Thursday, December 26, 2019

தினம் ஒரு வாசகம் - தினம் ஒரு செய்தி : 48


வேலை என்பது தெய்வீக வேள்வி 
எந்த ஒரு தொழில் நடவடிக்கையிலும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை, மற்றும் ஒருமைப்பாடு அவசியமாகிறது. தவிர நாம் செய்யும் வேலையில் அழகியல் மற்றும் அழகுணர்ச்சி மிகவும் முக்கியமாகிறது.
கலை, சுவை, நெளிவு சுளிவு இவற்றுடன் செய்யப்படும் செயல்களை அழகியல் கலந்து எனலாம். ஈடுபாடு, வேட்கை, நேர்மை மற்றும் ஆர்வம் இவற்றோடு ஒருவர் ஒரு செயலை செய்யவில்லை என்றால் அந்த வேலையில் நம்மால் லயிக்க முடியாது. சாக்கடை அள்ளுவது அல்லது அதன் அடைப்பை எடுப்பது, ஒரு பிணத்தை எரிப்பது போன்ற மிகவும் கடினமான ஒரு வேலையை அழகுணர்வுடன் செய்ய முடியாது. ஆனால் அந்த வேலை முடிந்த பிறகு அந்த இடத்தை அழகாக வைக்க முடியும். ஆனால் சிலர் அதே போன்ற வேலையை ஆடிப் பாடி செய்கின்றனர். அப்போது அவர்களுக்கு மனதில் வேதனை வலி தெரிவதில்லை. அவர்கள் உடுத்தி இருக்கும் ஆடை அழுக்காக இருந்தாலும் அவர்கள்  மனது தூய்மையானது.
சிலர் பாடும் பொழுது அவர்கள் முகத்தை அங்க அசைவுகளைக் காண சகிக்காது. ஆனால் அவர்கள் இசை மிகவும் நுணுக்கமாக இருக்கும். சிலர் பாடும் பொழுது பால் கறப்பது போல, பூச்சி பிடிப்பது போல, உதடுகளை சுளித்து, முகத்தை அஷ்ட கோணலாக்கி, காண்பவருக்கு கெட்ட கனவுகளைப் பரிசளிப்பர். இருந்தாலும் அவர்களின் இசை அறிவை, அவர்கள் வெளிப்பாடை பாராட்டுவோம். அதுவே அவர்கள் உணர்ந்து அழகுணர்வோடு அதனை செய்தால் எப்படி இருக்கும்?
சிலர் டிவியில் சமைப்பதை பார்ப்பதே மிகவும் சுவாரசியம் தான். வெங்கடேஷ் பட் அவர்களை புன்னகை, அவரது லாவகம், அவர் சமையலை சற்றும் வேதனை கஷ்டம் இல்லாமல் மிகவும் லாவகமாக அழகாக செய்து முடிப்பார். அவர் உண்ணாத சில உணவுகளை அதன் வாசம் உணர்ந்தே அதன் ருசி அறிவார். அதனையும் தாண்டி  அவர் செய்து முடித்த உணவை மேற்கொண்டு அலங்காரங்கள் செய்து (சுற்றிலும் கொத்தமல்லி இலைகள், தக்காளி, வெங்காயம், போன்றவை வைத்து அதனை அழகு செய்யும் விதம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கும்) அதுவே அவர் நண்பர் ஒருவர் எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தெளித்து மிகவும் கொடூரமான முறையில் சமைத்துக் காட்டுவார். அதே போல சில இல்லத்தரசிகள் சமைத்து முடித்த பிறகு தமது சமையல் அறையை மிகவும் சுத்தமாக கண்ணாடி போல வைத்திருப்பார்கள். சிலர் மாறாக அந்த மேடையை சாக்கடை போல மிகவும் மோசமாக வைத்திருப்பார்கள். அதே போல சிலர் பாத்திரம் சுத்தம் செய்யும் விதமே மிக அழகு. சிலர் சுத்தம் செய்த பாத்திரம் அதன் பிறகும் மோசமாக இருக்கும்.
சில மெக்கானிக் ஷெட், சில அலுவலங்கங்கள் மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பர். சிலர் எது எங்கே என்று தேடுவதிலேயே பாதி நேரம் கழிந்து விடும். பாதி நேரம் அவர்களே காணாமல் தொலைந்து போவதும் உண்டு. சிலர் அலமாரிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கைப்பைகள் கோடௌன் போல இருக்கும். அதனை சரி செய்ய நேரமில்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.
வெளிநாடுகளில் பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் சுத்தமாக, துர்நாற்றமின்றி இருக்கும். சிலர் வீட்டு கழிப்பிடங்கள் பொதுக் கழிப்பிடங்கள் போல மிகவும் மோசமாக குமட்டிக் கொண்டு வரும். தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு இருந்தால் நிலையை தலைகீழாக நல்ல முறையில் மாற்ற முடியும். இது தனிநபரின் மனப்பாங்கு சம்பந்தப்பட்டது.
மிகவும் கீழ் நிலை ஊழியர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் ரொம்ப நேர்த்தியாக, சுத்தமாக, அழகாக ஆடை உடுத்தி வலம் வருவார். அதுவே மிக உயர்ந்த ஓர் அரசு அதிகாரி கசங்கிய சட்டை, பாத்ரூம் செருப்பு, சவரம் செய்யாத முகம், வெட்டாத நகங்கள் என்று முக்கிய கூட்டங்களுக்கு வருவதைக் காண முடியும். 
நமது ஊர்திகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப நாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கடைக்கே செல்லுவோம். ஏன் எனில் அவர்களின் கடப்பாடு, சுத்தம், தரம், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் எல்லாமே தான். ஷெல் நிறுவனங்களில் அங்கே இருப்பவர்கள் கை எடுத்து கும்பிடுவார்கள். வாயால் நன்றி சொல்லுவார்கள். சில நேரம் பெட்ரோல் போடும் அந்த நேரத்தில் வேறொருவர் வந்து வண்டியின் கண்ணாடியை சுத்தம் செய்து விட்டு காசு கொடுத்தாலும் புன்னகையுடன் மறுத்துவிடுவர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி அப்படி. சில துணிக்கடைகளில் கூட அப்படித்தான். சில நகைக்கடைகளில் கூட இதனை பார்க்கலாம்.
சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புன்னகையுடன் வலிக்காமல் ஊசி போடுவர், மருந்து தருவர். சிலரைப் பார்த்தாலே வலிப்பது போலவே இருக்கும். சிலர் அவர்களே வலிப்பு வந்தது போல இருப்பர்.(டாக்டர்கள் கோபிக்க வேண்டாம்)
சில விமானங்களில் நம்மை வணக்கம் சொல்லி வரவேற்பார்கள். பயணம் முடிந்ததும் வணக்கம் நன்றி சொல்லி அனுப்பி வைப்பார்கள். சிலர் வணக்கம் ஏன் சொன்னார்கள் என்று அவர்களின் முகமே காட்டி விடும். சிலர் சொல்லும் வணக்கமே வேண்டா வெறுப்பாக இருக்கும். சில வங்கிகள் மிகவும் அற்புதமான சேவையை கூடுதல் கட்டணம் இன்றி செய்து தருவர். சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி என்று சில வங்கிகளைக் குறிப்பிட்டு சொல்லலாம். சிலர் மோட்டார் பொறுத்தப்படாத இயந்திர ரோபோக்களை போல நடந்து கொள்ளுவார்கள். அதனை சில ஹோட்டல் ரிசப்ஷனில் பார்க்கலாம். அதே போல சில கார் ஓட்டுநர்கள் மிகவும் கனிவாக, மரியாதையாக நடந்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். சிலர் சினிமா வில்லன் போலப் பார்ப்பதும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு போகிற வழியில் எல்லோரையும் திட்டிக் கொண்டு சண்டை வளர்த்துக் கொண்டு, ஏன் தான் அவர்கள் வண்டியில் நாம் ஏறினோம் என்று நினைக்க வைப்பார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம் என்றால். செய்யும் செயலில் கூட தெய்வம் இருக்காதா? அது அழகாக, நேர்த்தியாக, லாவகமாக, சீராக இருக்கும். எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும். 


சிலர் மேடையில் ஏறும் முன்பு படியை முத்தம் இடுவார்கள். கண்ணில் ஒற்றிக் கொள்ளுவார்கள். அதே போல சில விளையாட்டு வீரர்கள், சில இசைக்கலைஞர்கள், சில நடிகர்கள் தமது தொழிலை மிகவும் மதித்து, ரசித்து, போற்றி, மிகுந்த ரசனையுடன் மரியாதையடன் செய்வதைப் பார்க்கலாம். அவர்களைப் பார்க்கும் போது நமக்கு மனதில் இறைவனைப் பார்ப்பது போன்ற மரியாதை தோன்றும். இது அவர்களின் தொழில் பக்தி என்றால் அது மிகையல்ல. ஞானமும், பக்தியும், ஈடுபடும் இருந்து விட்டால் செய்யும் எந்த செயலும் மிகவும் தெய்வீகமாக அழகாக நேர்த்தியாக இருக்கும். என்ன சந்தேகம்?

No comments:

Post a Comment