Saturday, December 21, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 42


உண்மையும் பொய்யும் வேறல்ல 
மறைக்கப்பட்ட  உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். இந்த கட்டுரை ரகசியம் பற்றியது இல்லை என்பதால் உண்மையைப் போட்டு உடைக்கவே விருப்பம்.  முன்னேற்றத்தின் ரகசியமே தொடங்குவது தான். தாழ்வு மனப்பான்மையை உடைப்பதன் ரகசியமும் சரியாகத் தொடங்குவது தான். தடைகளைத் தாண்டி சிறிய செயல்கள் மூலம் தொடங்குவது.
நாம் பார்ப்பதோ ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அது தான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் நமது ரகசியங்களை விட நம்மை வேறெதுவும் தனிமைப்படுத்தி விட முடியாது. ரகிசயங்களை பொதுவெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்ளுவது ஒன்றும் புதிதல்ல, புதிரல்ல. பெயர் இல்லாத மொட்டைக்கடிதங்கள் பத்திரிகை ஆசிரியருக்கு, அரசியல்வாதிக்கு ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு தானே இருக்கின்றன. உலகோரோடு நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மை கண்டு பிடித்து விட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும் போது சொன்னவரை மறந்து போவர். 
நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம். அதனை சொல்லி விட்ட பிறகு கேட்டவரும் அதனை மறைக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்த தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது. சொல்லாதவரை நாம் எஜமான். அதனை சொன்ன பிறகு நாம் அடிமை. 
ரகசியம் பலவகைப்பட்டது. அடுத்த வாரம் திருமணம். பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு. காதல் செய்வது பெற்றோருக்கு தெரியாமல் இருப்பது. புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம். இப்படி எல்லாமே ரகிசியம் தான். ஒரு ரகசியத்தை காப்பது என்பது வைத்திருக்கும் சொத்தைக் காப்பதை விட கடினம். மனதுக்குள் பூட்டி வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. யாரிடம் இருந்து ஒரு ரகசியத்தை மறைக்க நினைக்கிறோமோ அவர்களிடம் பழகும் போது பேசும் போது ஏற்படும் மன அழுத்தம் சொல்லில் அடங்காதது.
உங்களைப் பற்றிய ரகசியம் ஏதேனும் உண்டா? அதை மறைக்கிறீர்களா ? இல்லை சொல்லி விட்டீர்களா? மேலே வாசியுங்கள். ஒரு ரகசியத்தை சொல்லாமல் காப்பதை விட அதைப் பற்றி ஒரு நாளைக்கு எத்தனை முறை நினைக்கிறோம் என்று யோசியுங்கள். ரகசியங்கள் ஒருவரை நங்கூரம் போல முடக்கிப் போடும். செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலம் சரியில்லை என்பது ரகசியம். அதனை மிகவும் நெருக்கமானவர்களிடம் இருந்து மறைக்கும் போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கிறது பல ஆய்வுகள்.
உங்களிடம் ஒருவர் தனது ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் என்பது சந்தோஷம். அதே சமயம் மிகவும் மனதின் பாரமும் கூட. உங்களை நம்பி ஒருவர் சொல்லி இருக்கிறார் என்பது நல்ல விஷயம் தான். அதனை நீங்கள் எப்படி பாதுகாப்பீர்கள் என்பது நமது கவலை தானே ஒழிய ரகசியம் சொன்னவரது அல்ல. ஏற்கனவே நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் ரகசியம், கூடுதலாக பிறரின் ரகசியம் வேறு; அப்பப்பா மனதின் பாரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. வளர்த்துக் கொள்ளும் மனஉறுதி தான் நமது நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மை இரண்டையும் காப்பாற்றும். திரைப்படத்தில் வரும் ஜனகராஜ் போல நம்மில் பலருக்கு பிறரிடம் சொல்லவில்லை என்றால் மண்டையே வெடித்து விடும் அபாயம் உண்டு.
பிறர் நம்மிடம் ஒரு ரகசியத்தை சொல்லுகிறார் என்றால் அது சிறியதா அல்லது பெரியதா என்று பார்க்க வேண்டும். பெரியது என்றால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகவும் அதிகம் என்று அர்த்தம். நீங்கள் காக்க வேண்டியது இரண்டையும் தான். சில ரகிசயங்கள் சட்ட ரீதியானதாக இருக்கலாம். சில ரகசியங்கள் வணிக ரீதியாக இருக்கலாம். அவை கசிந்து விட்டால் தெரிந்திருக்கும் நமது நிலைமை பற்றி தெரியாமல் போகலாம். குறிப்பாக பிரபலங்களின் மறைவு வாழ்க்கை, சேர்த்திருக்கும் சொத்து, சேர்த்த விதம், செய்யும் தொழில் என்று எல்லாமே ரகசியம் தான். அவை நமக்கு தெரியாதவரை நல்லது தான். அப்படிப்பட்ட சில ரகசியங்களை நம்மால் மனைவி அல்லது கணவரிடம் கூட சில நேரம் சொல்ல முடியாது. அதனை மறைக்க நாம் படும் பாடு மிகக் கொடுமையானது.
