Thursday, November 14, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 13

13. பாதை மாறாதீர்கள் 
பாதை மாறாமல் இருப்பதற்கான திறன், துணிச்சல் நல்லவர்களின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இது பொறுமையான துணிச்சல் என்று சொல்லலாம்.

விஷயங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், சூழல் எப்படி எதிராக மாறினாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், மன அழுத்தங்கள் எதிர்கொள்ள நேரிட்டாலும் சிலர் எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியாக இருப்பர். "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்று பாடுவான் பாரதி.

மனஉறுதி, விடாமுயற்சி, வெற்றிக்கான வேட்கை என்று சில தன்மைகள் கொண்டவர்களுக்கு போதிய காலம் அந்த கடினமான பாதையில் தாக்குப்பிடித்தால், விஷயங்கள் அவர்களுக்குச் சாதகமாக நிகழத் தொடங்கும். 

தமது 40 வயதுக்குள் சுமார் 24 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான தரை மற்றும் கடற்பயணங்களை மேற்கொண்டு வாழ்வில் வெற்றி கண்டு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய நபர் மார்கோபோலோ அவர்கள். பின்னாளில் அவர் சென்ற நாடுகளை அவர் சொல்லச் சொல்ல அவரின் மகள்கள் உலக வரைபடத்தை உருவாக்கினார். அதனை வைத்துக் கொண்டு பல நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் பலர். அவர்களில் மிக முக்கியமானவர் தான் கொலம்பஸ் என்று வரலாறு கூறுகிறது.

இப்படி எடுத்துக் கொண்ட பாதையில் பல இடர்பாடுகளுக்கு நடுவே வெற்றி கண்டவர் தான் உலகம் போற்றும் விளையாட்டு வீரர் மஹிந்திர சிங் தோனி அவர்கள். அப்படிப் பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. அதே போல சினிமாத்துறையில் இன்று கால் பதித்து 60 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கலைஞானி கமலஹாசன் அவர்கள்.

சோனி நிறுவனத்தின் அதிபர் அகியோ மொரிடோ பலமுறை தோல்வியைத் தழுவி இருக்கிறார்.உலகே வெளிச்சமாக இருக்கிறது. பல்பு கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் 1000 முறை முயன்று பாதை மாறாது அதிலேயே மீண்டும் மீண்டும் மனம் துவளாது முயன்று கடைசியில் வெற்றி பெற்றது நாமெல்லாம் அறிந்ததே.உலகம் போற்றும் பில் கேட்ஸ் மற்றும் ஹென்றி போர்ட் போன்ற தொழிலதிபர்கள் பல ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்த பிறகும் தமது பாதையை மாற்றிக் கொள்ளாமல் துணிவுடன் பயணித்து இன்று உலகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர்களாக விளங்குகிறார்கள். 

தமது 95 ஆவது வயதில் உயிர் நீத்த நெல்சன் மண்டேலா சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தமது முதல் பப்ளிக் உரையை நிகழ்த்தினார். தமது 71 ஆவது வயதில் பதவிக்கு வந்தார். 80 வயதில் மறுமணம் செய்து கொண்டார். ஒரு நாளும் பாதை மாறாத அவர் எல்லோருக்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

தமது மனதை மாற்றிக் கொள்ளாத எவராலும் உலகை மாற்றி விட முடியாது என்று ஒரு மாற்றுக் கருத்தை சொன்னவர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள்.இதே கருத்தை வலியுறுத்தி மாற்றத்தை எதிர்கொள்ளாதவர்கள் முன்னேறவே முடியாது என்று சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள். 

அதே சமயம் எது ஒன்றையும் சாதிக்காதவர்கள் 'இது சாத்தியம் அல்ல, விட்டு விடுங்கள்' என்று சரியான பாதையில் செல்லுபவர்களை நிறுத்த மனதை மாற்றிட அருகதை அற்றவர்கள் என்பதும் உண்மை தான். 

முட்கள் நிறைந்த பாதை என்று மனம் மாறி விட்டால் நிச்சயம் ரோஜாக்கள் கைக்கு வராது. முட்களை மீறித்தான் ரோஜாக்கள் கிடைக்கிறது. எனவே தடம் மாறாதவர்கள் தவம் செய்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

No comments:

Post a Comment