத்தில் கிளம்பி மிதமான வேகத்தில் பயணித்து பத்திரமாக அடைய வேண்டிய இடத்தை அடையுங்கள் என்று பலவேறாக பலர் சொல்லிக்கொன்டே இருக்கிறார்கள். நாம் எங்கே கேட்கிறோம்.
சரியான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றும் சொல்லுகிறார்கள். நட்புகளை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யுங்கள். இப்படியெல்லாம் தெரிந்திருந்தும் ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்கள் நம்மில், நமக்குத் தெரிந்தவர்களில் பலர் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
மன அழுத்தம் இல்லா வாழ்க்கை வாழ சரியான திட்டமிடுங்கள். யோகா மற்றும் தியானம் செய்யுங்கள் என்று பலர் சொல்லுவதைக் கேட்கிறோம். நாம் பதிலாகச் சொல்லுவது எனக்கு நேரம் இல்லை என்பது தான். இங்கே நாம் நேரத்தை செலவழிக்கவில்லை. முதலீடு செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். என்ன மாற்றம் வந்தாலும் நமது வாழ்க்கையை சமாளித்து விடலாம் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். நமக்குமே அது தெரியும். இருந்தாலும் எனோ நமக்கு அது புரிவதில்லை இப்போது. பின்னால் வரும் கடினமான சூழலில் இந்த விஷயத்தை நாம் நினைத்துப் பார்பபோம்.
தினமும் அசைவ உணவை உண்ணாதீர்கள். உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். ஆறு மாதத்துக்கு ஒரு முறை மெடிக்கல் செக் அப் செய்து கொள்ளுங்கள். சரியான ஒரு பாலிசி எடுத்துக் கொண்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். மிகவும் இறுக்கமான உடை அணிந்து கொள்ளாதீர்கள். பார்த்த பொருட்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டாம். அவசியமில்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கி கடன் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இப்படி பலர் பலவாறு சொல்லலாம். கேட்கிறோம். நமக்கே கூட அவையெல்லாம் தெரியும். இருப்பினும் சொன்னாலும் புரிவதில்லை இந்த பாழும் மனதிற்கு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
நல்ல இசை கேளுங்கள். நல்ல புத்தகங்கள் வாசியுங்கள். மனதை எப்போதும் பாசிட்டிவ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். புன்னகையுடன் வலம் வாருங்கள். இப்படி சொல்லுபவர்கள் பலர் பல சொல்லுகிறார்கள். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே. உனக்கு நீ தான் நீதிபதி. இப்படி சொல்கிறது நமது மனம்.
சொல்லாமல் புரிந்து கொள்ளுவதை 'சுய புத்தி' என்றும். சொல்லித் தெரிவதை 'சொல் புத்தி' என்றும் சொல்லுவர். நமக்கு இருப்பது என்ன என்று யோசித்துப் பார்ப்போம்.

No comments:

Post a Comment