நமது சொந்த ரகசியம் என்றால் எவ்வளவு காலம் அது மறைக்கப்பட வேண்டும். யாரிடம் இருந்து மறைக்கப்பட வேண்டும். சில நேரம் அது நிரந்தரமாக மறைக்கப்பட வேண்டிய ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் எந்த ரகசியமும் ஒரு நாள் போட்டு உடைக்கப்பட்டு அதன் காலாவதி நாளை அல்லது இறுதி நாளை நெருங்கி விடும்.  சில நேரம் நமது மன நிம்மதிக்காக கண்ணாடி முன்பு நின்று ஒரு முறை சொல்லி விடலாம். ஆனால் அருகில் யாரும் இருந்து விடக்கூடாது. சில நேரம் நமது டைரியில் எழுதி வைக்கலாம். அது யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. எதுவும் தெரியாதது போலவே நடிப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த ஒன்று. நம்மில் பலருக்கு நடுங்கும் கைகளும் சிமிட்டும் கண்களும் காட்டிக் கொடுத்து விடும். நேர்மையாக இருக்க நிறைய தைரியம் வேண்டும். ஒரு ரகசியமே இல்லாத திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்தவர் வெகுசிலரே.
அந்தக் காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கப் போவது மிகுந்த ரகசியமாக இருக்கும். ஒரு புதையல் கிடைத்தால் அது பற்றி கப்சிப் என்று இருப்பது மிகவும் கடினம். இந்த காலத்தில் இரவு எட்டரை மணி வரை 'இனி நோட்டுக்கள் செல்லாது' என்று அறிவிக்கும் வரை அந்த செய்தி எவ்வளவு ரகிசியமாக வைக்கப்பட்டது. அதனை மனதில் போட்டு பூட்டி வைத்து இருந்தவரின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். 
எந்த விளையாட்டு வீரரை ஒரு அணி எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப் போகிறது ஐபிஎல் விளையாட்டில் என்பது அண்மையில் ஏற்பட்ட ரகசிய நிகழ்வு. இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்து அப்படி என்ன பேசி இருப்பார்கள். அதனை தெரிந்து கொண்டு முந்தித் தரத் துடிக்கும் ஊடகம் ஒன்றிற்கு அது கிடைத்து விட்டால் எவ்வளவு ரகசியம்? அய்யோடா அந்த நிருபர் எத்தனை பாடு படுவார் மனதளவில்?
தெரிந்த ஒரு ரகசியத்தை எப்போது வெளியே சொல்லலாம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு முக்கிய தலைவர் இறந்து விட்டார் என்றால், அதனை எப்போது எப்படி சொன்னால் பல்வேறு பொதுவெளி தொல்லை தொந்தரவுகள் வராமல் சட்ட ஒழுங்கைக் காக்கலாம் என்று அரசும் அதிகாரிகளும் சிந்திப்பர்.
சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை தவறிச் சொல்லி விட்டு என்னாகுமோ ஏதாகுமோ என்று பாதிக்கப்படும் மனநிலையில் தவிப்பவர்ளை நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லம் ஒரு படத்தில் யார் நடிக்கிறார்கள், என்ன வேடத்தில் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, தலைப்பு என்ன எண்று ரகசியம் காக்கும் நிலையினை பார்க்கிறோம். ரகசியம் பற்றிய திறந்த ரகசியங்களும் உண்டு. அதாவது ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார். எப்போது என்பது தான் தெரியாது. ரகசியத்தினை மறைக்கும் ஒரு நபரின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பதை வைத்தே அவர் மீது சந்தேகம் வரக்கூடும். வேண்டாத விளக்கங்கள், தேவையற்ற புன்னகைகள், சமாளிப்புகள், வஞ்சக் கதைகள் எல்லாமே ஒருவரைக் காட்டிக் கொடுத்து விடும். 


 நாயும் நரியும் முதலில் ஒன்று போலத் தெரிந்தாலும் அதன் குட்டு ஒரு நாள் வெளிப்படும். முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது என்பது போல ஒரு நாள் ரகசியம் வெளியே வந்தே தீரும். சில சமயம் அவருள் இருக்கும் அவருடனேயே புதைக்கப்படுவதும் உண்டு.  இங்கே ரகசியம் பற்றி நான் எதுவுமே மறைக்கவில்லை. உண்மைகள் இங்கே தோல் உரிக்கப்பட்டு இருப்பதை காணலாம். எனவே சொல்லப்படாத  உண்மைகளும் மறைக்கப்பட்ட ரகிசயங்களும் பொய்யாகவே கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment