Thursday, November 14, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 12


 ஒரு போதும் ஏமாற்றாதீர்கள் 
'ஏமாறாதே ஏமாற்றாதே' என்ற பழைய பாடலின் முதல் வரி மிகப்பெரிய அறிவுரையைப் புகட்டுகிறது. நாம் ஒருபோதும் யாரையும் ஏமாற்றக் கூடாது, பொய்யுரைக்கக்கூடாது. குறுக்குவழிகளைத் தேர்வு செய்யக் கூடாது. அதே போல யாரிடமும் நாம் ஏமாந்து நிற்கவும் கூடாது.
பெரும்பாலும் மக்கள் தமது பதவி அதிகாரம் படை பலம் மற்றும் தொடர்புகள் இவற்றை தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். யாருமே தமது செயல்களுக்கு பொறுப்பேற்க தயாராக இல்லை. தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டால், அதில் எனது பங்கு குறைவு தான். அவருடன் நான் சேர்ந்தது தான் தவறு. அவர் தான் தவறானவர். இப்படிச் சொல்லி பிறர் மீது பழிகள் போட்டு தன்னை நல்லவராக நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளும் நபர்களே இன்று அதிகம். 
அதிகாரத்தை உள்ளடிக்கிய ஒரு பதவியில் நாம் இருக்கும் போது, கிடைக்கின்ற மோசமான விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது எளிதில் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளுவது சுலபமானதாக இருக்கக்கூடும். நமது வேலை எங்கே பறி போய் விடுமோ என்ற பயத்தில் யாரும் நம்மோடு அதிகம் வாதிடவும் முன்வர மாட்டார்கள். ஆனால் உண்மை அவர்களுக்கு நிச்சயம் பட்டவர்த்தனமாக தெரியும். அவர்கள் நமது நடத்தையை கவனித்து வந்திருப்பார்கள். எனவே தாங்களும் இனி நாணயத்தோடு நடந்து கொள்ளத் தேவை இல்லை என்ற உணர்வை அவர்கள் பெற்று விடுவதும் உண்டு. 
ஒரு குடும்பத்தலைவர் கெட்ட சகவாசங்களில் உள்ளார், கெட்ட பழக்கங்களோடு வலம் வருகிறார் என்றால் அவரது பிள்ளைகளும் அப்படி இருந்தால் தவறில்லை என்று தானும் அப்படிப்பட்ட சூழல்களில் இறங்கி விடுவர். அல்லது அதை விட மோசமான செயல்களில் இறங்கி விடுவதும் உண்டு. 'யதா ராஜா ததா பிரஜா - மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி' என்று பழமொழிகள் இப்படித்தான் வந்திருக்கும். அப்படித்தான் தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்றும் சொல்லுவர். 
இது நிறுவனங்களிலும் நிச்சயம் பொருந்தும். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு இழைத்தால், அந்நிறுவனத்தில் உள்ள எல்லோரும் அதே நடத்தையைப் பின்பற்றத் தூண்டப்படுவது இயல்பானது தான். அந்த ஏமாற்றுக் கலாச்சாரம் அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிலையிலிருந்து கீழ்மட்ட நிலை வரை எல்லா நிலைகளிலும் ஊடுருவி, அதன் விளைவாக அந்நிறுவனம் முற்றிலுமாக நிலைகுலைந்து போவது நடக்கத்தான் செய்கிறது. 
தலைவர் மல்யா பல தவறான செயல்கள் செய்து நாட்டை விட்டு தலைமறைவான பின்பு அந்த நிறுவனத்தின் இதர ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் மீது என்ன பிடிமானம் அல்லது பெருமிதம் இருந்து விடமுடியும்? அதே போல மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த கஃபே காபி டே நிறுவனத்தின் அதிபர் தற்கொலை செய்து கொண்டார் என்ற பிறகு அங்கே பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் பதட்டமான மனநிலை தானே நிலவும் ? இப்படித்தான் சென்னையின் மிகப்பிரபலமான உணவகம் என்று பெயர் வாங்கிய சரவணபவன் ஹோட்டல் அதிபர் அவர் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிறகு அவர் உடல்நிலை மோசமாகி உயிர் இழந்து விட்ட பிறகு, அங்கே வேலை பார்ப்பவர்களின் மனதில் இனி ஹோட்டல் என்ன ஆகுமோ, நமக்கு சம்பளம் கிடைக்குமோ? இப்படிப்பட்ட கவலைகளில் மூழ்கிப் போய் இன்று அங்கே ருசியாக கிடைக்கும் உணவு மிகவும் மோசமாகி விட்டது. போட்டியாளர்கள் கொடிகட்டிப் பறக்கிறாரக்ள்.
குடும்பத்தலைவர் சிறந்த முன்னுதாரணமாக இருந்து விட்டால் பிள்ளைகளும் மிகச் சிறந்தவர்களாக வளர்ந்து சாதனை படைப்பார்கள். அதே போல நிறுவனத்தலைவர்கள் நல்ல முன்னுதாரணமாக இருந்தால் அங்கே பணிபுரியும் ஊழியர்களும் சிறந்த முறையில் பணியாற்றுவார்கள். இல்லையேல் நிறுவனத்தலைவர்கள் விதைத்த அழிவுக்கான விதைகளை பார்த்து பார்த்து தானும் அதே நடத்தையை தங்களது பங்குக்கு இயன்றதைச் செய்து உள்ளதைக் கெடுக்கவே நினைப்பர்.
ஏமாற்றிப் பிழைப்பவர்கள் மிக நன்கு அறிவார்கள் உண்மை என்பது ஒரு நாள் நிச்சயம் வெளிப்படும். அன்று நம்மால் தப்பிக்கவே முடியாது (பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி)  என்று. குறுக்கு வழியில் எளிதில் சம்பாதிக்கும் பணம் வந்த வேகத்தில் போய் விடும் என்பதை நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது. எனவே நமது வீட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் நல்லவற்றை விதைப்போம். என்ன விதைக்கிறோமோ அது தானே முளைக்கும். அரளி விதைத்து விட்டு அல்லி மலர் பூக்கும் என்று எப்படி எதிர்நோக்கலாம்?

No comments:

Post a Comment